திங்கள், 9 நவம்பர், 2009

WHERE IS MY FRIEND’S HOUSE






அபாஸ் கியாரஸ்டமி குழந்தைகளின் உலகை நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறார். நம் பரபரப்பான வாழ்க்கையில் குழந்தைகளின் அக உலகத் தேவைகளை நாம் நிராகரிக்கவே செய்கிறோம். அவனுடைய புறத்தேவைகளுக்காகத் தான் நம் வாழ்வியில் போராட்டங்கள். ஆனாலும் நின்று நிதானித்து அவர்களின் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் நொடிதோறும் எழும் அவர்களின் ஆசைகளையும் நாம் எதிர்கொண்டோமா என்பது கேள்விக்குரியதுதான். Where Is My Friend’s House மிகச் சிறிய ஓர் விஷயத்தினூடே சிறியவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையே நிலவிக் கொண்டிருக்கும் தூரத்தை வெகு இயல்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு வகுப்பறை, இரண்டு கிராமங்கள். இரு சிறுவர்கள். இவ்வளவுதான் இத்திரைப்படத்தின் பேக் ட்ராப். ஆனால் இதற்குள் அப்பாஸ் வரைந்துள்ள சித்திரம் மகத்தானது.

வகுப்பறைக்கு அன்று மாஸ்டர் லேட்டாக வருகிறார். அதற்குள் கூச்சலும் குழப்பமுமாக சிறுவர்கள் கத்தி பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வாத்தியார் இல்லாத பொழுதை மகிழ்ச்சியாய் கொண்டாடிக் கொண்டிருக்றார்கள். கடுப்பான மாஸ்டர் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, வீட்டுப்பாடத்தை எடுத்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். எல்லோரும் ஒழுங்காக செய்து முடித்திருக்கின்றனர் ரசோ எனும் சிறுவனைத் தவிர. அவன் தன் உறவினர் வீட்டில் நோட்டுப் புத்தகத்தை விட்டுவிட்டு வந்ததால் வீட்டுப் பாடம் செய்ய இயலாம் போனது என்று அழுதபடி சொல்கிறான். அவனுடைய நண்பன் அஹமத் அவனை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மாஸ்டர் அவனைத் திட்டுகிறார், அவன் அழுகை நிற்காததால் அறிவுரைகள் சொல்லிவிட்டு மன்னிக்கிறார். அஹமத் தன் நண்பனுக்காக மனம் இரங்குகிறான்.

வீட்டுக்கு வந்த அஹமத்திற்கு உடனே விளையாடப் போகவோ ஹோம்வொர்க் செய்யவோ முடியாமல் சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்ய நேர்கிறது. அவனுடைய அம்மா அவனை திட்டிக் கொண்டே வேலைகளை ஏவிக்கொண்டிருக்கிறாள். கைக்குழந்தையான தம்பியை தொட்டிலில் ஆட்டுவதிலிருந்து துவைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு பக்கெட் எடுத்து வைப்பது வரை அவனுடைய உதவி அவளுக்குத் தேவைப்படுகிறது. அதன் பின் ஹோம்வொர்க் செய் என்று அவனை கடிந்து கொள்கிறாள். புத்தக பையைத் திறந்த அஹமத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய நண்பன் ரசோவின் நோட்டையும் தான் தவறுதலாக எடுத்து வந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய நோட்டும் ரசோவின் நோட்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதைக் கண்ட அஹ்மத் பெரும் பதட்டத்திற்குள்ளாகிறான். உடனடியாக அதை ரசோவிடன் கொடுத்துவிட துடிக்கிறான். அம்மாவிடம் பலமுறை சொல்லியும் அவள் அவனை விடுவதாக இல்லை.




வேறுவழியின்று அவன் அம்மா உள்ளே போனதும் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ரசோவின் வீட்டிற்கு நோட்டை கொண்டு போய் ஒப்படைக்க முடிவு செய்து ஒரே ஓட்டமாக ஓடுகிறான். ஒற்றையடிப்பாதைகள், மரங்கள் அடர்ந்த சோலை இவற்றைக் கடந்து பெயர் தெரியாத கிராமம் ஒன்றை அடைந்து கண்ணில் தென்பட்ட வீடுகளின் கதவைத் தட்டி ‘ரசோ ரசோ’ என்று கத்துகிறான். அவன் தட்டிய கதவுகள் பெரும்பாலும் திறக்கப்படவேயில்லை. ஒரு வீட்டு மாடியிலிருந்து துணி விழவே அதை எடுத்துத் தந்து உதவுகிறான் அஹமத், அதை பாராட்டிய பெண்மணியிடம் ரசோவின் பெயர் சொல்லி அவனைத் தெரியுமா என்று கேட்கிறான். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் ரசோவின் உறவினனத் தெரிந்திருந்தது. அவனுடைய கிராமம் எங்கிருக்கிறக்கிறது என்று கேட்கிறான். அவளும் வழி சொல்கிறான், பறந்தோடி அரும்பாடுபட்டு அவனின் வீட்டை கண்டுபிடிக்கிறான், ஆனால் ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அவன் தன் தந்தையுடன் அஹ்மத் இருக்கும் கிராமத்திற்கு ஏதோ வேலையாக சென்றிருப்பதை அறிந்து மீண்டும் வந்த வழியே ஓட்டமாய் திரும்புகிறான்.

வழியில் தன் தாத்தாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறான். அவர் அவனிடம் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறாய் போய் சிகரெட் வாங்கி வா என வேலை ஏவுகிறார். ஏற்கனவே ரசோவை கண்டுபிடிக்க முடியாத ஆற்றாமையில் இருக்கும் அஹ்மத் தாத்தாவிடம் பிறகு வாங்கித் தருவதாய் சொல்கிறான். அவர் அவனைத் திட்டுகிறார். வேறுவழியின்றி கடைக்குச் செல்கிறான். இக்காலப் பிள்ளைகள் எப்படி உருப்படாமல் இருக்கிறார்கள் என்று தாத்தா ஒரு பிரசங்கமே நடத்துகிறார். இடைப்பட்ட பல தடைகளை சமாளித்தவாறே மீண்டும் தன் தேடலை தொடங்குகிறான் அஹமத் .

இம்முறை அவனுக்கு உதவியாக ஒரு முதியவர் அவனுடன் தனக்கு ரசோவின் வீடு தெரியும் என்று அவனை அழைத்துச் செல்கிறார். நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது. தாத்தாவினால் வேகமாக நடக்க முடியவில்லை. வீட்டுக்கு வேறு திரும்ப வேண்டும். புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கவலை ததும்பும் முகத்தோடு அஹமத் தாத்தாவின் கரம் பிடித்து ஒரு வழியாக ரசோவின் வீட்டருகே சென்றுவிட்டான். தாத்தாவால் அதற்கு மேல் வரமுடியாததால் அஹ்மத் அங்கு செல்கிறான். அந்த வீட்டருகே ஒரே கும்மிருட்டு. குதிரை ஒன்று கோபத்துடன் தன் குளம்புகளை தேய்த்துக் கொண்டிருக்கிறது. இருட்டும் இனம் தெரியாத அச்சமும் சிறுவன் அஹ்மத்தை வாட்டியெடுக்கின்றன. மெளனமாக தாத்தாவிடம் திரும்பி வருகிறான். என்ன சத்தமே காணும் நோட்டை நண்பனிடம் கொடுத்து விட்டாயா என்ற அவரின் கேள்விக்கும் மெளனமே அவன் பதிலாகிறது. வேகமாக வா தாத்தா என கெஞ்சுகிறான். ஆனால் அவரால் நடக்க முடியாமல் போகவே ஓடுகிறான். ஆனால் தெருநாய்களின் குலைப்பிற்கு பயந்து மீண்டும் தாத்தாவிடம் தஞ்சமடைகிறான். ஒருவழியாக தன் வீட்டிற்கு வந்து சேர்கிறான்.

