சனி, 29 அக்டோபர், 2011

ரயில் பேச்சு



அது
ஆள் அரவமற்ற
ஒரு ரயில் நிலையம் என்றாய்...

இருக்கும்
அதனால்தான்
ஒரு குயில் அபூர்வமாகக்
குர லெழுப்பியதையும் ,
பயணிகளுக்கான அறிவிப்பு
ஒலித்ததையும்
துல்லியமாக உணர்ந்தேன் .

சிவப்பும்,பச்சையுமாய்
வர்ண விளக்குகள் மாறி மாறி
ஒளிர்வதையும்
ரயிலின் பெரு மூச்சுகளையுங் கூட
உணர்கின்றேன் ...
வேண்டுமென்றே தவற விட்டு
அடுத்த ரயிலுக்காய்க்
காத்திருக்கிறாய்...
இரண்டு ரயில்களுக்கான
இடைவெளி நேரத்தில்
நாம் எதைப் பேசி முடிக்க இயலும் ?

வெயிலின் சாய்வை
சிறு நூல் கொண்டு இழுத்து,
நிமிர்த்துவது போல
பிரிவின் பிரிவை ஒத்திவைக்க
இப்படித்தான் மண்டியிடுகின்றோம் .

ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டதாக
இறுதியில் சொல்லுகிறாய்.
உனக்குத் தெரியாது,
உன்னருகில் நானும் பயணிப்பது.

(விகடன் தீபாவளி மலர் 2011 வெளிவந்த கவிதை)

புதன், 24 ஆகஸ்ட், 2011

4. இப்போதும் இருக்கும் கதை




‘உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா அமைதி வெளியே இருக்கிறது
அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது’

- ஐரீஸ் முர்டாச்சின்


அவசர அவசரமாக ப்ரெஷ் செய்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் வைஷ்ணவி. அங்கு அவள்
ஆபிஸ் அசிஸ்டெண்ட் விஜயகுமார் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
வைஷ்ணவியைப் பார்த்ததும் பரபரப்பாக எழுந்தான்.

”குட் மார்னிங் மேடம்...எபப்டி இருக்கீங்க?”

”குட் மார்னிங் விஜி...உட்காருங்க.....காபி சாப்பிடறீங்களா?”

”இப்பதான் அம்மா குடுத்துட்டாங்க மேடம்...ஒரு அர்ஜெண்ட் விஷயம் சார்
நேர்ல போய் சொல்லிட்டு வரச் சொன்னாரு....”

யோகேஷின் போன் கால்களை எடுக்காமல் இருந்ததால் நேரிலேயே ஆளை
அனுப்பிவிட்டான். ஏன் எல்லாரும் தன்னைத் துரத்துகிறார்கள் என்று அலுப்பாக
இருந்தது வைஷ்ணவிக்கு.

’என்ன அர்ஜெண்ட் வொர்க் விஜி?”

”அது சாருக்குத் தான் தெரியும் மேடம்...பத்து மணிக்கு உங்களை ஆபிஸுக்கு
வரச் சொன்னாரு. கார் அனுப்பறேன்னும் சொன்னாரு. நீங்க அவர்கிட்ட கால்
பண்ணி கேட்டுக்கங்க....அப்ப நான் வரேன் மேடம்”.

அவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விஜி போய் விட்டான். அது அவன்
தப்பு இல்லை, அவனை அனுப்பியவனின் ஆர்டராக இருக்கும் என்று அவளுக்குத்
தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் அவளுடைய முகத்தைப்
பார்க்காமல் யோகேஷ் இருந்ததில்லை. தன்னை மிஸ் செய்கிறான் போலிருக்கிறது.
இதில் பெரிய தவறு இல்லையென்றாலும் அதற்கு தான் ஆளாகக் கூடாது என்று
உறுதியாக நினைத்தாள் வைஷ்ணவி. ரமணன் எரிச்சல்படுவதில் காரணம் இருப்பதை
முதன்முறையாக உணர்ந்தாள் வைஷ்ணவி.

நிதி தூங்கி எழுந்து சோபாவில் வந்து படுத்துக் கொண்டது. டிவியை ஆன்
செய்து எடுத்தவுடன் சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். வைஷ்ணவியைப்
பார்த்து சோம்பலாக ”குட் மார்னிங்மா என்றாள்.

”ப்ளீஸ் நிதி...முதல்ல போய் ப்ரெஷ் செய்...”

சரிம்மா....

நிதியிடம் பிடித்த விஷயம் சொன்னவுடன் அதை உடனே செய்துவிடுவாள்.
வைஷ்ணவியிடம் மட்டும் தான் இது. ரமணனோ, அம்மாவோ எது சொன்னால் அந்த இடத்தை
விட்டு அசையவே மாட்டாள். நிதி சொல்வதைத்தான் அவர்கள் கேட்கவேண்டும்.
”என்ன மாயம்டி செஞ்சி வைச்சிருக்கே.....நீ என்ன சொன்னாலும் கீ குடுத்த
பொம்மை மாதிரி உடனே செய்றா உன் மக” என்பாள் சுபா.

குழந்தைகளை மிரட்டி அவர்களை அடித்து துன்புறுத்தி அடிபணிய வைப்பது
வைஷ்ணவிக்கு சுத்தமாக பிடிக்காது. மென்மையாக அவர்களிடம் செய்ய
வேண்டியதைச் சொன்னால் போதும் மறுபேச்சின்றி கேட்டுக் கொள்வார்கள்.

சுபா சொன்னதை நினைத்துச் சிரித்தபடி குளிக்கக் கிளம்பினாள் வைஷ்ணவி. தொடை
இன்னும் லேசாக எரிந்து கொண்டிருந்தது. அதை அலட்சியப்படுத்திவிட்டு இன்று
என்னென்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பட்டியல் இட்டாள், முதலில்
யோகேஷுக்கு போன் செய்து இன்று வர முடியாது நாளை அல்லது மறுநாள் வருவதாகச்
சொல்ல வேண்டும். அடுத்து சந்தியாவுக்கு பேசிவிட்டு அனுவைப் போய்ப்
பார்க்கவேண்டும். பாவம் அனு வந்த இடத்தில் உடம்பு முடியாமல்
கஷ்டப்படுகிறாள். இன்று கட்டாயம் பார்த்தே தீரவேண்டும். அடுத்து ஜீவா.
அவனிடம் மிகத் தெளிவாக இதுவே கடைசி சந்திப்பு என்று சொல்லிவிடவேண்டும்.


நினைவின் சக்கரத்தில் மனம் உருண்டு கொண்டிருந்ததால் எப்படி குளித்து
முடித்து வெளியே வந்தோம் என்றே வைஷ்ணவிக்குத் தெரியவில்லை. ரொட்டீனான சில
விஷயங்கள் செய்யும் போது இப்படி சில சமயம் நேர்ந்துவிடுவதுண்டு. மனம்
அவளிடமிருந்து மெல்ல நழுவி வெறு எங்கெல்லாமோ பறந்து திரிந்துவிட்டு
சாதுவாய் மீண்டும் வந்து அதனிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். இடைப்பட்ட
நேரத்தில் தான் எப்படி இருந்தோம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதே
மறந்து போய்விடும். ஏன் இப்படி ஆப்சண்ட் மைண்டடாக இருக்கிறோம். தனக்கு
மட்டும் இப்படி இருக்கிறதா இல்லை எல்லா பெண்களுக்கும் இது போல் தோன்றுமா
என்ற சந்தேகம் வைஷ்ணவிக்கு ஏற்படும். சந்தியாவிடம் கேட்டால் ”நீ லூசுடி
அதான் இப்படியெல்லாம் திங்க் பண்றே” என்று சொல்லி சிரிப்பாள்.


ரொம்ப யோசித்தாலோ, படபடப்பாக இருந்தாலோ, அல்லது துயரின் உச்சத்தில்
இருந்தாலோ மனம் சமன் நிலை குலைந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் மனதை
ஒருமுகப்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும் என்று தனக்கு தானே
அறிவுறுத்திக் கொண்டு தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை செய்வாள்.
நிதியுடன் விளையாடியோ, பதின்ம வயதில் கற்றுக் கொண்ட பரத நாட்டியத்தை தன்
அறையில் நிதிக்கும் அம்மாவுக்கும் முன்பு ஆடியோ மனச் சோர்விலிருந்து
வெளியே வந்துவிடுவாள். அதன்பின் அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு
நகர்ந்துவிடுவாள்.

தன்னைத் தானே கேள்விக்கு உட்படுத்தி செல்ப் அனாலிஸில் செய்யும் பழக்கம்
டீன் ஏஜிலிருந்து வைஷ்ணவிக்கு உண்டு. தன்னிடம் இருக்கும் குறை நிறைகளை
அவ்வப்போது அலசி ஆராய்ந்து தன் வேதனைக்கோ குழப்பத்திற்கோ காரணமான
விஷயங்களை பட்டியல் இடுவாள். தனக்கு ஏற்படுகின்ற அனைத்து சிக்கல்களின்
மூல காரணம் தான் தான் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள். அதனால் முதலில்
சரியென்று தோன்றியவை பின் சரியற்றதாகிவிடும் போது, அதன் பொறுப்பை தன்
மீதே சுமத்திக் கொண்டு இறுதியில் தேவையற்ற குப்பைகளை தூர வீசி மனதை
தெளிவு படுத்திக் கொண்டே இருப்பாள். மனம் சற்று லேசாகி மீண்டும் பழைய
உற்சாகத்திற்கு வந்துவிடும். அவளுடைய மாசில்லாத சிரிப்பின் முக்கிய
காரணம் இதுதான். மனம் தெளிவாக இருக்கும் போது முக எழில் கூடும். தோழிகள்
“எப்படி வைஷ்ணவி உன்னால மட்டும் இப்படி மலர்ச்சியா சிரிக்க முடியுது”
என்று தோழியர் கேட்கையில் வைஷ்ணவியால் பதிலுக்கு அழகான புன்னகையை
பரிசாகத் தர முடிந்தது.

அடர் பச்சை நிற சில்க் காட்டன் புடவையை உடுத்திக் கொண்டாள். ஜீவாவின்
நினைவு மீண்டும் தவிர்க்க முடியாமல் வந்தது. ”சில பேருக்கு சோபர்
கலர்தான் எடுக்கும், சிலருக்கு டார்க் கலர்ஸ் நல்லாயிருக்கும் ஆனா உனக்கு
எல்லா கலரும் நல்லா இருக்குடி அம்புஜம்” என்பான். சிரித்துக் கொண்டே
கண்ணாடி முன் வந்தாள். இன்று ஏதோ ஒருவித பொலிவு முகத்தில் தெரிவதைப்
பார்த்தாள். இடது கன்னத்தில் சின்னதாக ஒரு பரு எட்டிப் பார்த்தது. இன்றோ
நாளையோ பீரியட்ஸ் வந்துவிடும். எச்சரிக்கையாக ஒரு விஸ்பர் பேடை எடுத்து
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். பெண்கள் வலியில்லாமல் வாழவேக் கூடாது
என்று விதித்திருக்கிறது போலும். மனது அல்லது உடல் எதாவது ஒன்று வாழ்நாள்
முழுவதும் இம்சித்துக் கொண்டே இருந்து தொலைக்கும். சம்ஸ் இன்று வராமல்
இருந்தால் நன்றாக இருக்கும், வைஷ்ணவிக்கு வயிற்று வலியைவிட கால் உளைச்சல்
பயங்கரமாக இருக்கும். சில சமயம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத
அளவிற்கு யாரோ காலுக்குள் க்ரில்லிங் மிஷினை வைத்து குடைவதைப் போல வலி
உயிரை சக்கையாக பிழிந்தெடுக்கும். பெருமூச்சுடன் வைஷ்ணவி சிறிய கறுப்பு
நிற ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டு, கடைசியாக ஒரு முறை
புடவை ப்ளீட்ஸை சரி செய்து விட்டு சுபாவிடம் சொல்லிக் கொண்டு
புறப்பட்டாள்.

சந்தியாவிற்கு போன் செய்தாள். சந்தியா முதலில் எடுக்கவில்லை. அதன் பின்
அவளே அழைத்துப் பேசினாள்.

