
“நொடியில் எதையும் உதறிவிடும் பரிபூர்ண சுதந்திரத்தை தொலைத்து விட்டேனோ”? கவிஞர் சமயவேல்
தோள்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு மூச்சிரைக்க புறப்படத் தயாரான பஸ்சில் ஏறினேன்.
‘சீக்கிரம் ஏறுங்க வண்டி நேரத்துக்கு போகணும்ல..என்றார் நடத்துனர்.
பயணச் சீட்டை கைப்பையிலிருந்து எடுத்து அவரிடம் தந்தேன். இரண்டாவது வரிசையை காட்டினார். ஜன்னலோர சீட் இல்லை. ஜன்னலோரத்தில் இளம் கன்னியாஸ்திரி ஒருத்தி அமர்ந்திருந்தாள். இன்றைக்கெல்லாம் பார்த்தால் இருபத்தி ஒன்று அல்லது இரண்டு வயதிருக்கும். வெள்ளை முழுக்கை சட்டையும் வெளிர் நீல நிற மேலங்கியும் அணிந்திருந்தாள்.
பையை மேலேற்றிவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். கண்களில் இன்னும் கண்ணீர் மிச்சமிருந்தது. அருகில் அமர்ந்திருக்கும் சிஸ்டர் கவனித்துவிடுவார்களே என்று மிகவும் ப்ரயத்தனப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டேன்.
சிஸ்டர் வாந்தி வர மாதிரி இருக்கு நான் அந்தப் பக்கம் உக்காந்துக்கட்டா என்றதும் அவள் சரியென்று எனக்கு அந்த இருக்கையை விட்டுக் கொடுத்தாள். ஜன்னலுக்கு வெளியே ட்ராபிக்கை தாண்டி, பசுமைக் காட்சிகள் கடந்து பஸ் எனக்குத் தெரியாத வெளியில் விரைந்து கொண்டிருந்தது. இருளில் எதிரில் வந்த வாகனங்களில் ஹெட்லைட் ஒளிர்ந்தது. மெல்லிய அழுகையினூடே பதினைந்து வருடங்களுக்கு முன் என் மனம் பின்னோக்கி நகர்ந்தது.
2.
‘தனசேகர் ஹேர் ஸ்டைல்’ கடையை அடுத்து பவித்ரா மெடிக்கல் ஷாப். அதையும் தாண்டி மெயின் ரோடிலேயே இருக்கிறது திருவின் வீடு. அது நகரத்திலேயே பெரிய டாக்டர் மாதவன் தம்பியின் அவுட் ஹவுஸ். திருவின் அப்பா அம்மா இருவருமே டாக்டரிடம் பணி புரிந்தார்கள். திரு அவர்களுக்கு நாலாவது பிள்ளை, அவனுக்கு மேல் இரண்டு அக்காக்கள், ஒரு அண்ணன், மூத்த அக்காவை வேலூரிலும் இளையவளை கடலூரிலும் கொடுத்திருந்தார்கள். அண்ணன் ஜெயபாலன் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறான். வீட்டுக்கு என்றாவதுதான் வருவான். அந்த சிறிய வீட்டில் எப்படி மூன்று பேர் படுக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவேன். டாக்டரின் வீட்டில் விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும், டீவியின் சத்தம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருப்பது அவுட் ஹவுஸ் வரை கேட்கும். சிறிய வானொலி பெட்டியை திரு தன்னுடைய பொக்கிஷமாக வைத்திருப்பான். நான் வரும் போதெல்லாம் அது என் மடியில் இருக்கும். நாங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டேயிருப்போம் அது பாட்டுக்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்.