அவன் முகம் வாடியே இருக்கிறது. அவன் அம்மா சாப்பிட சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் உணவை புறக்கணிக்கிறான். அம்மா கடிந்து கொள்ளவே வீட்டுப்பாடம் செய்யப் போகிறேன், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு குனிந்தபடி எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் அப்பா மெளனமாக குரான் ஓதிவிட்டு அவனை எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறார். நிம்மதியான அஹமத் தன் அறைக்கு வந்து எழுத்துப் பணியை தொடர்கிறான். புயல் காற்று அடித்து கதவு திறந்து திறந்து மூடுகிறது. அஹமத்தின் மனதில் கூட. மாலையில் அம்மா துவைத்துக் காயப்போட்ட துணிகளை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

அடுத்த நாள் காலை. வகுப்பறையில் எல்லாரும் இருக்கிறார்கள் அஹமத்தைத் தவிர. மாஸ்டர் எல்லார் நோட்டையும் எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு ரவுண்ட்ஸ் வருகிறார். ரசோ மிகவும் பதட்டத்துடன் காணப்படுகிறான். அவன் பையில் கையை விட்டு துழாவிக் கொண்டேயிருக்கையில், அஹமத் வகுப்பறைக்குள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு உள் நுழைகிறான். ஏன் தாமதம் என்று மாஸ்டர் கேட்கையில் தன் நண்பனின் கிராமத்தின் பெயரைச் சொல்லி தூரத்திலிருந்து வருவதால் லேட்டாகிவிட்டது என்கிறான். அவசரமாக உள்ளே வந்து ரசோவிடம் நோட்டை கொடுக்கிறான். மிகச் சரியாக மாஸ்டர் இவர்களின் டேபிளுக்கு அருகே வந்து நோட்டை கேட்க அவரிடம் பயந்தபடி தருகிறான். அது ரசோவின் நோட் என்று மாஸ்டர் படிக்கவே அவனிடமிருந்த தன்னுடைய நோட்டை அவசரமாக வாங்கி அவரிடம் தருகிறான். அவர் அதைத் திருத்திவிட்டு அவனிடம் திருப்பித் தருகிறார். பெரும் பதட்டத்துடன் ரசோ தன் நோட்டை நீட்ட மாஸ்டர் பக்கங்களை திருப்புகிறார். கவலைப்படாதே நான் உனக்க்கா சேர்த்து நானே எழுதிவிட்டேன் என்று ரசோவின் காதில் அதற்குள் கிசுகிசுத்திருந்தான் அஹமத். ரசோவின் நோட்டில் ‘நன்று’ என்று போடுகிறார் மாஸ்டர். அஹமத் ராசோவின் பதட்டம் முற்றிலும் வடிந்துவிட்டு அவர்கள் சந்தோஷ மனநிலைக்கு வருவதற்குள் படம் நிறைவடைகிறது.

அஹமத்தின் நேர்மையும் நண்பன் மாட்டிக் கொண்டு மாஸ்டரிடம் திட்டு வாங்கக் கூடாது, அதன் காரணமாக அவன் பள்ளையை விட்டே துரத்தப்பட்டுவிடக் கூடாது என்ற குழந்தைத் தனமான அச்சங்களால் என்ன நடந்தாலும் சரி புத்தகத்தை அவனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற அவனின் மெய்த்துடிப்பு பெரியவர்களுக்கே கூட பாடமாகிறது.

இத்திரைப்படத்தில் மிக அற்புதமான காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். ரசோவைத் தேடி மீண்டும் அஹ்மத் கிளம்புகையில் வழியில் அவன் பெயருடைய ஒரு மனிதனை சந்திக்கிறான். அவன் அஹமத்தின் நோட்டிலிருந்து எழுத ஒரு பக்கம் கேட்கிறான். இது தன்னுடையது அல்ல தன் நண்பனுடையது எனச் சொல்வதை கண்டுகொள்ளாமல் வலுக்கட்டாயமாக ஒரு பேஜை கிழித்து நோட்டை அடியில் வைத்து எழுத ஆரம்பிக்கிறான். அவர் எழுதி முடிக்கும் வரையில் பொறுமையாக நின்று கொண்டிருந்த அஹமத் அவரிடம் உங்கள் பெயர் ரசோவா எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறான். அவனுடைய குரல் அவரின் காதுகலை எட்டவில்லை. அலட்சியமாக நோட்டைத் திருப்பித் தந்துவிட்டு குதிரையில் ஏறி போய்விடுகிறான். அவன் ஒருவேளை ரசோவின் தந்தையாக இருக்கக் கூடும் என நினைத்த அஹமத் அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். சிறுவர்களின் கேள்விகள் பெரியவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை, அப்படியே எட்டினாலும் அதில் தென்படும் அலட்சியத்தின் குறியீடாக இக்காட்சியை அப்பாஸ் வெகு அற்புதமாய் திரைப்படுத்தியுள்ளார்.

Where is my friend’s house? அமைதியான அழகியலுடன் விடை தெரியாத சில கேள்விகளுக்குள் இட்டுச் செல்கிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

மழையில் நனைந்த சிறகு


மழை நாட்களில் எனக்குத் தேவை மழையைத் தவிர வேறு எதுவுமில்லை. மழையில் நனைந்து, மழையை ருசித்துத் மழையில் திளைத்து, மழையில் காய்ச்சல் ஏற்பட்டு, மழையினாலே சரியாகி, என மழைக்கும் எனக்கும் நெடுங்காலமாய் அழியாக் காதல் இருந்துவருகிறது. பொழிந்து கொண்டிருக்கும் மழையை எவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது எனக்கு. சில நாட்களாய் மழை பொய்த்துவிட்டதே என நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அது தன் வேலையைச் செய்து ஈரத்தை உறுதிப்படுத்திவிட்டது. வித்யாசம் என்னவெனில் கடந்து சென்ற ஆண்டில் கடும்மழையில் கூட அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன், இப்போது வீட்டில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீட்டுக் கட்டை கலைப்பதைப் போல வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறிக் கொண்டிருக்கிறது. வேடிக்கைப் பார்க்கையில் நனைதல் பிடிக்கும், நனைந்து கிடக்கும்போது வேடிக்கையின் நினைவுகள் ஞாபகத்தை கிளர்த்தும், இப்படியான சுழற்சிதானே வாழ்க்கை, நான் ஒரு இறகுதான் அதன் முன்?


கண்ணில் நிறைந்தும் நிறையாத மழைக்காட்சிகள் ஜன்னலில் தெறிக்கும் சாரலுடன் தெரியும் இருண்ட கருமேகங்கள், தூரத்து ரயில், பக்கத்து வீட்டு சிட் அவுட்டில் சிறகை உதிர்த்தபடி உடலை சிலிர்த்துக் கொள்ளும் அண்டங்காக்கை, உள்ளேன் அய்யா என்று மழைக்காலத்தில் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் தவளைகள், நனைந்த தினத் தந்தி, நேரம் கழித்து வந்த பால் பாக்கெட்டுகள், எதிர் ப்ளாட் அங்கிளின் இருமல் சத்தம், எவ்வளவு துடைத்தாலும் ஈரம் தேங்கிவிடுகிறதே என்ற புலம்பல்களுடன் டெட்டால் தெளித்து விரிப்புகளை போட்டு வைக்கும் அத்தை, சிகரெட் குடிக்க அடிக்கடி சிட் அவுட் செல்லும் மாமா, எப்போதும் போல டீவியில் மழை செய்திகளை பார்த்து அச்சசோ என்ற சப்தத்துடன் சரா, சியாவின் ஜியாமெண்ட்ரி பாக்ஸை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் சக்திவேல், அம்மா, இந்த குட்டிப்பிசாசை எங்கயாவது ஹாஸ்டல்ல சேத்துடேன் என கத்தும் சியா, இவர்களை சமாளிக்க முடியாமல் அதே சமயம் அவர்களின் சேட்டைகளை ரசிக்கும் என் அப்பா அம்மா....இப்படி எவ்வளவு சொன்னாலும் தீர்ந்து விடாது மழைக்காலங்களின் சாதாரண நிகழ்வுகள், மழையின் குளிர்ச்சியால் அசாதாரணங்கள் ஆகிவிடும்போது.