என்னடி வைஷு போனே காணோம்? பிஸியா?

பிஸி எல்லாம் இல்லை சந்தியா....வேலையை கூட ரிசைன் பண்ணிட்டேன்...

கடைசில ரமணனுக்காக விட்டுக் குடுத்திட்டியா?

ஆமா...ஆனா அது மட்டும் இல்லை சந்தியா எனக்கே ஒரு சின்ன ப்ரேக்
எடுத்துக்கணும்னு தோணிடுச்சி......ரெண்டு மூணு மாசம் கழிச்சு மறுபடியும்
வேற வேலைக்கு போயிடுவேன்....

ம்...உனக்கு எப்படி வசதியோ அப்படி செய்...

அனு எப்படி இருக்கா சந்தியா...இப்ப அவளைப் போய் பாக்கலாமா?

இப்ப பரவால்லை வைஷு...பெய்ன் இன்னும் இருக்கு...அதுக்கு டேப்லெட் எல்லாம்
கிடையாதாம். பிஸியோதெரபில இருக்கா....அடுத்த வாரம் ஊருக்கு
கிளம்பறா....நீ பேசலைன்னு உன் மேல கோபமா இருக்கா?

நேர்ல போனா சரியாகிடுவா சந்தியா....நீ என் கூட வர்றியா?

இல்லைடி வைஷு நீ போய்ட்டு வா...என்னால இப்ப லீவோ பர்மிஷனோ போடவே
முடியாது. அதோட அவ இப்ப நங்கநல்லூர்ல இருக்கா...அவ நாத்தனார் வீட்ல வேற
ஒரே கெஸ்ட் வந்திருக்காங்க...அவ கிட்ட தனியா பேசவே முடியாது. பேசாம
நீயும் நானும் வீக் எண்ட்ல அவ ஊருக்கு போறதுக்கு முன்னாடி போய்
பாத்துட்டு வந்திடலாம்....

அப்படியா சொல்றே?

ஆமா...ஆனா அதுக்கு முன்னாடி நீ போன்ல அவகிட்ட பேசிடு...

சரி சந்தியா......

ம்...பாவம்டி நம்ம அனு....எப்படி துள்ளிச் திரிஞ்சிட்டு இருந்தா.....ஒரே
இடத்துல அவ எப்படித்தான் படுத்துட்டு இருக்கறாளோ? மனசு ரொம்ப கஷ்டமா
இருக்கு வைஷு..

நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க
இல்ல.....இட்ஸ் எ டைம் டு ரெஸ்ட்னு அவளே பாசிட்டிவ்வா எடுத்துக்கறா நீ
அவகிட்ட இப்படி எல்லாம் புலம்பிடாதே....

சேச்சே...உன்கிட்ட தாண்டி ஷேர் பண்ணிக்கறேன். சரிடி நைட் பேசறேன். என்று
சொல்லிவிட்டு போனை வைத்தாள்.


அனுவைப் பார்த்துவிட்டு அதன்பின் ஜீவாவைப் பார்க்கப் போகலாம் என்று
நேரத்தை கணக்கிட்டு இருந்தாள். இப்போது என்ன செய்வது? ஜீவா வரும் வரை
எங்கே போவது என்று திகைப்பாக இருந்தது.

வேலைகள் சூழ்ந்த வாழ்க்கையில் சாப்பிடக் கூட நேரம் இருக்காது. இயந்திர
வேகத்தில் பரபரத்துக் கொண்டிருப்பாள். சட்டென்று உலகம் மெதுவாக இயங்குவது
போல உணர்ந்தாள். பேசாமல் வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று ஒரு நொடி
நினைத்தாள். வேண்டாம். மறுபடியும் கிளம்பி வரச் சோம்பலாக இருக்கும் என்று
முடிவு செய்து எதிரில் தென்பட்ட ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தாள். உள்ளே
எல்லா டேபிள்களும் ஆண்களே நிறைந்திருந்தார்கள். சில பெண்கள் கணவனுடனோ
காதலனுடனோ இருந்தார்கள். இந்த ஊரில் மட்டுமே தனியாக ஒரு பெண் காபி கூட
ஹோட்டலுக்குப் போய் குடிக்க முடியாது. யாரும் எதுவும் நேரடியாகச் கமெண்ட்
அடிக்கப் போவதில்லை. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறு கதை
சொல்லும். சில பார்வைகளை சகிக்க முடியாமலேயே தனியாக வருவதைத் தவிர்ப்பாள்
வைஷ்ணவி. தனியாக பெண்கள் எங்குமே நிற்க முடியாத அளவிற்கு கண்ணுக்குத்
தெரியாத சில வலைகளை இச்சமூகம் காலம் காலமாய் பின்னி வைத்துள்ளது. இப்போது
பரவாயில்லை. தைரியமாக சில பெண்கள் தங்களுக்கு வேண்டியதை போராடியாவது
பெற்றுக் கொள்கிறார்கள். இன்று தனக்கும் வேறு வழியில்லை, நேரத்தை கடத்த
வேண்டும், காபி குடிக்கலாம் என்ற எண்ணம் வேறு ஏற்பட்டுவிட அங்கிருந்த ஏஸி
ரூமுக்குள் சென்றாள். வசதியான ஒரு இருக்கையில் உட்கார்ந்து பேரர்
வருவதற்காகக் காத்திருந்தாள். மெனு கார்டை அவளிடம் தர முயன்றவனிடம் அதை
வாங்காமல் “ஒரு காபி...சக்கரை தனியா குடுத்திடுங்க...என்றாள்.

ஹேண்ட்பேகிலிருந்து கிர்கிர் என்று செல்போன் உறுமியது. சைலண்ட் மோடில்
இருந்து சாதாரண மோடிற்கு மாற்ற மறந்துவிட்டிருந்தாள். போனை வெளியே
எடுப்பதற்குள் கட்டாகிவிட்டது. ஒன் மிஸ்டு கால் யோகேஷ் என்று இருந்தது.
கூப்பிடலாமா இல்லை அப்புறம் பேசலாமா என்று யோசிப்பதற்குள் மறுபடி அந்த
கால் வந்தது. வேறு வழியின்றி எடுத்தாள்.

ஹலோ....

ஹலோ...வைஷ்ணவி...ஹவ் ஆர் யூ?

ம்...இருக்கேன்...

ஏன் உங்க குரல் டல்லா இருக்கு. உடம்பு சரியில்லையா?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை யோகேஷ் ஐம் ஆல் ரைட்...

சரி...உங்களை ஆபிசுக்கு கூப்பிட்டு அனுப்பினேனே, ஷார்ப்பா பத்து மணிக்கு
கார் கூட அனுப்பினேன். நீங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க...

ம்....

நீங்க ரொம்ப ப்ரிலியண்ட்டுன்னு தெரியும். அதுக்குள்ள வேற வேலைக்கு ஜாய்ன்
பண்ணிட்டீங்களா என்ன?

உங்க கற்பனை நல்லா இருக்கு யோகேஷ்.....ஏன் எனக்கு பெர்சனல் வொர்க்
எதுவும் இருக்க கூடாதா?

அதுக்கில்லை வைஷ்ணவி, உங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது இவ்வளவு
கஷ்டம்னு நான் நினைக்கலை....பி.எம்மை கூட மீட் பண்ணிடலாம் போல இருக்கு
ஆனா உங்களை போன்ல கூட பிடிக்க முடியலை..

அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவே அவனே தொடர்ந்து

டூ பி ப்ராங்க் வைஷ்ணவி ஐ மிஸ் யூ....நீ இல்லாத இடம் ரொம்ப வேகண்டா
இருக்கு....உனக்கு எப்படி கன்வே பண்றதுன்னு தெரியலை....என்னால வேலையே
செய்ய முடியலை.....எனக்கு மட்டும் இல்லை வைஷ்ணவி இங்க எல்லாருக்கும்
அப்படி தான் இருக்கு.....வீ ஆல் வாண்ட் யூ பேக்....ப்ளீஸ் திரும்பி
ஜாய்ன் பண்ணிடுங்க...

அவன் குரலில் தெரிந்த லேசான பதட்டம் வைஷ்ணவிக்கு கவலை அளித்தது.

என்ன யோகேஷ் நான் உங்ககிட்ட சொல்லிட்டு தானே நின்னேன். ஐ ஹாவ் சம்
பர்சனல் ப்ராப்ளம்ஸ்....புரிஞ்சுக்கங்க...

ஓகே....நீங்க இப்ப என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். நல்லா யோசிச்சிட்டு,
நெக்ஸ்ட் வீக் போன் பண்ணுங்க...டேக் கேர் வைஷ்ணவி.

சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். ஏஸியிலும் நெற்றியில்
வியர்த்திருந்தது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள். பக்கத்தில் ஆறிப்
போய் விட்டிருந்த காபியை குடிக்க பிடிக்காம இன்னொரு காபி ஆர்டர்
செய்தாள்.

பேரர் அவளை வினோதமாக பார்த்துவிட்டுச் சென்றான். மறுபடியும் போன் உரும,
இப்போது வீட்டு நம்பரிலிருந்து வந்திருந்தது.

ஹலோ சொல்வதற்குள் சுபாவின் பதட்டமான குரல் கேட்டது. வைஷ்ணவி எங்க
இருக்கே? உடனே வா....என்றாள்.

என்னம்மா என்ன ஆச்சு உடம்புக்கு எதாவது முடியலையா?

எனக்கு ஒண்ணும் இல்லை...நீ உடனே சீக்கிரம் கிளம்பி வா....

அம்மா ப்ளீஸ் என்ன விஷயம்னு சொல்லு என்பதற்குள் லைன் கட்டாகிவிட்டது.

வீட்டு நம்பருக்கு அவள் அடிக்க அதில் எங்கேஜ்ட் டோன் வந்தது. இனம்
தெரியாத எரிச்சல் குப்பென்று பற்றிக் கொள்ள, பேரர் கொண்டு வந்த காபியை
குடிக்காமலேயே பில்லுக்கான பணத்தையும் டிப்ஸையும் வைத்துவிட்டு அவசர
அவசரமாக எழுந்து போனாள் வைஷ்னவி.

- தொடரும்

சனி, 6 ஆகஸ்ட், 2011

ஒரே கனவு





”ஏன் இந்தக் கனவு அடிக்கடி வருது டாக்டர்? சில சமயம் முழுக் கனவும் வருது, சில சமயம் அதே கனவு பாதி வருது….ஆனா எனக்கு இந்தக் கனவைத் தவிர வேற கனவே வரதில்லை....ஐம் ரியலி ஸ்கேர்ட் அதான் உங்க கிட்ட கன்ஸல்ட் பண்ண வந்தேன்” படபடவென்று அகில் சொல்லி முடிக்கையில் ஏஸி ரூமிலும் அவனுக்கு வியர்த்துவிட்டது.

”மிஸ்டர் அகில் கூல் டவுன்....ரிலாக்ஸ்...இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை...ஜஸ்ட் எ ட்ரீம்” என்றார் டாக்டர் ரங்கராஜன்.

”அது ட்ரீம்தான்னு மனசுக்குத் தெரியுது டாக்டர். ஆனா ஒரே கனவு திரும்ப திரும்ப வர்றதுதான் பதட்டமா இருக்கு” என்றான்.

அந்தக் கனவை மறுபடியும் அவன் விவரிக்கத் துவங்க, அவனுடைய முகமாற்றத்தை ரங்கராஜன் உற்றுக் கவனித்தார்.

