Saturday, July 11, 2009

உடைந்த கப்பலொன்றும் உதிரி நட்சத்திரமும்

உடைந்த கப்பலொன்றும் உதிரி நட்சத்திரமும்

இனி ஒரு போதும் நாம் சந்திக்க வேண்டாம், இதுவே நான் உனக்கு அனுப்பும் கடைசி குறுஞ்செய்தி..எல்லாவற்றையும் மற...என்னையும்தான். இது உனக்கு நடந்திருக்கக் கூடாதுதான். மன்னித்துவிடு.

எத்தனை முறை வாசித்துப் பார்த்தும் அந்த மெசேஜ் இப்படித்தானிருந்தது. ஏன் இப்படி அனுப்பினான். கத்தியின் கூர்முனையாய் இக்கேள்வி மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது. மொபைலை ஆஃப் செய்திருந்தான், தங்களுக்குள்ளான உறவையும் கூட. செயலற்றுப் போய் கடந்து போன கணங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. இது அவளுக்குப் புதிதல்ல...ஆனாலும் இந்தத் தொழிலுக்கு வந்த ஐந்தாண்டுகளில் மிகவும் நெருங்கிப் பழ்கியவன் அவன். அவனுக்குத் தேவையாக இருந்தது உடல் மட்டுமன்று, கொஞ்சம் ஸ்நேகமும் நிறைய புன்னகையும்.

கார்த்திக்தான் ரிஷியை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தி இப்போது கையில் கிடைத்தால் நித்யா அவனை கொன்றே போட்டிருப்பாள். ரிஷு மீதான ஈர்ப்பும் காதலும் அவளுக்கேற்படாமல் போயிருக்கும்.

வாசலில் அழைப்பு மணியின் சத்தம் பொறுமையின்றி வீறிட்டுக் கொண்டிருந்தது. கார்த்திதான். அவர்கள் இருவரும் ஒரே கூரையின் கீழ் ஆறு வருடங்களாய் அறையை மட்டும் பகிர்ந்து கொள்பவர்களாய் இருந்தார்கள். கார்த்தியைப் பார்க்க பிம்ப் மாதிரியே இருக்காது. பார்க் அவென்யூ ஷர்டில் ஏதோ விளம்பர கம்பெனி அதிகாரி போலிருப்பான். வாயைத் திறந்தால்தான் அவனுடைய விதயம் வெளியே வரும். பான் பராக், சிகரெட், கஞ்சா என்று எது எப்போது கிடைக்கிறதோ அதை மென்றுகொண்டேயிருப்பான். பங்களூரின் அடர்குளிர் இரவில் நண்பன் கொடுத்த செல்பேசியில் நித்யாவை தொடர்புகொண்டு அதன் பின் வாடிக்கையான கஸ்டமராகி கடைசியில் அவளுக்கே நிரந்தரமான ப்ரோக்கராகிவிட்டான். இருவருக்கும் பங்களூரு அலுத்துவிட்டதால் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

மற்றவர் பார்வைக்கு கணவன் மனைவி போல வாழ்ந்தாலும் அவர்களுக்குள் ப்ரியமான நட்பேதும் இல்லை. முன்பு அடிக்கடி ஏற்படும் சமர் எல்லாம் முடிந்து நீர்த்து வார்த்தைகளுக்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டு வீழ்ந்து கிடக்கிறது. புரிதலினால் வந்த சமாதானம் இல்லை அது, விடை தெரியாத முடிவு காண இயலாத யுத்தத்தின் தற்கால நிறுத்தமது. இதை அவர்கள் இருவரும் அறிந்தேயிருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷமாய் அந்த துவந்தம் துவங்கலாம். ஆனால் வேறு வழியில்லாததால் ஒருவரை மற்றவர் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

கார்த்தியினுடைய சகிப்புத்தன்மையை நித்யா ரசிப்பாள். அவளுடைய பிடாரித்தனத்தை அவன் ஏற்றுக்கொண்டான். ஏனோ எளிதில் விலக்கிமுடியாத குளுமை அவன் கரங்களுள் இருப்பதாக அவள் உணர்வதால் இவ்உறவு இதுவரை தொடர்கிறது.

நேராக டைனிங் டேபிளுக்குப் போய் ஹாட் பேக்கில் வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவை எடுத்துச் சாப்பிட்டான். நித்யாவின் கோலத்தைப் பார்த்ததும் ஏதோ மூட் அவுட் எனத் தெரிந்து ஏதும் பேசாமல் இருந்தது அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது. சமூகம் வேசை என பதித்திருக்கும் விதிகள் எல்லாம் தங்கள் இருப்பை நிரூபிக்க பல முறை அவளுக்கெதிராய் திரண்டது. முகத்தில் அறைந்தது, முட்டி மோதி, ரத்தமும் சதையுமாய் கிழித்தெடுத்து தன் கோரப் பற்களால் மென்று துப்பி பிறகு அவளை கொன்றொழித்துவிட்டதாய் இறுமாந்திருந்தது. முன் எப்போதுமில்லாத புது தெம்புடனும் தெளிவுடனும் அவள் உயிர்த்தெழுந்து கொண்டேயிருப்பதைப் பார்த்து அதிர்ந்து செய்வதறியாது திகைந்து தற்போதைக்கு பின்னடைந்து கிடக்கிறது. அது தன் கத்தியை கூர் தீட்டிக் கொண்டிருக்கும் வரையிலாவது தன் இருப்பின் சுவாசதங்கள் அவளுக்குறுதி.

பதின்ம வயதில் அனாதையான பின் வீட்டு வேலைகள் செய்த இடங்களில் எல்லாம் ஆண்களால், வயதாளிகளால் கைவைக்கப்பட்டு எப்படியோ தப்பித்து பின் வேறு வழியில்லாததால் இத்தொழிலிலேயே முழ்கியவள் அவள். மீண்டெழ முயற்சிகூட செய்வதில்லை.

தன்னை விற்றே தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய வாழ்க்கையில் செய்துகொண்டிருப்பதற்கு யாரின் அனுமதிகள் அவளுக்குத் தேவையிருக்கவிலலை. தனக்கிதுதான் தொழில் என முடிவெடுத்தப்பின் அவள் பெரிதாக வருந்துவதுகூட இல்லை.

சோபாவில் நகத்தை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளைக் கடந்து கார்த்தி அவன் அறைக்குச் சென்றான். மெதுவாக கதவை சாத்தினான். அவனாவது நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்தாள்.

அறையில் அவளைத் தவிர அவளின் இந்தத் தனிமையைத் தவிர யாருமில்லை. கார்த்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமை என்பது கொடும் நிழலைப் போல எப்போதும் அவளுனுடனே இருந்துவருகிறது. இந்த ரிஷி நேற்றிரவு கூட நன்றாகத்தானே தன்னிடம் கதைத்துக் கொண்டிருந்தான், அதே காதலுடன், அதீதக் காமத்துடனும். எப்படியெல்லாம் குழைந்தான்..

நித்து, என்னமோ தெரியலைடா ...இன்னைக்கு உன்னை மட்டும் நினைச்சுட்டேயிருக்கேன்...I miss you dear. :(

ம்ம்..நானும்தான்

எத்தனை பேரை பாத்திருப்பேன், யாரோட அன்பும் என்னை இந்தளவுக்கு பாதிச்சதில்லைடா...நீ என்னோட உயிரோட வேர் வரைக்கும் போயிட்டேடி. ஹனி..பேசாம என்னைக் கட்டிக்கோ. இந்த கண்றாவியை எல்லாம் விட்டுடு. உன்ன நான் ராணி மாதிரி பாத்துக்கறேன்.

என்னாச்சு ரிஷி தண்ணியா? இந்த டயலாக்கை எத்தனை முறை எவ்வளவு வகையா கேட்டிருப்பேன்னு உனக்குத் தெரியுமா

ஆரம்பிச்சிட்டியா, சரி ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதியிருக்கேன் வாசிக்கட்டா? அவன் குரல் சன்னமாக ஒலித்தது

கவிதை வேற எழுத ஆரம்பிச்சுட்டியா, சொல்லித் தொலை

எப்போதும் பெய்கின்ற மழையை விட

இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக

நாம் காத்திருப்பதில்லையா?

உன்னை என்னிலிருந்து

பிரித்துபார்க்க முடியவில்லையடி சகியே

இரவும் பகலுமாய் மிருகத்தையொத்த

ஓர் உணர்வு என்னை விரட்டுகிறது

அது என்னை தின்று தீர்ப்பதற்குள்

சொல்லடி நீ யார் எனக்கு?

ஹேய் நிஜமா நீதான் எழுதினியா இல்ல எங்கிருந்தாவது உருவினியா?

....

சரி கோச்சுக்காதேடா தங்கம். ரொம்ப நல்லாயிருக்கு...இதுக்கு உனக்கு உடனே ஒரு பரிசு தரணுமே..

எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும்தானே?

என்னடா

நீதான்....

அவள் பதில் சொல்வதற்குள் ஃபோனை கட் பண்ணிவிட்டான். ஆனால் அதற்குள் காலையில் பிரிவைப் பற்றிய செய்தி. இடையில் என்ன நடந்திருக்கும்?