ஆனால் இம்முறை மழை எனக்கு சில துயரங்களை கொண்டு வந்து விட்டது. தோழி சந்திராவின் அப்பா இந்த மழையைப் பார்க்காமல் மறைந்துவிட்டார். கண்களுக்குப் புலப்படாத உலகில் நட்சத்திரங்களின் நடுவில் அவரின் கடைசிப் பயணம் எத்தகையதாக இருக்குமோ என்ற அச்சத்தில் அவள் மனநிலை சரியில்லாமல் கண்ணில் நீருடன் பெரும் துயரில் மூழ்கிக் கிடக்கிறாள். எந்த வார்த்தையும் அவள் துன்பத்தை எடுத்துக் கொள்ளாமல் மேன்மேலும் அவளை நீங்காத் துயரில் ஆழ்த்துகிறது. கதகதப்பான என் கைகளால் அவளின் கைகளை பொதிந்து வைத்துக் கொள்வதைத் தவிர அவளை ஆற்றுப்படுத்த என்னிடம் எதுவுமேயில்லை. காலம் காயங்களை ஆற்றும், எல்லாம் முடிந்தே தீர வேண்டியவை எனச் சொல்லி அவளை தேற்ற முயல்கிறேன். அவள் கடலில் இருக்கிறாள் நான் கரையில் இருக்கிறேன். தானே சரியாகும் வரை அவளை அப்படியே விடுவதுதான் சரி....


மற்றொரு மனத்துயர் நண்பரும் உறவினறுமான ராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை அவரை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வீடு திரும்புகையில் இரவாகிவிட்டிருந்தது, இருட்டும் மழையும் தனிமையான பயணமும் என்னை ஏதேதோ நினைவுகலுக்கு அப்பால் இழுத்து சென்றுவிட்டது. போரூரிலிருந்து ஆட்டோவில் கொரட்டூர் வரை வந்துவிட்டு அங்கிருந்து ரயிலில் வீடு வந்து சேர்ந்தேன். அப்பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

நோய்மையின் துயரில் இருக்கும் ராமை மழையின் பொருட்டு சந்திக்காமல் இருந்தால் மழையே என்னை மன்னிக்காது என்று கிளம்பிவிட்டேன். கிளம்புகையில் மழை தூரலாகத் தான் இருந்தது. நான்கு மணிக்கு சென்றுவிட்டு அவரை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தால் வானத்தையும் பூமியையும் பேரிரைச்சலுடன் ஒன்றிணைத்துக் கொண்டிருந்தது பெரும்மழை. மணி 6.30 என்ன செய்வதென்ற நிமிடக் குழப்பத்தை சரி செய்து ’துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே’ என மனக்குரலால் பாடியபடி வீடு திரும்ப புறப்பட்டுவிட்டேன். ஆட்டோகாரர் ஒருவர் 300 ரூபாய் தந்தால் அம்பத்தூர் என்ன அன்னனூருக்கு அதற்கு அப்பாலும் கொண்டுவிடுகிறேன் என்றார். மழைக்காலத்தில் அவர் பிழைப்பு இப்படித்தானே இருக்குமென்று வேறு வழியின்றி ஏறிவிட்டேன். என் வீட்டருகே ஆட்டோ சென்றால் வாகனம் மூழ்கிவிடும் என்று சொல்லி கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னேன். ரொம்ப நல்லவரான அவர் அப்ப 280 கொடுத்தால் போதுமென்றார். சிரித்துக் கொண்டேன்.

ஆட்டோவின் காடாத் துணியால் மழை நீர் மேல படாமல் இருக்க கட்டினார். அதை மீறியும் சுழன்றடிக்கும் காற்றுடன் மழை என்னுடன் பேச உள்ளே நுழையப் பார்த்தது. மனம் சரியில்லை போய்விடு அப்பறம் வா என அதனிடம் கெஞ்சக் கூட தெம்பில்லாமல் மெளனமாய் அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் அழிக்கும் சீற்றத்துடன் மழை வலுத்துக் கொண்டேயிருந்தது. ஏழு மணி பத்து மணியைப் போல வயிற்றில் பயத்தை உற்பத்தி செய்தது. ஆட்டோக்காரர் முடிந்த வரை வேகமாகவே சென்றார். முடிவேயில்லாத சாலையில் அவ்வாகனம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தாலும் பயணம் தீரவேயில்லாமல் வெகுவாக நீண்டு கொண்டிருந்தது. தவிர்க்க முடியாத மெல்லிய பயத்தை மறக்க மொபைலில் சன்னமாக பாடலை இசைகச் செய்தேன்....


”யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை...என்ன வன்மை...எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம் நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்...”

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல் ஏனோ அச்சமயம் ரசிக்கவில்லை. அமர்த்திவிட்டு வெளியில் வேடிக்கைப் பார்த்தால் சிறிய விபத்தில் இரண்டு கார்கள் ஓரமாக ஒதுக்கப்பட்டு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. இச்சமயத்தில் ஆட்டோக்காரர் தன் கருத்தை கூற ஆரம்பித்தார். பொதுவாக நான் தெரியாத நபர்ளுடன் பேசுவதில்லை. பேச ஆரம்பித்தால் அவர்களின் விசாரிப்புகள் எரிச்சலூட்டும். இவரோ தன் வாழ்க்கையில் சந்தித்த விபத்துகளைப் பற்றி மிகவும் உற்சாகமாக பேச ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே திகிலடைந்திருந்த நான் என்ன செய்வதென்று தெரியாமல் அப்பாவிற்கு மிஸ்டு கால் கொடுத்தேன். அப்பா அட்வைஸ்களை போட ஆரம்பித்தார், நானே வலிய போய் மாட்டிக் கொண்டபின் என்ன செய்வது, வாய் பேசாமல் கேட்டுக் கொண்டேன் இந்தப் பேய் மழையில் எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய் நேரத்துக்கு வீட்டுக்கு போக மாட்டியா அங்கப் போனா மூழ்கினாலும் மூழ்கிடுவே ஏன் பள்ளத் தாக்குல குடியிருக்கீங்க, வீட்டை மாத்துன்னா கேக்கறீங்களா, நீ பேசாம இப்ப இங்க வந்துடு என்றார். இல்லை சரா கோவிச்சுப்பார் நான் கிட்டத்தட்ட வீட்டருகே சென்றுவிட்டேன் எனச் சொல்லி அரைமணி நேரம் அவரை அறுத்துத் தள்ளிவிட்டு கொரட்டூர் நெருங்கையில் குட் நைட்பா என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன். பாவம் அப்பா நான் கூப்பிட்ட காரணமும் கட் செய்த காரணமும் தெரியாமல் அங்கு சூடான பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அதிகமான தொகையென்றாலும் பத்திரமாக என்னை கொண்டு வந்துவிட்ட அந்த ஆட்டோக்காருக்கு நன்றி சொல்லிவிட்டு ரயிலில் குளிரில் நடுங்கிக் கொண்டே வெள்ளமாய் தேங்கிக் கிடந்த தண்ணீர் குளத்தில் முட்டங்கால் நனைய மிதந்து வந்து ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன். அதன் பின் குளித்து சாப்பிட்டு படுக்க பத்து மணி ஆகிவிட்டது. அடடே மழை என்னாச்சு என்று எட்டிப் பார்க்கையில் அது இன்னும் விடாமல் தீவிரமாக பெய்து கொண்டிருந்தது. இப்போ வெளியே சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என்று மனக்குரங்கு லேசாக சவுண்ட் விட்டது. அய்யோ போதும்டா சாமி என்று என் அறைக்குள் மழை சத்தம் கேட்டுக் கொண்டிருக்க இப்பதிவை எழுதி முடித்தேன். தூக்கம் வராத இவ்விரவு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. வாழ்க்கை ஏன் இவ்விதம் இருக்கிறது நான் ஏன் தனிமைப்பட்டுத் தவித்தலைகிறேன். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க நான் மட்டும் போர்வையை எறிந்துவிட்டு குளிரை உள்வாங்கிக் கொண்டு ஏதேதோ யோசனைகளில் இரவை எரிய விட்டுக் கொண்டிருந்தேன். வெளியே மழையின் ஓசை ஓய்ந்தபாடில்லை.