”லிசன் அகில்...நீங்க ஐடி செக்டார்ல இருக்கீங்க...வொர்க் ப்ரெஷர்ஸ், ராத்திரி பகலா செய்யற வேலைகள்னு கொஞ்சம் டிப்ரஷன் இருக்கலாம் அவர் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த அகில்,

’அதெல்லாம் இல்லை டாக்டர் எந்த வேலையையும் நான் ரொம்பவே என்ஜாய் பண்ணி செய்யறவன். வீட்ல, என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேன்னு எல்லாரும் என்னை புரிஞ்சிக்கிட்டவங்கதான் இருக்காங்க டாக்டர். சின்ன மன வருத்தம் கூட இந்த நிமிஷம் எனக்கு கிடையாது”. என்றான்

”தட்ஸ் குட். நீங்க சொல்றது சரியாவே இருக்கலாம் அகில். ஆனா மனசு ரொம்ப விசித்திரமானது. அது ஏன் டிஸ்டர்ப் ஆகுதுக்கு யாராலயும் ஈஸியா சொல்லிட முடியாது. தூக்க பிரச்சனைகள்தான் எல்லாத்துக்கும் அடிப்படை”

”எனக்கு தூக்கம் பொதுவாவே கம்மிதான் டாக்டர். ஆனா படுத்த அடுத்த செகண்டே குறட்டை விட்டு தூங்கிடுவேன்...இப்போதைக்கு இந்த கனவு மட்டும்தான் என் ப்ராப்ளம்..என்றவன் தொடர்ந்து “கனவுகளுக்கு சயின்டிபிக்கா பலன் எதாவது இருக்கா டாக்டர்? என்றான்.

”கனவுகளோட பலன் என்ன அப்படிங்கறதைத் தாண்டி ஏன் ஒரே கனவை அடிக்கடி காண உங்க உள் மனசு விரும்புதுங்கறது யோசிக்க வேண்டிய விஷயம். சம்திங் பிஷ்ஷி என்றபடி சில மாத்திரைகளின் பெயரை எழுதி அவனிடம் தந்தார்.

”இதை மூணு நாள் எடுத்துக்கங்க அகில். ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு நல்லா சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுங்க. முடிஞ்சா எங்கயாவது சின்ன டூர் அடிச்சுட்டு வாங்க. யூ நீட் கம்ப்ளீட் ரெஸ்ட். ”
அவருக்கு நன்றி சொல்லி கைகுலுக்கிவிட்டு அவனுடைய அனிதாவுக்கும், நெருங்கிய தோழி மீராவுக்கும் அவளின் காதலன் விபின் மற்றும் தன் அலுவலக நண்பன் செந்திலுக்கும் போன் செய்தான். அவன் டாக்டரை சந்தித்த விஷயத்தைச் சொல்லாமல் அவர் சொன்ன ட்ரிப் பத்தி மட்டும் சொல்லவே அவர்கள் சந்தோஷத்துடன் சம்மதித்தார்கள்.


அகில் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
தேனியிலிருந்து பிரிந்து போடிக்குச் செல்லும் நீளமான புத்தம் புது சாலையில் அவர்களின் கறுப்பு நிற சிஆர்வி கார் வழுக்கிக் கொண்டு பறந்தது. ஏஸியை அமர்த்திவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டான். டாக்டர் சொன்னது சரிதான், இயற்கை எவ்வளவு புத்துணர்ச்சியை நமக்குள் செலுத்துகிறது என்று ஆச்சரியப்பட்டான். இரு பக்கமும் மரங்களும் தூரத்தில் தெரியும் மலையும், சில்லென்ற மென்காற்றுமாய் அகிலுக்கு வண்டியை ஓட்டுவதே சுகமாக இருந்தது.தன்னுடைய குளிரூட்டப்பட்ட கேபினில் தினம் தினம் கம்யூட்டர் திரையின் முன் இரவு பகல்களை கரைத்த சலிப்பெல்லாம் மெல்ல தீர்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நண்பன் செந்திலின் சொந்த ஊர் போடிநாயக்கனூர். அவனை அங்கிருந்து பிக் அப் செய்தபின், தேக்கடிக்குப் போகத் திட்டமிட்டிருந்தார்கள். காலை எட்டு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இடைவிடாமல் பயணம் செய்து போடிக்கு வந்துவிட்டார்கள்.

”ஏய் அனிதா அந்த பெப்ஸியை எடு” சி.டி ப்ளேயரின் வால்யூமை அதிகமாக்கினான் அகில்.

அவன் அருகே இருந்த அனிதா குனிந்து கீழே இருந்த கவரிலிருந்து பெப்ஸியை எடுத்து குடுத்தபின், சீட்டில் வசதியாக சாய்ந்து கொண்டாள். ஒரே மூச்சில் அரை லிட்டர் பெப்சியைக் குடிக்க அகிலால் மட்டும் தான் முடியும்.

”ஒரு பியர் அடிச்சா நல்லா இருக்கும்” என்றவனை முறைத்தாள் அனிதா.

விபின் விசிலில் ஏதோ பாடிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் இருந்த மீரா ஐபாட்டில் மூழ்கியிருந்தாள்.

’அதான் நான் பாட்டு போட்டிருக்கேன் இல்ல அதுக்கப்பறம் எதுக்கு காதுல அதை மாட்டிக்கிட்டு இருக்கே?” என்றான் அகில்.

மீராவுக்கு அவன் சொன்னது காதில் விழவில்லை. தொடர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்கவே, அகில் ஹாரனை விட்டு விட்டு அடித்தான்.

சத்தம் உரைத்த மீரா காதிலிருந்து ஹெட் போனை உருவி.”என்ன ஆச்சு எதுக்கு இப்படி ஹார்னை அடிக்கறே?” என்று கேட்கவும் அனிதாவும் விபினும் சிரித்தார்கள்.

மீரா எதுவும் சொல்லாமல் மறுபடியும் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டாள். அனிதா தன் ஹேண்ட்பேகிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருந்த ”வெஸ்ட் இஸ் வெஸ்ட்” டிவிடியை ப்ளேயரில் ஓட விட்டாள். அந்த சத்தத்தில் கூட பின் சீட்டில் ராகவ் தூங்கிக் கொண்டிருந்தான். யு.எஸ் டைமிங்கில் நைட் ஷிப்டில் வேலை செய்யும் அவனுக்கு சாப்பாடு கூட வேண்டாம், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் உறக்கம் மட்டுமே போதும்.

ஜாலியாக கிளம்பியவர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். செந்திலின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தார்கள். செந்தில் அதிகாலையில் கிளம்பலாம் என்று சொல்லவே விபின் ஒத்துக் கொள்ளவில்லை. க்ளப் மகிந்திராவில் அன்று மதியத்திலிருந்து அவர்களுக்கு ரூம் புக்காகி இருந்தது. முந்தைய இரவு கிளம்ப முடியாத அளவிற்கு வேலை இருந்ததால் அரை நாள் வீண் ஆனாலும் பரவாயில்லை என்று காலையில் இருந்தார்கள். இரவும் இங்கேயே ஹால்ட் ஆகிவிட்டால் முழுதாக ஒரு நாள் வீணாகி விடும். சகல செளபாக்கியங்களும் நிறைந்த ஸ்டியோ ரூம் அது. அகிலை வற்புறுத்தி அழைத்துச் செல்பவன் அவன் தான்.

அகிலின் பிரச்சனை அவன் காரை யாருக்கும் ஓட்டக் குடுக்க மாட்டான். எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் சரி. அவனுடைய கார்தான் அவனின் முதல் காதலி. அனிதா மூன்றாவது தான். நடுவில் இருக்கும் காதலி அவனது கணினி. அவன் சோர்வைப் பார்த்து செந்தில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

இங்கேர்ந்து ஒன் அவர்ல போயிடலாம் இல்லைடா. ரெஸ்ட் எடுத்தோம்னா ரொம்ப இருட்டிடும் அதுக்கப்பறம் மலைப் பாதைல ட்ரைவ் பண்றது ரொம்ப கஷ்டமாயிடும் ” என்றான் விபின்.

விபின் சொல்றதுதான் சரி என்று அனிதாவும் சொல்லவே செந்தில் அவர்களுடன் கிளம்பினான்.

மறுபடியும் சிரிப்பும் பாட்டும் கூத்துமாக அவர்களின் பயணம் தொடர்ந்தது. மீரா காதில் இன்னும் ஹெட்போன் இருந்தது.

அனிதா விபினிடம் “பேசாம நீ அந்த ஐபாடா இருந்திருக்கலாம். எப்ப பாரு மீரா அதைத்தான் ரொம்ப லைக் பண்றா என்றாள்.

விபின் சோகமாக தலையாட்டியபடி ஆமா என்றான். மீரா ஏதோ புரிந்தவளாக அவன் தலையில் கொட்டினாள்.

அதன் பின் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் உலகத்தில் மூழ்கிவிட்டார்கள்.

ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அனிதாவும், மீராவும் உள் ரூமில் பெட்டில் படுத்துக் கொண்டார்கள். வெளியே சோபாவில் அகில் படுத்துக் கொள்ள, விபினும், செந்திலும் தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

அகில் அனைவரும் தூங்கிய பின் மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். தொண்டையில் கசந்தது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது என்று மகிழ்ந்தான். கனவு வந்தது கூட நல்லதாகிப் போய்விட்டது. இப்படி நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் வாய்த்ததே என்று சந்தோஷப்பட்டான்.கண்ணின் இமைகள் கனக்கவே தூக்கம் அவனை ஆரத் தழுவியது.

நள்ளிரவில் தண்ணீர் குடிக்க விபின் எழுந்த போது அகிலின் முகம் தீவிரமாக யோசனையில் இருப்பதைப் போல புருவங்கள் நெறுக்கி ஏதோ குழறலாகப் பேசிக் கொண்டிருந்தான். முகம் லேசாக வியர்த்திருக்க, அகில் அகில் என்று அவன் கன்னத்தைத் தட்டினான் விபின். அகில் அமைதியாகிவிட விபின் ஏசியைப் போட்டுவிட்டு அவனுக்கு போர்த்திவிட்டுப் படுத்தான்.

அடுத்த நாள். ப்ரேக்பாஸ்ட் டேபிளில் கூடினார்கள். அகிலைத் தவிர மற்றவர்கள் நன்றாக தூங்கியிருந்ததால் களைப்பு நீங்கி உற்சாகமாக இருந்தார்கள். அகிலுக்கு தூங்க்ய உணர்வே இல்லை. அந்தக் கனவு மிக மிக மங்கலாக நேற்றிரவு வந்திருந்தது. மீரா பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்யவே, சாப்பிட்டுக் கொண்டே அன்றைய ஷெட்யூலை ப்ளான் செய்தார்கள்.

அனிதா சொன்னாள், “நேரா போட்டிங் போறோம். அதுக்கப்பறம் மத்ததை பேசிக்கலாம். என்றாள்.

அகில் சட்டென்று, போட்டிங்கா நா வரலைப்பா ஐ நீட் ரெஸ்ட். உடம்பெல்லாம் வலிக்குது. நீங்க போயிட்டு வாங்க. என்றான்.

அனிதாவின் முகம் வாடிவிட்டது. ஏன் அகில். தேக்கடின்னாலே போட்டிங்தான்...ரொம்ப ஜாலியா இருக்கும். அதைவிட்டுட்டு கொட்டு கொட்டுன்னு எதுக்கு தனியா ரூம்ல இருக்கணும்னு நினைக்கறே’ என்றாள்.

அகில் எதுவும் சொல்லாமல் இருக்க, மீரா ஏளனமாக சிரித்தபடி, ‘ஏய் நாம க்ரூப்பா வந்திருக்கோம், இவன் மட்டும் தனியா ரெஸ்ட் எடுக்கப் போறானாமா...அதெல்லாம் முடியாது. நீ வந்தா தான் போட்டிங் இல்ல ட்ரிப்பை கேன்ஸல் பண்ணிட்டு ஊருக்குப் கிளம்பிடலாம்” என்றாள். வேறு வழியின்றி ஏதோ ஒரு கணத்தில் எடுத்த முடிவாக ‘ஓகே கய்ஸ் லெட்ஸ் கோ” என்றான்.

அவர்கள் உற்சாகமாக போட்டிங் கிளம்பினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட விசைப் படகு மெல்லக் கிளம்பி, பின் வேகம் எடுத்தது.