திருவின் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைகையிலேயே மரங்களும் வண்ண பூச்செடிகளும் என்னை வரவேற்கும். எனக்கு மிகவும் பிடித்த நாகலிங்க மரத்தடியில் சற்று நேரம் நின்று கொண்டே டாக்டர் வீட்டை பார்ப்பேன். வீட்டின் கீழ்த்தளம் க்ளினிக்காகவும் மேலே வீடாகவும் இருக்கும் அந்த கட்டிட வளாகத்தில் ஆச்சரியத்தக்க வகையில் ஹாஸ்பிடலுக்கே உரிய வாசனை துளி கூட இருக்காது. டாக்டர் சிடுமூஞ்சித்தனத்திற்கு பேர் போனதால் நான் க்ளினிக் பக்கமே போகமாட்டேன். நாகலிங்க மரத்தைத் தாண்டி கொய்யா மரம் கடந்து அசோக மரங்களிடம் கதைத்துவிட்டு, தரையில் விழுந்து கிடந்த பசிய காய்களை எடுத்து பார்த்துவிட்டு, எனக்கு மிகவும் பிடித்தமான செடிகளின் பச்சிலை வாசனையை முகர்ந்து கொண்டே நெடிய பாதாம் மரத்தை தாண்டி, அதன் பக்கத்தில் இருக்கும் சிறு செடிகளையும் புற்களையும் மிதிக்க மனமில்லாமல் மிதித்தவாறே திருவின் வீட்டு வாசலை அடைவேன். எப்படித்தான் தெரிந்துகொள்வானோ அவன் வீட்டில் இருக்கையில் ஒரு முறை கூட நான் அழைத்ததில்லை, கதவை தட்டியதில்லை, நான் வாசலுக்கு வரும் கணமும் அவன் வீட்டினுள் இருந்து என்னை வரவேற்க வெளிவரும் கணமும் ஒன்றாக இருக்கும். நான் வரேன்னு எப்படி உனக்குத் தெரியும் என்று பலமுறை கேட்ட போதும் புன்னகையே அவன் பதிலாக இருக்கும். ப்ளீஸ் சொல்லு என ஒருமுறை மிகவும் வற்புறுத்திக் கேட்கையில் சொன்னான், நீ வர்றதுக்கு முன்னால உன் உருவம் என் மனசுக்குள்ள வந்துடும்..இதோ வரப்போறான்னு உள் மனசுக்கு சொல்லிடும். வெளிய வந்து பாத்தா நீ நிப்பே...இது ஒரு தடவை கூட தப்பினதில்லை ரம்யா என்பான். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
இன்றும் அவ்விதமே நடந்தது. வா ரம்யா என்றான் உற்சாகமாக. பெரிய கட்டங்கள் போட்ட அடர் நீல நிற கைலியும் கை வைத்த உள்பனியனும் அணிந்திருந்தான். ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு தோளில் வட்டமாக பொத்தல் இருந்தது. அதைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்தாலும் கண்கள் அதையே அடிக்கடி பார்த்தது. ஏன் திரு நல்ல பனியனா வாங்கி போட்டுக்கலாம் இல்ல என்று வாய் வரை வந்த கேள்வியை கஷ்டப்பட்டு முழுங்கினேன். திரு காலையில் பேப்பர் போடுவது, பால் போடுவது போன்ற வேலைகளை செய்து கொண்டே படிப்பது எனக்குத் தெரியும்.
திரு எனக்கு அறிமுகமாகியது கடிதம் மூலமாக. என் வகுப்புத் தோழி அமித்தாவின் நண்பன்தான் திரு. அமித்தா கல்லூரிக்கு நான் ஒரு முறை சுஜாதா எழுதிய அனிதாவின் காதல்கள் நாவலை எடுத்து வந்திருந்தேன். அதைப் பார்த்த அமித்தா இதே போன்ற புத்தகங்களை தன் நண்பன் திருவும் வைத்துள்ளான் என்றாள். அதன் பின் அவனிடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறாள். ஒரு முறை அமித்தா வீட்டிற்கு சென்ற போது திரு வந்திருந்தான். புத்தகங்களில் ஆரம்பித்து வர்ணங்கள் வரை எங்களின் ரசனைகள் ஈடுபாடுகள் ஒத்திருந்தது. செம்புலப் பெயல் நீர் போல இனிய நட்பினராய் அன்றே உள்ளம் கலந்தோம். அதன் பின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவனை சந்திக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். நான் கல்லூரியில் எக்கானாமிக்ஸ் முதலாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அவன் அஞ்சல் வழிக் கல்வியில் எம் ஏ ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்தான்.
என் சிந்தனையை கலைத்தது அவன் குரல்.
ரம்மி உனக்குத் தெரியுமா எங்க வீட்டுல புதுசா ஒருத்தங்க வந்திருக்காங்க என்றான்.
ஊர்லேர்ந்து அக்காவா என்றேன் ஆவலாக. அந்த அக்காவுக்கு நானென்றால் அவ்வளவு இஷ்டம் என்று திரு அடிக்கடி சொல்வான்.