கார்த்திக்கு அவர்கள் கல்யாணம் செய்துகொண்டுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனாலும் கண்டும் காணாமல் விட்டுவிட்டான். எப்படியாவது அவளுடைய காயங்கள் ஆறி மற்றவர்களைப் போல சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்துவிட்டான். தன் சந்தோஷத்தை தானே தொலைத்தவள் என்று அவளைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறான் ஆனால் அது அப்படியில்லை. அவளுக்கது நிலைப்பதில்லை அவ்வளவே. இன்பம் தேடும் பயணத்தில் சில சமயம் அவள் அலுத்துக் களைப்பதுண்டு. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது பல சமயம் அவளுக்கும் வாய்த்திருக்கிறது. நித்யாவிற்கு யாரின்மீது எதன் பொருட்டும் பொறாமையுணர்வோ அச்சமோ தேவையற்ற விவாதங்களோ அலுப்பூட்டும் எதிர்ப்பார்ப்புக்களோ இல்லை. வெகு சீக்கிரத்தில் அவளுக்கான மனிதர்களை தேடி சோர்வடைந்துவிட்டாள், பாசாங்கு செய்யத் தெரியாதவர்களாக. அன்பென்ற வலையில் சிக்க வைக்காதவர்களாக இருக்க வேண்டும் அப்படி யாரேனும் இருப்பார்களா என்ற இடையறாத தேடல் அவளைப் பித்தேறச் செய்தது. கடந்து போகும் முகங்கள் யாவிலும் அதைக் காணும் கணத்தை எதிர்நோக்கியேயிருந்தாள். வேட்டையில் கிடைக்கத்தான் செய்கிறது சில சமயம் முத்துக்களும் சில சமயம் சிப்பிகளும்.

ரிஷி அப்படியான நல்முத்து. தன் காதலால் மட்டுமல்லாது காமத்தாலும் திளைக்கச் செய்தவன். அவன் அவளுக்கானவன். அவளைப் போல மற்றுமொருவன். இறகு போல இலகுவானவன். எவ்விதமான கோட்பாடுகளுக்குள்ளும் தன்னை ஒளித்து வைக்காதவன். நித்யாவின் மனதில் படிமமாய் படிந்துவிட்ட ஆண் பிம்பத்தின் ஒரு துளியாய் அவனிருந்ததில் முதலில் ஆச்சரியமும் பின் ஆனந்தமும் அடைந்தாள். புது வெள்ளம் பாய்ந்த நதியாக மாறி அவன் இருப்பிடத்தை நிறைத்தாள். அவனுள்ளும் புறமுமாய் அவனின்றி வேறேதுமில்லையெனும் நிலையில் இரவு பகல் பாராது பேசியும் ஊர்சுற்றியும் பிணைந்தும் மயக்கமாயும் மயக்கம் தெளிந்த நிலையிலும், மென்மைமாயும் அதிவேகமாயும் நிலவொளியிலும் சுடும் வெயிலிலும், மென் குளிரிலும் காலத்தை உறையச் செய்யும் மந்திரத்தன்மையிலும் சுவாசம் சீர்பட்ட நிலையிலுமாய் நாள்களை துளைத்து நகர்ந்து கொண்டிருந்த உயித்தன்மையாய் அவர்களிருந்தார்கள். உடலின் விழைவு இரண்டே தான், அது மரணத்திற்கான காத்திருப்பும், அதற்கு முன் இயன்ற வரை திகட்டும் வரை அதற்கு தேவையானவற்றை அளித்து சுகித்திருப்பதும்தான். தீரா பசியுடன் மரணம் அனைவரையும் தழுவதற்கு முன்னர் உடல் செய்யும் கூத்துக்களுக்கு செவி மடுத்து சரண் அடைந்து அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இவ்வாழ்வின் பெரும் சவால். இடையில் நடக்கும் விதயங்கள் யாவும் நாடங்கள். இல்யூஷன்ஸ். நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் எதற்கென்றால் படுப்பதற்காகத்தான். படுத்தால்மட்டுமே மீண்டும் நிற்கவும் நடக்கவும் இயலும். உடலின் மாறா தேவை இன்னொரு உடல். அதுதான் அவள் தன் வாழிவில் கண்டடைந்த உண்மை.

உடலுக்கு காமத்தைவிட இனியது ஏதுமில்லை, அதை விட கொடியதும் ஏதுமில்லை..திகட்ட திகட்ட அதை கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது அது மீண்டும் மீண்டும் ரிஷியுனுடைய அன்பினாலும் காதலாலும் அவளை நெருக்கிக் கொண்டிருக்கிறது. வேண்டாம் இதுவே கடைசி, இன்றுடன் போதும் என்று ஒரு போதும் அவர்களால் நிறுத்திக் கொள்வவே முடியவில்லை. பாண்டிச்சேரி, கொடைக்கானல், ஊட்டி, தேக்கடி என்று காதல் காமத்திலேறி நகரம் நகரமாய் மிதந்து போனதன்றி நிற்பதாயில்லை இவ்வேட்கை. ஒவ்வொரு முறையும் அது தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதனுடனான சமர் ஒருபோதும் சலிப்பதில்லை. மாறாய் வேட்கை அதிகரித்து உடலின் உச்சமாய் அதீதமாய் விண்வெளியில் மிதக்கும் கலமாய் மாயம் செய்து உயிரை வெளியேறியும் பின் மீண்டு உள்ளிருக்கவும் செய்கிறது. அதன் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட கடலாய் அவனும் கலனாய் அவளும் மூழ்கித் கொண்டிருந்தார்கள். அவன் அவளுக்காக வாரியிறைத்த பணத்தைவிடவும் அவனுடை சுண்டுவிரலைக் கோர்த்தபடி நடக்கும் தருணங்களை சந்தோஷமாக நினைவு கூர்ந்தாள்.

நிறைய யோசித்துப் பார்ப்பது புத்தி, அதற்கு கணக்குகள் உண்டு, பயங்கள் உண்டு....யோசிக்காத மென்மனதிற்கு தென்படுவது காதல் மட்டுமே. அவனிடம் அவளுக்குத் தேவைப்பட்டது முழுமையான அவன்...உடலினால் சேருவது மட்டுமல்ல அவளுடைய விருப்பஙகள். தலை கோதி, விரல் பிடித்து, மடியில் கிடத்தி தன் அன்பிற்குரியவனை எப்படியெல்லாம் அள்ளி ஆராதிக்க முடியுமோ ஆராதித்திருந்தாள். அவனும் தன் போர்வையில் எப்போதிருக்கும் கதகதப்பை அவளுக்கு தடையில்லாமல் தந்தவண்ணம்தானிருந்தான். எல்லாயிடத்திலும் சுதந்திரத்தையும் காற்றை தடைசெய்யாத அற்புத காதலனாய் அவனிருந்தான். இடையில் திடீரென்று என்ன நடந்திருக்கும். ஏன் விலகிப் போகிறான்? எல்லாம் முடிவிற்கு வரும் விதயங்கள்தானா இவ்வாழ்வில்? என்று குழம்பித் தவித்தாள் நித்யா.

இவை எல்லாமும் அந்த சில நிமிட சுகத்திற்காக மட்டும்தான் என்றால்.,என்றோ எப்போதோ இந்த உறவு முடிந்திருக்கும். அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் சலித்திருப்பார்கள். நித்யா ரளவிற்கு படித்தவள், சில் புத்தகங்களையும் நிறைய மனிதர்களையும் வாசித்திருப்பவள். ஞானிகள் உடலைக் கடக்கத்தான் சொல்கிறார்கள் வெவ்வேறு வழிமுறைகளில்...அவளுக்கு இந்த உடல் ரசனையானதாகத் தான் இருக்கிறது. அது கேட்கும் எல்லா தீனிகளிலும் பெருந்தீனி மற்றொரு உடல். அதையே ஜீவனத்திற்காக உபயோகப்படுத்தியிருந்தவளுக்கு கிடைத்த மற்றொரு உவப்பான உடலானவன் ரிஷி. இறுதியில் இந்த உண்மைதான் நிலைத்தது. எத்தனையோ முறை எடுத்தும் கொடுத்துமாகிவிட்டது. இனி ஏதுமில்லை என்ற ஒரு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது இவ்வுறவு.

அவனுடைய குறுஞ்செய்தி இந்த நிமிடம் வரை அவளுக்கு மன சஞ்சலத்தை அளிக்கிறது. இத்தகைய உறவுகள் முறிந்து போதல் என்பது அவள் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்தேயுள்ளது. அவன் போனது பெரும் துயரில்லைதான் ஆனால் கோழை போல நடந்துகொண்டதுதான் அவளின் மனவருத்தத்திற்கு காரணமாய் இருக்கிறது, முகத்திலடித்தாற் போல் சொல்லியிருந்தால் அவளொன்றும் உடைந்து சிதறிப்போயிருக்கமாட்டாள். மாறாக ஒளிந்து விளையாடி கண்ணாமூச்சி காட்டுகிறான். ப்ளடி மேல் ஷாவனிஸ்ட் என்று நினைத்தாள்.

சரி இது இவ்விதம் தான் என்றால் இதற்கு மேல் ன்ன செய்துவிட முடியும்? அவனை அவளால் முழுவதும் வெறுக்க முடியவில்லை. தன் மனக் கண்ணில் அவனை முழுவதும் பதிவு செய்திருந்தாள். காதல் ததும்பும் அந்தக் கண்கள் அவளுக்காக பாடிய அந்த உதடுகள், எல்லாம் எல்லாம் அவளின் நினைவிலிருக்கும். இருந்து கொள்ளட்டும் இருந்தபடி சில நாள்கள்ந் தன்னை கொல்லட்டும் என்று நகத்தைக் கடித்துத் துப்பியபடி நினைத்தாள்.