ஸ்விட்ச் போட்டால் எரியும் விளக்கைப் போல இயற்கைக்கு எதாவது ஸ்விட்ச் இருந்தால் விரும்பும் போது பொழியவும் வேண்டாமெனில் அமர்த்திக் கொள்ளவும் வகையிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இயற்கையுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்து தோல்வியில் முடிந்து போகும் வாழ்க்கைதானே நிஜம்? இயற்கையை வணங்கி, போற்றி அதில் கரைந்து அதில் கலந்துவிட்டால் இயற்கை பெரும் கருணை காட்டும். பெய் எனப் பெய்யும் மழை நில் என நிற்கும் மழை....அத்தகைய சிலரின் ஈரமான மனதால்தான் மழை இவ்வருடம் பொய்க்கவில்லை. மழை நாளையும் வேண்டும்...ஆனால் எம் சாலைகள் சீராக வேண்டும். எம் மக்களுக்கு உணவும் உடையும் உறைவிடமும் வேண்டும், எம் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக தரப்படவேண்டும், மின்சார தாக்குதல்களால் இறந்துவிட்டவர்களுக்கு நஷ்ட ஈடு இழுத்துப் பறித்து தரப்பட்டாலும் ஈடாகுமா அவ்வுயிருக்கு? மழை தன் கோபத்தால் மனிதனுக்கு எதையோ உரைத்தபடி இருக்கிறது. என்றாவது அது செவிகளுக்கு எட்டும் போது உலகம் பேராழியில் மூழ்கியிருக்கும்....

ஞாயிறு, 1 நவம்பர், 2009

Facing Windows



Facing Windows – இயக்குநர் பெர்சான் ஒஸ்பெடெக் இயக்கியுள்ள ‘Facing Windows’ அழகியலுடன் கூடிய மென்காதல் கதை, நினைவேடுகளில் படிந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகியலுடன் வெளிப்படித்தியிருக்கும் திரைப்படம். அரசியலும் வரலாறும் மெல்லிய நூலிழையில் இணைந்து படம் நெடுக ஒருவித மர்மத் தன்மையுடனான காட்சிகளாய் விரிகிறது.


கியோவென்னா திருப்தியற்ற மணவாழ்வில் இரு குழந்தைகளுடன் கணவன் பிலிப்போவுடன் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறாள். வாழ்வியலுக்காக சிக்கன் பேக்டரி ஒன்றில் கணக்காளராக பணி புரிகிறாள். மனதிற்கு பிடிக்காத வேலையினாலும் கணவனின் நைட் ஷிப்ட் அலுப்புகளாலும், பிள்ளைகளின் ஓயாத தேவைகளும் கவனிப்புகளுமாக அவளின் வாழ்க்கை ஏதோ சீராகச் சென்று கொண்டிருந்தது போலத்தான் இருந்தது, ஒரு மனிதனை சந்திக்கும் வரை...
கியோவும் பிலிப்போவும் ஷாப்பிங் முடித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டே வீடு திரும்புகையில் வயதான ஒருவரை வீதியில் சந்திக்கிறார்கள். பிலிப்போ அவரிடம் யாரென்று கேட்க அவருக்கு எல்லாமும் மறந்துவிட்டிருக்கிறது. தான் யாரென்பதே அவருக்கு நினைவில்லை. இரக்கப்பட்ட அவன் தன் காரில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். ஏற்கனவே அவன் மீது கடும் கோபத்தில் இருந்த கியோவிற்கு அவன் செய்கை பெரும் எரிச்சலைத் தருகிறது. அவளது தோழி அதே ப்ளாட்டில் வசிப்பளவள். கியோவின் சமையலறை ஜன்னலில் இருந்து பார்த்தால் எதிர் ஜன்னலினூடே ஒரு இளைஞன் தெரிவான். அவனை அவனுக்குத் தெரியாமல் பார்த்து ரசிப்பாள் கியோ. அவளின் அன்றாட வேலைச் சுமைகளை இறக்கும் விதமாக இச்செய்கை அவளுக்கு இனம் தெரியாத ஆறுதலை அளிக்கிறது. புகைத்துக் கொண்டே அழகான அந்த இளைஞன் சாப்பிடுவதையும், உடை மாற்றுவதையும், தோழிகளை அழைத்துக் கொண்டு வருவதையும் விவரிக்க இயலாத மென் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள்.


அன்றைய நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இரவு உணவு அம்முதியவர் அவர்களுடன் சாப்பிடுகிறார். அவர்களுடைய பிள்ளைகளுக்கு குறிப்பாக மகளுக்கு அம்முதியவரை மிகவும் பிடித்துவிடுகிறது. அவரின் பெயர் சிமொனே என அறிகிறார்கள். கியோ அவரை போலீஸில் உடனடியாக ஒப்படைக்கும்படி கணவனை நச்சரிக்கிறாள். அவனும் மறுநாள் அவரை போலீஸில் விட்டுவிடுகிறேன் என வாக்களிக்கிறான்.
அடுத்த நாள் பிலிபோவினால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலவில்லை. கியோவிற்கு ஏற்கனவே நிறைய பிரச்சனைகள். இதில் புதிதாய் ஒரு வயோதிகரை பராமரிக்க அவளுக்கு தெம்பிருக்கவில்லை. முணுமுணுத்தபடி பலவிதமான கேக்குகளை தயாரித்துக் கொண்டிருக்கிறாள். சிமொனே அதைப் பார்ப்பதை அறிந்து இதெல்லாம் விற்பனைக்கு என்கிறாள். அவர் குழாய் தண்ணீரை உபயோகப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். இவரின் திடீர் வருகையால் தன் அந்தரங்கம் பாதிக்கபடுவதால், தானே இதற்கொரு வழி செய்ய வேண்டும் என்றெண்ணி அவரை காரில் ஏறச் செய்து அழைத்துச் செல்கிறாள். அவரிடம் எதாவது நினைவிற்கு வருகிறதா என்று கேட்ட போது தொடர்பற்ற ஏதேதோ செய்திகளை சொல்கிறார் ஆனால் அது ஏதும் பயனில்லை. போகின்ற வழியில் தான் செய்து வைத்திருக்கின்ற கேக்குகளை ஒரு சிறிய ஹோட்டலில் தருவதாகச் அவரை காரில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறாள். அந்த ஹோட்டலில் அவள் ரசித்து மகிழும் எதிர்வீட்டு ஆண் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு பின் தொடர்ந்து அவளை மறித்து தன் பெயர் லோரென்ஸோ எதிர் ப்ளாட்டில் இருக்கிறேன் உங்கள் அப்பா காரிலிருந்து இறங்கி எங்ஜோ போகிறார் என சுய அறிமுகம் செய்துகொள்கிறான்.

அவர் தன் தந்தை இல்லைனென்றும் அவரைப் பற்றி ஏதும் தெரியாமல் தங்கள் வீட்டில் தங்க வைத்திருப்பதைப் பற்றியும் வருத்தத்துடன் சொல்கிறாள். ஆனால் அவர் தொலைந்து போனால் சிக்கல் என்கிறாள். அவனும் இவளும் அவரை எல்லா இடங்களிலும் தேடி கடைசியில் கண்டுபிடிக்கிறார்கள். நம்பர்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இனம் தெரியாத ஈர்ப்பு அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கிறது.

அடுத்த சில நாள்களில் அம்முதியவரை அவள் மதிக்க ஆரம்பித்துவிட்டாள். அவரின் மீதுள்ள அக்கறையில் அவர் போட்டிருந்த கோட்டை சலவைக்கு போடுகிறாள். அவருடன் மனம் விட்டு பேசுகிறாள். தன்னுடைய விருப்பமான வேலையான கேக் கடை வைக்க இயலாத சூழலில் இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறாள். தனிமை சூழ்ந்துள்ள இரவொன்றில் அவருடன் உணவு முடித்துவிட்டு இசைக்கேற்றவாறு நடனம் ஆடுகிறாள். சிமெனோ மரியாதைக்குரிய நண்பராகிவிட்டார். அதைவிடவும் லொரொம்ன்ஸோ மேல் இருக்கும் மோகமும் வளர்ந்து அவளை வேலை செய்ய விடாமல் கொன்றது. அவளது தோழியின் அறிவுரைக்கேற்ப அவனுடன் ஓரிரவு தங்க முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்கிறாள். அவன் கேண்டில் லைட் ஏற்றி வைத்து அழகான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறான். ஜன்னலினூடே அவளை அவன் தினந்தோறும் ரசித்து வந்ததை மனம் திறந்து கொட்டுகிறாள். அவள் என்பது அவனைப் பொறுத்தவரை பெரும் கனவு, அவள் அவனின் தேடலின் தேவதை. அவளுடனான இத்தகைய பொன் நேரத்திற்காக அவன் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருந்தான். அந்த ஜன்னலில் வழியேதான் அவளை அனுதினம் தரிசிப்பதாக அவன் சொன்ன நொடியில் அவளுக்குள் ஏதோ உடைந்தது. அணைத்திருந்த அவன் கரங்களில் இருந்து விடுபட்டு அந்த ஜன்னலருகே போய்ப்பார்த்தாள். பிலிப்போவின் நடவடிக்கை தெரிந்தது. அவன் தனிமையில் அவ்வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தான். பிள்ளைகளை தோழியின் வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். நைட் ஷிப்ட் செய்யாமல் பிலிப்போ இவ்வளவு சீக்கிரம் திரும்புவான் என அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லைல். குற்றவுணர்வு கவிய அந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பிச் செல்கிறாள்.