புதுசான்னு சொன்னேண்டி, ஸ்பீக்கர் அவுட்டா என்றான்
சிலசமயம் திரு என்னை வாடி போடி என்று கூப்பிடுவது அழகு. வேறு யாராவது அப்படி சொல்லியிருந்தால் நான் பத்ரகாளியாகிவிடுவேன்.
அங்க பாரு அதுவே வருது என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தாவியோடி வந்தது அது.
ஹேய் எப்படி இது...எங்கேர்ந்து கொண்டு வந்தே ரொம்ப அழகா இருக்குல்ல என்று சந்தோஷத்தில் குதித்தேன்.
ஆமா ரொம்ப அழகு, இதுக்கு பேரு என்ன தெரியுமா? என்று அதன் காதைப் பிடித்து தூக்கினான்.
திரு பாவம் அதுக்கு வலிக்கும் இரக்கமேயில்லையா உனக்கு காதைப் பிடிச்சிருக்கியே என்றேன்
லூசு முயலை இப்படித்தான் தூக்கணும். புரியுதா. இதோட பேர் என்னென்னு சொல்லு பார்ப்போம்.
வெள்ளை வெளேர் என்று இருந்த அது திரு திருவென்று விழித்தது.
ரோஸியா என்றேன்
இல்லை...
ஸ்நோ வொய்ட்டா என்றேன்
இல்லைடி என்றான்
நீயே சொல்லித்தொலை...என் கிட்ட கொடு நான் தூக்கிக்கறேன். என்றபடி அவனிடமிருந்து அதை வாங்கி பிடிக்கத் தெரியாமல் பிடிக்கவே குதித்தோடிவிட்டது.
அதோடு பேரு ரம்யா என்றான் திரு.
என்னது என் பேரா.. என்றேன் ஆச்சரியத்துடன்.
ஆமா...என்றான்.
ஏன் திரு என் பேரை வச்சிருக்கே..
நீ எவ்வளவு மென்மையானவ அது போலத்தான் அதுவும்...என்றான்.
அதன் பின் அவன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். வழமை போலவே அவன் அம்மா எனக்கு டீ கொண்டு வந்து தந்தார்கள். எதுவும் என் மனதில் பதியவில்லை. அவன் அன்பில் உறைந்துபோயிருந்தேன். வீட்டுக்கு போகும் வழி நெடுக அவனின் குரலும் என் மீதிருந்த ஆழமான ப்ரியத்தையும் நினைத்து நெகிழ்ந்தேன். அவனுக்கு என் மீது காதலோ எனச் சில சமயம் சந்தேகம் ஏற்பட்டு ஒரு முறை கேட்டே விட்டேன். பதில் சொல்லாமல் மழுப்பி விட்டான். என்னை எறும்பு கடித்தால் கூட தாங்க ஏலாத அன்பின் உருவமாய் திரு இருந்தான்.
திருவைப் பார்க்க வருகையில் காரில் வருவதைப் தவிர்ப்பேன். பஸ் அல்லது ஆட்டோவில் தான் வருவேன். திரும்பிப் போகும்போது கட்டாயம் பஸ்தான். பஸ் ஸ்டாப் வரை பேசிக்கொண்டே நடப்போம். இரண்டு மூன்று பஸ்களை வேண்டுமென்றே ஏறாமல் தவிர்ப்பேன். நேரமாகுது ரம்யா அடுத்த பஸ்ல ஏறிடு என்று செல்லமாக அவன் கடிந்து கொள்வான் அதன் பின்னரே அடுத்த பஸ்ஸில் ஏறுவேன். சில சமயம் லேட்டாகிவிட்டால் பஸ்ஸின் பின் சைக்கிளில் வருவான். என் நிறுத்தம் வந்து நான் வீட்டிற்குள் செல்லும் வரை அவன் சைக்கிள் என்னை பின் தொடரும். எனக்குள் சிரித்துக் கொள்வேன்.