அவன் ஏன் விலகியிருப்பான் என்பதை அறிய முடியாதவளா அவள். எல்லா பொக்கிஷங்களும் எனக்கே வேண்டும் என்ற பேராசை ஒரு போதும் அவளுக்கில்லை. குடும்பம் அதன் உறவுகள், உன்னதங்கள் இவைதான் அவன் போன்றோரின் முதல் தேவை...அதை விடுத்து எங்கு பயணம் செய்தாலும் தொலைந்து போவார்கள். காதல் போன்ற ஒன்றை இழந்த துயரைத் தவிர வேறு எந்த இழப்பும் இல்லை அவளுக்கு...சிறிதே காலமாயினும் அவனுடன் கதைத்த நேரங்கள் கட்டியணைத்த கணங்களும் நிரந்தரமாய் நினைவில் நிற்கும் என்று பொங்கி வழிந்தபடியிருந்த கண்ணீரைத் துடைக்காமல் விட்டாள்.

இனி ஒரு போதும் அவனை அழைப்பதில்லையென முடிவு செய்து ரிஷியின் அலைபேசி எண்னை தன் போனிலிருந்து அழித்துக் கொண்டிருக்கிறாள் நித்யா.

உயிரோடை சிறுகதை போட்டிக்காக...


உடைந்த கப்பலொன்றும் உதிரி நட்சத்திரமும்

உடைந்த கப்பலொன்றும் உதிரி நட்சத்திரமும்

இனி ஒரு போதும் நாம் சந்திக்க வேண்டாம், இதுவே நான் உனக்கு அனுப்பும் கடைசி குறுஞ்செய்தி..எல்லாவற்றையும் மற...என்னையும்தான். இது உனக்கு நடந்திருக்கக் கூடாதுதான். மன்னித்துவிடு.

எத்தனை முறை வாசித்துப் பார்த்தும் அந்த மெசேஜ் இப்படித்தானிருந்தது. ஏன் இப்படி அனுப்பினான். கத்தியின் கூர்முனையாய் இக்கேள்வி மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது. மொபைலை ஆஃப் செய்திருந்தான், தங்களுக்குள்ளான உறவையும் கூட. செயலற்றுப் போய் கடந்து போன கணங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. இது அவளுக்குப் புதிதல்ல...ஆனாலும் இந்தத் தொழிலுக்கு வந்த ஐந்தாண்டுகளில் மிகவும் நெருங்கிப் பழ்கியவன் அவன். அவனுக்குத் தேவையாக இருந்தது உடல் மட்டுமன்று, கொஞ்சம் ஸ்நேகமும் நிறைய புன்னகையும்.

கார்த்திக்தான் ரிஷியை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தி இப்போது கையில் கிடைத்தால் நித்யா அவனை கொன்றே போட்டிருப்பாள். ரிஷு மீதான ஈர்ப்பும் காதலும் அவளுக்கேற்படாமல் போயிருக்கும்.

வாசலில் அழைப்பு மணியின் சத்தம் பொறுமையின்றி வீறிட்டுக் கொண்டிருந்தது. கார்த்திதான். அவர்கள் இருவரும் ஒரே கூரையின் கீழ் ஆறு வருடங்களாய் அறையை மட்டும் பகிர்ந்து கொள்பவர்களாய் இருந்தார்கள். கார்த்தியைப் பார்க்க பிம்ப் மாதிரியே இருக்காது. பார்க் அவென்யூ ஷர்டில் ஏதோ விளம்பர கம்பெனி அதிகாரி போலிருப்பான். வாயைத் திறந்தால்தான் அவனுடைய விதயம் வெளியே வரும். பான் பராக், சிகரெட், கஞ்சா என்று எது எப்போது கிடைக்கிறதோ அதை மென்றுகொண்டேயிருப்பான். பங்களூரின் அடர்குளிர் இரவில் நண்பன் கொடுத்த செல்பேசியில் நித்யாவை தொடர்புகொண்டு அதன் பின் வாடிக்கையான கஸ்டமராகி கடைசியில் அவளுக்கே நிரந்தரமான ப்ரோக்கராகிவிட்டான். இருவருக்கும் பங்களூரு அலுத்துவிட்டதால் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

மற்றவர் பார்வைக்கு கணவன் மனைவி போல வாழ்ந்தாலும் அவர்களுக்குள் ப்ரியமான நட்பேதும் இல்லை. முன்பு அடிக்கடி ஏற்படும் சமர் எல்லாம் முடிந்து நீர்த்து வார்த்தைகளுக்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டு வீழ்ந்து கிடக்கிறது. புரிதலினால் வந்த சமாதானம் இல்லை அது, விடை தெரியாத முடிவு காண இயலாத யுத்தத்தின் தற்கால நிறுத்தமது. இதை அவர்கள் இருவரும் அறிந்தேயிருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷமாய் அந்த துவந்தம் துவங்கலாம். ஆனால் வேறு வழியில்லாததால் ஒருவரை மற்றவர் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

கார்த்தியினுடைய சகிப்புத்தன்மையை நித்யா ரசிப்பாள். அவளுடைய பிடாரித்தனத்தை அவன் ஏற்றுக்கொண்டான். ஏனோ எளிதில் விலக்கிமுடியாத குளுமை அவன் கரங்களுள் இருப்பதாக அவள் உணர்வதால் இவ்உறவு இதுவரை தொடர்கிறது.

நேராக டைனிங் டேபிளுக்குப் போய் ஹாட் பேக்கில் வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவை எடுத்துச் சாப்பிட்டான். நித்யாவின் கோலத்தைப் பார்த்ததும் ஏதோ மூட் அவுட் எனத் தெரிந்து ஏதும் பேசாமல் இருந்தது அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது. சமூகம் வேசை என பதித்திருக்கும் விதிகள் எல்லாம் தங்கள் இருப்பை நிரூபிக்க பல முறை அவளுக்கெதிராய் திரண்டது. முகத்தில் அறைந்தது, முட்டி மோதி, ரத்தமும் சதையுமாய் கிழித்தெடுத்து தன் கோரப் பற்களால் மென்று துப்பி பிறகு அவளை கொன்றொழித்துவிட்டதாய் இறுமாந்திருந்தது. முன் எப்போதுமில்லாத புது தெம்புடனும் தெளிவுடனும் அவள் உயிர்த்தெழுந்து கொண்டேயிருப்பதைப் பார்த்து அதிர்ந்து செய்வதறியாது திகைந்து தற்போதைக்கு பின்னடைந்து கிடக்கிறது. அது தன் கத்தியை கூர் தீட்டிக் கொண்டிருக்கும் வரையிலாவது தன் இருப்பின் சுவாசதங்கள் அவளுக்குறுதி.

பதின்ம வயதில் அனாதையான பின் வீட்டு வேலைகள் செய்த இடங்களில் எல்லாம் ஆண்களால், வயதாளிகளால் கைவைக்கப்பட்டு எப்படியோ தப்பித்து பின் வேறு வழியில்லாததால் இத்தொழிலிலேயே முழ்கியவள் அவள். மீண்டெழ முயற்சிகூட செய்வதில்லை.

தன்னை விற்றே தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய வாழ்க்கையில் செய்துகொண்டிருப்பதற்கு யாரின் அனுமதிகள் அவளுக்குத் தேவையிருக்கவிலலை. தனக்கிதுதான் தொழில் என முடிவெடுத்தப்பின் அவள் பெரிதாக வருந்துவதுகூட இல்லை.

சோபாவில் நகத்தை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளைக் கடந்து கார்த்தி அவன் அறைக்குச் சென்றான். மெதுவாக கதவை சாத்தினான். அவனாவது நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்தாள்.

அறையில் அவளைத் தவிர அவளின் இந்தத் தனிமையைத் தவிர யாருமில்லை. கார்த்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமை என்பது கொடும் நிழலைப் போல எப்போதும் அவளுனுடனே இருந்துவருகிறது. இந்த ரிஷி நேற்றிரவு கூட நன்றாகத்தானே தன்னிடம் கதைத்துக் கொண்டிருந்தான், அதே காதலுடன், அதீதக் காமத்துடனும். எப்படியெல்லாம் குழைந்தான்..

நித்து, என்னமோ தெரியலைடா ...இன்னைக்கு உன்னை மட்டும் நினைச்சுட்டேயிருக்கேன்...I miss you dear. :(

ம்ம்..நானும்தான்

எத்தனை பேரை பாத்திருப்பேன், யாரோட அன்பும் என்னை இந்தளவுக்கு பாதிச்சதில்லைடா...நீ என்னோட உயிரோட வேர் வரைக்கும் போயிட்டேடி. ஹனி..பேசாம என்னைக் கட்டிக்கோ. இந்த கண்றாவியை எல்லாம் விட்டுடு. உன்ன நான் ராணி மாதிரி பாத்துக்கறேன்.

என்னாச்சு ரிஷி தண்ணியா? இந்த டயலாக்கை எத்தனை முறை எவ்வளவு வகையா கேட்டிருப்பேன்னு உனக்குத் தெரியுமா

ஆரம்பிச்சிட்டியா, சரி ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதியிருக்கேன் வாசிக்கட்டா? அவன் குரல் சன்னமாக ஒலித்தது

கவிதை வேற எழுத ஆரம்பிச்சுட்டியா, சொல்லித் தொலை

எப்போதும் பெய்கின்ற மழையை விட

இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக

நாம் காத்திருப்பதில்லையா?

உன்னை என்னிலிருந்து

பிரித்துபார்க்க முடியவில்லையடி சகியே

இரவும் பகலுமாய் மிருகத்தையொத்த

ஓர் உணர்வு என்னை விரட்டுகிறது

அது என்னை தின்று தீர்ப்பதற்குள்

சொல்லடி நீ யார் எனக்கு?

