வியாழன், 26 நவம்பர், 2009

சுதந்திரத்தின் கதவுகள்




“நொடியில் எதையும் உதறிவிடும் பரிபூர்ண சுதந்திரத்தை தொலைத்து விட்டேனோ”? கவிஞர் சமயவேல்


தோள்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு மூச்சிரைக்க புறப்படத் தயாரான பஸ்சில் ஏறினேன்.

‘சீக்கிரம் ஏறுங்க வண்டி நேரத்துக்கு போகணும்ல..என்றார் நடத்துனர்.

பயணச் சீட்டை கைப்பையிலிருந்து எடுத்து அவரிடம் தந்தேன். இரண்டாவது வரிசையை காட்டினார். ஜன்னலோர சீட் இல்லை. ஜன்னலோரத்தில் இளம் கன்னியாஸ்திரி ஒருத்தி அமர்ந்திருந்தாள். இன்றைக்கெல்லாம் பார்த்தால் இருபத்தி ஒன்று அல்லது இரண்டு வயதிருக்கும். வெள்ளை முழுக்கை சட்டையும் வெளிர் நீல நிற மேலங்கியும் அணிந்திருந்தாள்.

பையை மேலேற்றிவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். கண்களில் இன்னும் கண்ணீர் மிச்சமிருந்தது. அருகில் அமர்ந்திருக்கும் சிஸ்டர் கவனித்துவிடுவார்களே என்று மிகவும் ப்ரயத்தனப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டேன்.

சிஸ்டர் வாந்தி வர மாதிரி இருக்கு நான் அந்தப் பக்கம் உக்காந்துக்கட்டா என்றதும் அவள் சரியென்று எனக்கு அந்த இருக்கையை விட்டுக் கொடுத்தாள். ஜன்னலுக்கு வெளியே ட்ராபிக்கை தாண்டி, பசுமைக் காட்சிகள் கடந்து பஸ் எனக்குத் தெரியாத வெளியில் விரைந்து கொண்டிருந்தது. இருளில் எதிரில் வந்த வாகனங்களில் ஹெட்லைட் ஒளிர்ந்தது. மெல்லிய அழுகையினூடே பதினைந்து வருடங்களுக்கு முன் என் மனம் பின்னோக்கி நகர்ந்தது.
2.

‘தனசேகர் ஹேர் ஸ்டைல்’ கடையை அடுத்து பவித்ரா மெடிக்கல் ஷாப். அதையும் தாண்டி மெயின் ரோடிலேயே இருக்கிறது திருவின் வீடு. அது நகரத்திலேயே பெரிய டாக்டர் மாதவன் தம்பியின் அவுட் ஹவுஸ். திருவின் அப்பா அம்மா இருவருமே டாக்டரிடம் பணி புரிந்தார்கள். திரு அவர்களுக்கு நாலாவது பிள்ளை, அவனுக்கு மேல் இரண்டு அக்காக்கள், ஒரு அண்ணன், மூத்த அக்காவை வேலூரிலும் இளையவளை கடலூரிலும் கொடுத்திருந்தார்கள். அண்ணன் ஜெயபாலன் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறான். வீட்டுக்கு என்றாவதுதான் வருவான். அந்த சிறிய வீட்டில் எப்படி மூன்று பேர் படுக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவேன். டாக்டரின் வீட்டில் விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும், டீவியின் சத்தம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருப்பது அவுட் ஹவுஸ் வரை கேட்கும். சிறிய வானொலி பெட்டியை திரு தன்னுடைய பொக்கிஷமாக வைத்திருப்பான். நான் வரும் போதெல்லாம் அது என் மடியில் இருக்கும். நாங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டேயிருப்போம் அது பாட்டுக்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்.

திருவின் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைகையிலேயே மரங்களும் வண்ண பூச்செடிகளும் என்னை வரவேற்கும். எனக்கு மிகவும் பிடித்த நாகலிங்க மரத்தடியில் சற்று நேரம் நின்று கொண்டே டாக்டர் வீட்டை பார்ப்பேன். வீட்டின் கீழ்த்தளம் க்ளினிக்காகவும் மேலே வீடாகவும் இருக்கும் அந்த கட்டிட வளாகத்தில் ஆச்சரியத்தக்க வகையில் ஹாஸ்பிடலுக்கே உரிய வாசனை துளி கூட இருக்காது. டாக்டர் சிடுமூஞ்சித்தனத்திற்கு பேர் போனதால் நான் க்ளினிக் பக்கமே போகமாட்டேன். நாகலிங்க மரத்தைத் தாண்டி கொய்யா மரம் கடந்து அசோக மரங்களிடம் கதைத்துவிட்டு, தரையில் விழுந்து கிடந்த பசிய காய்களை எடுத்து பார்த்துவிட்டு, எனக்கு மிகவும் பிடித்தமான செடிகளின் பச்சிலை வாசனையை முகர்ந்து கொண்டே நெடிய பாதாம் மரத்தை தாண்டி, அதன் பக்கத்தில் இருக்கும் சிறு செடிகளையும் புற்களையும் மிதிக்க மனமில்லாமல் மிதித்தவாறே திருவின் வீட்டு வாசலை அடைவேன். எப்படித்தான் தெரிந்துகொள்வானோ அவன் வீட்டில் இருக்கையில் ஒரு முறை கூட நான் அழைத்ததில்லை, கதவை தட்டியதில்லை, நான் வாசலுக்கு வரும் கணமும் அவன் வீட்டினுள் இருந்து என்னை வரவேற்க வெளிவரும் கணமும் ஒன்றாக இருக்கும். நான் வரேன்னு எப்படி உனக்குத் தெரியும் என்று பலமுறை கேட்ட போதும் புன்னகையே அவன் பதிலாக இருக்கும். ப்ளீஸ் சொல்லு என ஒருமுறை மிகவும் வற்புறுத்திக் கேட்கையில் சொன்னான், நீ வர்றதுக்கு முன்னால உன் உருவம் என் மனசுக்குள்ள வந்துடும்..இதோ வரப்போறான்னு உள் மனசுக்கு சொல்லிடும். வெளிய வந்து பாத்தா நீ நிப்பே...இது ஒரு தடவை கூட தப்பினதில்லை ரம்யா என்பான். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இன்றும் அவ்விதமே நடந்தது. வா ரம்யா என்றான் உற்சாகமாக. பெரிய கட்டங்கள் போட்ட அடர் நீல நிற கைலியும் கை வைத்த உள்பனியனும் அணிந்திருந்தான். ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு தோளில் வட்டமாக பொத்தல் இருந்தது. அதைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்தாலும் கண்கள் அதையே அடிக்கடி பார்த்தது. ஏன் திரு நல்ல பனியனா வாங்கி போட்டுக்கலாம் இல்ல என்று வாய் வரை வந்த கேள்வியை கஷ்டப்பட்டு முழுங்கினேன். திரு காலையில் பேப்பர் போடுவது, பால் போடுவது போன்ற வேலைகளை செய்து கொண்டே படிப்பது எனக்குத் தெரியும்.

திரு எனக்கு அறிமுகமாகியது கடிதம் மூலமாக. என் வகுப்புத் தோழி அமித்தாவின் நண்பன்தான் திரு. அமித்தா கல்லூரிக்கு நான் ஒரு முறை சுஜாதா எழுதிய அனிதாவின் காதல்கள் நாவலை எடுத்து வந்திருந்தேன். அதைப் பார்த்த அமித்தா இதே போன்ற புத்தகங்களை தன் நண்பன் திருவும் வைத்துள்ளான் என்றாள். அதன் பின் அவனிடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறாள். ஒரு முறை அமித்தா வீட்டிற்கு சென்ற போது திரு வந்திருந்தான். புத்தகங்களில் ஆரம்பித்து வர்ணங்கள் வரை எங்களின் ரசனைகள் ஈடுபாடுகள் ஒத்திருந்தது. செம்புலப் பெயல் நீர் போல இனிய நட்பினராய் அன்றே உள்ளம் கலந்தோம். அதன் பின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவனை சந்திக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். நான் கல்லூரியில் எக்கானாமிக்ஸ் முதலாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அவன் அஞ்சல் வழிக் கல்வியில் எம் ஏ ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்தான்.

என் சிந்தனையை கலைத்தது அவன் குரல்.

ரம்மி உனக்குத் தெரியுமா எங்க வீட்டுல புதுசா ஒருத்தங்க வந்திருக்காங்க என்றான்.

ஊர்லேர்ந்து அக்காவா என்றேன் ஆவலாக. அந்த அக்காவுக்கு நானென்றால் அவ்வளவு இஷ்டம் என்று திரு அடிக்கடி சொல்வான்.

புதுசான்னு சொன்னேண்டி, ஸ்பீக்கர் அவுட்டா என்றான்

சிலசமயம் திரு என்னை வாடி போடி என்று கூப்பிடுவது அழகு. வேறு யாராவது அப்படி சொல்லியிருந்தால் நான் பத்ரகாளியாகிவிடுவேன்.

அங்க பாரு அதுவே வருது என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தாவியோடி வந்தது அது.

ஹேய் எப்படி இது...எங்கேர்ந்து கொண்டு வந்தே ரொம்ப அழகா இருக்குல்ல என்று சந்தோஷத்தில் குதித்தேன்.

ஆமா ரொம்ப அழகு, இதுக்கு பேரு என்ன தெரியுமா? என்று அதன் காதைப் பிடித்து தூக்கினான்.

திரு பாவம் அதுக்கு வலிக்கும் இரக்கமேயில்லையா உனக்கு காதைப் பிடிச்சிருக்கியே என்றேன்

லூசு முயலை இப்படித்தான் தூக்கணும். புரியுதா. இதோட பேர் என்னென்னு சொல்லு பார்ப்போம்.

வெள்ளை வெளேர் என்று இருந்த அது திரு திருவென்று விழித்தது.

ரோஸியா என்றேன்

இல்லை...

ஸ்நோ வொய்ட்டா என்றேன்

இல்லைடி என்றான்

நீயே சொல்லித்தொலை...என் கிட்ட கொடு நான் தூக்கிக்கறேன். என்றபடி அவனிடமிருந்து அதை வாங்கி பிடிக்கத் தெரியாமல் பிடிக்கவே குதித்தோடிவிட்டது.

அதோடு பேரு ரம்யா என்றான் திரு.

என்னது என் பேரா.. என்றேன் ஆச்சரியத்துடன்.

ஆமா...என்றான்.

ஏன் திரு என் பேரை வச்சிருக்கே..