ஒரு முறை அவன் அம்மாவிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று தந்த போது வாங்க மறுத்துவிட்டார். தம்பி திட்டும்மா வேணாம் என்றார். அவன் மேல இவ்வளவு பிரியமா இருக்கியே அவனை கட்டிக்கப் போறியா என்று வெளிப்படையாக கேட்டார். நான் ஆமாம் என்றேன். அவர் முகம் மலர்ந்து ‘நினைச்சேன், நீங்க ரெண்டு பேரும் பேசிக்க சொல்லியே இப்படித்தான் இருக்குமின்னு, நல்லா இருந்தா சரி உங்க வூட்டுல ஒத்துப்பாங்களா, நீங்க பணக்கார வூட்டு பொண்ணு, திரு இன்னும் வேலைக்கே போவலை, நீ பெரிய படிப்பு படிச்சுகிட்டிருக்கியாம், ரொம்ப அறிவாளி நீயின்னு திருநாவு உன்னைப் பத்தி பெருமையா பேசும். இதெல்லாம் சரியா வருமா நல்ல ரோசனை பண்ணிக்க, சரிப்படாதுன்னு தோணிச்சுன்னா விட்டுடு, என்னிய தப்பா நினைச்சிக்காதேம்மா என்றார். என்னால் அவனை இனி மறக்க முடியாது எனும் நிலைக்கு எப்போதோ நான் வந்திருந்தேன்.
நான் மேற்படிப்பிற்காக லண்டன் கிளம்பிக்கொண்டிருந்தேன். போகவே கூடாது என்று அடம்பிடித்தான் திரு. பேசிப் பேசி என்னை கரைத்து என்னை அவன் மீது மேலும் மேலும் பித்தாகச் செய்தான். காதலுக்காக எவ்வளவு பேர் உயிரை விடுகிறார்கள், நான் திருவின் மீதான காதலின் காரணத்தால் படிப்பை விட்டேன். இப்படியே காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம், வாழ்வில் எவ்வித சிக்கலும் இருந்திருக்காது என்று நினைத்திருந்த வேளையில் என் வீட்டில் விஷயம் தெரிந்து பூகம்பம் வெடித்தது. சத்யாகிரகம் இருந்து திருவிற்கும் எனக்கும் இடையே இருக்கும் அன்பின் நெருக்கத்தை புரிய வைத்து, இறுதியில் என் பிடிவாதமே வென்றது. திருவின் திருமதி ஆனேன்.
3
யோசித்து களைத்து போனேன். என் முகத்தைப் பார்த்த சிஸ்டருக்கு என்ன புரிந்ததோ மென்மையாக புன்னகைத்தாள். அவள் கண்களின் தீர்க்கமான ஒளி. முகத்தில் அளவில்லாத சாந்தம். நீண்ட வெள்ளிச் சங்கிலியில் கோர்த்திருந்த சிலுவை அணிந்திருந்தாள்.
கோயமுத்தூருக்கா என்றேன்.
ஆமாம் என்றாள்.
என் பேரு ரம்யா என்றேன்.
லீனா பாலொஸ் என்றாள் மென்மையாக.
மனதில் ஆறாத ரணமொன்றின் வலி விழி வழியே அவ்வப்போது ததும்பிக் கொண்டிருப்பதை கைக்குட்டையில் லீனா சிஸ்டர் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டிருந்தேன். அதையும் மீறி அவள் கவனித்து விட்டாள்.
‘ரம்யா, பஸ்ல ஏறினதிலேர்ந்து கவனிச்சுட்டு வரேன், உங்க மனசுல எதாவது வருத்தமா. எதுவா வேணா இருக்கட்டும், கர்த்தர் உங்களை காப்பாற்றுவார். நீங்க எல்லா கவலையையும் கடவுள்கிட்ட ஒப்படைச்சிடுங்க. உங்களுக்காக நான் பிரார்த்தனை பண்றேன். ப்ளீஸ் காம் டவுன்’ என்றாள் பரிவாக.
எதாவது ஒரு ஆறுதல் கரம் கிடைத்தால் பற்றிக் கொள்ளும் மன நிலையில் இருந்த நான் இனி மறைப்பது தேவையில்லை என்று மனத்துயரையெல்லாம் பெருமூச்சாக்கினேன்.
‘சொல்லுங்க ரம்யா என்னை நீங்க நம்பலாம். வெளிய சொன்னா துக்கம் குறையும், மனசுக்குள்ள வச்சு மறுகிட்டு இருக்காதீங்க. கம் அவுட்’.