ஹேய் நிஜமா நீதான் எழுதினியா இல்ல எங்கிருந்தாவது உருவினியா?

....

சரி கோச்சுக்காதேடா தங்கம். ரொம்ப நல்லாயிருக்கு...இதுக்கு உனக்கு உடனே ஒரு பரிசு தரணுமே..

எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும்தானே?

என்னடா

நீதான்....

அவள் பதில் சொல்வதற்குள் ஃபோனை கட் பண்ணிவிட்டான். ஆனால் அதற்குள் காலையில் பிரிவைப் பற்றிய செய்தி. இடையில் என்ன நடந்திருக்கும்?

கார்த்திக்கு அவர்கள் கல்யாணம் செய்துகொண்டுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனாலும் கண்டும் காணாமல் விட்டுவிட்டான். எப்படியாவது அவளுடைய காயங்கள் ஆறி மற்றவர்களைப் போல சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்துவிட்டான். தன் சந்தோஷத்தை தானே தொலைத்தவள் என்று அவளைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறான் ஆனால் அது அப்படியில்லை. அவளுக்கது நிலைப்பதில்லை அவ்வளவே. இன்பம் தேடும் பயணத்தில் சில சமயம் அவள் அலுத்துக் களைப்பதுண்டு. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது பல சமயம் அவளுக்கும் வாய்த்திருக்கிறது. நித்யாவிற்கு யாரின்மீது எதன் பொருட்டும் பொறாமையுணர்வோ அச்சமோ தேவையற்ற விவாதங்களோ அலுப்பூட்டும் எதிர்ப்பார்ப்புக்களோ இல்லை. வெகு சீக்கிரத்தில் அவளுக்கான மனிதர்களை தேடி சோர்வடைந்துவிட்டாள், பாசாங்கு செய்யத் தெரியாதவர்களாக. அன்பென்ற வலையில் சிக்க வைக்காதவர்களாக இருக்க வேண்டும் அப்படி யாரேனும் இருப்பார்களா என்ற இடையறாத தேடல் அவளைப் பித்தேறச் செய்தது. கடந்து போகும் முகங்கள் யாவிலும் அதைக் காணும் கணத்தை எதிர்நோக்கியேயிருந்தாள். வேட்டையில் கிடைக்கத்தான் செய்கிறது சில சமயம் முத்துக்களும் சில சமயம் சிப்பிகளும்.

ரிஷி அப்படியான நல்முத்து. தன் காதலால் மட்டுமல்லாது காமத்தாலும் திளைக்கச் செய்தவன். அவன் அவளுக்கானவன். அவளைப் போல மற்றுமொருவன். இறகு போல இலகுவானவன். எவ்விதமான கோட்பாடுகளுக்குள்ளும் தன்னை ஒளித்து வைக்காதவன். நித்யாவின் மனதில் படிமமாய் படிந்துவிட்ட ஆண் பிம்பத்தின் ஒரு துளியாய் அவனிருந்ததில் முதலில் ஆச்சரியமும் பின் ஆனந்தமும் அடைந்தாள். புது வெள்ளம் பாய்ந்த நதியாக மாறி அவன் இருப்பிடத்தை நிறைத்தாள். அவனுள்ளும் புறமுமாய் அவனின்றி வேறேதுமில்லையெனும் நிலையில் இரவு பகல் பாராது பேசியும் ஊர்சுற்றியும் பிணைந்தும் மயக்கமாயும் மயக்கம் தெளிந்த நிலையிலும், மென்மைமாயும் அதிவேகமாயும் நிலவொளியிலும் சுடும் வெயிலிலும், மென் குளிரிலும் காலத்தை உறையச் செய்யும் மந்திரத்தன்மையிலும் சுவாசம் சீர்பட்ட நிலையிலுமாய் நாள்களை துளைத்து நகர்ந்து கொண்டிருந்த உயித்தன்மையாய் அவர்களிருந்தார்கள். உடலின் விழைவு இரண்டே தான், அது மரணத்திற்கான காத்திருப்பும், அதற்கு முன் இயன்ற வரை திகட்டும் வரை அதற்கு தேவையானவற்றை அளித்து சுகித்திருப்பதும்தான். தீரா பசியுடன் மரணம் அனைவரையும் தழுவதற்கு முன்னர் உடல் செய்யும் கூத்துக்களுக்கு செவி மடுத்து சரண் அடைந்து அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இவ்வாழ்வின் பெரும் சவால். இடையில் நடக்கும் விதயங்கள் யாவும் நாடங்கள். இல்யூஷன்ஸ். நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் எதற்கென்றால் படுப்பதற்காகத்தான். படுத்தால்மட்டுமே மீண்டும் நிற்கவும் நடக்கவும் இயலும். உடலின் மாறா தேவை இன்னொரு உடல். அதுதான் அவள் தன் வாழிவில் கண்டடைந்த உண்மை.

உடலுக்கு காமத்தைவிட இனியது ஏதுமில்லை, அதை விட கொடியதும் ஏதுமில்லை..திகட்ட திகட்ட அதை கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது அது மீண்டும் மீண்டும் ரிஷியுனுடைய அன்பினாலும் காதலாலும் அவளை நெருக்கிக் கொண்டிருக்கிறது. வேண்டாம் இதுவே கடைசி, இன்றுடன் போதும் என்று ஒரு போதும் அவர்களால் நிறுத்திக் கொள்வவே முடியவில்லை. பாண்டிச்சேரி, கொடைக்கானல், ஊட்டி, தேக்கடி என்று காதல் காமத்திலேறி நகரம் நகரமாய் மிதந்து போனதன்றி நிற்பதாயில்லை இவ்வேட்கை. ஒவ்வொரு முறையும் அது தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதனுடனான சமர் ஒருபோதும் சலிப்பதில்லை. மாறாய் வேட்கை அதிகரித்து உடலின் உச்சமாய் அதீதமாய் விண்வெளியில் மிதக்கும் கலமாய் மாயம் செய்து உயிரை வெளியேறியும் பின் மீண்டு உள்ளிருக்கவும் செய்கிறது. அதன் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட கடலாய் அவனும் கலனாய் அவளும் மூழ்கித் கொண்டிருந்தார்கள். அவன் அவளுக்காக வாரியிறைத்த பணத்தைவிடவும் அவனுடை சுண்டுவிரலைக் கோர்த்தபடி நடக்கும் தருணங்களை சந்தோஷமாக நினைவு கூர்ந்தாள்.

நிறைய யோசித்துப் பார்ப்பது புத்தி, அதற்கு கணக்குகள் உண்டு, பயங்கள் உண்டு....யோசிக்காத மென்மனதிற்கு தென்படுவது காதல் மட்டுமே. அவனிடம் அவளுக்குத் தேவைப்பட்டது முழுமையான அவன்...உடலினால் சேருவது மட்டுமல்ல அவளுடைய விருப்பஙகள். தலை கோதி, விரல் பிடித்து, மடியில் கிடத்தி தன் அன்பிற்குரியவனை எப்படியெல்லாம் அள்ளி ஆராதிக்க முடியுமோ ஆராதித்திருந்தாள். அவனும் தன் போர்வையில் எப்போதிருக்கும் கதகதப்பை அவளுக்கு தடையில்லாமல் தந்தவண்ணம்தானிருந்தான். எல்லாயிடத்திலும் சுதந்திரத்தையும் காற்றை தடைசெய்யாத அற்புத காதலனாய் அவனிருந்தான். இடையில் திடீரென்று என்ன நடந்திருக்கும். ஏன் விலகிப் போகிறான்? எல்லாம் முடிவிற்கு வரும் விதயங்கள்தானா இவ்வாழ்வில்? என்று குழம்பித் தவித்தாள் நித்யா.

இவை எல்லாமும் அந்த சில நிமிட சுகத்திற்காக மட்டும்தான் என்றால்.,என்றோ எப்போதோ இந்த உறவு முடிந்திருக்கும். அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் சலித்திருப்பார்கள். நித்யா ரளவிற்கு படித்தவள், சில் புத்தகங்களையும் நிறைய மனிதர்களையும் வாசித்திருப்பவள். ஞானிகள் உடலைக் கடக்கத்தான் சொல்கிறார்கள் வெவ்வேறு வழிமுறைகளில்...அவளுக்கு இந்த உடல் ரசனையானதாகத் தான் இருக்கிறது. அது கேட்கும் எல்லா தீனிகளிலும் பெருந்தீனி மற்றொரு உடல். அதையே ஜீவனத்திற்காக உபயோகப்படுத்தியிருந்தவளுக்கு கிடைத்த மற்றொரு உவப்பான உடலானவன் ரிஷி. இறுதியில் இந்த உண்மைதான் நிலைத்தது. எத்தனையோ முறை எடுத்தும் கொடுத்துமாகிவிட்டது. இனி ஏதுமில்லை என்ற ஒரு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது இவ்வுறவு.

அவனுடைய குறுஞ்செய்தி இந்த நிமிடம் வரை அவளுக்கு மன சஞ்சலத்தை அளிக்கிறது. இத்தகைய உறவுகள் முறிந்து போதல் என்பது அவள் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்தேயுள்ளது. அவன் போனது பெரும் துயரில்லைதான் ஆனால் கோழை போல நடந்துகொண்டதுதான் அவளின் மனவருத்தத்திற்கு காரணமாய் இருக்கிறது, முகத்திலடித்தாற் போல் சொல்லியிருந்தால் அவளொன்றும் உடைந்து சிதறிப்போயிருக்கமாட்டாள். மாறாக ஒளிந்து விளையாடி கண்ணாமூச்சி காட்டுகிறான். ப்ளடி மேல் ஷாவனிஸ்ட் என்று நினைத்தாள்.