நீ எவ்வளவு மென்மையானவ அது போலத்தான் அதுவும்...என்றான்.

அதன் பின் அவன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். வழமை போலவே அவன் அம்மா எனக்கு டீ கொண்டு வந்து தந்தார்கள். எதுவும் என் மனதில் பதியவில்லை. அவன் அன்பில் உறைந்துபோயிருந்தேன். வீட்டுக்கு போகும் வழி நெடுக அவனின் குரலும் என் மீதிருந்த ஆழமான ப்ரியத்தையும் நினைத்து நெகிழ்ந்தேன். அவனுக்கு என் மீது காதலோ எனச் சில சமயம் சந்தேகம் ஏற்பட்டு ஒரு முறை கேட்டே விட்டேன். பதில் சொல்லாமல் மழுப்பி விட்டான். என்னை எறும்பு கடித்தால் கூட தாங்க ஏலாத அன்பின் உருவமாய் திரு இருந்தான்.

திருவைப் பார்க்க வருகையில் காரில் வருவதைப் தவிர்ப்பேன். பஸ் அல்லது ஆட்டோவில் தான் வருவேன். திரும்பிப் போகும்போது கட்டாயம் பஸ்தான். பஸ் ஸ்டாப் வரை பேசிக்கொண்டே நடப்போம். இரண்டு மூன்று பஸ்களை வேண்டுமென்றே ஏறாமல் தவிர்ப்பேன். நேரமாகுது ரம்யா அடுத்த பஸ்ல ஏறிடு என்று செல்லமாக அவன் கடிந்து கொள்வான் அதன் பின்னரே அடுத்த பஸ்ஸில் ஏறுவேன். சில சமயம் லேட்டாகிவிட்டால் பஸ்ஸின் பின் சைக்கிளில் வருவான். என் நிறுத்தம் வந்து நான் வீட்டிற்குள் செல்லும் வரை அவன் சைக்கிள் என்னை பின் தொடரும். எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

ஒரு முறை அவன் அம்மாவிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று தந்த போது வாங்க மறுத்துவிட்டார். தம்பி திட்டும்மா வேணாம் என்றார். அவன் மேல இவ்வளவு பிரியமா இருக்கியே அவனை கட்டிக்கப் போறியா என்று வெளிப்படையாக கேட்டார். நான் ஆமாம் என்றேன். அவர் முகம் மலர்ந்து ‘நினைச்சேன், நீங்க ரெண்டு பேரும் பேசிக்க சொல்லியே இப்படித்தான் இருக்குமின்னு, நல்லா இருந்தா சரி உங்க வூட்டுல ஒத்துப்பாங்களா, நீங்க பணக்கார வூட்டு பொண்ணு, திரு இன்னும் வேலைக்கே போவலை, நீ பெரிய படிப்பு படிச்சுகிட்டிருக்கியாம், ரொம்ப அறிவாளி நீயின்னு திருநாவு உன்னைப் பத்தி பெருமையா பேசும். இதெல்லாம் சரியா வருமா நல்ல ரோசனை பண்ணிக்க, சரிப்படாதுன்னு தோணிச்சுன்னா விட்டுடு, என்னிய தப்பா நினைச்சிக்காதேம்மா என்றார். என்னால் அவனை இனி மறக்க முடியாது எனும் நிலைக்கு எப்போதோ நான் வந்திருந்தேன்.

நான் மேற்படிப்பிற்காக லண்டன் கிளம்பிக்கொண்டிருந்தேன். போகவே கூடாது என்று அடம்பிடித்தான் திரு. பேசிப் பேசி என்னை கரைத்து என்னை அவன் மீது மேலும் மேலும் பித்தாகச் செய்தான். காதலுக்காக எவ்வளவு பேர் உயிரை விடுகிறார்கள், நான் திருவின் மீதான காதலின் காரணத்தால் படிப்பை விட்டேன். இப்படியே காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம், வாழ்வில் எவ்வித சிக்கலும் இருந்திருக்காது என்று நினைத்திருந்த வேளையில் என் வீட்டில் விஷயம் தெரிந்து பூகம்பம் வெடித்தது. சத்யாகிரகம் இருந்து திருவிற்கும் எனக்கும் இடையே இருக்கும் அன்பின் நெருக்கத்தை புரிய வைத்து, இறுதியில் என் பிடிவாதமே வென்றது. திருவின் திருமதி ஆனேன்.


3

யோசித்து களைத்து போனேன். என் முகத்தைப் பார்த்த சிஸ்டருக்கு என்ன புரிந்ததோ மென்மையாக புன்னகைத்தாள். அவள் கண்களின் தீர்க்கமான ஒளி. முகத்தில் அளவில்லாத சாந்தம். நீண்ட வெள்ளிச் சங்கிலியில் கோர்த்திருந்த சிலுவை அணிந்திருந்தாள்.

கோயமுத்தூருக்கா என்றேன்.

ஆமாம் என்றாள்.

என் பேரு ரம்யா என்றேன்.

லீனா பாலொஸ் என்றாள் மென்மையாக.

மனதில் ஆறாத ரணமொன்றின் வலி விழி வழியே அவ்வப்போது ததும்பிக் கொண்டிருப்பதை கைக்குட்டையில் லீனா சிஸ்டர் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டிருந்தேன். அதையும் மீறி அவள் கவனித்து விட்டாள்.

‘ரம்யா, பஸ்ல ஏறினதிலேர்ந்து கவனிச்சுட்டு வரேன், உங்க மனசுல எதாவது வருத்தமா. எதுவா வேணா இருக்கட்டும், கர்த்தர் உங்களை காப்பாற்றுவார். நீங்க எல்லா கவலையையும் கடவுள்கிட்ட ஒப்படைச்சிடுங்க. உங்களுக்காக நான் பிரார்த்தனை பண்றேன். ப்ளீஸ் காம் டவுன்’ என்றாள் பரிவாக.

எதாவது ஒரு ஆறுதல் கரம் கிடைத்தால் பற்றிக் கொள்ளும் மன நிலையில் இருந்த நான் இனி மறைப்பது தேவையில்லை என்று மனத்துயரையெல்லாம் பெருமூச்சாக்கினேன்.

‘சொல்லுங்க ரம்யா என்னை நீங்க நம்பலாம். வெளிய சொன்னா துக்கம் குறையும், மனசுக்குள்ள வச்சு மறுகிட்டு இருக்காதீங்க. கம் அவுட்’.

முன்பு எப்போதும் அவளை சந்தித்திருக்கா விட்டாலும் கனிவே உருவான அப்பெண்ணின் அன்பின் மொழியில் கரைந்துவிட்டேன். வாழ்க்கை அவ்வப்போது நம்பிக்கையின் நிழலை நம் முன் காட்டத்தான் செய்கிறது. அது போன்ற ஒன்றுதான் இது என நினைத்தவாறே சொன்னேன்

‘நேத்து ராத்திரி என் வீட்டுக்காரர் என்னை அடிச்சிட்டார். இதோ பாருங்க இந்தப் பக்க கன்னத்துல இன்னும் வீக்கம் இருக்கு. என்னை இந்த முப்பது வயசுல யாரும் கைநீட்டி அடிச்சதில்லை. நேத்து வழக்கம் போல பிரச்சனை, பேச்சு தடிச்சு சண்டையா மாறி என்னை ரொம்ப அடிச்சிட்டார். நான் அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு சரியாகறதுக்கே ரொம்ப நேரம் ஆச்சு. காலைல எதுவும் சாப்பிடலை அவர் எதுவும் பேசலை, எக்கேடு கெட்டு ஒழிஞ்சாலும் சரின்னு அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தாரு அதான் நான் சொல்லாம கிளம்பிட்டேன். ஆனா அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னை சுத்தி சுத்தி வருது. என்னால் மறக்கவே முடியாத அளவுக்கு மனசையும் உடம்பையும் காயப்படுத்திட்டார். இனி எதுக்காக இவரோட வாழணும்ங்கற அளவுக்கு வெறுத்து போயிட்டேன்.அதான் கால் போன போக்கில கிளம்பிட்டேன்’.

‘ஓ காட்..ஸாரி ரம்யா. உங்களோட வேதனை எனக்கு புரியுது. ஆனா வீட்டுல சொல்லாம இப்படி கிளம்பி வந்தீட்டீங்களே, தேடுவாங்க இல்ல...’

‘நல்லா தேடட்டும். கொஞ்சமாவது பதறுட்டும் சிஸ்டர், என்னோட வலி என்னன்னு அவருக்கு புரியணும். கொஞ்சமாவா அழுதிருக்கேன். ஓவியமா வளர்த்தாங்க எங்க வீட்டுல..எனக்கு என்ன குழந்தை ஆசை இல்லாமலா இருக்கு? இதை வச்சே என் மாமியாரும் புருஷனும் அவமதிக்கறாங்க. அப்பப்போ சண்டை முத்தி போய் அடிக்கற அளவுக்கு ஆயிடுது. இனி அங்கே இருந்து என்ன ஆகப்போகுது. அடியும் உதையும் வாங்க எனக்கு தலையெழுத்தா? இத்தனைக்கும் நாங்க காதலிச்சு கல்யாணம் பன்ணிக்கிட்டோம். எங்கப்பா நல்ல வசதியானவர், இவருக்கு ஒரு பிஸினெஸ் வச்சு கொடுத்து முன்னேத்தி விட்டாரு, இவரும் முதல் ரெண்டு வருஷம் ப்ரியமா தான் இருந்தாரு...யாரு எப்ப எப்படி மாறுவாங்கன்னுதான் தெரியாதே...நான் வாழ்க்கையில ரொம்ப ஏமாந்துட்டேன் சிஸ்டர் சலிப்பும் வெறுப்புமா இருக்கு, என்ன செய்ய? என் அப்பா அம்மாகிட்ட போய் பல தடவை அழுதுட்டேன். நீயே தேடிக்கிட்டதுதானேன்னு அவங்களும் அழறாங்க. ஒரே துயரமா இருக்கு, அதான் எங்கேயாவது கண்காணாத தூரமா போய்டலாமுன்னு இந்த பஸ்ல ஏறிட்டேன். மூச்சு விடாமல் பேசியதில் படபடப்பு அதிகமாகியது.

சிஸ்டர் லீனா தன் பெரிய துணிப்பையிலிருந்து வாட்டர் பாட்டிலை திறந்து என்னிடம் நீட்டினாள்.