இவர்களையும் சேர்த்து படகில் கிட்டத்தட்ட எண்பது பயணிகள் ரொம்பி வழிந்தார்கள். நீரைக் கிழித்துக் கொண்டு சென்ற படகின் அடிப்பாகத்தைப் பார்த்த அகிலுக்கு அடிவயிற்றில் லேசாக பயம் துளிர்த்தது. விபின் மீரா காதில் ஏதே கிசுகிசுக்க அவள் ச்சீ என்று உதட்டைக் கடித்து வெகு நாள் கழித்து வெட்கப்பட்டாள். இதை ஓரக் கண்ணால் பார்த்த அனிதா, அகிலைப் பார்த்து புன்னகைக்க அவன் சலனமே இல்லாமல் இறுக்கமான முகத்துடன் நீர்ப்பரப்பையே வெறித்துக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் புரண்டு கொண்டிருந்த பயம் பந்தாகச் சுழன்று தொண்டை வரை வந்துவிட்டிருந்தது. ராகுல் செந்திலின் வாட்சை பரிசோதித்து ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அகில் அனிதாவின் கையைப் பிடித்து இங்கேர்ந்து போயிடலாம் அனி...எனக்கு பயமா இருக்கு என்றான். அவனை ஆழமாகப் பார்த்த அனிதா ‘நீ என்ன குழந்தையா எதுக்கு அனாவசியமா பயப்படறே என்று அவன் கையை அழுத்தமாகப் பிடித்தாள். அகில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வானத்தைப் பார்த்தான்.

சூழல் மிக ரம்யமாக இருக்க, வேகமாகச் சென்று கொண்டிருந்த படகில் திடீரென்று சல சல என்று சத்தம். படகிலிருந்து பார்க்கும் போது காட்டில், புலிகள் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி காட்டு எருமைகள், மான்கள் என்று படகில் போகும் போது சில சமயம் மிருகங்கள் கண்ணுக்குத் தென்படுமாம். தூரத்தில் புலி தன் குட்டியுடன் செல்வதைப் பார்க்கையில் டிஸ்கவரி சேனலை நேரடியாக பார்ப்பது போல் இருந்தது. புலிகளைக் கண்ட ஆர்வம் மிகுதியில் சிலர் அதைத் தெளிவாகப் பார்க்க படகின் ஓரத்திற்கு விரைந்தார்கள். திடீரென்று அந்தப் பகுதியில் வெயிட் அதிகரிக்கவே, படகு நிலைதடுமாறியது. அகில் என்னவென்று தீர்மானிப்பதற்குள் படகு ஒரே நொடியில் கவிழ்ந்து அதில் பயணித்த மொத்த நபர்களும் நீருக்குள் மூழ்கினார்கள். சாவின் குரல் அத்தனை திசைகளிலிருந்தும் எழுந்தது. அய்யோ அம்மா காப்பாத்துங்க, ஹெல்ப் என்ற தீனமான அலறல்கள் கரையிலிருப்பர்வகளின் காதுகளுக்கு எட்டும் முன்னர் கிட்டத்தட்ட அனைவரும் மூழ்கினார்கள். நீச்சல் தெரிந்தவர்கள் பயத்தில் நீச்சல் வராமல், திக்கு முக்காடினார்கள்.





அகில் மனதில் அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வந்தது. அப்பாவின் சிரிப்பும் அதன் பின் அனிதாவின் அணைப்பும் ஞாபகத்திற்கு வந்து உயிரை வலிக்கச் செய்தது. தண்ணீருக்கு அடியில் அவன் கைகளும் கால்களும் பிடிப்புக்காகத் தவித்துக் கொண்டிருக்க, மரங்களும் புதர்களும் பாறைகளும் அடர்ந்த நீருக்கு அடியில் சிக்கி சுவாசம் இழந்து மிதப்பதைப் போல வரும் கனவின் பயத்தை இனி யாரிடம் போய்க் கேட்க முடியும் என்ற கடைசி யோசனையும் மங்க விழிகள் அசைய மறக்க அவனுயிர் பிரிந்தது.

(இரண்டு வாரங்களுக்கு முன் கல்கியில் வெளிவந்த சிறுகதை)

செவ்வாய், 26 ஜூலை, 2011

நீண்ட இடைவெளி





வெகு நாள் எழுதாமல் இருந்ததற்கு காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. இப்போது எழுதும் தீவிரம் அதிகமாகியுள்ளது.

கல்கியில் என் தொடர்கதை ”மீதி வெள்ளித்திரையில்” ஆகஸ்ட் முதல் வரவிருக்கிறது. தோழிகள், நண்பர்கள் படித்து கருத்து சொல்லுங்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். இரண்டு வருட சுதந்திர வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்கள் நிறைய. வலிகளுடனான சுதந்திரம் மட்டுமே சாத்தியமானது. நீண்ட நாள் விடுப்பை எடுத்தது போல் மீண்டும் அலுவலகத்திற்குள்.....இஷ்டமான நேரத்தில் எழுந்து, இரவு நீண்ட நேரம் விழித்து படித்தத்து, எங்கு வேண்டுமானாலும் சுற்றி அலைந்து, நினைத்த மாத்திரத்தில் தோழிகளை சந்தித்தெற்கு எல்லாம் இப்போது லீவ். இந்த இரண்டு வருடங்களில் என் சுயத்தை இழக்காமல் ஒரு பூவைப் போல் பாதுகாத்தவர்கள் என் இனிய தோழி சந்திரா, என் உயிர்த் தோழி தமிழ்நதி, என் மதிப்புற்குரிய நண்பர் பாஸ்கர் சக்தி (அவரிடம் பார்ட் டைம் வேலை செய்தேன்), சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் உற்சாகமாய் போனிலும் நேரிலும் பேசிய சூர்யா, இனிமையைத் தவிர வேறு எதுவும் தெரியாத அன்பு நண்பர் பெயரிலேயே தங்கத்தை வைத்துள்ள தங்கமணி பிரபு, மற்றும் என் எல்லா தோழர் தோழியரும் (லிஸ்ட் போட ஆரம்பித்தால் அது முடிவடையவே அடையாது)....நண்பர்களால் மட்டுமே ஆனது என் உலகம். மீண்டும் மீண்டும் நெகிழ்ந்து கரைகிறேன்.....

மீதி வெள்ளித்திரையில்......;))))

வியாழன், 16 ஜூன், 2011

4. இப்போதும் இருக்கும் கதை

”பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடும் நாணலைப் போன்றவள். எத்தகைய பெரும்புயல் வீசினாலும் ஒடிந்து வீழ்ந்து விட மாட்டாள்” – வேட்லி




’நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்' என்று ஜீவா எழுதியிருந்த கடிதத்தின் கடைசி வரிகளை வைஷ்ணவியால் மறக்கவே முடியாது. பிரியவே மாட்டோம் என்ற வார்த்தை இப்போது அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் மனதளவில் இன்னும் பிரியாமல் அவனுடனான நினைவுகளை அசை போட்டபடி இருப்பதால் தான் அவனை நிரந்தரமாக பிரிந்துவிட்டோம் என்ற எண்ணத்திலிருந்து அவளை காப்பாற்றிக் கொண்டிருந்தது. கனவு கண்ட வாழ்க்கை கை நழுவி போய்விட்டாலும் கனவில் அடிக்கடி ஜீவா வந்து கொண்டே தான் இருந்தான். ரமணனுடன் அன்யோன்யமாக இருக்கும் தருணங்களில் இது பெரும் மனச்சிக்கலை குடுத்தாலும் தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிவிட்டது. ”ஜீவா என்னிக்காவது உன்னை நிச்சயமா நான் மறப்பேன் பாரு:என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். பெருமூச்சுடன் லாப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு மணியைப் பார்த்தாள். பதறியபடி யோகேஷ் கேட்ட ஃபைலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக லீ மெரிடியனுக்குக் கிளம்பினாள். அதற்குள் யோகேஷ் பத்து முறை போன் செய்துவிட்டான்.

சரியான நேரத்திற்கு ஃபைலை அவனிடம் தந்ததும்தான் அவன் டென்ஷன் குறைந்தது. யோகேஷ் வெளிப்படையாக பேசுபவன். சந்தோஷோமோ கோபமோ எல்லாவற்றையும் கொட்டிவிடுவான். ஒரு நாள் பிங்க் கலர் காட்டன் ஸாரி உடுத்திச் சென்றிருந்தாள். அவன் ஒரு நொடி இமைக்காமல் பார்த்துவிட்டு “ஆசம் வைஷ்ணவி. இந்தக் கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு” என்றான். சற்றுக் கூச்சமாக இருந்தாலும் அவன் குரல் அன்று முழுவதும் அவளைச் சுற்றி வந்துக் கொண்டே இருந்தது. யோகேஷுக்கு முப்பத்தி இரண்டு வயதாகிறது, நல்ல படிப்பு நல்ல வருமானம் எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் இன்னும் கல்யாணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறான். பட்டும் படாமல் வைஷ்ணவி ஏன் டிலே பண்றீங்க என்று கேட்டதற்கு ”உங்களைப் போல ஒரு டேர் டெவில் வுமனை தேடிட்டு இருக்கேன்” என்றான். அதிலிருந்து அவள் பர்சனல் கேள்விகள் கேட்பதை தவிர்த்தாள். மீட்டிங் முடிந்ததும் க்ளையண்டுடன் லன்ஞ் முடித்துவிட்டு காரில் யோகேஷுடன் ஆபிசுக்குக் கிளம்பினாள் வைஷு. வழியில் அவன் தொண தொணவென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வரி பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

”ஆபீஸுகு போனதும் இண்டர்னல் மீட்டிங் உடனே ஆரம்பிச்சடலாம். பேசி டிசைட் பண்ண நிறைய விஷயங்கள் இருக்கு” என்றான்

அவள் சுரத்தே இல்லாமல் ‘ம்’ என்றாள்.

”அப்பறம் நம்ம ஆபிஸ்ல இருக்கற கான்பரன்ஸ் ஹால்ல புது எல்.ஈடி டிவி மானிட்டர் போடணும். இன்னிக்கே கொடேஷன்ஸ் வாங்க ஆரம்பிச்சிருங்க.. ”

”ம்..”

அவன் போன் அடிக்க அதை எடுத்து உற்சாகமாக பேச ஆரம்பித்தான். வைஷ்ணவி வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். ஸ்கூல் முடிந்து பிள்ளைகள் சைக்கிளிலும் ஆட்டோக்களிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரண்டு குழந்தைகளை ஸ்கூட்டியில் வைத்து அசால்டாக ஓட்டிச் சென்றாள் ஒரு இளம்பெண். அந்தக் குழந்தைகள் சற்று பயந்து போய் அவள் வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டிருந்தது. காலம் நிறைய மாற்றங்களை தந்திருக்கிறது. முன்பெல்லாம் எங்கும் எதிலும் இத்தனை வேகம் இருந்திருக்கவில்லை. ஓரளவுக்கு சிட்டி லைஃப் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது. ஆனால் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கும் காலகட்டம் பாரபட்சமின்றி அனைவரையும் திணறடிக்கிறது. இளைஞர்கள் சீக்கிரம் சோர்ந்து போய் அனைத்தும் கிடைக்கப் பெற்ற வாழ்க்கை அலுத்துப் போய் வெகு விரைவில் பல விதமான மன நெருக்கடிகளுக்கு உள்ளாகி அதன் பலனாக பல வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். தன்னுடைய நிறுவனத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் வேலை செய்தால்தான் இலக்குகளை அடைய முடிகிறது. வீட்டுக்குப் போன பின்பும் ஆன்லைனிலும் மொபைலிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா வேலைகள். எதற்காக இந்த ஓட்டம். நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்கவே முடியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. அதுகூட பரவாயில்லை அனுவைப் போல எதாவது பிரச்சனை தனக்கும் வந்துவிடுமோ என்றும் பயமாக இருந்தது.