சரி இது இவ்விதம் தான் என்றால் இதற்கு மேல் ன்ன செய்துவிட முடியும்? அவனை அவளால் முழுவதும் வெறுக்க முடியவில்லை. தன் மனக் கண்ணில் அவனை முழுவதும் பதிவு செய்திருந்தாள். காதல் ததும்பும் அந்தக் கண்கள் அவளுக்காக பாடிய அந்த உதடுகள், எல்லாம் எல்லாம் அவளின் நினைவிலிருக்கும். இருந்து கொள்ளட்டும் இருந்தபடி சில நாள்கள்ந் தன்னை கொல்லட்டும் என்று நகத்தைக் கடித்துத் துப்பியபடி நினைத்தாள்.

அவன் ஏன் விலகியிருப்பான் என்பதை அறிய முடியாதவளா அவள். எல்லா பொக்கிஷங்களும் எனக்கே வேண்டும் என்ற பேராசை ஒரு போதும் அவளுக்கில்லை. குடும்பம் அதன் உறவுகள், உன்னதங்கள் இவைதான் அவன் போன்றோரின் முதல் தேவை...அதை விடுத்து எங்கு பயணம் செய்தாலும் தொலைந்து போவார்கள். காதல் போன்ற ஒன்றை இழந்த துயரைத் தவிர வேறு எந்த இழப்பும் இல்லை அவளுக்கு...சிறிதே காலமாயினும் அவனுடன் கதைத்த நேரங்கள் கட்டியணைத்த கணங்களும் நிரந்தரமாய் நினைவில் நிற்கும் என்று பொங்கி வழிந்தபடியிருந்த கண்ணீரைத் துடைக்காமல் விட்டாள்.

இனி ஒரு போதும் அவனை அழைப்பதில்லையென முடிவு செய்து ரிஷியின் அலைபேசி எண்னை தன் போனிலிருந்து அழித்துக் கொண்டிருக்கிறாள் நித்யா.

உயிரோடை சிறுகதை போட்டிக்காக...


Friday, July 10, 2009

சின்னுவைக் காணவில்லை






வெண் பாதங்கள் வெளித்தெரிய
கருமையுடலைச் சுருக்கி
உறைந்த ஓவியக் காட்சியாய்
உறங்கத் துடிக்கும் சின்னு..
பசித்தால்
மீம் மீம் என குரல் எழுப்பும்
வயிற்றுச் சுமையுடன்
மேலும் அசைவற்று தீனமான
சத்தத்துடன்
தன் இருப்பை உணர்த்தும்
நேற்றைக்கு முன் தினம்
காணாமல் போன அது
திசைகள் அறியாது.
என் வாசனை அதற்குத் தெரியும்
எனது வேதனையும் கூட..
பசியால் துடிக்கும் அதன் மென் குரல்
என்னை அதிரச் செய்கிறது.
எல்லா இடங்களிலும் தேடிக் களைத்து
காற்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
சின்னுவின் பாதங்களின் சுவட்டை
கண்டறிந்து சொல்லும் படி!


நன்றி - ‘தடாகம்’ மின்னிதழ்

Sunday, July 5, 2009

தொலைந்த காதல்

முதல் சுற்று

ரஞ்சனி மறுபடியும் எதிர் ப்ளாட்டிற்கு குடி வந்துவிட்டாள். வாழ்வின் மொத்த அலுப்பும் அவள் முகத்தில் தென்பட்டது ஏன் என்று தெரியவில்லை. சந்திரனை ஒரேடியாக தலைமுழுகிவிட்டு வந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். சொந்தமாக ஒரு பார்மஸியை தெருமுனையில் தொடங்கியிருக்கிறாள். அவளின் தைரியமும் திமிரும் எனக்கு இன்றளவும் பிடிக்கும். சுயம் சார்ந்த சிந்தனைகள் அவளிடம் இருக்கும். தனக்கு என்னத் தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருப்பவள். அனேகமாக அவள் கோட்டைவிட்ட ஒரே விஷயம் நானாகத் தான் இருக்கும். அந்த ப்ளாட்டில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்ய வைத்துவிட்டு, வீட்டை கொஞ்சம் சரி செய்து இதோ கடைசியில் மீண்டும் என் கண் முன் வந்தேவிட்டாள். எப்படி அவளால் கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் வளைய வர முடிகிறது? எனக்கு முதலில் மிகப் பெரிய கோபம் இருந்தாலும் அவளின் மென்சோகமும் கண்ணீர் தளும்பிய விழிகளும் அதை வெகு சீக்கிரத்தில் கரைத்துவிட்டது. என்ன இருந்தாலும் பழைய காதலியாயிற்றே.

ரஞ்சனி என்னை கொன்றவள், உயிரோடு புதைத்தவள். இத்தனை வருடங்கள் கழித்து அவள் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுகிறாள். ராஜு, தங்கம், பிரின்ஸ் என தன் இனிமையான குரலினால் குழைகிறாள். தூங்கிட்டியா சாப்டியா என்று எதிர் வீட்டில் இருந்துகொண்டு மெசேஜ் போடுகிறாள். என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி ‘ஏன் போனாய், போய்விட்டாய் அல்லவா எதற்காக திரும்பினாய்’.

விருப்பமாகவும் அதே சமயம் வெறுப்பாகவும் இருந்தது அவளின் செயல்கள். யாருமற்ற தனிமை வேறு என்னை நிலைகுலைய வைக்கிறது. டீவியை போட்டேன். க்ரிக்கெட் மாட்ச். மனம் அதில் லயிக்கவில்லை. திரைச்சீலையை விலக்கி ஜன்னலூடே எட்டிப் பார்த்தேன். இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? புதைந்து கொண்டிருந்த அவள் நினைவுகளின் கனம் முன்னெப்போதையும் விட மேலதிகமாய் என்னை வாட்டியது. ரஞ்சனி, ரஞ்சனி என்று மனதிற்குள் மந்திரம் போல அவள் பெயரை உச்சரித்தபடியே கண் மூடி நித்திரைக்குள் செல்ல முயன்றேன். என்றைக்கும் இல்லாமல் இப்போது நைட் லாம்பின் வெளிச்சம் கூட கண்ணை உறுத்தியது. அணைத்துவிட்டுப் படுத்தேன். கும்மிருட்டு. குழந்தையின் அழுகுரல் போன்ற பூனையின் புணர்ச்சி சத்தம் விட்டு விட்டுக் கேட்டது என் எரிச்சலை பன்மடங்காக்கியது. உறக்கம் வர மறுக்கும் இந்த நிசியில் செய்வதற்கு எதுவுமில்லாமல் இப்படி சும்மா எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்பது ஆயாசமாக இருந்தது. ஹெலன் வேறு ஊரில் இல்லை. ரேச்சலை அழைத்துக் கொண்டு அவள் பங்களூருக்குப் போய் விட்டாள். அவளுடைய சொர்க்கம் அம்மா வீடு. நல்ல வேளை அது ஊர் விட்டு இருந்தது. சென்னையில் இருந்திருந்தால் நான் நிரந்திர பிரம்மச்சாரியாக காலத்தை கழிக்க வேண்டியிருக்கும். ஹெலன் இரண்டு மாதம் கழித்துதான் வருவாள் அடுத்த மாசம் நான் ஒரு முறை போக வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு கர்த்தரின் பெயரால் ஸ்தோத்திரம்தான். ரேச்சலைதான் அதிகம் தேடுகிறது. முதல் குழந்தைக்கு ஏஞ்சல் என்று பெயர் வைக்கவேண்டும் என்று நானும் ரஞ்சனியும் முன்பு பேசியிருந்ததை நினைத்தேன். எத்தனை கனவுகள் கண்டிருப்போம், எவ்வளவு வார்த்தைகளை இறைத்திருப்போம். எல்லாம் அர்த்தமற்று ஒன்றுமில்லாமல் ஆகிப்போனது காலத்தின் கட்டாயமெனில் இப்போது மீண்டும் அவள் என் முன்னால் ஏன் வரவேண்டும்?

என்னால் எப்படி தூங்க முடியும்? மூளை கொதித்துக் கொண்டிருக்கிறது. தப்பியோட முடியவில்லை. மின்விசிறியின் சத்தம் மண்டைக்குள் கேட்டது. அதை அணைத்துவிட்டு ஏசியை போட்டேன். குளிர் பரவுவதற்கு சற்று நேரமாகும். தலையணையை எடுத்து காலுக்கடியில் போட்டுக் கொண்டேன். ரஞ்சியின் அருகாமை நினைவுகளால் உடலின் அனல்காற்று மனது வரை பாய்ந்து என்னை சூடாக்கியிருந்தது. வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கின்ற கவிஞனைப் போல இப்படி என்னை அலைக்கழிக்கிறாள். அறுக்க முடியாத பந்தமாய் அவளன்பு என்னை இறுக்கி கட்டுகிறது. என்னால் எங்கும் போக முடியாதபடி அது என்னை ஓரிடத்தில் ஆணியடித்து வைத்துள்ளது. நான் உன்னிடம் மறுபடியும் தொலைந்துவிடுவேனா ரஞ்சனி? இனி எப்படி அணுகுவது இவளை. என்னை முழுவதும் எடுத்துக் கொண்ட மாகாளி இவள், ஓரே நாளில் குப்பையாய் மதித்து தூக்கி எறிந்த யட்சியும் ஆனவள். இன்றளவும் கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டி வைத்து என்னை பொம்மையாக ஆட்டுவிப்பவள். என்னுயிரை விட்டாலன்றி இவளை மறக்க முடியாது போலிருக்கிறது. இப்போது கண் முன்னால் வந்து பூச்சாண்டி காட்டும்போது மறுக்கவும் முடியவில்லை. ஆறு ஆண்டுகள் முன்பு அவள் எனக்கானவள் எனக்கு மட்டுமேயானவள். இப்போது அவள் சந்திரனின் மனைவி இரண்டு குழந்தைகளின் தாய். என்னால் அவளை தள்ளமுடியவில்லை,அள்ளவும் முடியவில்லை. ‘அழகி’ படம் நினைவிற்கு வந்தது. சில சமயம் சினிமா வாழ்க்கைக்கு அருகில் இருக்கிறது. நிஜத்தில் நடப்பதைத் தானே நிழலில் படச்சுருளில் காட்டுகிறார்கள். ரஞ்சனி வேறு நந்திதா தாஸ் போல மென்சோகத்துடன் காணப்படுகிறாள். வீதிக்கு வந்துவிட்டாளா இல்லை என்னை வீதியில் நிறுத்தப்போகிறாளா தெரியவில்லை.