‘இதப் பாருங்க ரம்யா. யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. பதினைஞ்சு வயசுல எனக்கு ஏற்பட்ட மனக்கசப்புல வாழ்க்கையே வெறுத்துட்டேன். ஆனா அதுக்குன்னு நான் அப்படியே இருந்துடலே. எனக்கு எது தேவைன்னு தீவிரமா யோசிச்சப்போ நிம்மதிதான் தேவையின்னு தோணுச்சு, அதான் கர்த்தரின் ஆணையால் இந்த தூய வாழ்க்கையை மனசார தேர்ந்தெடுத்துக்கிட்டேன். இன்னும் ரெண்டு வருஷ பயிற்சி, அதுக்கப்பறம் நான் முழுமையான கன்னியாஸ்திரியாகிடுவேன். மன உறுதியும் இறை நம்பிக்கையும் எப்பவும் யாரையும் கைவிடாது. கர்த்தரின் பெயரால் ஸ்தோத்திரம் என்று எனக்காக அவள் ப்ரார்த்தனை செய்தாள். என்னிடம் அடுத்த பஸ்சில் வீட்டுக்குத் திரும்பிப் போகுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் பிறவியிலேயே என்னுடன் உருவாகியிருந்த வீம்பும் பிடிவாதமும் கோயமுத்தூரின் தியான மையம் ஒன்றினை நோக்கி என்னை செலுத்தியது. என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை. யார் அழைத்திருந்தாலும் அழைக்காவிட்டாலும் எனக்கு இனி கவலையில்லை என்னும் மனநிலையில் இருந்தேன்.

4.

த்யானா எனும் பெயருடைய அந்த தியான மையம் என் மனதை கொஞ்சம் சமன் படுத்தியது. சிறு வயதில் சூரிய நமஸ்காரமும் ப்ராணாயாமும் செய்து பழகியவளாததால் அங்கு என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. மூன்று நாள்கள் அங்கே அறை எடுத்து தங்கிவிட்டேன். வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும், காலாற நடப்பதும், பக்கத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு செல்வதுமாய் என்னுடைய பொழுதுகள் ஏற்கனவே கட்டமைத்தது போன்ற ஒழுங்குடன் சென்றது.


அலைபேசியை சார்ஜ் செய்தபோது 109 மிஸ்ட் கால்கள் இருந்தன. அதில் 102 கால்கல் திருவுடையது. இரண்டு என் அப்பாவிடமிருந்து, ஐந்து கால்கள் தோழியிடமிருந்து. பரவாயில்லை என்னையும் தேடியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இனி எனக்கென்ன தேவை என தீர்மானிக்க இயலாத வெறுமையின் யோசனையில் மேலும் இரண்டு நாள்கள் கழிந்தது.

வீடு தன் மாயக்குரலால் மெல்ல என்னை வா வா வென அழைக்க ஆரம்பித்தது. பக்கத்து வீட்டுக் குழந்தை கோகுலுக்கு நான் இல்லையென்றால் சோறு தண்ணி இறங்காது. ரம்மிமா என்ற அவன் மழலைக் குரல் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. என் வயிற்றை மெல்ல தொட்டுப் பார்த்தேன். இப்போதெல்லாம் கனவில் கூட எனக்கான குழந்தை அழுவதோ சிரிப்பதோ இல்லை. அது எனக்கில்லை என்றபின் ஏன் அதை தேடி மனம் சோர்ந்து போக வேண்டும். இந்த தெளிவு எனக்கேற்பட்டாலும் திருவிற்கும் அத்தைக்கும் கனவுகள் என்பது முடிவற்றிருந்தது. மருத்துவமனைகளின் படிகளில் ஏறி ஏறி ஏமாற்றமடைவது என்பது எத்தகைய மன வேதனையை அளிக்குமென்று அவர்கள் அறியாமல் என்னை வற்புறுத்திக்கொண்டேயிருப்பார்கள். இனி யாரிடம் அவர்கள் தங்களின் அதிகாரத்தை காட்டப்போகிறார்கள். திருவும் வேறு கல்யாணத்திற்கு கூட தயாராகவே இருந்தார் என நினைக்கத் தோன்றுகிறது. நிலையற்ற வாழ்வில் நிலைத்திருப்பதென்பது எதுவுமில்லை, அன்பு கூட அலுத்துப் போகுமா திருவிற்கு, எப்படியெல்லாம் அன்பு செய்தான் இரு காலத்தில், நினைக்கையில் சிரிப்புதான் மிஞ்சியது.

தியானாவில் பள்ளியொன்றை துவக்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு ஆசிரியைக்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்தேன். குடும்ப விவரங்கள் என்ற பகுதிக்கு எதிரே யாருமில்லை என்று எழுதினேன். மேலே பார்த்தேன் ஆகாயம் வெளிர் நீலத்தில் இருந்தது. சிஸ்டர் லீனாவின் புன்னகை முகம் அதில் தோன்றி மறைந்தது.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

வாழ்த்துக்கள்






இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும் அவனை சந்தித்து. கவிஞன், இயற்கையின் காதலன்,அன்பான மனிதன் என அவனுக்கு சில முகங்கள். எனக்கு எப்போதும் புன்னகையுடன் இருக்கும் ப்ரியமான முகமானவன். இனிமையான பேச்சு, நட்பின் அக்கறைகள், கவிதையில் வாழ்தல், சமூகத்தின் மீதான தார்மீகமான கோபங்கள் என கலவையான குணங்கள் கொண்ட அவனுக்கு இன்று அவனுக்கு பிறந்த நாள். எனக்கு மட்டும் அவன் நண்பனில்லை, உங்களில் பலருக்கும் அவன் பழகியவன் தான். அவனுக்கு நிலா என்று பெயர்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாரசிகன்.

புதன், 11 நவம்பர், 2009

The Wind Will Carry Us




”மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச் சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிட விரும்பாத சுவரைப் போலவும்....” – த.அகிலன்


இயக்குநர் அப்பாஸ் க்யாரோஸ்டமியின் ‘The Wind Will Carry Us’ தலைப்பிற்கு ஏற்ற கவித்துவமான திரைப்படம். மிகப் பெரிய நிலப்பரப்பு, மணல் வெளிகள், மலை முகடுகள், டெஹ்ரனில் உள்ள சின்னஞ் சிறிய கிராமம், கயமையற்ற மனிதர்கள், பெருநகரங்களின் பாதிப்புகள் அதிகமில்லாத அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல் என்ற எளிமையான கதையினுள் ஆழமான சில விதயங்களை விதைத்துள்ளார் அப்பாஸ்.

மரணப் படுக்கையில் இருக்கும் முதிய பெண்ணின் இறப்பிற்கு பிறகு நடைபெற இருக்கும் சாங்கியங்களை விரிவாக படம்பிடிக்க அம்மக்களின் வாழ்க்கைப் பற்றி ஆவணப் படம் எடுப்பதற்காக கிளம்புகிறான் பெஸார்ட். மரணம் தினசரியாக அங்கும் இங்கும் நடக்கும் காட்சிதான். ஆனால் அது வேதனையாகவும் தாங்கொண்ணா துயராகவும் உருமாறுவது ப்ரியமானவர்களின் மரணத்தின் போதுதான். மரணம் தொலைவில் நிகழ்ந்தால் அது செய்தி வெகு அருகில் நமக்கு உகந்தவர்களுக்கு நிகழ்ந்துவிட்டால் தாங்க ஏலாத துக்கம். சாங்கியங்கள் நிறைந்த அவ்விதமான மரணக் காட்சியை பதிவு செய்ய வெகு தூர கிராமத்திற்கு புறப்படுகிறான் பெஸார்ட். அவனுக்கு உதவி செய்வதற்கு ஒரு சிறுவன் நியமிக்கபடுகிறான். பெஸார்ட் எங்கு செல்வதானாலும் அவனுக்கு அச்சிறுவனின் உதவி மிகத் தேவை. மேடு பள்ளங்கள் தாண்டி குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று ஓரிடத்தில் அவனை தங்க வைக்கிறான் சிறுவன். மறுநாள் அவனுக்கு பரிட்சை எனவே மதியத்திற்கு மேல் வந்து அவனை அழைத்துச் செல்வதாய் வாக்குத் தந்துவிட்டு செல்கிறான்.

அம்மூதாட்டியின் இறப்பு வரையில் அவன் அங்கு காத்திருக்க வேண்டும். அந்த கிராமத்தாருடன் சில நாள்களில் ஒன்றிவிடுகிறான். அவன் பக்கத்து வீட்டில் பத்து குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணிடம் (பதினொன்றாவது வயிற்றில்) ஷேவ் செய்தவாறே அவளிடம் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கேள்விகள் கேட்டு வம்பு பேசுவான். டீ கடை வைத்திருக்கும் பெண்ணும் அவள் கணவனும் போடும் வாய்ச்சண்டைகளை கவனித்தவாறு டீயை ரசித்துக் குடிப்பான். தன்னந்தனியாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளைஞன் மற்றும் தனக்கு தினமும் பால் கொண்டு வந்து விற்கும் சிறிய பெண் ஆகியவர்களை அன்றாடம் சந்திக்கிறான். அம்மக்களின் அன்பும், வெள்ளந்தியான குணமும் அவனைப் பெரிதும் ஈர்க்கிறது.




அடிக்கடி நகரத்திலிருக்கும் அவன் குடும்ப்பத்தாரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வருகையில் சிக்னல் கிடைக்காததால் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட்டமாக ஓடி வெட்ட வெளியில் போய் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் எப்போதும் பாதியில் லைன் கட்டாகிவிடும். இப்படி யாரோ ஒருத்தியின் மரணத்திற்கு தனக்கு துளியும் சம்பந்தமில்லாத கிராமத்தில் காத்திருப்பது அயற்சியாக இருப்பினும் அதை மீறி அவன் அங்கிருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுகிறான்.

கிணறு வெட்டிக் கொண்டிருக்கையில் மண் சரிவு ஏற்பட்டு அந்த இளைஞன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த பெஸார்ட் உடனடியாக மக்களிடம் இதை தெரிவித்து டாக்டரை எப்படியோ அழைத்து வரச் செய்கிறார். சாவின் மடியில் சென்றிருக்க வேண்டிய அவனின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றபடுகிறது.