பள்ளி நாட்களில் கவலையற்று தான் துள்ளித் திரிந்ததைப் போல தன் மகளால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். குழந்தையின் சின்ன மூளைக்குள்தான் எத்தனை விதமான திணிப்புகள்? அப்பா, அம்மா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டுக்கு வருபவர்கள் மற்றும் ஸ்கூல் டீச்சர்கள் என்று எல்லாரும் அவளை வழிநடத்துகிறேன் என நினைத்து பல அறிவுரைகளை வாரி வழங்க அதில் எதை பிடித்துக் கொளவது எதை விடுவது என்று அவள் திணற மாட்டாளா? சமூகம் இப்படித்தான் இருக்கும். தனக்கு வேண்டியதை தனக்கு விருப்பம் உள்ளதை மக்களின் மீது திணித்துக் கொண்டே இருக்கும். எதையும் அழித்து ரீ சைக்கிள் பின்னில் போட முடியாது. நிதி தன் சின்னஞ் சிறிய விரல்கள் வலிக்க வலிக்க ஹோம் வொர்க் பக்கம் பக்கமாக எழுதுவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. எழுத வைத்தே தீரவேண்டும். அவள் சரியாகப் படிக்காவிட்டால் ரமணன் நிதியைத் திட்டவே மாட்டான். வைஷுவிடம் “நீ வேலையை விட்டுட்டு நிதியைப் பாத்துக்கன்னு எத்தனை தடவை சொல்றது வைஷு? ஏன் இப்படி குழந்தையோட ப்யூச்சரோட விளையாடறே என்று சீறுவான். அவனை சமாதானப் படுத்துவற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நிதியே வைஷுவின் அருகில் வந்து ”ஸாரிம்மா நெக்ஸ்ட் டைம் எல்லாத்திலும் ஏ ப்ளஸ் வாங்கறேன்” என்று சொல்லும்.

நிதியின் வயதில் விளையாட்டுத் தோழிகள் அக்கம் பக்கத்தில் இல்லாததால் பார்ப்பி பொம்மையுடனும், டீவி திரையில் தோன்றும் டோரா, பென் 10, சின் சாங், டோரிமான், நோமிடா போன்ற காரெக்டர்களை தனக்கு உகந்த தோழமைகளாக கற்பனை செய்து கொள்ளுவாள். ’வைஷும்மா இன்னிக்காவது மறக்காம டோரிமான் பொம்மை வாங்கிட்டு வா அது என்ன சாப்பிடும் தெரியுமா...என்று ஒரு நொடி அவள் கண்களையே சிரிப்புடன் பார்த்துவிட்டு அவள் தெரியாமல் விழிப்பதை பார்த்து பனானா என்று சொல்லி அட்டகாசமாக சிரிப்பாள். ஏற்கனவே அவளுக்கு பென் 10 பாக்ஸ், டோரா ஸ்கூல் பேக், டோரா புஜ்ஜி வாட்டர் பேக், டோரா கர்சீப், சின்-சாங் பெட் ஷீட் மற்றும் தலையணை வாங்கிக் குடுத்திருந்தாள். இந்த டோரிமான் மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. சீக்கிரம் தேடிப் பிடித்து வாங்கித் தந்துவிட வேண்டும். எப்படி தனக்கும் எல்லாம் கார்டூன் காரெக்டர்கள் தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட்டாள் வைஷ்ணவி.

“காஸ்ட்வைஸ் பாத்தா சாம்சங் பெட்டர்னு நினைக்கறேன்...நீங்க என்ன சொல்றீங்க?” என்று விட்ட இடத்திலிருந்து யோகேஷ் கேட்டதை அவள் கவனிக்கவில்லை. அவன் இன்னும் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள்.

அவள் பதில் வராமல் இருக்கவே யோகேஷின் முகம் மாறியது.

”என்ன வைஷ்ணவி? ஆர் யூ ஹியர்? நான் பாட்டுக்கு பேசிட்டே வரேன் நீங்க வேற ஏதோ யோசனைல இருக்கீங்க போல? எனி ப்ராப்ளம்?”

”நத்திங் யோகேஷ் ஆனா உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆபிஸ் போனதும் பேசலாம்.”.

”அப்படியா? பரவால்லை ஏன் அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும். இப்பவே சொல்லுங்க”

ஒரு நொடி யோசித்துவிட்டு “எனக்கு கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம் இருக்கு யோகேஷ். அதனால....

அதனால....

”வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றாள்.

”வாட்? என்ன சொல்றீங்க? ஆர் யூ ஜோக்கிங்? முகத்தின் லேசான அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

”இதுல ஜோக் அடிக்கறதுக்கு எதுவும் இல்லை யோகேஷ். எனக்கு வேற வழியில்லை. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்.”

”என்ன வைஷ்ணவி இப்படி திடீர்னு சொன்னா எப்படி? இப்பதான் நம்ம கன்சர்ன் பிக் அப் ஆகிட்டு இருக்கு. நீங்களும் அதுக்கு ஒரு காரணம். சேலரி ஹைக் எதாவது வேணும்னா சொல்லுங்க. இப்பவே போட்டுடறேன்...”

”சேச்சே அதெல்லாம் இல்லை யோகேஷ் இது வேற பிரச்சனை”

”அப்படி என்ன பிரச்சனை வைஷ்ணவி திடீர்னு? சொல்லக் கூடியதா இருந்தா ப்ளீஸ் ஷேர் இட் வித் மீ. என்னால முடிஞ்ச உதவி பண்றேன்...கமான் பீ ப்ராங்க்...”

”இல்லை யோகேஷ் இதை என்னால வெளில சொல்ல முடியாது. சம்திங் டூ பர்சனல். ஆனா என்னால நிச்சயமா கண்டினியூ பண்ண முடியாது.”

அவன் தீவிரமாக யோசனையில் இருந்தான். சற்று நேர அமைதிக்கு பிறகு “என்னிக்கு ரிலீவ் ஆகணும்னு நினைக்கறீங்க?”

”முடிஞ்சா இன்னிக்கே யோகேஷ்”

”அவ்வளவு அவசரமாவா?

யெஸ் யோகேஷ்...”

”அப்ப உங்க பெண்டிங் வொர்க், ஹாண்டிங் ஓவர் அண்ட் திங்ஸ் இதெல்லாம்?”

”எல்லாம் ஈஸ்வரிக்கிட்ட சொல்லியிருக்கேன்....அவங்க பாத்துப்பாங்க யோகேஷ்”

”ஓ அந்த அளவுக்கு நீங்க ப்ரீ பளாண்ட் இல்லை. நான் தான் முட்டாள். உங்களை நம்பி நிறைய அசைன்மெண்ட்ஸ் ஒத்துக்கிட்டு இருக்கேன்....என்றான் லேசான கோபத்துடன்.

“Men may come and men may go but the company goes on” கம்பெனி லா படிச்ச்சிருக்கீங்க இல்லை.

”Every individual is unique” இல்லையா? இதை யாராலையும் மறுக்கமுடியாது வைஷு....உங்க வொர்க் மட்டும் இல்லை உங்க மாரல் சப்போர்ட்டும் எனக்கு நிச்சயம் தேவை...ப்ளீஸ் டேக் யுவர் டைம். ஒரு மாசம் கூட ப்ரேக் எடுத்துக்கங்க…ஆனா திரும்பி வந்துடுங்க. அடம்பிடிக்கும் பள்ளி மாணவனாய் அவன் முக பாவம் இப்போது மாறி இருந்தது.


”இல்ல யோகேஷ் திரும்பி வர முடியாத சூழல் வந்துச்சுன்னா கஷ்டம். கமிண்ட்மெண்ட் குடுத்தா நான் அதை மீற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?’

”அது தெரிஞ்சுதான் வைஷ்ணவி அப்படி கேட்டேன். இப்ப நீங்க எதையும் பேச வேணாம். நேரா வீட்டுக்கு போங்க. நல்லா யோசிங்க. நாளைக்கு எனக்கு போன் பண்ணுங்க.....

”அப்ப ஈவ்னிங் மீட்டீங்?

”எல்லாம் கேன்ஸல் நானும் வீட்டுக்குப் போகப் போறேன். எனக்கு மூட் அவுட். அண்ட் அப்கோர்ஸ் அதுக்கு காரணம் நீங்கதான்.” என்றான்.

அவள் பதில் பேசாமல் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டு வாசலில் அவளை ட்ராப் செய்துவிட்டு அவன் கார் விரைந்துவிட்டது.

சுபா ஆச்சரியமாக வைஷுவை வரவேற்றாள். டீவி பார்த்துக் கொண்டிந்த நிதி அந்த நேரத்தில் வைஷுவை எதிர்ப்பார்க்காததால் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டது.

”என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? உடமபு எதாவது சரியில்லையா?” என்று கேட்டாள் சுபா

”இல்லைம்மா நான் வேலையை விட்டுட்டேன்.”

”வைஷு அப்ப நாளைல்லேர்ந்து நீ லீவா” என்று நிதி கேட்டது

”ஆமாம் செல்லம் அம்மா உன்னோட நிறைய நேரம் இருக்கப் போறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அபிராமி மால், சிட்டி செண்டர், பீச், ப்ளானடோரியம், பார்க்குன்னு நிறைய இடம் போகலாம். பாப்பா குட்டிக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கித் தரேன் சரியா?”

”சூப்பர்மா...ஐ ஜாலியா இருக்கு.....வைஷு எனக்கு நீ டோரிமான் வாங்கியே தரலையே...”

”எப்படியாவது டோரிமானை கண்டுபிடிச்சு குட்டிச் செல்லத்துக்கு வாங்கிக் குடுத்துடுவேன் ஓக்கேவா”

”குட் அம்மா”....என்று நிதி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்

”நாள் முழுக்க இவளோட லூட்டியை பொறுத்துக்கிட்டு பூப்போல இவளை பாத்துக்கிட்டாலும் நீ வந்ததும் என்னை கண்டுக்கறதே இல்லைடி. நல்ல பொண்ணு நல்ல அம்மா....என்றாள் சுபா

”டீச்சர் ப்ளீஸ் டோண்ட் பீ ஜெலஸ் என்றாள் வைஷு”

”இது பொறாமை இல்லைடி, பெருமை....சரி சரி போய் முகம் கைகால் கழுவிட்டு வா காபி போட்டுத் தரேன்” என்றாள் சுபா

”எனக்கு பூஸ்ட்: என்றது நிதி

நிதியை தூக்கிக் கொண்டு பெட் ரூமுக்குள் நுழைந்தாள் வைஷ்ணவி.

போன வாரம் லாண்ட்மார்க்கில் வாங்கியிருந்த சித்திரக் கதையை நிதியிடம் எடுத்துக் குடுத்தாள்.

”ஐ தேங்க்ஸ் வைஷு” என்றாள் நிதி.

”எதுக்கு அம்மாக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் நிதிக்குட்டி?”

”எங்க மிஸ் சொல்லியிருக்காங்க. தேங்க்ஸ், ஸாரி எல்லாம் சொல்றது குட் மானர்ஸ்னு...”

அப்போது வைஷுவின் போன் அடித்தது. சந்தியா லைனில் வந்தாள்

”என்னடி ஈவ்னிங் ரமணாவோட வரேன்னு சொன்னே...”

”ஸாரி சந்தியா டோட்டலா மறந்துட்டேன். ஒரு சின்ன சிக்க்ல் அப்பறமா சொல்றேன். அனு இப்ப எப்படி இருக்கா”

”இன்னும் ஒன் அவர்ல டிஸ்சார்ஜ் பண்ணப் போறாங்க. அதான் நீ வரியான்னு கேட்கறதுக்கு போன் பண்ணேன். எங்க இருக்கேடி?”

”வீட்டுல தான் இருக்கேன். ஆனா இப்ப என்னால வர முடியாது. அப்செட்டா இருக்கேன்....அனுகிட்ட அப்பறம் போன் பண்ணி பேசறேன்.. ஸாரிடி சந்தியா.”

”ஏய் இட்ஸ் ஓகே உன் குரலே சரியில்லை. நீ முதல்ல நல்லா ரெஸ்ட் எடு. நான் நைட் பேசறேன். பைடி”

அவள் போனை வைக்கவும் ரமணனின் கால் வரவும் சரியாக இருந்தது.

இவள் ஹலோ சொல்லுவதற்கு முன் அவன் அவசரமாக

”நான் மதுரைக்கு போறேன். இன்பார்ம் பண்ணத்தான் கூப்பிட்டேன். பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். இப்ப எதுக்கு இவன் மதுரைக்கும் இவ்வளவு அவசரமா கிளம்பிப் போகணும் என்று குழம்பினாள் வைஷு. ரமணனின் பெற்றோர்கள் பசுமலையில் இருக்கிறார்கள். திடீரென்று அவன் போவது தன் மீதான கோபத்தில் என்று நன்றாகத் தெரிந்தது.