குற்றுயிராய்க் கிடக்கின்ற என்னை ஒரேடியாக கொல்லத்தான் வந்திருக்கிறாளா? அப்படித்தானிருக்கவேண்டும். ஆனாலும் நான் தப்பி ஓடி விடுவேன்.எங்களுக்கிடையே ஒரு சூட்சும கயிறு இருக்கிறது, அது முன்பு ஒரு போதும் இருந்தது இல்லை. ஆனால் இப்போது இருக்கிறது. ரஞ்சனியை நிதானமாகத் தான் கையாளவேண்டும், எனக்கு அவள் பிசாசு மற்றும் தேவதை. இரண்டு முகம் அவளுக்கு. இந்த என் நிதானம் ஆச்சரியமான நிதானம் எனக்கே அதிசயமாய்த்தான் இருக்கிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் அவதானித்தேயிருக்கிறேன். பார்வையாளனாய் இருந்தவன் முதல் முறையாய் கூண்டுக்குள் சிக்கியுள்ளேன். இது கொஞ்சம் சிக்கலான இடம்தான். புதிர்த்தன்மை நிறைந்துள்ல இப்புது விளையாட்டின் விதிமுறைகளை நானறியேன்.

மிகவும் சோர்வாக இருந்தது. மொபைலில் மெசேஜ் டோன் கேட்டது. எடுத்துப் பார்த்தேன் அவள்தான் தான். மணியைப் பார்த்தேன். 12.45. இந்நேரத்தில் என்ன சொல்லப்போகிறாள். ‘ராஜு, தூங்கிட்டியா? காலை உன்னை சந்திக்க வேண்டும், அவசரம். குட் நைட். பதில் அனுப்பத் துடித்த மனதை அடக்கிக் கொண்டேன். ‘ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாள்’? என் மனதின் துடிப்புகள் அவளுக்குத் தெரியுமா? தெரிந்தே கொல்கிறாளா?

கேள்விகள் கேள்விகள் என்னை இம்சிக்கும் கேள்விகள். எனக்கு மீண்டும் ஒரு வரம் கிடைத்திருக்கிறது. வைத்துக் கொள்வதா விடுப்பதா தெரியவில்லை. விடிய விடிய தூங்காமல் இருந்ததினால் கண்கள் நெருப்பாய் எரிந்தது. பாத்ரூம் போய்விட்டு பல் விளக்கி பேப்பர் படிக்க அமர்ந்தேன். இரவின் அயற்சி தொடர்ந்தது. பேப்பரை தூர எறிந்துவிட்டு குளித்து முடித்தேன். கொஞ்சம் புத்துணர்வு ஏற்பட்டது போலிருந்தது. ஆனாலும் உள்ளிருந்து ஏதோ இனம் தெரியாத உணர்வொன்று கிளர்தெழுந்து கொண்டேயிருந்தது. வெகு நாள் கழித்து இப்படி தளும்பிப் போய் நிற்கிறேன். நான் இன்றி என்னை யாரும் நகர்த்த முடியாது. இவளால் மட்டும் எப்படியோ அது சாத்தியமாகிறது. ப்ரின்ஸ் ஜெபராஜ், யாரிடமும் எதற்காகவும் என்னை இழக்காதவன். நான் தேர் என்று இறுமாந்திருந்தேன். தேருக்கும் சக்கரம் இருக்கும் வரை அது நகரும். நகரத்தான் வேண்டும் என்று அவள் நிரூபிக்கப் பார்க்கிறாள். தலை சீவிக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. ரஞ்சனிதான். ‘ராஜ், குட் மார்னிங். ப்ரிட்ஜில முட்டை இருக்கா, கடைக்கு போக நேரம் இல்லை’ என்று கேட்டபடி நேராக ப்ரிட்ஜை திறந்து எடுத்துக் கொண்டு திரும்பியவளைப் பார்த்தேன். அப்போதுதான் குளித்திருந்தாள். சிவப்பும் கருப்புமான நைட்டியின் க்ளிவேஜ் தெரிந்தது. அழகாக அம்சமாக கொஞ்சமும் சிதையாமல் அப்படியே இருக்கிறாள். என் கண்கள் அவள் உடல் முழுவதும் பார்ப்பதை லேசான சங்கடத்துடன் பார்த்தாள். அப்பறம் வரேன் என்றவளை இழுத்தணைத்து அழுத்தமாய் முத்தம் கொடுத்துவிட்டேன். அடிபட்ட பார்வையுடன் என்னைச் சலனமின்ற பார்த்தாள், இன்னும் தீராத தாகத்துடன் அவள் உதடுகளை உதடுகளால் கவ்வினேன். விடுபடமுடியாத அவள் உடலின் லேசான மின்னதிர்வை உணர்ந்தேன். என்னைத் தள்ளவில்லை. ஆனால் எதிர்வினைகள் ஏதுமற்று என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பறம் வரேன் என்று முனகிவிட்டு சென்றுவிட்டாள். என் உடல் விரைத்து உயிர் கசிந்து அவளுடலுக்காய் ஏங்கியது. நான் சரியாவதற்கு வெகு நேரமாயிற்று. மொபைல் அடித்தது. ஹெலன் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள். சத்தம் ஏதுமில்லாத தனிமை இந்த நொடி எனக்குக் கிடைத்தால் போதுமென்றிருந்தது. ஓடி ஒளிய இடமேதுமில்லாமல் வழக்கம் போல வேலைக்குச் சென்றேன்.

2வது சுற்று

கடும் கோடையில் நீ பேசியது மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. இது மழையற்ற மழை. பெய்து ஓய்ந்த மழையின் ஈரத்தை உன் சுவாசத்தில் உணர்ந்தேன் ராஜ். விடாமல் பெய்த மழையினூடே சிறுமழையாக என் கண்களினின்று யாருமறியாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் கண்ணீரின் கதை தெரியுமா ராஜ் உனக்கு? நீ எனை அணைத்தது முத்தமிட்டது எல்லாம் உணர்வுகளற்ற இந்த உடலைத்தான். மரத்துப் போன என் மனத்தின் துயரின் ஆழங்களை நீயறிந்திருக்க நியாமில்லை.

வெளிப்பார்வைக்குத் தான் பேசுகிறேன் சிரிக்கிறேன். உள்ளுக்குள் சுக்கல் நூறாய் உடைந்து சிதறிக் கிடக்கிறேன். உன்னைப் பிரிந்து சந்திரனை கைப்பிடித்த நாள்முதலாய் சித்ரவதைகளின் மொத்த வகைகளையும் அனுபவித்தேன். அவனுக்கு நம்முடைய விஷயம் எப்படியோ தெரிந்திருந்தது. தவிர அவன் பழக்க வழக்கங்கள் எதுவும் சரியில்லை. தினமும் அடி உதை. கர்ப்பமாக இருந்த என்னிடம் சொல்லக் கூசும் வார்த்தைகளால் ஏசுவான். என் மகன் வயிற்றுக்குள் அடித்த அடிகளைவிட வெளியில் இவன் அடித்தது அதிகம் தெரியுமா. இந்தக் கொடுமையைப் பார்த்து என் அப்பா குற்றவுணர்வால் மருகியே இறந்துவிட்டார்.

என்னுடைய இரண்டாவது குழந்தை செல்மாவின் முகத்தை நான் ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன் என்றால் உன்னால் நம்ப முடிகிறதா? அவள் தனக்குப் பிறக்கவில்லை என்று இன்றளவும் நம்புகிறான். உன்னை சம்பந்தப்படுத்தி பல தடவை வயிற்றில் மிதிப்பான். சிகரெட் லைட்டரால் என் மேல் எத்தனை தடவை சூடு போட்டிருக்கிறான் தெரியுமா ராஜு. பிரசவம் முடிந்த ஒரே நாளில் என் குழந்தையைப் பறித்து அவனுடைய மாமாவிற்கு தத்து கொடுத்துவிட்டான். அவனுடைய தாய்மாமாவிற்கு குழந்தை கிடையாது. குழந்தைகளில்லாத அவர்கள் நம்மைவிட நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றான். அவனுடைய அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக்கொண்ட என்னால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பத்து மாசம் சுமந்து பெற்றிருந்தால்தானே அதன் அருமை அந்த அரக்கனுக்குத் தெரிந்திருக்கும்? அவனை கெஞ்சி பார்த்துவிட்டேன் மிரட்டிப் பார்த்துவிட்டேன். பலனில்லை. கடைசியில் அவனுடைய மாமாவின் காலில் விழுந்து குழந்தையை திருப்பித் தந்துவிடுமாறு அழுது புலம்பினேன், என்னை அவர்கள் நாயை விட கேவலமாக நடத்தி விரட்டிவிட்டார்கள்.