எவ்வளவு நாள்தான் வேலையற்று அங்கிருப்பது. அம்மூதாட்டியோ கடைசி வரை(!) இறக்கவில்லை. Prefer the Present (இத்தருணத்தை – நிகழ் காலத்தை நேசி) என்ற டாக்டரின் சன்னமான குரலில் ஒலிக்கும் வசனத்துடன் படம் நிறைவடைகிறது. எதற்கு வந்தோமோ அது நடக்காவிட்டாலும் தன்னுடைய காமிராவில் சில புகைப்படங்களை பதிவு செய்து கொள்கிறான். ஆவணப் பட வேலை தோல்வியில் முடிந்தாலும் அந்த மக்களின் ப்ரியத்தை அடைந்திருக்கிறான் பெஸார்ட்.

இப்படத்தை சாதாரண தளத்திலிருந்து அசாதாரணத்திற்கு மாற்றியவை இரண்டு விதயங்கள் ஒன்று பரந்துபட்ட மனிதநேயம். மற்றொன்று ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ எனும் பாரதியின் வரிகளை கண்முன் நிறுத்தும் அற்புத நிலக்காட்சிகள். வெட்ட வெளி, சமன் தரை, வான் வெளி, தொடுவானம், மரங்கள், மண் சாலைகள் என மிகத் துல்லியமாக இயற்கையின் அழகிய அம்சங்களை படம் பிடித்துள்ளார்கள். ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரேவிதமான லயத்தில் படம் நகர்கின்றது வெகு இயல்பு.
திரைப்படம் பார்த்ததும் நம்முடைய அழகிய கிராமங்கள் நினைவிற்கு வந்தன (சினிமா கிராமங்கள் அல்ல அசல் கிராமங்கள்) சென்னையை தாண்டியதும் எதிர்படும் சின்னஞ்சிறு கிராமங்கள், நாகர்கோவில், கன்யாகுமரி, திருநெல்வேலி, மற்றும் மதுரைப் பக்கத்தில் உள்ள வளம்மிக்க கிராமங்கள், தஞ்சையை ஒட்டிய வயல் வெளி சார்ந்த பச்சை பசுமையான கிராமங்கள், பயணத்தில் நொடிக் காட்சியாக கண்ணுக்குக் தென்படும் பெயர் தெரியாத கிராமங்கள் என்று எத்தனை கிராமங்கள் உள்ளது நம் பெருநகரங்களைச் சுற்றி, என்றேனும் நாம் அங்கே சென்று வசிக்க ஆசைப்பட்டிருக்கிறோமா? நகர வாழ்க்கை நம்மை பல அடிமைத்தனங்களுக்கு பழக்கி வைத்திருக்கும்போது நமக்கு கிராம வாழ்க்கை என்பதெல்லாம் கனவில் கூட வராமல் போகும் ஒன்றுதானே?

திங்கள், 9 நவம்பர், 2009

WHERE IS MY FRIEND’S HOUSE






அபாஸ் கியாரஸ்டமி குழந்தைகளின் உலகை நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறார். நம் பரபரப்பான வாழ்க்கையில் குழந்தைகளின் அக உலகத் தேவைகளை நாம் நிராகரிக்கவே செய்கிறோம். அவனுடைய புறத்தேவைகளுக்காகத் தான் நம் வாழ்வியில் போராட்டங்கள். ஆனாலும் நின்று நிதானித்து அவர்களின் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் நொடிதோறும் எழும் அவர்களின் ஆசைகளையும் நாம் எதிர்கொண்டோமா என்பது கேள்விக்குரியதுதான். Where Is My Friend’s House மிகச் சிறிய ஓர் விஷயத்தினூடே சிறியவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையே நிலவிக் கொண்டிருக்கும் தூரத்தை வெகு இயல்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு வகுப்பறை, இரண்டு கிராமங்கள். இரு சிறுவர்கள். இவ்வளவுதான் இத்திரைப்படத்தின் பேக் ட்ராப். ஆனால் இதற்குள் அப்பாஸ் வரைந்துள்ள சித்திரம் மகத்தானது.

வகுப்பறைக்கு அன்று மாஸ்டர் லேட்டாக வருகிறார். அதற்குள் கூச்சலும் குழப்பமுமாக சிறுவர்கள் கத்தி பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வாத்தியார் இல்லாத பொழுதை மகிழ்ச்சியாய் கொண்டாடிக் கொண்டிருக்றார்கள். கடுப்பான மாஸ்டர் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, வீட்டுப்பாடத்தை எடுத்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். எல்லோரும் ஒழுங்காக செய்து முடித்திருக்கின்றனர் ரசோ எனும் சிறுவனைத் தவிர. அவன் தன் உறவினர் வீட்டில் நோட்டுப் புத்தகத்தை விட்டுவிட்டு வந்ததால் வீட்டுப் பாடம் செய்ய இயலாம் போனது என்று அழுதபடி சொல்கிறான். அவனுடைய நண்பன் அஹமத் அவனை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மாஸ்டர் அவனைத் திட்டுகிறார், அவன் அழுகை நிற்காததால் அறிவுரைகள் சொல்லிவிட்டு மன்னிக்கிறார். அஹமத் தன் நண்பனுக்காக மனம் இரங்குகிறான்.

வீட்டுக்கு வந்த அஹமத்திற்கு உடனே விளையாடப் போகவோ ஹோம்வொர்க் செய்யவோ முடியாமல் சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்ய நேர்கிறது. அவனுடைய அம்மா அவனை திட்டிக் கொண்டே வேலைகளை ஏவிக்கொண்டிருக்கிறாள். கைக்குழந்தையான தம்பியை தொட்டிலில் ஆட்டுவதிலிருந்து துவைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு பக்கெட் எடுத்து வைப்பது வரை அவனுடைய உதவி அவளுக்குத் தேவைப்படுகிறது. அதன் பின் ஹோம்வொர்க் செய் என்று அவனை கடிந்து கொள்கிறாள். புத்தக பையைத் திறந்த அஹமத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய நண்பன் ரசோவின் நோட்டையும் தான் தவறுதலாக எடுத்து வந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய நோட்டும் ரசோவின் நோட்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதைக் கண்ட அஹ்மத் பெரும் பதட்டத்திற்குள்ளாகிறான். உடனடியாக அதை ரசோவிடன் கொடுத்துவிட துடிக்கிறான். அம்மாவிடம் பலமுறை சொல்லியும் அவள் அவனை விடுவதாக இல்லை.




வேறுவழியின்று அவன் அம்மா உள்ளே போனதும் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ரசோவின் வீட்டிற்கு நோட்டை கொண்டு போய் ஒப்படைக்க முடிவு செய்து ஒரே ஓட்டமாக ஓடுகிறான். ஒற்றையடிப்பாதைகள், மரங்கள் அடர்ந்த சோலை இவற்றைக் கடந்து பெயர் தெரியாத கிராமம் ஒன்றை அடைந்து கண்ணில் தென்பட்ட வீடுகளின் கதவைத் தட்டி ‘ரசோ ரசோ’ என்று கத்துகிறான். அவன் தட்டிய கதவுகள் பெரும்பாலும் திறக்கப்படவேயில்லை. ஒரு வீட்டு மாடியிலிருந்து துணி விழவே அதை எடுத்துத் தந்து உதவுகிறான் அஹமத், அதை பாராட்டிய பெண்மணியிடம் ரசோவின் பெயர் சொல்லி அவனைத் தெரியுமா என்று கேட்கிறான். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் ரசோவின் உறவினனத் தெரிந்திருந்தது. அவனுடைய கிராமம் எங்கிருக்கிறக்கிறது என்று கேட்கிறான். அவளும் வழி சொல்கிறான், பறந்தோடி அரும்பாடுபட்டு அவனின் வீட்டை கண்டுபிடிக்கிறான், ஆனால் ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அவன் தன் தந்தையுடன் அஹ்மத் இருக்கும் கிராமத்திற்கு ஏதோ வேலையாக சென்றிருப்பதை அறிந்து மீண்டும் வந்த வழியே ஓட்டமாய் திரும்புகிறான்.

வழியில் தன் தாத்தாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறான். அவர் அவனிடம் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறாய் போய் சிகரெட் வாங்கி வா என வேலை ஏவுகிறார். ஏற்கனவே ரசோவை கண்டுபிடிக்க முடியாத ஆற்றாமையில் இருக்கும் அஹ்மத் தாத்தாவிடம் பிறகு வாங்கித் தருவதாய் சொல்கிறான். அவர் அவனைத் திட்டுகிறார். வேறுவழியின்றி கடைக்குச் செல்கிறான். இக்காலப் பிள்ளைகள் எப்படி உருப்படாமல் இருக்கிறார்கள் என்று தாத்தா ஒரு பிரசங்கமே நடத்துகிறார். இடைப்பட்ட பல தடைகளை சமாளித்தவாறே மீண்டும் தன் தேடலை தொடங்குகிறான் அஹமத் .

இம்முறை அவனுக்கு உதவியாக ஒரு முதியவர் அவனுடன் தனக்கு ரசோவின் வீடு தெரியும் என்று அவனை அழைத்துச் செல்கிறார். நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. தாத்தாவினால் வேகமாக நடக்க முடியவில்லை. வீட்டுக்கு வேறு திரும்ப வேண்டும். புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கவலை ததும்பும் முகத்தோடு அஹமத் தாத்தாவின் கரம் பிடித்து ஒரு வழியாக ரசோவின் வீட்டருகே சென்றுவிட்டான். தாத்தாவால் அதற்கு மேல் வரமுடியாததால் அஹ்மத் அங்கு செல்கிறான். அந்த வீட்டருகே ஒரே கும்மிருட்டு. குதிரை ஒன்று கோபத்துடன் தன் குளம்புகளை தேய்த்துக் கொண்டிருக்கிறது. இருட்டும் இனம் தெரியாத அச்சமும் சிறுவன் அஹ்மத்தை வாட்டியெடுக்கின்றன. மெளனமாக தாத்தாவிடம் திரும்பி வருகிறான். என்ன சத்தமே காணும் நோட்டை நண்பனிடம் கொடுத்து விட்டாயா என்ற அவரின் கேள்விக்கும் மெளனமே அவன் பதிலாகிறது. வேகமாக வா தாத்தா என கெஞ்சுகிறான். ஆனால் அவரால் நடக்க முடியாமல் போகவே ஓடுகிறான். ஆனால் தெருநாய்களின் குலைப்பிற்கு பயந்து மீண்டும் தாத்தாவிடம் தஞ்சமடைகிறான். ஒருவழியாக தன் வீட்டிற்கு வந்து சேர்கிறான்.