அதன்பின் அடுக்கடுக்காக அவளுக்கு துயரமான செய்திகளே வருகிறது. சிமொனே வேறு காணாமல் போய் விடுகிறார். எதிர்வீட்டுக் காதலன் வேலை மாற்றத்தில் வேறு ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவனை சந்திக்காமல் தவிர்க்க நினைத்து கடைசி நொடியில் படிகளில் இறங்கி ஓடோடி வருகிறாள். ஆனால் அதற்குள் அவன் வண்டி நகர்ந்து போய்விடுகிறது. கனவு போன்ற அக்காதல் அவளின் நேர்மையினால் கைவிட்டுப் போகிறது. சண்டைபிடிக்கும் கணவன் ஆனாலும் பிலிப்போவின் மீது அவளுக்கு பெரும் பாசம் இருந்தது. தனக்கிருக்கும் வாழ்க்கையே போதும் என்றெண்ணி அவள் தன்னை சமாதானம் செய்து கொள்கிறாள்.


சலவை செய்து வைத்திருந்த சிமோனேவின் உடையில் ஒரு கடிதம் அவளுக்குக் கிடைக்கிறது. அதை அவள் வாசித்த போது சிமோனேவைப் பற்றிய தகவல்கள் பனிமூட்டமாய்க் கிடைக்கிறது. எப்படியோ அவர் தொலைபேசி நம்பரைக் கண்டுபிடித்து அவர் வீட்டுக்குச் சென்று அவரை சந்திக்கிறாள். அவர் அந்த ஊரின் தலைசிறந்த கேக் தயாரிப்பாளர் என்பதை அறிகிறாள். இவளுக்காக அவர் விதவிதமான கேக்குகளை தயார் செய்து கொடுக்கிறார். அவர் மனைவி யாரையும் அவர் தன் கேக் செய்யும் கிச்சனுக்குள் அனுமதிப்பதில்லை. முதன்முறையாக உன்னைத்தான் அவர் விட்டிருக்கிறார் என்கிறாள். அவரின் பெயர் சிமோனெ அல்ல டாவிடோ என்பதையும் அறிகிறாள். அன்றிரவு பிலிப்போவிடம் சொல்லி தனக்குப் பிடிக்காத வேலையை உதறுகிறாள். தன் கனவினைத் துரத்த மனதிற்குப் பிடித்த வேலையான கேக் தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாக சொல்கிறாள். முதலில் மறுத்த பிலிப் அவளின் எதிர்காலக் கனவு மின்னும் கண்களை கண்டபின் சரியென்கிறான்.


டாவிடோவின் வாழ்க்கையின் ரகசியம் க்யோவிற்கு மட்டுமே தெரிந்தது. அவரிடம் கடித்ததை வாசித்ததிற்கு மன்னிப்பு கேட்டாள். அவர் பரவாயில்லை என்கிறார். இளம் வயதில் டாவிடோ உருகி உருகி காதலித்தது பற்றிய கடிதம் அது. தினமும் அவர் காதலுக்காக ஓரிடத்தில் ரகசியமாக கடித்தத்தை ஒளித்து வைப்பதும் அவரின் காதலன் அந்த கடிதத்தை எடுத்துவிடுவதுமாய் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது. அக்காதல் பெயர்தான் சிமோனே...அவன் பெண்ணல்ல ஆண். அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பின்னர் தெரிகிறது. தான் மிகவும் விரும்பிக் காதலிக்கும் சிமோனேவைத் தானே கொல்லும் படியான சூழலில் சிக்கியதால் அத்துயர் தாங்க ஏலாமல் அடிக்கடி நினைவுத் தப்பிவிடும் அத்தகைய நினைவு தப்பிய ஓர் நாளில்தான் பிலிப்போவும் இவளும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். சிமோனையை ஏன் கொன்றார் எனில் டாவிடோ மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற யூதர்களைக் கொல்வதற்கு நாஜிப் படை வருகிறது. சிமோனெ அவர்களிடம் பேசி டாவிடோவை காப்பாற்றிவிடுகிறான். ஆனால் டாவிடோ மற்றவர்களை காப்பாற்றுவதற்காக காதலுடன் கைகலப்பில் அவனை கொல்ல நேர்ந்துவிடுகிறது. தன்னுடைய சிமோனேவைத் தானே கொன்றதை எண்ணி அவன் வாழ்நாள் முழுவதும் அழுது புலம்புகிறான். ஆனால் அன்று இரவு அவன் காப்பாற்றிய பெண்கள், சிறுவர்கள் இன்றும் அவனை நன்றியுடன் எங்கிருந்தாவது நினைத்துக் கொள்வார்கள் என்றும் தெரியும் அவருக்கு.

காலத்தின் ரத்தக் கரை படிந்த பக்கங்களாய் சிலர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. டாவிடோவாக நடித்திருக்கும் மாஸிமோ கிரோட்டி தன்னுடைய அற்புத நடிப்பாற்றலால் மனதை மிகவும் நெகிழச் செய்துவிடுகிறார். க்யோவின் எதிர்காலத்தை பிரகாசமாக்க அவளின் புதிய ஜன்னலைத் திறந்துவிடுகிறார். ஜன்னல் என்பது எல்லார் வீடுகளிலும் இருக்கிறது. எதற்காக திற்க்கிறோம் என்பது தான் முக்கியம். வேடிக்கையும் பார்க்கலாம் ஒரு வாழ்க்கையும் சீரமைத்துக் கொள்ளலாம். டாவிடோவின் வழிகாட்டுதலால் தனக்கான ஜன்னலை இம்முறை சரியாகத் திறக்கிறாள் க்யோவென்னா.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

Dr.Zhivago




டாக்டர் மற்றும் கவிஞர் யூரி ஜிவாகோவின் வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளாய் இத்திரைப்படம் சரித்திரமும் புனைவும் கலந்த சோகக்காவியமாய் காணக் கிடைக்கிறது.


கதைசொல்லி ஜிவாகோவின் சகோதரன், ஜெனரல் யெய்க்ரா ஜிவாகோ. தன் தம்பி ஜிவாகோவிற்கும் அவன் காதலி லாராவிற்கும் பிறந்த பெண் குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறான். உள்ளுணர்வின் தடத்தால் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்திருந்த இளம்பெண்னொருத்தியைப் பார்த்ததும் அவள் தன் தம்பியின் மகளாக இருப்பாளோவென நினைத்து அவளிடம் பல கேள்விகளைக் கேட்கிறான். அனாதையான அப்பெண் அதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்பதாய் அவர் கண் முன் தென்படுகிறாள். நினைவுகள் பின் செல்ல ஜிவாகோவின் வாழ்வில் இடர்பட்ட லாராவையும் முதலாம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களும் ஜிவாகோவின் பொது வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சந்தித்த துயரங்களையும் பெரும் காதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நினைவில் நிறுத்துகிறார்.