என் அழுகைகள் அந்தக் கல் மனசுக்காரர்களை கரைக்கவில்லை. என் பிரார்தனைகள் எல்லாம் வீணாக்கி அவர்கள் தங்களின் வீட்டை மாற்றிச் சென்றுவிட்டார்கள். எவ்வளவு முயன்றும் என்னால் அவர்கள் என் குழந்தையை எடுத்துக் கொண்டு எங்கு போனார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. நடைபிணமாய் ஆகிவிட்டேன். சந்திரன் மீது வழக்கு போட்டேன். டைவர்ஸ் கிடைத்துவிட்டது. ஆனால் என் மகளைப் பற்றித் தெரியவே தெரியாது என்று கோர்ட்டில் சத்தியம் செய்துவிட்டான். மூன்று வருடம் ஓடிவிட்டது ராஜ். எனக்கென்று யாருமேமில்லை. தனித்தீவில் சுடுமணலில் என் மகனுடன் மகளைத் தேடி அலைந்து திரிகிறேன். உன் வீட்டருகே நான் மீண்டும் வந்தது உன்னிடம் பிச்சை கேட்பதற்காகத்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் உனக்கு செய்த துரோகத்தை மன்னித்துவிடு அதற்காக நான் நிறைய அனுபவித்துவிட்டேன். உன் ரஞ்சனி செத்துவிட்டாள். என் மகளை மீட்டுத் தர உன்னால் தான் முடியும். நீ போலீஸ்காரன் மட்டுமல்ல, என் மனதிற்கு உகந்தவன். என் ப்ரியமான முன்னாள் காதலன். எனக்கு இருக்கும் ஒரே பிடிப்பு நீதான். செய்வாயா ராஜு?

மூன்றாவது சுற்று

ரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய துயர் ஏற்பட்டிருக்கும் என்று கனவில் கூட நான் நினைத்திருக்கவில்லை. அவள் என்னைவிட்டு ஒரேடியாய் பிரிந்த போதும் அவளுக்கு எவ்வித சாபமும் நான் தரவில்லை. என்னைத் தான் அதிகம் வருத்திக்கொண்டேன். என் தேவதை இப்படி சிதைந்துபோய் வந்திருக்கிறாள் என நினைக்கும் போது வயிறு எரிந்தது.

அவள் செல்மாவை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அதுதான் என் முதல் வேலை. ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டேன். டிபார்ட்மெண்ட் நண்பர்களிடம் சந்திரன் மற்றும் அவன் குடும்பத்தாரின் தகவல்கள் கொடுத்து உதவிக்கு அழைத்தேன். மூன்றே நாள்கள் அந்த மாமாவின் அட்ரஸிலிருந்து செல்மாவை மீட்டு இதோ எங்கள் கையில் இப்போது பூத்த ரோஜாவாய் செல்மா. குழந்தை அப்படியே ரஞ்சனி மாதிரியே இருந்தது. என் குட்டி இளவரசி என்று கொஞ்சித் தீர்த்தேன். ரஞ்சனியின் முகத்தில் பழைய ரஞ்சனியைப் பார்த்தேன். முதலில் செல்மா ரஞ்சனியிடம் வர மறுத்தது. சந்திரனுடைய மாமா அத்தையிடம் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தது. எல்லாவற்றையும் பல்லைக் கடித்துத் தாங்கிக் கொண்டு ரஞ்சனி குழந்தையிடம் அன்பைக் கொட்டினாள். பெற்ற பாசம் வளர்த்த பாசத்தை வெகு சீக்கிரம் வென்றுவிட்டதை கண்ணால் பார்த்தேன். ரஞ்சி ரஞ்சி அம்மா என்று அழகாக செல்மா அவளிடம் ஒட்டிக் கொண்டாள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு விஜிபி, மாயாஜால், கிஷ்கிந்தா என்று சுற்றினோம். ரஞ்சி என்னிடம் நன்றி சொல்லியே சோர்வுற்றாள். அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாத கனவை நான் சாத்தியப்படுத்தியிருக்கிறேன். என் ரஞ்சனிக்காக இதைக்கூட செய்யாவிட்டால் நான் இருந்தென்ன பயன்? தாய்மையின் நிறைவில் அவள் குழந்தைகளுடன் இனி இந்த வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியுடன் கடந்துவிடுவாள்.

ரஞ்சனி, வாழ்வின் பாதைகள் நெடியவை. நிறைய மனிதர்களை நாள்தோறும் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். சில பேர் சிரித்துவிட்டு நம்மைத் தாண்டிப் போய் விடுவார்கள். சிலர் நின்று பேசிவிட்டுச் செல்வார்கள். சில பேர் சற்று தூரம் வரை வழித்துணையாக வருவார்கள். சில பேர் நாம் நடப்பதைக் கேலி செய்வார்கள். தப்பான பாதையைக் காட்டி குழப்பிவிடுவார்கள். தங்களுக்குப் பிடித்த பாதையில் நம்மை இழுத்துச் செல்ல முனைவார்கள். இதிலிருந்தெல்லாம் மீண்டு நடக்க வேண்டுமென்றால் எதிரே வருபவர்களைப் பற்றிய கணிப்பும், நம் பாதை எதுவென்கிற தெளிவும் நமக்கு வேண்டும். ரஞ்சனி, என் தேவதைப் பெண்ணே, முன்பு உன் பாதையில் நானும் எதிரே வந்தேன். என்னுடன் சேர்ந்து இறுதி வரை பயணம் செய்வாய் என இறுமாந்திருந்த சமயம் ஒரு வார்த்தைக் கூட என்னிடம் சொல்லாமல் விட்டு விலகிவிட்டாய். பாதைகள் ஏதும் தெரியாத இருள் வெளிகளில் கனவுகள் யாவற்றையும் இழந்து பைத்தியம் பிடித்து அலைந்து திரிந்தேன். என்னை சரி செய்ய எத்தனை வருடங்களாகியது என்று உனக்குத் தெரியாது. இன்றுவரையிலும் முழுவதுமாய் உன்னை மறக்க ஏலாமல்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் மீண்டும் என் பாதையின் எதிரே வந்திருக்கிறாய் ரஞ்சி. என்னை நீ எந்த இடத்தில் இன்று வைத்திருக்கிறாய் என்று யோசித்து யோசித்து குழம்பிப் போய்க்கிடக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது சற்றுத் தூரம் வரை உன்னுடன் பேச்சுத் துணையாக இருக்கப் போகின்றவன் நானென்று. அதுதான் என் இடம். உன் பயணம் மேலும் தொடரும் அவர் பயணமும் எவர் பொருட்டும் நிற்பது கிடையாது ரஞ்சனி. எதிர்ப்படும் யாரேனும் உனக்கு என்னைவிட இணக்கமான துணையாக கிடைக்கலாம். நீ அத்துணையின் கைகோர்த்து தொடர்ந்து பயணிப்பாய். நல்லது. ஆனால் எனது ஆசை விருப்பம் இதில் ஒன்று உண்டு. ஒரு நவம்பர் மாதம் மழை நேரத்து மாலையில் எனக்கு அறிமுகமான கனவும் காதலும் நிறைந்த கண்களை நான் நேசிக்கிறேன். அந்தக் கண்கள் அன்று கண்ட கனவுகளைத் தொலைத்துவிடக்கூடாது. உன்னை உன் கனவுகளுக்காகவும் அறிவுக்காகவும் உனது வருத்தம் சோகம் பொறுப்புகள் அத்தனையோடும் சேர்த்து எதிர்ப்பார்ப்புகள் குறைவாக நேசித்தவன் என்கிற நிறைவு இப்போது எனக்கிருக்கிறது. நீ இன்னும் தெளிவாகும் வரை, உன் டிப்ரஷனிலிருந்து வெளிவரும் வரை ஒரு நல்ல நண்பனாக, உனக்கு தார்மீக பலமாக கொஞ்ச காலம் இருப்பேன். நான் வழிப்போக்கன் தானே ரஞ்சனி? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான்காவது சுற்று

செல்மாவை ராஜு மீட்டுத் தந்ததும்தான் என் இயல்புக்குத் திரும்பினேன். நேற்று காரைக்குடியில் சாப்பிட்டுவிட்டு என்னை தெருமுக்கில் இறக்கிவிட்டான். அவனின் ஸ்பரிசம் என்னை அனல் மீதேற்றியது. இவ்வளவு நாள் உறங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒரு உணர்வு சட்டென்று விழித்துக் கொண்டது. அவனுடைய அணைப்பும் முத்தமும் ஞாபகத்திற்கு வந்து உயிரை வதைத்தது. இந்த இரவு மிருகமாய் மாறி என்னை வதைக்கிறது. என் மென்னுடலுள் ஏதோவொன்று பொங்கிப் பொங்கி அணைகிறது. ஹோட்டலில் சாப்பிடும் போது என் கண்களைப் பார்த்து பேசிய அவன் விழிகளின் ஒளி என்னை உடைத்துப் போடுகிறது. எத்தனை தெளிவாய் பேசுகிறான். வழித்துணையாம் பேச்சுத் துணையாம், இனிய நண்பனாய் என்றும் இருப்பானாம். எப்படி சாத்தியம், நட்பு காதலாகும் சாத்தியங்கள் நிறைய இருக்கிறது இவ்வுலகில், கனிந்த காதலொன்று மீண்டும் நட்பாய் மாறுவது எங்கனம்? நட்பிற்கு களங்கம் விதைப்பவளாய் நானிருக்க மாட்டேன்.