அவன் முகம் வாடியே இருக்கிறது. அவன் அம்மா சாப்பிட சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் உணவை புறக்கணிக்கிறான். அம்மா கடிந்து கொள்ளவே வீட்டுப்பாடம் செய்யப் போகிறேன், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு குனிந்தபடி எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் அப்பா மெளனமாக குரான் ஓதிவிட்டு அவனை எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறார். நிம்மதியான அஹமத் தன் அறைக்கு வந்து எழுத்துப் பணியை தொடர்கிறான். புயல் காற்று அடித்து கதவு திறந்து திறந்து மூடுகிறது. அஹமத்தின் மனதில் கூட. மாலையில் அம்மா துவைத்துக் காயப்போட்ட துணிகளை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

அடுத்த நாள் காலை. வகுப்பறையில் எல்லாரும் இருக்கிறார்கள் அஹமத்தைத் தவிர. மாஸ்டர் எல்லார் நோட்டையும் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு ரவுண்ட்ஸ் வருகிறார். ரசோ மிகவும் பதட்டத்துடன் காணப்படுகிறான். அவன் பையில் கையை விட்டு துழாவிக் கொண்டேயிருக்கையில், அஹமத் வகுப்பறைக்குள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு உள் நுழைகிறான். ஏன் தாமதம் என்று மாஸ்டர் கேட்கையில் தன் நண்பனின் கிராமத்தின் பெயரைச் சொல்லி தூரத்திலிருந்து வருவதால் லேட்டாகிவிட்டது என்கிறான். அவசரமாக உள்ளே வந்து ரசோவிடம் நோட்டை கொடுக்கிறான். மிகச் சரியாக மாஸ்டர் இவர்களின் டேபிளுக்கு அருகே வந்து நோட்டை கேட்க அவரிடம் பயந்தபடி தருகிறான். அது ரசோவின் நோட் என்று மாஸ்டர் படிக்கவே அவனிடமிருந்த தன்னுடைய நோட்டை அவசரமாக வாங்கி அவரிடம் தருகிறான். அவர் அதைத் திருத்திவிட்டு அவனிடம் திருப்பித் தருகிறார். பெரும் பதட்டத்துடன் ரசோ தன் நோட்டை நீட்ட மாஸ்டர் பக்கங்களை திருப்புகிறார். கவலைப்படாதே நான் உனக்க்கா சேர்த்து நானே எழுதிவிட்டேன் என்று ரசோவின் காதில் அதற்குள் கிசுகிசுத்திருந்தான் அஹமத். ரசோவின் நோட்டில் ‘நன்று’ என்று போடுகிறார் மாஸ்டர். அஹமத் ராசோவின் பதட்டம் முற்றிலும் வடிந்துவிட்டு அவர்கள் சந்தோஷ மனநிலைக்கு வருவதற்குள் படம் நிறைவடைகிறது.

அஹமத்தின் நேர்மையும் நண்பன் மாட்டிக் கொண்டு மாஸ்டரிடம் திட்டு வாங்கக் கூடாது, அதன் காரணமாக அவன் பள்ளையை விட்டே துரத்தப்பட்டுவிடக் கூடாது என்ற குழந்தைத் தனமான அச்சங்களால் என்ன நடந்தாலும் சரி புத்தகத்தை அவனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற அவனின் மெய்த்துடிப்பு பெரியவர்களுக்கே கூட பாடமாகிறது.

இத்திரைப்படத்தில் மிக அற்புதமான காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். ரசோவைத் தேடி மீண்டும் அஹ்மத் கிளம்புகையில் வழியில் அவன் பெயருடைய ஒரு மனிதனை சந்திக்கிறான். அவன் அஹமத்தின் நோட்டிலிருந்து எழுத ஒரு பக்கம் கேட்கிறான். இது தன்னுடையது அல்ல தன் நண்பனுடையது எனச் சொல்வதை கண்டுகொள்ளாமல் வலுக்கட்டாயமாக ஒரு பேஜை கிழித்து நோட்டை அடியில் வைத்து எழுத ஆரம்பிக்கிறான். அவர் எழுதி முடிக்கும் வரையில் பொறுமையாக நின்று கொண்டிருந்த அஹமத் அவரிடம் உங்கள் பெயர் ரசோவா எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறான். அவனுடைய குரல் அவரின் காதுகலை எட்டவில்லை. அலட்சியமாக நோட்டைத் திருப்பித் தந்துவிட்டு குதிரையில் ஏறி போய்விடுகிறான். அவன் ஒருவேளை ரசோவின் தந்தையாக இருக்கக் கூடும் என நினைத்த அஹமத் அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். சிறுவர்களின் கேள்விகள் பெரியவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை, அப்படியே எட்டினாலும் அதில் தென்படும் அலட்சியத்தின் குறியீடாக இக்காட்சியை அப்பாஸ் வெகு அற்புதமாய் திரைப்படுத்தியுள்ளார்.

Where is my friend’s house? அமைதியான அழகியலுடன் விடை தெரியாத சில கேள்விகளுக்குள் இட்டுச் செல்கிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

மழையில் நனைந்த சிறகு


மழை நாட்களில் எனக்குத் தேவை மழையைத் தவிர வேறு எதுவுமில்லை. மழையில் நனைந்து, மழையை ருசித்துத் மழையில் திளைத்து, மழையில் காய்ச்சல் ஏற்பட்டு, மழையினாலே சரியாகி, என மழைக்கும் எனக்கும் நெடுங்காலமாய் அழியாக் காதல் இருந்துவருகிறது. பொழிந்து கொண்டிருக்கும் மழையை எவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது எனக்கு. சில நாட்களாய் மழை பொய்த்துவிட்டதே என நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அது தன் வேலையைச் செய்து ஈரத்தை உறுதிப்படுத்திவிட்டது. வித்யாசம் என்னவெனில் கடந்து சென்ற ஆண்டில் கடும்மழையில் கூட அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன், இப்போது வீட்டில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீட்டுக் கட்டை கலைப்பதைப் போல வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறிக் கொண்டிருக்கிறது. வேடிக்கைப் பார்க்கையில் நனைதல் பிடிக்கும், நனைந்து கிடக்கும்போது வேடிக்கையின் நினைவுகள் ஞாபகத்தை கிளர்த்தும், இப்படியான சுழற்சிதானே வாழ்க்கை, நான் ஒரு இறகுதான் அதன் முன்?


கண்ணில் நிறைந்தும் நிறையாத மழைக்காட்சிகள் ஜன்னலில் தெறிக்கும் சாரலுடன் தெரியும் இருண்ட கருமேகங்கள், தூரத்து ரயில், பக்கத்து வீட்டு சிட் அவுட்டில் சிறகை உதிர்த்தபடி உடலை சிலிர்த்துக் கொள்ளும் அண்டங்காக்கை, உள்ளேன் அய்யா என்று மழைக்காலத்தில் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் தவளைகள், நனைந்த தினத் தந்தி, நேரம் கழித்து வந்த பால் பாக்கெட்டுகள், எதிர் ப்ளாட் அங்கிளின் இருமல் சத்தம், எவ்வளவு துடைத்தாலும் ஈரம் தேங்கிவிடுகிறதே என்ற புலம்பல்களுடன் டெட்டால் தெளித்து விரிப்புகளை போட்டு வைக்கும் அத்தை, சிகரெட் குடிக்க அடிக்கடி சிட் அவுட் செல்லும் மாமா, எப்போதும் போல டீவியில் மழை செய்திகளை பார்த்து அச்சசோ என்ற சப்தத்துடன் சரா, சியாவின் ஜியாமெண்ட்ரி பாக்ஸை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் சக்திவேல், அம்மா, இந்த குட்டிப்பிசாசை எங்கயாவது ஹாஸ்டல்ல சேத்துடேன் என கத்தும் சியா, இவர்களை சமாளிக்க முடியாமல் அதே சமயம் அவர்களின் சேட்டைகளை ரசிக்கும் என் அப்பா அம்மா....இப்படி எவ்வளவு சொன்னாலும் தீர்ந்து விடாது மழைக்காலங்களின் சாதாரண நிகழ்வுகள், மழையின் குளிர்ச்சியால் அசாதாரணங்கள் ஆகிவிடும்போது.

ஆனால் இம்முறை மழை எனக்கு சில துயரங்களை கொண்டு வந்து விட்டது. தோழி சந்திராவின் அப்பா இந்த மழையைப் பார்க்காமல் மறைந்துவிட்டார். கண்களுக்குப் புலப்படாத உலகில் நட்சத்திரங்களின் நடுவில் அவரின் கடைசிப் பயணம் எத்தகையதாக இருக்குமோ என்ற அச்சத்தில் அவள் மனநிலை சரியில்லாமல் கண்ணில் நீருடன் பெரும் துயரில் மூழ்கிக் கிடக்கிறாள். எந்த வார்த்தையும் அவள் துன்பத்தை எடுத்துக் கொள்ளாமல் மேன்மேலும் அவளை நீங்காத் துயரில் ஆழ்த்துகிறது. கதகதப்பான என் கைகளால் அவளின் கைகளை பொதிந்து வைத்துக் கொள்வதைத் தவிர அவளை ஆற்றுப்படுத்த என்னிடம் எதுவுமேயில்லை. காலம் காயங்களை ஆற்றும், எல்லாம் முடிந்தே தீர வேண்டியவை எனச் சொல்லி அவளை தேற்ற முயல்கிறேன். அவள் கடலில் இருக்கிறாள் நான் கரையில் இருக்கிறேன். தானே சரியாகும் வரை அவளை அப்படியே விடுவதுதான் சரி....