ஜிவாகோ (உமர் ஷெரிப்)நர்ஸ் லாரா மீது காதல்வயப்படுகிறான். அவள் ரஷிய பொல்சேவிக் புரட்சிக்காரன் பாஷாவின் மனைவி. லாராவிற்கு செயல்வீரனான தன் கணவனுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம். துயர் மிகுந்த தன் வாழ்விலிருந்து தப்பிப்பதற்கே அவனை மணந்திருந்தாள். தகப்பன் வயதில் இருக்கும் தன் தாயின் காதலன் அவளை அடைய முயன்றபோது அவனிடம் வீழ்ந்தபின் எப்படியோ தப்பித்து தோழனான பாஷாவை மணக்கிறாள். பாஷா புரட்சியாளர்களின் தவிர்க்க முடியாத தலைவன். அவனுக்கு லாராவுடன் பேசுவதற்குக் கூட நேரமிருக்காது. இயக்கம் போர் விடுதலை இவைகளே அவனின் உயிர் மூச்சு. லாராவோ எரியும் நெருப்பாய் தகித்துக் கொண்டிருப்பவள். காதலும் மோகமும் பேராழியாய் பொங்கியிருக்கும் பதுமைப்பெண் அவள். ஜிவாகோவின் மேல் அவளுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் அவன் பேரழகன் மட்டுமல்ல, கவிதைக்காரன்.




ஜிவாகோ தன்னை மிகவும் நேசிக்கும் மனைவி தான்யாவிற்குத் தெரியாமல் லாராவை விரும்புகிறான். உணர்ச்சிகளின் அதீதத்தில் அவள் மீதான பித்தால் நெருக்கமான உறவை வேண்டி நிற்கிறான். முதலில் அவள் தயங்கினாலும் இருவரும் தங்களது துணையை மீறி காதலில் வீழ்கிறார்கள். ஜிவாகோ அன்பிற்கும் காமத்திற்கும் இடையிடையே ஊசலாடி இரு பெண்மைக்கிடையே சிக்கி உண்மை முகம் தொலைந்தவனாய் தவித்தலைகிறான். ஆனால் அவனின் படைப்பாற்றல் லாராவினால்தான் ஊற்றெடுக்கிறது. அவர்களுக்கான உலகில் காதல் மட்டுமே மொழியாகியது, கவிதையே வாழ்வாகியது. நெடிய நிழல் தரும் மரங்களில் மகரந்தப் பூக்கள் பூத்துச் சிரிக்கும் வசந்தகாலம் அவர்களின் காதலைப் பார்த்து ரசித்தது.

ஒரே சீரில் போய்க்கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை தாறுமாறாய் பல பிரச்சனைகள், புறச்சூழல்கள் அரசியல் நிலவரங்கள் என பெரும் புயல் வீசி அமைதியிழக்கச் செய்தது. தீடிர்க் கலவரங்கள், போர்ச் சூழல் என எல்லோரின் இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இச்சூழலில் சொல்லிக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.


லாரா போர்க்கைதிகளுக்கு சேவை செய்ய எங்கோ அனுப்பப்படுகிறாள். சில மாதங்கள் கழித்து ஜிவாகோவும் வலுக்கட்டாயமாக அதே இடத்திற்கு காயம்பட்ட வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவம் செய்ய அழைத்து வரப்படுகிறான். பரிவுடன் எல்லோருக்கும் சேவை செய்கிறார்கள் ஜிவாகோவும் லாராவும். உயிர் போகும் பிரச்சனைகளுக்கு இடையேயும் தன் காதலியை மீண்டும் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறான் ஜிவாகோ. அவளின் பாராமுகம் அவன் மனதை அரித்தெடுக்கிறது. எதற்கு வந்திருக்கிறோமோ அதை மட்டும் செயல்படுத்துவது நலமென்ற காதலியின் கூற்று அவனுக்கு சரியென்று படுகிறது. பசி பட்டினி தொடர் வேலையின் களைப்பினால் மிகவும் மனச் சோர்வுகிறான் ஜிவாகோ. மனைவியையும் குழந்தையையும் பிரிந்த அவன் மனது பெரும் சஞ்சலத்துள்ளாகிறது. துடிப்பும் தவிப்புமாய் கனக்கின்ற இதயத்துடன் நடக்கும் அரசியல் சூதுகளைக் கண்டு கொதுத்துப் போய் செய்வதறியாத கையறு நிலையில் மனம் வெதும்புகிறான். ஒருவழியாய் அவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறான். லாராவின் நிலை என்னவென்பதை அறிந்து கொள்ள இயலாமல் திரும்பியது அவனை பெரும் துயரில் வீழ்த்தியது. ஊர் வந்து சேர்ந்ததும் ஜிவாகோ மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு ரயிலும் குதிரை வண்டியிலும்


நீண்ட தூரம் பயணித்து வெறொரு ஊருக்கு புலம் பெயர்கிறான்.
அது கடும் பனிக்காலம். உறைந்த ஓவியமாய் அவனின் ஒற்றை வீட்டில் நிறைமாத கர்ப்பிணியான மனைவியுடன் பெரும் சிரமத்துடன் வாழ்கிறான். ஆனாலும் அவன் லாராவை மறக்கவில்லை. கவிதைகள் எழுதிக் குவித்து அவளின் நினைவை மறக்க நினைத்தாலும் பனியின் கொடுமையை விட இதயத்தில் நோயாக காதல் அவனைக் கொன்றொழிக்கிறது. பனியடர்ந்த ஒரு மாலைப் பொழுதில் நகரத்திற்கு திசைமறந்து வந்தபோது லாராவைப் பார்த்துவிடுகிறான். அவளைப் பின் தொடர்ந்து அவள் வீட்டை அறிந்து கொள்கிறான். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அவள் சாவியை ஒளித்து வைக்கும் இடத்தை அறிந்து அடுத்த நாள் அவள் வெளியேறியவுடன் வீட்டினுள் சென்று அவளுக்காக காத்திருக்கிறான். அவளின் காதலுக்காக அவன் ஆன்மா ஏங்கித் தவித்துக் கிடக்கிறது. வீட்டினுள் நுழைந்த அவள் ஜிவாகோ அங்கிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். லாராவுடன் இருப்பது தங்கள் மகள் என்பதையறிந்து பெரிதும் மகிழ்கிறான். உறவைப் புதுப்பித்துக் கொள்ள பெரிதும் விழைகிறான். ஆனால் லாரா அவனுடனான கடைசி கூடலுடன் அவ்வுறவை முறித்துக் கொள்கிறாள். வேறு வழியின்றி மனைவியிடமே வந்து சேர்கிறான். இவனுடைய வாழ்வில் குறுக்கிட்ட மற்றொரு பெண்ணைப் பற்றி எவ்வித விஷயமும் அறியாமல் எப்போதும் போல பிரியமாகவே இருக்கிறாள் தான்யா. பனிச்சாலையில் தன் காதலியின் கால்தடங்கள் கிடைக்காமல் சில கவிதைகளையும் நினைவுகளையும் வழித்துணையாக்கி அவனின் வாழ்க்கை தொடர்கிறது....




டேவிட் லீன் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். காட்சியமைப்புகளாகட்டும், திறமையான நட்சத்திரங்களின் தேர்வாகட்டும், கண்ணுக் குளிர்ச்சியான ஒளியைப்பாகட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து செதுக்கியிருக்கிறார். காண்பவர்களை குளிர் பற்றிக் கொள்ளும் அளவிற்கு ரஷ்யாவின் உறைபனிக்காலத்தை அப்படியே காமிராவில் பதிவு செய்திருக்கிறார்கள். காதல், காமம், பிரிவு என்பதற்கேற்ப பேக் ட்ராப் வேனிற்பருவம், வசந்தகாலம், கடும் பனிக்காலம் என கதையை வேறு தளத்திற்கு இழுத்துச் செல்கிறது. இத்திரைப்படத்திற்கு இணையாக கவிதையொன்று மனதில் நிழலாடுகிறது.