மறுபடியும் அவன் போனுக்கு டயல் செய்தால். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஏன் இவனுக்கு பொறுமையே இல்லை வேலையை விட்ட விஷயத்தை சொல்லக் கூட அவகாசம் தராமல் கோவித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற எரிச்சலுடன் மறுபடியும் மறுபடியும் அவன் நம்பருக்குப் போட்டாள். ஆன் செய்யப்படாமேலே இருந்தது.

நிதிக்கு ரெண்டு தோசையை ஊட்டிவிட்டு படுக்க வைத்தபின் பசியும் களைப்புமாக இருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமலும் தூங்கவும் முடியாமலும் ஏதேதோ யோசனையில் ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கலான வெளிச்சத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்துக் கிடந்தாள் வைஷ்ணவி.

மொபல் சன்னமாக சத்தம் எழுப்பவே அதை எடுத்துப் பார்த்தாள். ப்ரைவேட் நம்பர் காலிங் என்று வந்தது. யார் இது இந்த நேரத்தில் அதுவும் பெயர் இல்லாமல் அழைப்பது என்று குழம்பினாள். வெளிநாட்டுக் காலாக் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து யார் கூப்பிடப் போகிறார்கள். க்ளையண்டாக இருக்கக் கூடும். ஆனால் வேலையே வேண்டாம் என்று தூக்கிப் போட்டபின் இந்த போனை எடுத்துத் தான் தீரவேண்டுமா என்று குழப்ப்த்துடன் இருக்க கடைசி ரிங் அடிக்கும் போது தவிர்க்க முடியாமல் எடுத்துவிட்டாள்

மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

(தொடரும்)

சனி, 28 மே, 2011

3. இப்போதும் இருக்கும் கதை





”ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையும் பிரியங்களினால் ஆன சரித்திரம்
– வாஷிங்டன் இர்விங்க்”


ரமணி வைஷ்ணவியை சூர்யா ஹாஸ்பிடல் இறக்கிவிட்டான்.

”நீங்க வரலைய ரமண்?”

”அர்ஜெண்ட் மீட்டிங்மா. கரெக்ட் டைமுக்கு போகாட்டி எம்.டி என்னைக் கொன்னுடுவாரு. ’அனு எப்படி இருக்கான்னு போன் பண்ணு நான் ஈவ்னிங் வரேன், அந்த ரெசிக்னேஷனை போன உடனே பர்ஸ்ட் திங்கா குடுத்துடு என்ன? இவள் தலையசைக்க அவன் கிளம்பிச் செல்வதற்கும் சந்தியா ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

நைட் முழுக்க தூஙகலை சந்தியா....அனு இப்ப எந்த ரூம்ல இருக்கா?

”மெளலிக்கு போன் பண்ணியிருக்கேன். அதோ வரார் பார்”

அருகே வந்த மெளலி, ”வாங்க வைஷ்ணவி, சந்தியா.

”என்னாச்சுங்க” என்றாள் சந்தியா

நத்திங் டூ வொர்ரி, உங்க ப்ரெண்ட் இப்ப நல்லாயிருக்கா. ஆனா நேத்து ரொம்ப பயமுறுத்திட்டா..” என்றான்.

காரிடரில் நடந்தபடி சன்னமான குரலில் தொடர்ந்தான், ”துணியெல்லாம் அடுக்கி வைச்சிட்டிருந்தா திடீர்னு என்னைக் கூப்பிட்டா பகக்த்துல வரதுக்குள்ளே அப்படியே மயங்கி சரிஞ்சிட்டா...எனக்கு ஒரே டென்ஷனாயிருச்சு. உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டேன்.”

”அனுவுக்கு என்ன ப்ராப்ளம் ஏன் மயக்கமானா?”

”ஸ்பாண்டிலைட்டிஸ்னு சொல்றாங்க. இன்னும் சில டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வர வேண்டியிருக்கு. வந்ததும்தான் தெளிவா சொல்ல முடியும்ங்கறாங்க....ஏற்கனவே அனுவுக்கு தைராய்ட் பிரச்சனைகள் இருக்கு, இப்ப இது வேற பாவம் முதல்ல கொஞ்சம் அப்செட் ஆயிட்டா, இப்ப பரவால்லை!” என்றான் மெளலி.

அவர்களை அனுவிடம் அழைத்துச் சென்றான்.

அனு கண்களை மூடியிருந்தாள். வைஷ்ணவி அவள் தோளை மெல்ல தொட்டாள். கண் விழித்த அனு,

”ஹேய் குட் மார்னிங் எப்ப வந்தீங்க?” என்றாள் இருவரையும் பார்த்து

”நீ இப்படி ஹாஸ்பிடல்ல இருக்க எப்படி குட் மார்னிங்” என்றாள் சந்தியா.

”குழந்தைங்க எங்கடி?”

”விஷ்ணுவும் ஆரபியும் நாத்தனார் ஆத்துல இருக்கா. எதுக்கு ஹாஸ்பிடலுக்கு எல்லாம்னு நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் அனு

”இப்ப எப்படி இருக்கு அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி.

”கொஞ்ச நாளாவே அடிக்கடி தலைசுத்திச்சு, விஷ்ணுவை தூக்கக் கூட முடியாது, மயக்கமா வர மாதிரி இருக்கும். கொஞ்ச நாழி அப்படியே உக்காந்து சமாளிச்சிடுவேன். நேத்து நைட் துணி மடிச்சு வைச்சிண்டிருந்தேன். ரொம்ப டயர்டா இருந்துச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும் இவர் பதறி அடிச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டார். அப்பறம் தான் தெரிஞ்சுது எனக்கு எலும்புத் தேய்வு ஆரம்ப நிலைல இருக்குன்னு என்னன்னவோ சொல்றாடி....எனக்கு பாதி புரியலைல் இனிமே தான் இவர்கிட்ட தெளிவா கேட்டுக்கணும்.”

”என்னடி இந்த வயசுல இப்படி எல்லாம் சொல்றே? எதனால இப்படி வந்துச்சு?” என்றாள் சந்தியா.

”நோய்க்கு வயசெல்லாம் கிடையாதுடி. ஏன் எதனால வந்துச்சின்னும் எனக்குத் தெரியலை. வந்தாச்சு. அதை ஃபேஸ் பண்ண வேண்டியதுதான்”

”பரவால்லைடி தைரியமா இருக்கே....சீக்கிரம் குணம் ஆயிடும். கவலைப்படாதே!” என்ற சந்தியாவை புன்னகையுடன் பார்த்து கண்சிமிட்டினாள் அனு.

”முப்பது வயசுக்கு மேல நாம எல்லாம் கொஞ்சம் கேர்புல்லா இருக்க ஆரம்பிக்கணும் சந்தியா...நம்ம பிரச்சனையே நம்ம ஹெல்த் விஷயத்துல நாம ரொம்ப அலட்சியமா இருந்திடறோம். என் குழந்தைகளுக்கு ஆரஞ்ச் பழம் உரிச்சு தரதுக்கு எனக்கு சளைக்காது ஆனா எனக்கு அதையே உரிச்சு சாப்பிடணும்னா எங்கேர்ந்து சோம்பேறித்தனம் வருமோ...அதுக்கெல்லாம் தான் சேர்த்து வைச்சு இப்ப அனுபவிக்கறேன்....ஆனா நீங்க எல்லாம் அப்படி இருக்காதீங்கடி. உடனே போய் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிடுங்க” .என்றாள்.

“என்னடி மாமி அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு? சரி உனக்காக நாங்க நிச்சயம் செக் பண்ணிக்கறோம்” என்றாள் சந்தியா.

”இன்னும் எத்தனை நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணும் அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி

”தெரியலைடி. மே பி நாளைக்கே கூட டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க..” என்று சலிப்பாக சொன்னாள் அனு.

”சரிடி உடம்பை பாத்துக்க. நான் ஈவ்னிங் ரமணாவோட வரேன். டேக் கேர்டி.”என்று கிளம்பினாள் வைஷ்ணவி.

”ம்...ஆமா நீ போகலையா” என்று சந்தியாவைப் பார்த்து கேட்க,

”நான் லீவ் போட்டிருக்கேண்டி. உன்கூடவே இருக்கேன்” என்றாள் சந்தியா.

வைஷு அவரசமாக கிளம்பிச் சென்றாள். இன்று ராஜினாமா கடிதத்தை குடுத்துவிட வேண்டியதுதான். ரமணன் விரும்பாத ஒன்று இந்த வேலை. அந்த வேலையில் கிடைத்திருந்த அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் இன்றுடன் இழக்கு வேண்டுமே என நினைக்கையில் வைஷ்ணவிக்கு வருத்தமாக இருந்தது.

சிக்னல் அருகே ஆட்டோ பிடிக்க காத்திருந்தாள். அப்போது அவளைக் கடந்து ஒரு பல்ஸார் பைக் சென்றது. தன்னையும் அறியாமல் ‘ஜீவா’ என்று கத்திவிட்டாள். ஆனால் அவனுக்கு அது காதில் விழவில்லை. வேகமாகச் சென்றுவிட்டான். ஒரு நொடி செயலற்று என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கேயே பைத்தியம் போல நின்றுகொண்டிருந்தாள். எப்படி இங்கே வந்தான். கேரளாவில் செட்டில் ஆகப் போவதாக கடைசியில் அவன் சொன்னது நினைவுத் திரையில் ஓடியது. இதே ஊரில் இதே தெருக்களில் பல்லாயிரம் மக்களில் ஒருவனாக அவனும் போய்க்கொண்டிருக்கிறான். ஒருநாளும் கண்ணில் தென்படாத அவன் இன்று எப்படி கண் பார்வைக்குள் வந்தான். முந்தைய நாள்தான் அவனைப் போல ஒருவனை பார்த்திருந்தாள். எண்ணங்கள் மிக வலிமையானது என நினைத்தாள். நாம் தீவிரமாக எதை நினைக்கிறோமோ அது நிச்சயம் நம் கண்முன்னால் வந்துவிடுகிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் அவனுடன் இருக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் மட்டும் ஏன் பலிக்கவில்லை என்றுத் தெரியவில்லை.


மன சஞ்சலத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறி ‘ஆழ்வார்பேட்டை போங்க’ என்றாள்.

ஆபிசினுள் நுழைந்ததும் யோகேஷ் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.

“நீ பர்மிஷன்னு உஷா சொன்னாங்க வைஷ்ணவி. ஆக்‌ஷுவலி எனக்கு க்ளையண்ட் மீட்டிங் இப்ப இருக்கு. உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

”எனக்கா? எதுக்கு யோகேஷ்?”

”ஒரு ந்யூ அசைன்மெண்ட் அதைப் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும். மீட்டிங் முடிச்சிட்டு வந்திடறேன். ஹோப் டூ ஜாய்ன் யூ பார் லன்ச் அப்ப பேசிடலாம்.”

யோசனையாக வைஷ்ணவி, ”பட் யோகேஷ் அதுக்கு முன்னாடி....என்று சொல்ல ஆரம்பித்தாள்

”கட் டீடெய்ல்ஸ். காட்ச் யூ தென்” என்று சொல்லிக் கொண்டே ஷு சத்தம் கேட்க படிகள் அதிர நடந்து போயே போய்விட்டான்.

சரி வந்ததும் சொல்லலாம் என்று முடிவெடுத்து தன் லாப்டாப்பை ஆன் செய்தாள். அவசர அவசரமாக பெர்சனல் என்ற போல்டரை ஓபன் செய்தாள். அதில் பாஸ்வேர்ட் போட்டு ஒளித்து வைத்திருந்த பைலை திறந்தாள்.