மற்றொரு மனத்துயர் நண்பரும் உறவினறுமான ராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை அவரை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வீடு திரும்புகையில் இரவாகிவிட்டிருந்தது, இருட்டும் மழையும் தனிமையான பயணமும் என்னை ஏதேதோ நினைவுகலுக்கு அப்பால் இழுத்து சென்றுவிட்டது. போரூரிலிருந்து ஆட்டோவில் கொரட்டூர் வரை வந்துவிட்டு அங்கிருந்து ரயிலில் வீடு வந்து சேர்ந்தேன். அப்பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

நோய்மையின் துயரில் இருக்கும் ராமை மழையின் பொருட்டு சந்திக்காமல் இருந்தால் மழையே என்னை மன்னிக்காது என்று கிளம்பிவிட்டேன். கிளம்புகையில் மழை தூரலாகத் தான் இருந்தது. நான்கு மணிக்கு சென்றுவிட்டு அவரை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தால் வானத்தையும் பூமியையும் பேரிரைச்சலுடன் ஒன்றிணைத்துக் கொண்டிருந்தது பெரும்மழை. மணி 6.30 என்ன செய்வதென்ற நிமிடக் குழப்பத்தை சரி செய்து ’துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே’ என மனக்குரலால் பாடியபடி வீடு திரும்ப புறப்பட்டுவிட்டேன். ஆட்டோகாரர் ஒருவர் 300 ரூபாய் தந்தால் அம்பத்தூர் என்ன அன்னனூருக்கு அதற்கு அப்பாலும் கொண்டுவிடுகிறேன் என்றார். மழைக்காலத்தில் அவர் பிழைப்பு இப்படித்தானே இருக்குமென்று வேறு வழியின்றி ஏறிவிட்டேன். என் வீட்டருகே ஆட்டோ சென்றால் வாகனம் மூழ்கிவிடும் என்று சொல்லி கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னேன். ரொம்ப நல்லவரான அவர் அப்ப 280 கொடுத்தால் போதுமென்றார். சிரித்துக் கொண்டேன்.

ஆட்டோவின் காடாத் துணியால் மழை நீர் மேல படாமல் இருக்க கட்டினார். அதை மீறியும் சுழன்றடிக்கும் காற்றுடன் மழை என்னுடன் பேச உள்ளே நுழையப் பார்த்தது. மனம் சரியில்லை போய்விடு அப்பறம் வா என அதனிடம் கெஞ்சக் கூட தெம்பில்லாமல் மெளனமாய் அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் அழிக்கும் சீற்றத்துடன் மழை வலுத்துக் கொண்டேயிருந்தது. ஏழு மணி பத்து மணியைப் போல வயிற்றில் பயத்தை உற்பத்தி செய்தது. ஆட்டோக்காரர் முடிந்த வரை வேகமாகவே சென்றார். முடிவேயில்லாத சாலையில் அவ்வாகனம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தாலும் பயணம் தீரவேயில்லாமல் வெகுவாக நீண்டு கொண்டிருந்தது. தவிர்க்க முடியாத மெல்லிய பயத்தை மறக்க மொபைலில் சன்னமாக பாடலை இசைகச் செய்தேன்....


”யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை...என்ன வன்மை...எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம் நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்...”

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல் ஏனோ அச்சமயம் ரசிக்கவில்லை. அமர்த்திவிட்டு வெளியில் வேடிக்கைப் பார்த்தால் சிறிய விபத்தில் இரண்டு கார்கள் ஓரமாக ஒதுக்கப்பட்டு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. இச்சமயத்தில் ஆட்டோக்காரர் தன் கருத்தை கூற ஆரம்பித்தார். பொதுவாக நான் தெரியாத நபர்ளுடன் பேசுவதில்லை. பேச ஆரம்பித்தால் அவர்களின் விசாரிப்புகள் எரிச்சலூட்டும். இவரோ தன் வாழ்க்கையில் சந்தித்த விபத்துகளைப் பற்றி மிகவும் உற்சாகமாக பேச ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே திகிலடைந்திருந்த நான் என்ன செய்வதென்று தெரியாமல் அப்பாவிற்கு மிஸ்டு கால் கொடுத்தேன். அப்பா அட்வைஸ்களை போட ஆரம்பித்தார், நானே வலிய போய் மாட்டிக் கொண்டபின் என்ன செய்வது, வாய் பேசாமல் கேட்டுக் கொண்டேன் இந்தப் பேய் மழையில் எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய் நேரத்துக்கு வீட்டுக்கு போக மாட்டியா அங்கப் போனா மூழ்கினாலும் மூழ்கிடுவே ஏன் பள்ளத் தாக்குல குடியிருக்கீங்க, வீட்டை மாத்துன்னா கேக்கறீங்களா, நீ பேசாம இப்ப இங்க வந்துடு என்றார். இல்லை சரா கோவிச்சுப்பார் நான் கிட்டத்தட்ட வீட்டருகே சென்றுவிட்டேன் எனச் சொல்லி அரைமணி நேரம் அவரை அறுத்துத் தள்ளிவிட்டு கொரட்டூர் நெருங்கையில் குட் நைட்பா என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன். பாவம் அப்பா நான் கூப்பிட்ட காரணமும் கட் செய்த காரணமும் தெரியாமல் அங்கு சூடான பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அதிகமான தொகையென்றாலும் பத்திரமாக என்னை கொண்டு வந்துவிட்ட அந்த ஆட்டோக்காருக்கு நன்றி சொல்லிவிட்டு ரயிலில் குளிரில் நடுங்கிக் கொண்டே வெள்ளமாய் தேங்கிக் கிடந்த தண்ணீர் குளத்தில் முட்டங்கால் நனைய மிதந்து வந்து ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன். அதன் பின் குளித்து சாப்பிட்டு படுக்க பத்து மணி ஆகிவிட்டது. அடடே மழை என்னாச்சு என்று எட்டிப் பார்க்கையில் அது இன்னும் விடாமல் தீவிரமாக பெய்து கொண்டிருந்தது. இப்போ வெளியே சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என்று மனக்குரங்கு லேசாக சவுண்ட் விட்டது. அய்யோ போதும்டா சாமி என்று என் அறைக்குள் மழை சத்தம் கேட்டுக் கொண்டிருக்க இப்பதிவை எழுதி முடித்தேன். தூக்கம் வராத இவ்விரவு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. வாழ்க்கை ஏன் இவ்விதம் இருக்கிறது நான் ஏன் தனிமைப்பட்டுத் தவித்தலைகிறேன். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க நான் மட்டும் போர்வையை எறிந்துவிட்டு குளிரை உள்வாங்கிக் கொண்டு ஏதேதோ யோசனைகளில் இரவை எரிய விட்டுக் கொண்டிருந்தேன். வெளியே மழையின் ஓசை ஓய்ந்தபாடில்லை.


ஸ்விட்ச் போட்டால் எரியும் விளக்கைப் போல இயற்கைக்கு எதாவது ஸ்விட்ச் இருந்தால் விரும்பும் போது பொழியவும் வேண்டாமெனில் அமர்த்திக் கொள்ளவும் வகையிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இயற்கையுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்து தோல்வியில் முடிந்து போகும் வாழ்க்கைதானே நிஜம்? இயற்கையை வணங்கி, போற்றி அதில் கரைந்து அதில் கலந்துவிட்டால் இயற்கை பெரும் கருணை காட்டும். பெய் எனப் பெய்யும் மழை நில் என நிற்கும் மழை....அத்தகைய சிலரின் ஈரமான மனதால்தான் மழை இவ்வருடம் பொய்க்கவில்லை. மழை நாளையும் வேண்டும்...ஆனால் எம் சாலைகள் சீராக வேண்டும். எம் மக்களுக்கு உணவும் உடையும் உறைவிடமும் வேண்டும், எம் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக தரப்படவேண்டும், மின்சார தாக்குதல்களால் இறந்துவிட்டவர்களுக்கு நஷ்ட ஈடு இழுத்துப் பறித்து தரப்பட்டாலும் ஈடாகுமா அவ்வுயிருக்கு? மழை தன் கோபத்தால் மனிதனுக்கு எதையோ உரைத்தபடி இருக்கிறது. என்றாவது அது செவிகளுக்கு எட்டும் போது உலகம் பேராழியில் மூழ்கியிருக்கும்....

ஞாயிறு, 1 நவம்பர், 2009

Facing Windows



Facing Windows – இயக்குநர் பெர்சான் ஒஸ்பெடெக் இயக்கியுள்ள ‘Facing Windows’ அழகியலுடன் கூடிய மென்காதல் கதை, நினைவேடுகளில் படிந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகியலுடன் வெளிப்படித்தியிருக்கும் திரைப்படம். அரசியலும் வரலாறும் மெல்லிய நூலிழையில் இணைந்து படம் நெடுக ஒருவித மர்மத் தன்மையுடனான காட்சிகளாய் விரிகிறது.


கியோவென்னா திருப்தியற்ற மணவாழ்வில் இரு குழந்தைகளுடன் கணவன் பிலிப்போவுடன் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறாள். வாழ்வியலுக்காக சிக்கன் பேக்டரி ஒன்றில் கணக்காளராக பணி புரிகிறாள். மனதிற்கு பிடிக்காத வேலையினாலும் கணவனின் நைட் ஷிப்ட் அலுப்புகளாலும், பிள்ளைகளின் ஓயாத தேவைகளும் கவனிப்புகளுமாக அவளின் வாழ்க்கை ஏதோ சீராகச் சென்று கொண்டிருந்தது போலத்தான் இருந்தது, ஒரு மனிதனை சந்திக்கும் வரை...
கியோவும் பிலிப்போவும் ஷாப்பிங் முடித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டே வீடு திரும்புகையில் வயதான ஒருவரை வீதியில் சந்திக்கிறார்கள். பிலிப்போ அவரிடம் யாரென்று கேட்க அவருக்கு எல்லாமும் மறந்துவிட்டிருக்கிறது. தான் யாரென்பதே அவருக்கு நினைவில்லை. இரக்கப்பட்ட அவன் தன் காரில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். ஏற்கனவே அவன் மீது கடும் கோபத்தில் இருந்த கியோவிற்கு அவன் செய்கை பெரும் எரிச்சலைத் தருகிறது. அவளது தோழி அதே ப்ளாட்டில் வசிப்பளவள். கியோவின் சமையலறை ஜன்னலில் இருந்து பார்த்தால் எதிர் ஜன்னலினூடே ஒரு இளைஞன் தெரிவான். அவனை அவனுக்குத் தெரியாமல் பார்த்து ரசிப்பாள் கியோ. அவளின் அன்றாட வேலைச் சுமைகளை இறக்கும் விதமாக இச்செய்கை அவளுக்கு இனம் தெரியாத ஆறுதலை அளிக்கிறது. புகைத்துக் கொண்டே அழகான அந்த இளைஞன் சாப்பிடுவதையும், உடை மாற்றுவதையும், தோழிகளை அழைத்துக் கொண்டு வருவதையும் விவரிக்க இயலாத மென் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள்.