“நம் விடைபெறுதல் மெளனமாய் நிகழட்டும்
இசைத் தட்டினை நிறுத்தி விடு
இவ்வுலகில் தனிமைப்படுதல்
அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு.
இந்த நாட்களில் நாம்
பிரிந்து உறங்குவது மட்டுமல்ல
சாவும் நம்மை ஒன்றாய் இணைக்காது
பிரியத்தின் காயத்தினைப் போக்கவும் செய்யாது”
(ஜோசப் பிராட்ஸ்கியின் கவிதை – கவிஞர் பிரம்மராஜன் அறிமுகப்படுத்தும் ’பதினைந்து ஐரோப்பிய நவீனவாதிகள் புத்தகத்திலிருந்து)

டாக்டர் ஜிவாகோ பல ஆஸ்கார் விருதுகளைப் வென்றுள்ளது, அதில் முக்கியமானவை சினிமாடொகிராபி, இசை, ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம். நடிகர்களின் அற்புதமான பங்களிப்பு இத்திரைப்படத்தை வெகுசிறப்பாக்கியிருக்கிறது. உமர் ஷெரீப் ஜிவாகோவின் பாத்திரத்தை உள்வாங்கி வெகு இயல்பாய் அற்புதமாய் நடித்திருக்கிறார்.
காதல் மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் போரின் காயங்களைவிட ஆழமானது, அதிகமானதும்கூட.

சனி, 24 அக்டோபர், 2009

இரண்டு கவிதைகள்



கனவுப் பெண் காதலியான போது

உன் கனவுப் பெண்ணை
நீ செதுக்க ஆரம்பித்தாய்
காலம் காலமாய்
மனதில் தேக்கி வைத்திருந்த
சித்திரத்தை
ஒற்றைக் கல்லில் உயிரூட்டினாய்
வர்ணங்கள் குழைத்து
மேலதிகமாய் எழிலூட்டினாய்
கடவுளென உருவானதை
கண்டு களித்தாய்
அதி உன்னதமாய்
தூய்மையானதாய்
கவனமாய் எல்லா
புனிதங்களையும்
அதன் மீதேற்றி
மெய்யாக்கினாய்
உணர்வெழுச்சியில் ஓர் நாள்
கட்டியணைத்தாய்
உடைந்து சிதறி
காணாமலே போனது
உன் காதல் கடவுள்!


சலித்த முத்தம்

காதல் சொன்ன கணத்தில்
பெருமழையின் ருசியைவிட
முதல் முத்தம் ஈரமாய் இருந்தது
பனிக்காலம் நெடுகிலும்
வார்த்தைகளைவிட உதடுகள்
முத்தங்களையே
உதிர்த்துக் கொண்டிருந்தது
பின்னொரு காதல் பருவத்தில்
இரவின் மெளனத்தை
உடைத்து திறந்து
உயிரை உயிர் உறிஞ்சியது
கொடுங் கோடையின் தகிப்பில்
புறக்கணிப்பின் முட்கள் கீறி
விடைபெற்றன முத்தங்கள்
மரணத்தின் நெடியுடன்
எப்போதாவது வாய்க்கும்
அந்தக் கடைசி முத்தமும்

குமுதம் தீபாவளி இலக்கிய சிறப்பிதழில் சென்ற வாரம் வெளிவந்த கவிதைகள்..

வியாழன், 22 அக்டோபர், 2009

The Lemon Tree




பாலஸ்தீன விதவைப் பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம். இவ்வாறு இருக்கையில் அந்த நாட்டின் முக்கிய குடிமகனான பாதுகாப்பு அமைச்சரும் அவரின் மனைவியும் மிராவும் பக்கத்து வீட்டுக்கு குடியேறுகிறார்கள். தன் அண்டை வீட்டில் பெரிய எலுமிச்சை தோட்டம் இருப்பதை கண்ணுற்ற மிரா அதைப் பார்த்து அதன் அழகில் பரவசப்படுகிறாள், ஆனால் அவள் கணவனோ அடர்ந்த சிறிய காடு போலிருக்கும் அத்தோட்டம் தனக்கு பாதுகாப்பானது அல்ல, எதிரிகள் யாரேனும் மறைந்து தங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்க நேரிடலாம் எனச் சந்தேகம் கொள்கிறான். வீட்டின் கிரகப்பிரவேச தினத்தை குறித்த கையோடு அத்தோட்டத்தை அழிக்கச் சொல்லிவிடுகிறான். தன் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்களை சல்மா கடிந்த போது அவர்கள் அவளை தோட்டத்திலிருந்து வெளியேற சொல்கிறார்கள். மனத் துயருடன் உறக்கம் வராத இரவை எப்படியோ கடக்கிறாள். என்ன ஆனாலும் சரி தன் தோட்டம் அழிக்கப்படக்கூடாது என உறுதியுடன் அவள் போராட்டத் துவங்குகையில் சட்டம் எனும் துப்பாக்கியால் அவள் மென் இதயத்தை துளையிடுகிறார்கள் பாதுகாப்பு அமைச்சரின் வீரர்கள். எலுமிச்சை மரமோ தனி மனித எதிர்ப்புக் குரலோ எதுவாயினும் அது அழிக்கப்படவேண்டியது என்பது அமைச்சரின் நிலைப்பாடு.


சல்மா தனிமையில் வாழ்பவள் அவளுக்கு உதவிகரமாக இருப்பவன் வயதான அவளின் தோட்டக்காரன் ஒருவன் மட்டும்தான். அவனுக்குச் செடிகளுக்கு நீரூற்றத் தெரியுமேயன்றி வலிமையான மனிதர்களை எதிர்க்க திராணியற்றவன். அஞ்சா நெஞ்சுடன் சல்மா பிரபலமான இளம் வழக்கறிஞன் ஜியாத்திடம் தன் பிரச்சனையை சொல்லி உதவக் கோருகிறாள். முதலில் மறுத்த ஜியாத் இவளின் உறுதியைக் கண்டு இளகுகிறான். இருவருக்கும் இடையே மெல்லிய நீரோடையாய் ஒரு நேசம் அரும்புகிறது. சல்மா அவனிலும் வயதில் மூத்த பெண் அதுவும் விதவையாகிவிட்டவள் ஜியாத்தோ இளமையானவன், மனைவியும் இரண்டு வயதுப் பெண் குழந்தையும் வேறு ஊரில் வாழ்கிறார்கள். ஜியாத் சல்மா இடையே முகிழ்ந்த நேசம் சமூக கலாச்சாரக் பாதுகாவலர்களால் வெகு விரைவில் வேர் அறுக்கப்படுகிறது. ஜியாத்துக்கு சல்மா பெரும் ஈர்ப்பாக இருந்தபோதினும் தனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்த சமயத்தில் அவளிடமிருந்து சொல்லாமலே விடைபெறுகிறான். ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கையின் கசப்பை சல்மா வெறுப்பினூடே ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறாள். வேறு வழியில்லை, இங்கு வாழ்க்கை இவ்விதம்தானே?


அமைச்சரின் மனைவி மிராவாக நடித்துள்ள ரோனா லிபாஸ் சிறப்பாக நடித்துள்ளார். தன் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மீது பரிவு ஏற்பட்டு அவள் படும் துயரங்களை தூரத்திலிருந்து பார்த்து மனம் கலங்குகிறாள் மிரா. ஆனால் மிராவின் மீது சல்மாவிற்கு நம்பிக்கை இல்லை. சல்மாவின் பார்வையில் அவள் அதிகார மையத்தின் ஓர் அங்கம். மிரா ஓரிரு சந்தப்பங்களில் அவளிடம் பேச முன் வருகையில் சல்மா எட்டியே நிற்கிறாள். மிரா வீட்டுக் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் சமையல்காரரின் கவனக் குறைவால் எலுமிச்சை பழம் வாங்கப்படவில்லை. வேறு வழியின்றி அவர்கள் பக்கத்துத் தோட்டத்தில் பழத்தை பறிக்கிறார்கள். அதைப் பார்த்த சல்மா தன் தோட்டத்தை அழிக்கச் சொன்னதுடன் அதிலிருந்து திருடுகிறீர்களே என சத்தம் போடுகிறாள். அப்போதும் அவள் வன்முறையாக அனுப்பப்படுகிறாள். நடந்த சம்பவத்திற்கு மிரா அவளிடம் மன்னிப்புக் கேட்க பூட்டியிருந்த கேட் ஏறிக் குதித்து சல்மாவின் வீட்டுக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு வீரன் ஒருவனால் தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறாள். கனத்த மனதுடன் அவள் பத்திரிகை ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் தங்கள் தவறுகளால் அப்பாவிப் பெண்ணொருத்தியின் வேதனையப் பற்றிக் மனம் திறந்து பேசவே அது பரபரப்புச் செய்தியாகிவிடுகிறது. சஞ்சிகையில் தன்னைப் பற்றி தன் மனைவியே அவதூறாகச் சொல்லியிருப்பதை வாசித்த அமைச்சரும் அவர் வட்டாரமும் பெரும் கோபத்துக்குள்ளாகிறார்கள். மனைவியை மிரட்டி தான் சொன்ன கருத்துக்கள் உண்மையில்லை என்று வாபஸ் வாங்க வைக்கிறான். வேறு வழியில்லாமல் மிரா அதற்கு உடன் படுகிறாள். இறுதியில் தன்னுடைய எதிர்ப்பை வீட்டை விட்டு வெளியேறுவதின் மூலம் காட்டுகிறாள். அவளால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை.