முன்பு எப்போதும் அவளை சந்தித்திருக்கா விட்டாலும் கனிவே உருவான அப்பெண்ணின் அன்பின் மொழியில் கரைந்துவிட்டேன். வாழ்க்கை அவ்வப்போது நம்பிக்கையின் நிழலை நம் முன் காட்டத்தான் செய்கிறது. அது போன்ற ஒன்றுதான் இது என நினைத்தவாறே சொன்னேன்
‘நேத்து ராத்திரி என் வீட்டுக்காரர் என்னை அடிச்சிட்டார். இதோ பாருங்க இந்தப் பக்க கன்னத்துல இன்னும் வீக்கம் இருக்கு. என்னை இந்த முப்பது வயசுல யாரும் கைநீட்டி அடிச்சதில்லை. நேத்து வழக்கம் போல பிரச்சனை, பேச்சு தடிச்சு சண்டையா மாறி என்னை ரொம்ப அடிச்சிட்டார். நான் அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு சரியாகறதுக்கே ரொம்ப நேரம் ஆச்சு. காலைல எதுவும் சாப்பிடலை அவர் எதுவும் பேசலை, எக்கேடு கெட்டு ஒழிஞ்சாலும் சரின்னு அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தாரு அதான் நான் சொல்லாம கிளம்பிட்டேன். ஆனா அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னை சுத்தி சுத்தி வருது. என்னால் மறக்கவே முடியாத அளவுக்கு மனசையும் உடம்பையும் காயப்படுத்திட்டார். இனி எதுக்காக இவரோட வாழணும்ங்கற அளவுக்கு வெறுத்து போயிட்டேன்.அதான் கால் போன போக்கில கிளம்பிட்டேன்’.
‘ஓ காட்..ஸாரி ரம்யா. உங்களோட வேதனை எனக்கு புரியுது. ஆனா வீட்டுல சொல்லாம இப்படி கிளம்பி வந்தீட்டீங்களே, தேடுவாங்க இல்ல...’
‘நல்லா தேடட்டும். கொஞ்சமாவது பதறுட்டும் சிஸ்டர், என்னோட வலி என்னன்னு அவருக்கு புரியணும். கொஞ்சமாவா அழுதிருக்கேன். ஓவியமா வளர்த்தாங்க எங்க வீட்டுல..எனக்கு என்ன குழந்தை ஆசை இல்லாமலா இருக்கு? இதை வச்சே என் மாமியாரும் புருஷனும் அவமதிக்கறாங்க. அப்பப்போ சண்டை முத்தி போய் அடிக்கற அளவுக்கு ஆயிடுது. இனி அங்கே இருந்து என்ன ஆகப்போகுது. அடியும் உதையும் வாங்க எனக்கு தலையெழுத்தா? இத்தனைக்கும் நாங்க காதலிச்சு கல்யாணம் பன்ணிக்கிட்டோம். எங்கப்பா நல்ல வசதியானவர், இவருக்கு ஒரு பிஸினெஸ் வச்சு கொடுத்து முன்னேத்தி விட்டாரு, இவரும் முதல் ரெண்டு வருஷம் ப்ரியமா தான் இருந்தாரு...யாரு எப்ப எப்படி மாறுவாங்கன்னுதான் தெரியாதே...நான் வாழ்க்கையில ரொம்ப ஏமாந்துட்டேன் சிஸ்டர் சலிப்பும் வெறுப்புமா இருக்கு, என்ன செய்ய? என் அப்பா அம்மாகிட்ட போய் பல தடவை அழுதுட்டேன். நீயே தேடிக்கிட்டதுதானேன்னு அவங்களும் அழறாங்க. ஒரே துயரமா இருக்கு, அதான் எங்கேயாவது கண்காணாத தூரமா போய்டலாமுன்னு இந்த பஸ்ல ஏறிட்டேன். மூச்சு விடாமல் பேசியதில் படபடப்பு அதிகமாகியது.
சிஸ்டர் லீனா தன் பெரிய துணிப்பையிலிருந்து வாட்டர் பாட்டிலை திறந்து என்னிடம் நீட்டினாள்.