அன்றைய நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இரவு உணவு அம்முதியவர் அவர்களுடன் சாப்பிடுகிறார். அவர்களுடைய பிள்ளைகளுக்கு குறிப்பாக மகளுக்கு அம்முதியவரை மிகவும் பிடித்துவிடுகிறது. அவரின் பெயர் சிமொனே என அறிகிறார்கள். கியோ அவரை போலீஸில் உடனடியாக ஒப்படைக்கும்படி கணவனை நச்சரிக்கிறாள். அவனும் மறுநாள் அவரை போலீஸில் விட்டுவிடுகிறேன் என வாக்களிக்கிறான்.
அடுத்த நாள் பிலிபோவினால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலவில்லை. கியோவிற்கு ஏற்கனவே நிறைய பிரச்சனைகள். இதில் புதிதாய் ஒரு வயோதிகரை பராமரிக்க அவளுக்கு தெம்பிருக்கவில்லை. முணுமுணுத்தபடி பலவிதமான கேக்குகளை தயாரித்துக் கொண்டிருக்கிறாள். சிமொனே அதைப் பார்ப்பதை அறிந்து இதெல்லாம் விற்பனைக்கு என்கிறாள். அவர் குழாய் தண்ணீரை உபயோகப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். இவரின் திடீர் வருகையால் தன் அந்தரங்கம் பாதிக்கபடுவதால், தானே இதற்கொரு வழி செய்ய வேண்டும் என்றெண்ணி அவரை காரில் ஏறச் செய்து அழைத்துச் செல்கிறாள். அவரிடம் எதாவது நினைவிற்கு வருகிறதா என்று கேட்ட போது தொடர்பற்ற ஏதேதோ செய்திகளை சொல்கிறார் ஆனால் அது ஏதும் பயனில்லை. போகின்ற வழியில் தான் செய்து வைத்திருக்கின்ற கேக்குகளை ஒரு சிறிய ஹோட்டலில் தருவதாகச் அவரை காரில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறாள். அந்த ஹோட்டலில் அவள் ரசித்து மகிழும் எதிர்வீட்டு ஆண் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு பின் தொடர்ந்து அவளை மறித்து தன் பெயர் லோரென்ஸோ எதிர் ப்ளாட்டில் இருக்கிறேன் உங்கள் அப்பா காரிலிருந்து இறங்கி எங்ஜோ போகிறார் என சுய அறிமுகம் செய்துகொள்கிறான்.

அவர் தன் தந்தை இல்லைனென்றும் அவரைப் பற்றி ஏதும் தெரியாமல் தங்கள் வீட்டில் தங்க வைத்திருப்பதைப் பற்றியும் வருத்தத்துடன் சொல்கிறாள். ஆனால் அவர் தொலைந்து போனால் சிக்கல் என்கிறாள். அவனும் இவளும் அவரை எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் கண்டுபிடிக்கிறார்கள். நம்பர்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இனம் தெரியாத ஈர்ப்பு அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கிறது.

அடுத்த சில நாள்களில் அம்முதியவரை அவள் மதிக்க ஆரம்பித்துவிட்டாள். அவரின் மீதுள்ள அக்கறையில் அவர் போட்டிருந்த கோட்டை சலவைக்கு போடுகிறாள். அவருடன் மனம் விட்டு பேசுகிறாள். தன்னுடைய விருப்பமான வேலையான கேக் கடை வைக்க இயலாத சூழலில் இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறாள். தனிமை சூழ்ந்துள்ள இரவொன்றில் அவருடன் உணவு முடித்துவிட்டு இசைக்கேற்றவாறு நடனம் ஆடுகிறாள். சிமெனோ மரியாதைக்குரிய நண்பராகிவிட்டார். அதைவிடவும் லொரொம்ன்ஸோ மேல் இருக்கும் மோகமும் வளர்ந்து அவளை வேலை செய்ய விடாமல் கொன்றது. அவளது தோழியின் அறிவுரைக்கேற்ப அவனுடன் ஓரிரவு தங்க முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்கிறாள். அவன் கேண்டில் லைட் ஏற்றி வைத்து அழகான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறான். ஜன்னலினூடே அவளை அவன் தினந்தோறும் ரசித்து வந்ததை மனம் திறந்து கொட்டுகிறாள். அவள் என்பது அவனைப் பொறுத்தவரை பெரும் கனவு, அவள் அவனின் தேடலின் தேவதை. அவளுடனான இத்தகைய பொன் நேரத்திற்காக அவன் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருந்தான். அந்த ஜன்னலில் வழியேதான் அவளை அனுதினம் தரிசிப்பதாக அவன் சொன்ன நொடியில் அவளுக்குள் ஏதோ உடைந்தது. அணைத்திருந்த அவன் கரங்களில் இருந்து விடுபட்டு அந்த ஜன்னலருகே போய்ப்பார்த்தாள். பிலிப்போவின் நடவடிக்கை தெரிந்தது. அவன் தனிமையில் அவ்வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தான். பிள்ளைகளை தோழியின் வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். நைட் ஷிப்ட் செய்யாமல் பிலிப்போ இவ்வளவு சீக்கிரம் திரும்புவான் என அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லைல். குற்றவுணர்வு கவிய அந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பிச் செல்கிறாள்.





அதன்பின் அடுக்கடுக்காக அவளுக்கு துயரமான செய்திகளே வருகிறது. சிமொனே வேறு காணாமல் போய் விடுகிறார். எதிர்வீட்டுக் காதலன் வேலை மாற்றத்தில் வேறு ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவனை சந்திக்காமல் தவிர்க்க நினைத்து கடைசி நொடியில் படிகளில் இறங்கி ஓடோடி வருகிறாள். ஆனால் அதற்குள் அவன் வண்டி நகர்ந்து போய்விடுகிறது. கனவு போன்ற அக்காதல் அவளின் நேர்மையினால் கைவிட்டுப் போகிறது. சண்டைபிடிக்கும் கணவன் ஆனாலும் பிலிப்போவின் மீது அவளுக்கு பெரும் பாசம் இருந்தது. தனக்கிருக்கும் வாழ்க்கையே போதும் என்றெண்ணி அவள் தன்னை சமாதானம் செய்து கொள்கிறாள்.


சலவை செய்து வைத்திருந்த சிமோனேவின் உடையில் ஒரு கடிதம் அவளுக்குக் கிடைக்கிறது. அதை அவள் வாசித்த போது சிமோனேவைப் பற்றிய தகவல்கள் பனிமூட்டமாய்க் கிடைக்கிறது. எப்படியோ அவர் தொலைபேசி நம்பரைக் கண்டுபிடித்து அவர் வீட்டுக்குச் சென்று அவரை சந்திக்கிறாள். அவர் அந்த ஊரின் தலைசிறந்த கேக் தயாரிப்பாளர் என்பதை அறிகிறாள். இவளுக்காக அவர் விதவிதமான கேக்குகளை தயார் செய்து கொடுக்கிறார். அவர் மனைவி யாரையும் அவர் தன் கேக் செய்யும் கிச்சனுக்குள் அனுமதிப்பதில்லை. முதன்முறையாக உன்னைத்தான் அவர் விட்டிருக்கிறார் என்கிறாள். அவரின் பெயர் சிமோனெ அல்ல டாவிடோ என்பதையும் அறிகிறாள். அன்றிரவு பிலிப்போவிடம் சொல்லி தனக்குப் பிடிக்காத வேலையை உதறுகிறாள். தன் கனவினைத் துரத்த மனதிற்குப் பிடித்த வேலையான கேக் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாக சொல்கிறாள். முதலில் மறுத்த பிலிப் அவளின் எதிர்காலக் கனவு மின்னும் கண்களை கண்டபின் சரியென்கிறான்.


டாவிடோவின் வாழ்க்கையின் ரகசியம் க்யோவிற்கு மட்டுமே தெரிந்தது. அவரிடம் கடித்ததை வாசித்ததிற்கு மன்னிப்பு கேட்டாள். அவர் பரவாயில்லை என்கிறார். இளம் வயதில் டாவிடோ உருகி உருகி காதலித்தது பற்றிய கடிதம் அது. தினமும் அவர் காதலுக்காக ஓரிடத்தில் ரகசியமாக கடித்தத்தை ஒளித்து வைப்பதும் அவரின் காதலன் அந்த கடிதத்தை எடுத்துவிடுவதுமாய் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது. அக்காதல் பெயர்தான் சிமோனே...அவன் பெண்ணல்ல ஆண். அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பின்னர் தெரிகிறது. தான் மிகவும் விரும்பிக் காதலிக்கும் சிமோனேவைத் தானே கொல்லும் படியான சூழலில் சிக்கியதால் அத்துயர் தாங்க ஏலாமல் அடிக்கடி நினைவுத் தப்பிவிடும் அத்தகைய நினைவு தப்பிய ஓர் நாளில்தான் பிலிப்போவும் இவளும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். சிமோனையை ஏன் கொன்றார் எனில் டாவிடோ மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற யூதர்களைக் கொல்வதற்கு நாஜிப் படை வருகிறது. சிமோனெ அவர்களிடம் பேசி டாவிடோவை காப்பாற்றிவிடுகிறான். ஆனால் டாவிடோ மற்றவர்களை காப்பாற்றுவதற்காக காதலுடன் கைகலப்பில் அவனை கொல்ல நேர்ந்துவிடுகிறது. தன்னுடைய சிமோனேவைத் தானே கொன்றதை எண்ணி அவன் வாழ்நாள் முழுவதும் அழுது புலம்புகிறான். ஆனால் அன்று இரவு அவன் காப்பாற்றிய பெண்கள், சிறுவர்கள் இன்றும் அவனை நன்றியுடன் எங்கிருந்தாவது நினைத்துக் கொள்வார்கள் என்றும் தெரியும் அவருக்கு.

காலத்தின் ரத்தக் கரை படிந்த பக்கங்களாய் சிலர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. டாவிடோவாக நடித்திருக்கும் மாஸிமோ கிரோட்டி தன்னுடைய அற்புத நடிப்பாற்றலால் மனதை மிகவும் நெகிழச் செய்துவிடுகிறார். க்யோவின் எதிர்காலத்தை பிரகாசமாக்க அவளின் புதிய ஜன்னலைத் திறந்துவிடுகிறார். ஜன்னல் என்பது எல்லார் வீடுகளிலும் இருக்கிறது. எதற்காக திற்க்கிறோம் என்பது தான் முக்கியம். வேடிக்கையும் பார்க்கலாம் ஒரு வாழ்க்கையும் சீரமைத்துக் கொள்ளலாம். டாவிடோவின் வழிகாட்டுதலால் தனக்கான ஜன்னலை இம்முறை சரியாகத் திறக்கிறாள் க்யோவென்னா.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

Dr.Zhivago




டாக்டர் மற்றும் கவிஞர் யூரி ஜிவாகோவின் வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளாய் இத்திரைப்படம் சரித்திரமும் புனைவும் கலந்த சோகக்காவியமாய் காணக் கிடைக்கிறது.