ஆண்கள் உருவாக்கும் சட்டங்களில் பெண்கள் எப்படியெல்லாம் கைப்பாவையாகி ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதை அவர்கள் எதிர்க்கும் தருணங்களில் எப்படி அடக்கியாளப்படுகிறார்கள் என்பதையும் சல்மா மற்றும் மிராவின் கதாப்பாத்திரங்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மிராவால் வீட்டை துறக்க முடிந்தது ஆனால் சல்மா போன்ற எளிய பெண்கள் தங்கள் இருத்தலுக்காக வாழ்வியலுக்காக இறுதி வரை போராட வேண்டிய நிர்ப்பந்ததிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.


பாதுகாப்பு அமைச்சராக நடித்திருக்கும் டோரன் டவேரியின் மிகையில்லாத நடிப்பு இயல்பாக கதையோட்டத்துடன் இயைந்து செல்கிறது. சிரித்துக் கொண்டே அவர் அளிக்கும் ஆணைகள், எலுமிச்சை மரத்தை அழிக்கச் சொல்லும்போது அவரின் முகபாவம், அதிகாரத்தினால் தலைக்குள் ஏறியிருக்கும் கர்வம், அகங்காரம், எகத்தாளம் என எப்போதும் முகத்தில் இறுக்கமும் இளக்காரமுமாய் வளைய வரும் அவரின் பாத்திரப்படைப்பு அற்புதமாய் செதுக்கபட்டிருக்கிறது. மேல் கோர்ட்டுத் தீர்ப்பும் சல்மாவுக்கு எதிராக கிடைத்ததும் அவர் நிற்கும் தோரணை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிக்கக் கூடிய காட்சியாகும்.


’தி லெமன் ட்ரீ’யின் ஒளிப்பதிவு வெகு அற்புதம். சல்மாவின் வீடும் அத்தோட்டமும், பாதுகாப்பு அமைச்சரின் வீடும் என உள்புறக் அதிகம் இருக்குமான காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் துல்லிய ஒளிப்பதிவால் மிரட்டியிருக்கிறார் எலுமிச்சை மரம், அதன் அடர்த்தி, எலுமிச்சைப் பழத்தின் வாசனை நமக்குள் படியும் படியான காட்சியமைப்புகளால் காண்பவரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்கு சுவையான எலுமிச்சை பழரசம் தருவதை வழக்கமாக கொண்டிருப்பார் சல்மா. படம் நெடுகிலும் மஞ்சள் ஒளியை எலுமிச்சை பழத்தின் குறியீடாக ஒளிப்பதிவாளர் ரைனர் க்ளஸ்மன் அற்புதமாக படமாக்கம் செய்திருக்கிறார். எடிட்டர் டோவா ஆஷரின் பங்கும் இத்திரைப்படத்தில் குறிப்பிடத் தகுந்தது. பிசிரில்லாத காட்சிகள், சம்பவங்களின் கோர்வையென படம் பார்ப்பவர்களை ஒரு வாழ்க்கையை பார்க்கும்படியாக அற்புதமான இத்திரைக்கதைக்குள் பார்வையாளரை தடையின்றி நுழையச் செய்திருக்கிறார்.

நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை, அடக்குமுறைகளை எலுமிச்சை தோட்டத்தை குறியீடாக வைத்து உணர்த்தியிருப்பார் இயக்குநர். நேரடியாக இப்பிரச்சனை எங்கும் பேசப்படாது ஆனால் படத்தில் அதிகார மையங்களின் கொடுங்கரங்கள் தனிமனித வாழ்வையும் சுதந்திரத்தையும் எப்படியெல்லாம் பறிக்கிறது, அதையும் மீறி அவர்கள் போராடத் துணிந்தால் இறுதியில் தோல்வியே கிடைக்கும் என்பதை அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளார்கள்.

’தி லெமன் ட்ரீ’ சற்றுப் புளிப்பாகவும் காட்டமாகவும் இருக்கிறது ஆனால் மனம் முழுவதும் நீண்ட நேரம் சுவைக்கிறது.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

மூன்று கவிதைகள்



மூன்றாமவன்

மோகத்தின் நாவுகள் நீண்டு
நட்சத்திரம் எரிந்துவீழ்ந்த நள்ளிரவொன்றில்
இளமையின் விளிம்பில் நின்றாள் புனைவுக்காரி
பிணிகளற்ற மூப்பற்ற மரணமற்ற
அழகனைத் தாகித்து!
முதலில் வந்தவன் கடோத்கஜன்
வண்ணமாய் சமைத்துப் படையலிட்டு
வயிறு புடைக்க உணவளித்து
நிலவின் நிழலில் கூந்தல் விரித்த நொடியில்
காடெரிக்கும் பெருமூச்சுடன் .
அவனின் உறக்கக் கதவுகள் திறந்தன...
பின்னவன் யாரெனில் யயாதியின் தந்தை
இரவல் வாங்கிய இளமையில்
நிகழ்த்தப் போவது
உடலுக்கானதா மனதிற்காகவா
எழும்பிய அலையின்
அச்சத்தில் தானாய் மறைந்தான்
ஆண்மைச் செறுக்குடன்
அர்ஜுனனைக் ஒப்பியபின்
’அவ்வளவேதானா’ என்கவும்
கூனிக் குறுகி விலகிச் சென்றான்.
சிரித்தபடி தடாகம் சென்று
தாமரைத் தண்டின் வேர் பிடித்து
குளித்துக் கரை சேர்ந்தாள் சாகசக்காரி!






பின் நிகழ்வுகள்

படிகளின் உச்சியில் நின்று
கீழிருக்கும் எனைப் பார்த்து
பரிகாசப் புன்னகை உதிர்க்கிறாய்
நொடியில் எறிய முடியும்
சீழ்பிடித்த அதிகார மையத்தின்
காறி உமிழும் எச்சங்களை!
உனக்குத் தெரியாது வாழ்வெனும்
மாபெரும் சதுரங்கப் பலகை
சூதாடிச் சென்றுவிடும்
ஆடுகளங்களையும்
ஆட்டக்காரர்களையும்!
சூடான குருதியின்
தினவெடுத்த ஆதிக்கம் எரிந்து
குடுவையின் சாம்பலாய்
உதிர்ந்து கிடக்கும் நேரம்
வரலாறாவது எதிர்வினைகள்
மட்டுமே அல்ல!



இப்படியெல்லாம்

கனவு முடியும்முன்
கண்விழித்து தட்டுப்பட்ட
தாள் எடுத்து மீண்டும்
கனவுக்குட் புகுந்து
கவிதையெழுத நேர்ந்திருக்கிறதா?

ப்ரியங்களை ஒன்றுதிரட்டி
உவப்பான புன்சிரிப்பால்
இட்டு நிரப்பி உலகிற்கெனவும்
வாரி தந்த நினைவிருக்கிறதா?

யாருக்கும் தெரியாமல்
ஓடை மீது பயணம் செய்த
காய்ந்த இலையின் மீதேறிய
சிற்றெறும்பை கண்ணுற்றிருக்கிறாயா?


திசைவெளி பற்றி
இழந்த தினம் பற்றி
பூனைகளின் சகவாசம் பற்றியென
வரிவரியாய் படிமக் கவிதை எழுதியிருக்கிறாயா?

உடைகளை களைந்து
தூர வீசி எறிந்துவிட்டு
உடலுடன் எப்போதாவது
உரையாடல் நிகழ்த்தியிருக்கிறாயா?

ஒன்றையேனும் செய்துப் பாரேன்
வாழ்தலின் ருசி
கணப்பொழுதில் கிடைக்கக் கூடும்!

நன்றி - உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2096