ஜீவா அடர்நீல ஜீன்ஸும், சிவப்பு நிற டீ ஷர்ட்டுடன் வரிசையான பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான். சற்று ஒட்டியிருக்கும் குழி விழும் கன்னம், கோதுமை நிறமும் அந்தக் கண்களும், லேசாக கறுத்திருந்த உதடுகளும், அளவான மீசையும், பாதி முகத்தை மறைக்கும் தாடியும், கழுத்தில் ’வி’ என்ற எழுத்து டாலரும் அன்று பார்த்த மாதிரியே தான் ஜீவா இன்னும் இருக்கிறான். சிறு மாற்றம் கூட இல்லை. பைக் வேகமாக சென்றுவிட்டது டாலர் அணிந்திருந்தானா என பார்க்க முடியவில்லை.

எதற்கு அவனுடைய படத்தை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் எல்லாவற்றையும் டெலீட் செய்துவிடலாம் என நினைத்தாலும் மனசு கேட்காமல் அதை பத்திரப்படுத்தி இருந்தாள்.


அந்த போட்டோ எடுத்த தினத்தில் வைஷுவிற்காக சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான் ஜீவா. ”நிசமாவா ஜீவா, பத்தாவது படிக்கறப்பத்திலேர்ந்து ஊதித்திட்டிருந்தே, எனக்காகவா விட்டே?” என்று ஆச்சரியமாக கேட்ட அவளிடம் ”இதென்ன பெரிய விஷயமா மை டியர் அம்புஜம் உனக்காக நான் என்ன வேணா செய்வேன்.”


”என்ன செய்வே? என்று ஆர்வமுடன் கேட்டாள்.

”இன்னிக்கே குடிக்க கத்துக்கிட்டு அதை உனக்காக விடட்டா? என்று கேட்டான்.

”அடப்பாவி கொன்னுடுவேன்.” என்று அவன் தோளில் குத்தினாள்.

”இன்னும் நாலஞ்சு தடவை அப்படி குத்தேன். தோள் வலிக்கு இதமா இருக்கு” என்றான்

”உன்னை அடிச்சா எனக்குத் தான் கை வலிக்குது. இரும்பால செஞ்ச கை...”

”ஜிம்முக்கு ரெகுலரா போய் வொர்க் அவுட் பண்றோமில்ல...அப்படித்தான் இருக்கும்” நெஞ்சை நிமிர்த்து ஜீவா சொல்ல அவனை பெருமிதத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.

அவனுடனான முடிவில்லாத உரையாடல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு ஞாபகம் இருக்கின்றது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் சிலவற்றை அசைபோடுவது ஒருவித பழக்கமாகிவிட்டதை நினைத்து தன் மீதே கோபப்பட்டாள்.

பெருமூச்சுடன் புகைப்படத்தை மூடி விட்டு ராஜினாமா கடிதத்தை டைப் அடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது அவளது செல்போன் அடிக்க, யோகேஷ் காலிங் என்று வந்தது.

‘ஹலோ வைஷ்ணவி. ஒரு சின்ன ஹெல்ப்”

”சொல்லுங்க யோகேஷ்”

”சீகல் ஃபைல் டூவை எடுத்துக்கிட்டு லீ மெரிடியனுக்கு இன்னும் பத்தே நிமிஷத்துல வர முடியுமா. இட்ஸ் கொயட் அர்ஜெண்ட்”

”பறந்துதான் வரணும் யோகேஷ்...”

”எப்படிவேணா வா....டேக் இன்னோவா....ஏன்னா லன்ஞ் இங்கதான் அது முடிஞ்சதும் க்ளையண்டை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணனும். வீ ஹேவ் லிட்டில் டைம். ப்ளீஸ் பீ ஃபாஸ்ட் மா”

”ஆல்ரைட் யோகேஷ்.”

அவள் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது செகண்ட் லைனில் ரமணன் மூன்று முறை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.

யோகேஷ் காலை வைத்ததும் ரமணனுக்கு டயல் செய்து கொண்டிருக்கும் போது அவன் போன் வந்தது

”என்ன வைஷு எவ்வளவு நேரமா ட்ரை பண்றது?”

”யோகேஷ் பேசிட்டிருந்தார் ரமணா”

ஒரு நொடி அமைதி. அதன் பின் ”சரி உனக்கு இன்னும் அங்க என்ன வேலை, ரெஸிக்னேஷனை தூக்கிப் போட்டுட்டு கிளம்பி வர வேண்டியது தானே? ஈவ்னிங் நான் பர்மிஷன் எடுத்திருக்கேன். அனுவைப் போய் பாத்துட்டு அப்படியே நிதியை கூட்டிட்டு டின்னர் போகலாம்.”

”இல்ல ரமண். யோகேஷ்கிட்ட பேசவே முடியலை. இப்ப நான் க்ளையண்ட் மீட்டிங் அர்ஜெண்டா கிளம்பிட்டு இருக்கேன். வந்து பேசறேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க”

”ஓ அப்ப நேத்து நீ என்கிட்ட பேசினது எல்லாம் சும்மா அப்படித்தானே?”

”அய்யோ அப்படி இல்லைங்க....நிச்சயம் ஈவ்னிங்குள்ள யோகேஷ்கிட்ட பேசிடறேன்...ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கார். .இப்ப சொன்னா அப்செட் ஆயிருவார்.”

”அப்ப நான் அப்செட் ஆனா உனக்கு பிரச்சனை இல்லை இல்லையா வைஷு....”

அவள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்,

‘நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை வைஷு....

கோபமாக போனை வைத்துவிட்டான்.

எரிச்சலும் லேசான கோபத்துடன் அவன் நம்பருக்கு ட்ரை செய்த போது அது அடித்துக் கொண்டே இருந்தது. ஜீவா அனுப்பியிருந்த மெயில் ஒன்றினை எடுத்துப் படித்தாள்.

அன்பின் அம்புஜம்,

உன் பார்வை, உன் பேச்சு, உன் சிரிப்பு, உன் அருகாமை உன் ஸ்பரிசம், உனது இருப்பு என எல்லாமே இனிமையாக அமைந்திருப்பது உன்னிடம்தான் அம்புஜம். இதற்கு என்ன காரணமாகச் சொல்ல முடியும்? மனம்தானடி! .உன் மனமும் என் மனமும் ஒன்று போல் யோசிக்கிறது, ஒரே விஷயத்தை ரசிக்கிறது ஒத்த மனங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதன் அர்த்தமும் , ஆர்வமும் புரிகிறது.



அருகேதான் இருக்கிறோம்.ஆனால் தொலைவாய் உணர்கிறேன். விலகி இருக்கையில் உன் அண்மையை உணர்கிறேன். மென்விரல்களின் சின்ன ஸ்பரிசம் மனதுக்கு வெகு இதமாய் இருக்கிறது. ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் விரிந்துகொண்டே செல்கின்றன.உனது பேச்சுக்கும் புன்னகைக்கும் ஈடாக எதையுமே ஒப்பிட முடியவில்லை பெண்ணே ! எவ்வளவு மாயங்களை அது தன்னுள் அடக்கியுள்ளது....வியந்து தீரவில்லை எனக்கு. மென் நகை உன்னை பேரழகியாக்குகிறது. செல்லச் சிணுங்கலில் நீ குழந்தையாகி என்னை தாயாக்குகிறாய். அடுத்த நொடியிலேயே ஒரு மர்மப்புன்னகை என்னை உன்மத்தனாக்குகிறது...யாதுமாகி நிற்கிறாய்...எங்கும் நிறைந்து தெரிகிறாய்..`.நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்'. இந்த வாக்கியம் வினோதமாய் பிறருக்கு தோன்றலாம்.. ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமான வாக்கியமாய் இருக்கிறதில்லையா இது?

உன் ஜீவா

திங்கள், 2 மே, 2011

இப்போதும் இருக்கும் கதை - 2

”ஆண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்கள். பெண்கள் தங்களை அதில் தேடுவார்கள்” – எலிசா மெலமெட்

”அனு எப்படி மாறிப்போயிட்டா பாரு வைஷு” என்றாள் சந்தியா.

”நீ கூட ரொம்ப மாறிட்டேடி அழகி என்றபடி வைஷுவின் மூக்கைத் திருகினாள் அனு.

”நான் அப்படியேதான் இருக்கேன் அனு” என்றபடி வலித்த மூக்கைத் தடவினாள்.

”சரியான ராட்சசிடி நீ...ஸ்ஸ்ஸ்...எரியுது பாரு...”

”எரியட்டும்....சம்திங் ராங் வித் யூ. நீ பழைய வைஷ்ணவி இல்லை..ரொம்ப அமைதியா இருக்கே, அளந்து அளந்து பேசறே? என்ன ஆச்சு உனக்கு?”

”ஒண்ணுமில்லை அனு. சரி அதை விடு உன் லைஃப் எப்படி இருக்கு? மெளலி என்ன சொல்றார்?

”ம்...அவளுக்கு என்னடி. தனித் ராணி. ஜகார்த்தாவாம் எங்கேர்ந்து தான் கண்டுபிடிச்சாங்களோ உனக்கு அவ்வளவு தூரத்து மாப்பிள்ளையை?

”அவ்வளவு தூரமா இருக்கறதாலதான் சந்தோஷமா இருக்கேன் சந்தியா.....வீடு தான் உலகம். அதான் chat ல கதை கதையா சொல்லிக்கேன் இல்லை? இங்க ஜாயிண்ட் பேமிலில என்னால தாக்குப் பிடிக்க முடியாதுடி! நோ வே....அங்க நானு இவரு பசங்க அவ்வளவுதான். இருக்கவே இருக்கு டீவி. அப்பறம் கிச்சனுக்குள்ளயும் பூஜை ரூமுக்கு உள்ளேயும் போனா அவ்வளவுதான். லைப் முடிஞ்ச உடனே தான் வெளிய வர மாதிரி இருக்கும்” என்று சிரித்தாள் அனு.

கடல் அலைகளுக்கே அலுக்கும் வரை அவர்கள் அரட்டை அடித்துவிட்டு ஆளுக்கு ஒரு சாக்கோபார் வாங்கி வழிய வழிய சாப்பிட்டார்கள்.

”ஏய் காலேஜ் டேய்ஸ்க்கு போன மாதிரி இருக்குடி, அதுவும் சந்தியாவும் சாக்கோபாரும் மறக்கவே முடியாது” என்று உரக்க சிரிக்க ஆரம்பித்தாள் அனு. வைஷுவால் அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

”ஏய் அடி வாங்கப் போறே நாயே...அதை மறந்து தொலைக்க மாட்டியா?”

”எப்படிடி மறக்க முடியும். ஒரு சாக்கோ பாருக்காக...அய்யோ அம்மா என்று மறுபடி சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் வாயை இறுக மூட யத்தனித்த சந்தியாவின் கைகளில் சாக்கோபார் பிசுபிசுத்தது. அதைப் பார்த்து அனு கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள்.

”போதும்டி....இவ மாறலைடி அதே சிரிப்பு இன்னும் மிச்சம் இருக்கு” என்றாள் சந்தியா அவளை கிண்டல் செய்த கோபத்தை மறந்துவிட்டு.

”ஆமாமா...ஏன் வைஷு சிரிக்க கூட மாட்டேங்கறே..அடிக்கடி மைண்ட் ஆஃப் ஆகுது? என்ன பிரச்சனைன்னு ப்ராங்கா சொல்லுடி..”

”நீங்க வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப ஒரு ஜோடியைப் பாத்தேன். ரொம்ப அன்னோன்யமான லவ்வர்ஸ் போல....”

” அது சரி, பீச்சுன்னா லவ்வர்ஸ் வரத்தான் செய்வாங்க. அப்படித்தான் க்ளோஸா இருப்பாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆற அளவுக்கு சமுதாய பொறுப்புணர்ச்சி உனக்கு வந்திருச்சாடி?”

”அதில்லை சந்தியா....அந்த பொண்ணோட லவ்வர் அச்சு அசலா ஜீவா மாதிரியே இருந்தான்....”

ஒரு நொடி அனைவரும் அமைதியாகிவிட, வைஷ்ணவி தொடர்ந்து,

” அவனைப் பாத்ததும் எனக்கு பழசு எல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சிருச்சு... ரொம்ப தனிமையாயிட்ட மாதிரி இருந்துச்சு”

அவள் லேசாக கலங்குவதைப் பார்த்து பதறிய அனு,

”ஏய் இன்னுமாடி அவனை நீ மறக்கலை?”