‘இதப் பாருங்க ரம்யா. யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. பதினைஞ்சு வயசுல எனக்கு ஏற்பட்ட மனக்கசப்புல வாழ்க்கையே வெறுத்துட்டேன். ஆனா அதுக்குன்னு நான் அப்படியே இருந்துடலே. எனக்கு எது தேவைன்னு தீவிரமா யோசிச்சப்போ நிம்மதிதான் தேவையின்னு தோணுச்சு, அதான் கர்த்தரின் ஆணையால் இந்த தூய வாழ்க்கையை மனசார தேர்ந்தெடுத்துக்கிட்டேன். இன்னும் ரெண்டு வருஷ பயிற்சி, அதுக்கப்பறம் நான் முழுமையான கன்னியாஸ்திரியாகிடுவேன். மன உறுதியும் இறை நம்பிக்கையும் எப்பவும் யாரையும் கைவிடாது. கர்த்தரின் பெயரால் ஸ்தோத்திரம் என்று எனக்காக அவள் ப்ரார்த்தனை செய்தாள். என்னிடம் அடுத்த பஸ்சில் வீட்டுக்குத் திரும்பிப் போகுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் பிறவியிலேயே என்னுடன் உருவாகியிருந்த வீம்பும் பிடிவாதமும் கோயமுத்தூரின் தியான மையம் ஒன்றினை நோக்கி என்னை செலுத்தியது. என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை. யார் அழைத்திருந்தாலும் அழைக்காவிட்டாலும் எனக்கு இனி கவலையில்லை என்னும் மனநிலையில் இருந்தேன்.
4.
த்யானா எனும் பெயருடைய அந்த தியான மையம் என் மனதை கொஞ்சம் சமன் படுத்தியது. சிறு வயதில் சூரிய நமஸ்காரமும் ப்ராணாயாமும் செய்து பழகியவளாததால் அங்கு என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. மூன்று நாள்கள் அங்கே அறை எடுத்து தங்கிவிட்டேன். வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும், காலாற நடப்பதும், பக்கத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு செல்வதுமாய் என்னுடைய பொழுதுகள் ஏற்கனவே கட்டமைத்தது போன்ற ஒழுங்குடன் சென்றது.
அலைபேசியை சார்ஜ் செய்தபோது 109 மிஸ்ட் கால்கள் இருந்தன. அதில் 102 கால்கல் திருவுடையது. இரண்டு என் அப்பாவிடமிருந்து, ஐந்து கால்கள் தோழியிடமிருந்து. பரவாயில்லை என்னையும் தேடியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இனி எனக்கென்ன தேவை என தீர்மானிக்க இயலாத வெறுமையின் யோசனையில் மேலும் இரண்டு நாள்கள் கழிந்தது.
வீடு தன் மாயக்குரலால் மெல்ல என்னை வா வா வென அழைக்க ஆரம்பித்தது. பக்கத்து வீட்டுக் குழந்தை கோகுலுக்கு நான் இல்லையென்றால் சோறு தண்ணி இறங்காது. ரம்மிமா என்ற அவன் மழலைக் குரல் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. என் வயிற்றை மெல்ல தொட்டுப் பார்த்தேன். இப்போதெல்லாம் கனவில் கூட எனக்கான குழந்தை அழுவதோ சிரிப்பதோ இல்லை. அது எனக்கில்லை என்றபின் ஏன் அதை தேடி மனம் சோர்ந்து போக வேண்டும். இந்த தெளிவு எனக்கேற்பட்டாலும் திருவிற்கும் அத்தைக்கும் கனவுகள் என்பது முடிவற்றிருந்தது. மருத்துவமனைகளின் படிகளில் ஏறி ஏறி ஏமாற்றமடைவது என்பது எத்தகைய மன வேதனையை அளிக்குமென்று அவர்கள் அறியாமல் என்னை வற்புறுத்திக்கொண்டேயிருப்பார்கள். இனி யாரிடம் அவர்கள் தங்களின் அதிகாரத்தை காட்டப்போகிறார்கள். திருவும் வேறு கல்யாணத்திற்கு கூட தயாராகவே இருந்தார் என நினைக்கத் தோன்றுகிறது. நிலையற்ற வாழ்வில் நிலைத்திருப்பதென்பது எதுவுமில்லை, அன்பு கூட அலுத்துப் போகுமா திருவிற்கு, எப்படியெல்லாம் அன்பு செய்தான் இரு காலத்தில், நினைக்கையில் சிரிப்புதான் மிஞ்சியது.
தியானாவில் பள்ளியொன்றை துவக்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு ஆசிரியைக்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்தேன். குடும்ப விவரங்கள் என்ற பகுதிக்கு எதிரே யாருமில்லை என்று எழுதினேன். மேலே பார்த்தேன் ஆகாயம் வெளிர் நீலத்தில் இருந்தது. சிஸ்டர் லீனாவின் புன்னகை முகம் அதில் தோன்றி மறைந்தது.