கதைசொல்லி ஜிவாகோவின் சகோதரன், ஜெனரல் யெய்க்ரா ஜிவாகோ. தன் தம்பி ஜிவாகோவிற்கும் அவன் காதலி லாராவிற்கும் பிறந்த பெண் குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறான். உள்ளுணர்வின் தடத்தால் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்திருந்த இளம்பெண்னொருத்தியைப் பார்த்ததும் அவள் தன் தம்பியின் மகளாக இருப்பாளோவென நினைத்து அவளிடம் பல கேள்விகளைக் கேட்கிறான். அனாதையான அப்பெண் அதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்பதாய் அவர் கண் முன் தென்படுகிறாள். நினைவுகள் பின் செல்ல ஜிவாகோவின் வாழ்வில் இடர்பட்ட லாராவையும் முதலாம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களும் ஜிவாகோவின் பொது வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சந்தித்த துயரங்களையும் பெரும் காதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நினைவில் நிறுத்துகிறார்.


ஜிவாகோ (உமர் ஷெரிப்)நர்ஸ் லாரா மீது காதல்வயப்படுகிறான். அவள் ரஷிய பொல்சேவிக் புரட்சிக்காரன் பாஷாவின் மனைவி. லாராவிற்கு செயல்வீரனான தன் கணவனுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம். துயர் மிகுந்த தன் வாழ்விலிருந்து தப்பிப்பதற்கே அவனை மணந்திருந்தாள். தகப்பன் வயதில் இருக்கும் தன் தாயின் காதலன் அவளை அடைய முயன்றபோது அவனிடம் வீழ்ந்தபின் எப்படியோ தப்பித்து தோழனான பாஷாவை மணக்கிறாள். பாஷா புரட்சியாளர்களின் தவிர்க்க முடியாத தலைவன். அவனுக்கு லாராவுடன் பேசுவதற்குக் கூட நேரமிருக்காது. இயக்கம் போர் விடுதலை இவைகளே அவனின் உயிர் மூச்சு. லாராவோ எரியும் நெருப்பாய் தகித்துக் கொண்டிருப்பவள். காதலும் மோகமும் பேராழியாய் பொங்கியிருக்கும் பதுமைப்பெண் அவள். ஜிவாகோவின் மேல் அவளுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் அவன் பேரழகன் மட்டுமல்ல, கவிதைக்காரன்.




ஜிவாகோ தன்னை மிகவும் நேசிக்கும் மனைவி தான்யாவிற்குத் தெரியாமல் லாராவை விரும்புகிறான். உணர்ச்சிகளின் அதீதத்தில் அவள் மீதான பித்தால் நெருக்கமான உறவை வேண்டி நிற்கிறான். முதலில் அவள் தயங்கினாலும் இருவரும் தங்களது துணையை மீறி காதலில் வீழ்கிறார்கள். ஜிவாகோ அன்பிற்கும் காமத்திற்கும் இடையிடையே ஊசலாடி இரு பெண்மைக்கிடையே சிக்கி உண்மை முகம் தொலைந்தவனாய் தவித்தலைகிறான். ஆனால் அவனின் படைப்பாற்றல் லாராவினால்தான் ஊற்றெடுக்கிறது. அவர்களுக்கான உலகில் காதல் மட்டுமே மொழியாகியது, கவிதையே வாழ்வாகியது. நெடிய நிழல் தரும் மரங்களில் மகரந்தப் பூக்கள் பூத்துச் சிரிக்கும் வசந்தகாலம் அவர்களின் காதலைப் பார்த்து ரசித்தது.

ஒரே சீரில் போய்க்கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை தாறுமாறாய் பல பிரச்சனைகள், புறச்சூழல்கள் அரசியல் நிலவரங்கள் என பெரும் புயல் வீசி அமைதியிழக்கச் செய்தது. தீடிர்க் கலவரங்கள், போர்ச் சூழல் என எல்லோரின் இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இச்சூழலில் சொல்லிக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.


லாரா போர்க்கைதிகளுக்கு சேவை செய்ய எங்கோ அனுப்பப்படுகிறாள். சில மாதங்கள் கழித்து ஜிவாகோவும் வலுக்கட்டாயமாக அதே இடத்திற்கு காயம்பட்ட வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவம் செய்ய அழைத்து வரப்படுகிறான். பரிவுடன் எல்லோருக்கும் சேவை செய்கிறார்கள் ஜிவாகோவும் லாராவும். உயிர் போகும் பிரச்சனைகளுக்கு இடையேயும் தன் காதலியை மீண்டும் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறான் ஜிவாகோ. அவளின் பாராமுகம் அவன் மனதை அரித்தெடுக்கிறது. எதற்கு வந்திருக்கிறோமோ அதை மட்டும் செயல்படுத்துவது நலமென்ற காதலியின் கூற்று அவனுக்கு சரியென்று படுகிறது. பசி பட்டினி தொடர் வேலையின் களைப்பினால் மிகவும் மனச் சோர்வுகிறான் ஜிவாகோ. மனைவியையும் குழந்தையையும் பிரிந்த அவன் மனது பெரும் சஞ்சலத்துள்ளாகிறது. துடிப்பும் தவிப்புமாய் கனக்கின்ற இதயத்துடன் நடக்கும் அரசியல் சூதுகளைக் கண்டு கொதுத்துப் போய் செய்வதறியாத கையறு நிலையில் மனம் வெதும்புகிறான். ஒருவழியாய் அவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறான். லாராவின் நிலை என்னவென்பதை அறிந்து கொள்ள இயலாமல் திரும்பியது அவனை பெரும் துயரில் வீழ்த்தியது. ஊர் வந்து சேர்ந்ததும் ஜிவாகோ மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு ரயிலும் குதிரை வண்டியிலும்


நீண்ட தூரம் பயணித்து வெறொரு ஊருக்கு புலம் பெயர்கிறான்.
அது கடும் பனிக்காலம். உறைந்த ஓவியமாய் அவனின் ஒற்றை வீட்டில் நிறைமாத கர்ப்பிணியான மனைவியுடன் பெரும் சிரமத்துடன் வாழ்கிறான். ஆனாலும் அவன் லாராவை மறக்கவில்லை. கவிதைகள் எழுதிக் குவித்து அவளின் நினைவை மறக்க நினைத்தாலும் பனியின் கொடுமையை விட இதயத்தில் நோயாக காதல் அவனைக் கொன்றொழிக்கிறது. பனியடர்ந்த ஒரு மாலைப் பொழுதில் நகரத்திற்கு திசைமறந்து வந்தபோது லாராவைப் பார்த்துவிடுகிறான். அவளைப் பின் தொடர்ந்து அவள் வீட்டை அறிந்து கொள்கிறான். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அவள் சாவியை ஒளித்து வைக்கும் இடத்தை அறிந்து அடுத்த நாள் அவள் வெளியேறியவுடன் வீட்டினுள் சென்று அவளுக்காக காத்திருக்கிறான். அவளின் காதலுக்காக அவன் ஆன்மா ஏங்கித் தவித்துக் கிடக்கிறது. வீட்டினுள் நுழைந்த அவள் ஜிவாகோ அங்கிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். லாராவுடன் இருப்பது தங்கள் மகள் என்பதையறிந்து பெரிதும் மகிழ்கிறான். உறவைப் புதுப்பித்துக் கொள்ள பெரிதும் விழைகிறான். ஆனால் லாரா அவனுடனான கடைசி கூடலுடன் அவ்வுறவை முறித்துக் கொள்கிறாள். வேறு வழியின்றி மனைவியிடமே வந்து சேர்கிறான். இவனுடைய வாழ்வில் குறுக்கிட்ட மற்றொரு பெண்ணைப் பற்றி எவ்வித விஷயமும் அறியாமல் எப்போதும் போல பிரியமாகவே இருக்கிறாள் தான்யா. பனிச்சாலையில் தன் காதலியின் கால்தடங்கள் கிடைக்காமல் சில கவிதைகளையும் நினைவுகளையும் வழித்துணையாக்கி அவனின் வாழ்க்கை தொடர்கிறது....




டேவிட் லீன் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். காட்சியமைப்புகளாகட்டும், திறமையான நட்சத்திரங்களின் தேர்வாகட்டும், கண்ணுக் குளிர்ச்சியான ஒளியைப்பாகட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து செதுக்கியிருக்கிறார். காண்பவர்களை குளிர் பற்றிக் கொள்ளும் அளவிற்கு ரஷ்யாவின் உறைபனிக்காலத்தை அப்படியே காமிராவில் பதிவு செய்திருக்கிறார்கள். காதல், காமம், பிரிவு என்பதற்கேற்ப பேக் ட்ராப் வேனிற்பருவம், வசந்தகாலம், கடும் பனிக்காலம் என கதையை வேறு தளத்திற்கு இழுத்துச் செல்கிறது. இத்திரைப்படத்திற்கு இணையாக கவிதையொன்று மனதில் நிழலாடுகிறது.

“நம் விடைபெறுதல் மெளனமாய் நிகழட்டும்
இசைத் தட்டினை நிறுத்தி விடு
இவ்வுலகில் தனிமைப்படுதல்
அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு.
இந்த நாட்களில் நாம்
பிரிந்து உறங்குவது மட்டுமல்ல
சாவும் நம்மை ஒன்றாய் இணைக்காது
பிரியத்தின் காயத்தினைப் போக்கவும் செய்யாது”
(ஜோசப் பிராட்ஸ்கியின் கவிதை – கவிஞர் பிரம்மராஜன் அறிமுகப்படுத்தும் ’பதினைந்து ஐரோப்பிய நவீனவாதிகள் புத்தகத்திலிருந்து)

டாக்டர் ஜிவாகோ பல ஆஸ்கார் விருதுகளைப் வென்றுள்ளது, அதில் முக்கியமானவை சினிமாடொகிராபி, இசை, ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம். நடிகர்களின் அற்புதமான பங்களிப்பு இத்திரைப்படத்தை வெகுசிறப்பாக்கியிருக்கிறது. உமர் ஷெரீப் ஜிவாகோவின் பாத்திரத்தை உள்வாங்கி வெகு இயல்பாய் அற்புதமாய் நடித்திருக்கிறார்.
காதல் மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் போரின் காயங்களைவிட ஆழமானது, அதிகமானதும்கூட.