”எப்படி மறக்க முடியும் அனு, என்ன பேசறே நீ? நான் சாகற வரைக்கும் ஜீவாவை மறக்க முடியாது. அடிக்கடி எதாவது ஒரு விஷயத்துல அவன் நினைப்பு வரும். ஆனா இன்னிக்கு அவனை மாதிரியே ஒருத்தனை பாத்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு...


”சரி விடு....அதையே நினைச்சுட்டிருக்காதே....நான் எவ்வளவு தூரத்திலேர்ந்து உங்களை எல்லாம் பாக்க வந்திருக்கேன்....”


”என்னைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லையா? இன்னும் ரெண்டு நாளாவது ஆகும், இதிலேர்ந்து நான் மீள....பெருமூச்சுடன் சொன்னாள் வைஷு

சந்தியா அவள் கைகளைப் பிடித்து, “ஜஸ்ட் பர்கெட் தி பாஸ்ட் வைஷு உனக்கு நாங்க சொல்ல வேண்டியதே இல்லை....”

”முடியாது சந்தியா.....அது ஒண்ணுதாண்டி நான் லைப்லேயே சந்தோஷமா இருந்த பீரியட் அதையும் மறந்துட்டு மண்ணு மாதிரி எப்படி வாழ முடியும்?”

”சரி ரமணன் எப்படி இருக்காரு?” என்றாள் அனு.

”நீ தான் நாளைக்கு வீட்டுக்கு வர்றே இல்லை. நேர்ல பாத்துக்க...”

”ஏண்டி இப்படி விட்டேத்தியா பேசறே?”

”ப்ச்...ஒண்ணுமில்லை....சரி லேட்டாகுது கிளம்பலாம். சந்தியா நீயும் நாளைக்கு வாயேன். சின்ன கெட்டுகெதரா இருக்கும்...” என்றாள் வைஷ்ணவி

”சாரிடி...எனக்கு நிறைய வேலை இருக்கு, அதோட அஸ்வினோட அத்தை மாமா எல்லாம் ஊர்லேர்ந்து வராங்க. எங்க வீடு ஏற்கனவே ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். ஒத்தைல எங்க மாமியாரால சமாளிக்க முடியாது. ப்ளீஸ் கோச்சுக்காதேடி...”

”ஹே நோ இஷ்ஷுஸ்....சரிடி நான் கிளம்பறேன். நைட் கால் பண்றேன்.”

”சரி வைஷு”

வைஷ்ணவி ஒரு நொடி அனுவையும் சந்தியாவையும் பர்ர்த்து

’சாரி ரொம்ப மூட் அவுட்டா இருந்துட்டேனா?’

’ஹேய் எங்களுக்கு உன்னைத் தெரியாதா....நீ இப்ப பத்திரமா வீட்டுக்குப் போய் ப்ரெஷ் ஆயிட்டு எங்களுக்கு ஃபோன் ப்ண்ணு என்ன?’ என்றாள் சந்தியா.

அவர்கள் மூவரும் மெயின் ரோட்டுக்கு வந்து தனித் தனி ஆட்டோ பிடித்தார்கள்.


வீட்டுக்கு வந்து அலுப்புத் தீரக் குளித்தாள் வைஷ்ணவி. ஸ்ரீநிதி தூங்கி விட்டது. ரமணன் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். இவள் வந்ததை ஓரக்கண்ணால் பார்த்தும் எதுவும் பேசாமல் வேலையில் கவனமாக இருந்தான்.

கிச்சனுக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள். சூடாக ஒரு காபி இப்போதைய மனநிலைக்கு சரியாக இருக்கும். காபி கலந்து ஹாலுக்கு வந்தாள். சுபாஷினி சீரியலில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.

”ஒரு வாய் காபி வேணுமாம்மா?” என்று கேட்டாள்.

ஒரு நிமிஷம் இரு என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் டீவியில் மூழ்கினாள் சுபா, ஐந்து நொடியில் ப்ரேக் விட்டதும்...


”என்னடி கேட்டே? காபியா? இப்ப எதுக்கு காபி? சாப்பிடற டைம் ஆச்சே?”

டீவி திரையில் விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் வைஷுவிடம் பேசக் கூட சுபாஷணிக்கு நேரம் இருககாது. ஒரு முறை தனக்கு பிடித்த தொடரைப் பார்க்க முடியாமல் ஊருக்குப் போய் திரும்பியதும். வைஷ்ணவியை துளைத்து எடுத்து நெட்டில் அதை டவுன்லோட் செய்து பார்த்ததும்தான் அவளுக்கு திருப்தியாக இருந்தது. எவ்வளவு யோசித்துப் பார்த்தும் வைஷ்ணவியால் ஏன் இப்படி அம்மா மாறிப்போனாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

சுபாஷினி ரிட்டயர்ட் டீச்சர். அதுவும் ஆங்கில ஆசிரியை. டீச்சராக இருப்பதற்கே பிறந்தவள் போன்ற தோற்றம் உடையவள். வைஷுவையும் டீச்சர் பொண்ணு என்று சிலர் பிரத்யேக உபசரிப்பு செய்வார்கள். ஆனால் எப்படியோ வயதாகிவிட்டால் எல்லாரும் மாறிப் போவார்கள் போலிருக்கிறது. வேலை செய்தும், குடும்பத்தைப் பராமரித்து களைத்துப் போயும் அவர்கள் ஓய்வெடுக்க ஓரிடம் தேவைப்படுகிறது. அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன, கோவில் குளமாக இருந்தால் என்ன, அவர்கள் நிம்மதியாக இருந்தால் போதும் என்று தோன்றியது வைஷ்ணவிக்கு.

அம்மா டீவி பார்க்கட்டும் என்று விட்டுவிட்டு பெட்ரூமுக்குச் சென்றாள். ரமணன் இன்னும் அதே பொசிஷனில் இருந்தான். பத்து நாட்களாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. சின்ன சண்டையில் ஆரம்பித்து வழக்கம் போல வேலையை விடு என்ற பல்லவியில் முடித்திருந்தான். அவனுக்கு வைஷ்ணவி வேலைக்கு போவது பிரச்சனை இல்லை, வேலை செய்யும் இடம் தான் பிரச்சனை.

ஓம் அட்வர்டைஸிங் கம்பெனியில் சீஃப் டிசைனரான வைஷ்ணவிக்கு அங்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம். அதைவிட மனநிறைவு அதிகம். அவளுடைய பாஸ் யோகேஷ் ரமணனின் பழைய நண்பன். ஏதோ பிரச்சனையில் இப்போது இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவனைப் பற்றி ரமணனுக்கு சரியான அபிப்ராயம் இல்லை. பத்து நாளுக்கு முன் வேலையை விடச் சொல்லி வற்புறுத்தினான். வைஷ்ணவி மறுக்கவே அவளிடம் பேசுவதில்லை.

ரமணன் பிடிவாதக்காரன், கொஞ்சம் கூட இறங்கி வரமாட்டான். வைஷணவிக்கு இது போன்ற சண்டைகள் மிகவும் அலுப்பாகிவிட்டது. இன்று அவனிடம் பேசாவிட்டால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தாள்.

மெல்ல அவன் அருகில் வந்து ’ரமணன்’ என்று அழைத்தாள்

அவன் திரும்பவில்லை....

”நான் வேலையை ரிசைன் பண்ணிடறேன் போதுமா?” என்றவளை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்து

”நிஜமாவா சொல்றே?”

”ஆமா....”

”எனக்காக இந்த முடிவை எடுத்தியா இல்ல அங்க எதாவது பிரச்சனையா?”

”இதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்காதது. எனக்கு எங்கேயும் எப்பவும் பிரச்சனை வராது. அப்படி வந்தா என்னால சமாளிக்க முடியும். ஓடி ஒளியிற டைப் நான் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாது?”

”தெரியும்...இருந்தாலும் திடீர்னு இப்படி சொல்றியே அதான் கேட்டேன்....”

”உங்களுக்காகத் தான் விடறேன் போதுமா? .ஆனா சீக்கிரம் வேற வேலைக்குப் போவேன். ”

”வேற எங்க வேணா வேலைக்கு போ. எனக்கு பிரச்சனையே இல்லை. இது என்னோட ஈகோ விஷயம்னு எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லிட்டேன். இன்னிக்குத்தான் உனக்கு புரிஞ்சிருக்கு. எனிவே தேங்க்ஸ் வைஷு....”

”இட்ஸ் ஓகே...நைட் என்ன சாப்படறீங்க?”

”நீதான் சமாதானக் கொடியை காட்டிட்டியே நீ போட்டாலும் சாப்பிடறேன்....உன்னையே கூட சாப்பிடலாம் போலத்தான் இருக்கே, மேடத்துக்கு எப்படி வசதி?”

”உங்களை மாதிரி நினைச்ச உடனே மூடை மாத்திக்க என்னால முடியாதுங்க.... கிவ் மி சம் டைம். இப்ப இட்லி வேணுமா தோசையான்னு சொல்லுங்க...

அவளையே பார்த்த ரமணன், ”உன் கூட ஆறு வருஷம் ஒரே கூரைக்குக் கீழே இருக்கேன் வைஷு. நீ எப்ப சிரிப்பே எதுக்கு கோபப்படுவே ஏன் சோகமா இருக்கேன்னு என்னால இன்னும் புரிஞ்சுக்கவே முடியல்லை. தட்ஸ் மை ஃபால்ட்...படி நீ ரொம்ப சென்சிட்டிவ் அண்ட் எமோஷனல் மட்டும் தெரியுது....எனக்கு ரெண்டு தோசை போதும். என்றான்

அவள் திரும்ப யத்தனிக்க,

”ஆமா இன்னிக்கு உன் ப்ரெண்ட்ஸை மீட் பண்ணியே. ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணீங்களா?”

’அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

:உன் தோழிகள் கிட்ட மாத்தி மாத்தி போன்ல பேசினது இந்த காலனிக்கே தெரியும் எனக்குத் தெரியாதா?....”என்று சிரித்தான்.

”ஓ...அப்ப தெரிஞ்சுக்கிட்டே சைலண்டா இருந்தீங்க இல்லை?”

”ஆமா நீ தான் என்கூட பேசலையே? அப்ப எப்படி அனு எப்படி இருக்கான்னு எங்க மீட் பண்ணப் போறீங்கன்னு உன்கிட்ட கேக்க முடியும்?”

”பீச்ல மீட் பண்ணோம். அப்பறம் எல்லா கதையும் சொல்றேன். முதல்ல சாப்பிட்டுட்டு தூங்குங்க். டைம் ஆகுது.”

அவசர அவசரமாக தோசையை சுட்டுக் கொண்டிருந்த போது செல்போன் அடித்தது.

சந்தியா காலிங் என்று வந்தது. சரி அப்பறம் எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். ஆனால் மறுபடியும் அது அடிக்கவே எடுத்தாள்.

”ஹலோ சொல்லுடி ”

”வைஷு.....நம்ம அனு அனு”

”அனுவுக்கு என்னடி பதறாம சொல்லு”

”அனுவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்..... அவ ஹஸ்பெண்ட் இப்பத்தான் போன் பண்ணி சொன்னார்.

”என்ன ஆச்சுடி? எந்த ஹாஸ்பிடல் என்ன ஏதுன்னு கேட்டியா?”.

“என்னன்னு தெரியலை”

”இல்லைடி அவரே ரொம்ப டென்ஷனா இருந்தார். காலைல தான் மறுபடியும் போன் பண்ணி கேக்கணும்”

”நல்லாதானேடி பேசிட்டிருந்தா? என்ன ஆயிருக்கும்?”

”ஒண்ணுமே புரியலைடி....சரி நீ இப்போதைக்கு ப்ரே பண்ணிக்கோ நமக்கு வேற வழி இல்லை...”

”சரி சந்தியா’ என்றபடி போனை வைத்த வைஷு கறுகி இருந்த தோசையை எடுக்கத் தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)