மோகமும் மெளனமும் அருகருகே நிற்கிறது. பாறையாய் இறுகிக் கிடந்தவள் திடீரென்று உடைபட்டு உருகத் தொடங்கிவிட்டேன். ராஜு, இப்போது உன் மீது மீண்டும் கிளர்ந்தெழுகின்ற இந்த உணர்விற்கு என்ன பதில் சொல்ல? இது காதல் இல்லைதான், காமம். வெகு நாள் நான் மறந்துபோயிருந்த அது என்னுள் பல்கிப் பெறுகி உன்னை வந்தடைந்துவிட்டது. சந்திரனுடன் வாழ்ந்த காலங்கள் முழுவதும், மனதின் அடியாழத்துள் ரகசியமாய் உன்னைப் புதைத்து வைத்திருந்தேன் தெரியுமா உனக்கு? அவன் என்னை அடித்து துன்புறுத்தும் போதெல்லாம் எங்கேயாவது உன் குரல் கேட்குமா என்று ஏங்கியிருந்தேன். காதலித்த போழ்துகளில் கனவு வெளிகளில் எத்தனையோ முறை கூடிக் களித்திருக்கிறோம்தானே? நான் சிதறிக் கிடக்கிறேன் ராஜு வெறுப்பின் அடிஆழம் வரை சென்று திரும்பியவள் நான். ஆனாலும் மனதின் ஆதி ஆசையான காமத்தை துறக்கமுடியவில்லை. எனக்கு அதில் கசப்பான அனுபவங்கள் மட்டுமே கிடைத்திருந்த போதினும். என்னுடலில் எத்தனை தழும்புகள் தெரியுமா? அதையும் மீறி இந்த வெட்கம் துறந்த உடல் மற்றொரு உடலைக் கேட்கிறது. வெட்கம் என்பதே மிகையுணர்வு, அது பெண்கள் மீதேற்றப்பட்ட பாதுகாப்பு வளையம். காலம் காலமாய் கட்டமைத்த புனிதங்களின் மீதேறி உன் உடலை அடைந்து அடுத்து என்ன செய்யப் போகிறேன்? இது சரியா தவறா. எப்படிப் பார்த்தாலும் மனதில் விழுந்த முதல் ஆண் நீதானே, நீ என் செல்மாவை என்னிடம் சேர்த்தவன். உனக்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். என் அன்பையும் நன்றியையும் எப்படி வெளிப்படுத்துவேன்? அன்பின் உச்சமான வெளிப்பாடு உடல் பகிர்வுதான் ராஜு. என்னை எடுத்துத் தான் என்னை நீ மீட்டுத் தரவேண்டும்.

யாருக்கும் தெரியாமல் நீயும் என்னை அழைப்பது என் காதுகளில் விழுகிறது. உன் விழைவுகள்தான் எனக்கும். ஆனால் உன்னால் வெளிப்படையாக சொல்ல முடியும். எனக்கு சிரமம், சிக்கல், மிகப் பெரிய மனப்போராட்டம். என்னுடைய மொராலிட்டி. தூய்மை புனிதம் கற்பு இதெல்லாம் பிரச்சனை இல்லை. கசந்துபோன மண வாழ்க்கையில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டேன். நினைவிருக்கிறதா ராஜு, என்னை நீ எப்படியெல்லாம் கொண்டாடுவாய். வணங்குவாய். வழிபடுவாய் அதெல்லாம் வேண்டும். நீ உன் மனைவியிடம் எப்படி நடக்கிறாயோ தெரியாது, ஆனால் என்னை தேவதையாகவும் தெய்வப்பெண்ணாகவும் தான் நடத்தினாய்; நான் உன்னை விட்டு பிரிந்திருந்தாலும் உள்ளுக்குள் உன்னை தினம் தினம் நினைத்துக் கொண்டுதானிருந்தேன். என்னை பூஜித்த உனதன்பிற்கு நான் எதுவுமே செய்யவில்லை. பிரிந்து சென்றதுதான் மிச்சம். இதோ வெகு அருகில் வந்திருக்கிறேன். எடுத்துக் கொள் நான் உனக்கானவள். இனி உனக்கு மட்டுமேயானாவள். உனக்கு தேவைப்படும்போதெல்லாம் நான் தடாகமாவேன். என் குளத்தின் தாமரையாகிவிடு ராஜு, உடனடியாக வந்துவிடு, வந்தென் உயிரைத் தின்றுவிடு தழலென எரியும் என் மோகத்தைக் தீர்த்துவிடு, முடியாதெனில் என் மூச்சையாவது நிறுத்திவிடு.

ஐந்தாவது சுற்று

பிரிந்த நண்பர்கள் வெகு நாள் கழித்து சேர்ந்ததைப் போல பேசினோம் பேசினோம் நிறைய பேசினோம்.
தூக்கம் வரவில்லை. ரஞ்சனியை நான் ஏமாற்றுகிறேனோ என்று மனம் ஏசியது. அவளுடைய அவல நிலையைப் பயன் படுத்தி அவளையே எடுத்துக் கொள்ள பார்க்கிறேனா. பாவம் அவள், அவள் கண்கள் என்னை நன்றியுடனும் காதலுடனும் பார்க்கும் போதெல்லாம் நான் கடிகாரத்தையோ டீவியையோ பார்க்கிறேன். அவளின் தேடலும் தேவையும் எனக்குத் தெரிந்திருந்தது. எனக்கு அவளைவிட மேலதிகமாய் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய ஈகோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. நான் இம்முறை அவளை அலைக்கழிக்கிறேன். ஐந்தாண்டு காலக் காதலில் சில முத்தங்கள் அவசர அணைப்புகள் மட்டுமேயான தகிப்பான மன நிலையில் இரவு பகலாக அவளை மனதால் சுமந்து திரிந்திருக்கிறேன். ரஞ்சனிக்கு ப்ளூ பிடிக்கும், ரஞ்சனிக்கு கமல் பிடிக்கும், ரஞ்சனிக்கு காரம் ஆகாது, ரஞ்சனிக்கு கத்தி பேசினால் பிடிக்காது, ரஞ்சனி...ரஞ்சனி...ரஞ்சனி...வேறு யாருமேயில்லாத உலகத்தில் அவளுடன் அவளுடன் மட்டுமே வசித்திருந்திருக்கிறேன். ஒரு இன்விடேஷனில் எல்லாக் கனவுகளையும் சிதைந்து போனது.

நான் போலீஸ் ட்ரெயினிங் போயிருந்த சமயம் அவசர அவசரமாய் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து தில்லிக்கு அனுப்பி விட்டார்கள் இவளுடைய பெற்றோர்கள். நான் க்ரிஸ்டியனாம், கறி மீன் வாசம் அவர்கள் குடும்பத்திற்கே ஆகாதாம். இவள் எனக்காக சமைத்த சிக்கன் எங்கள் அன்பின் ஆழங்களை எங்களுக்கு உணர்த்திய அளவிற்கு அவர்களுக்கு உணர்த்தவில்லை, அச்சூழலில் எங்களுக்கு எல்லாவற்றையும் விட்டு ஓடிவிடத் தெரிந்திருக்கவில்லை. அவள் அப்பா கூரியரில் அனுப்பிய இன்விடேஷன் தகவலுக்கானது என்பதை பின்னால் அறிந்துகொண்டேன். அவளற்ற உலகம் இருட்டாய் இருந்தது. எந்தப் பாதையும் எனக்கு வெளிச்சத்தை காண்பிக்கவில்லை. தட்டுத் தடுமாறி நின்று நிலைப்பதற்கே சிலவாண்டுகள் பிடித்தது. அதன்பின் ஹெலனை மணம் செய்து அடுத்த ஆண்டு ரேச்சல் பிறந்து இதோ ஒரு வாழ்க்கைச் சுற்றை முழுவதுமாய் முடித்துவிட்டு எதிர் எதிராய் நிற்கிறோம். அவளுக்கு என்னால் முடிந்த உபகாரத்தை செய்துமுடித்துவிட்டேன். இனி விடைபெறுதல் என்பதுதான் அடுத்த கட்டம். அதுதானே நியாயம் கூட? எல்லாவற்றையும் மீறி என்னிடம் என்ன வேண்டும், எனக்கு அவளிடம் என்ன வேண்டும் என்பதை இருவரும் அறிந்திருந்தோம். நாளை என் பிறந்த நாள், இதை அவள் முன்பு எப்படியெல்லாம் கொண்டாடுவாள் என்பதை எண்ணிப் பார்த்து நெகிழ்ந்தேன். மனம் எதிர்பாராத பரவசத்திற்கு தன்னை தயாராக்கிக் கொள்ள ஆரம்பித்தது. பேசிவிட வேண்டும், இதற்கு முடிவென்பது இருந்துதானாக வேண்டும்.

நான் அவளிடம் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன். ரஞ்சி ரஞ்சி என்று மறுபடியும் கொஞ்சவாரம்பித்துவிட்டேன். இருவருமே ஒருவருக்கொருவர் கண்களால், புன்னகையால் எங்களின் இருப்பால் நெகிழ்கிறோம். நேசிக்கிறோம், இந்த முறை எங்கள் நேசிப்பில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான் அது தூய்மையான காதல். அந்த பாசாங்கான சொல்லை கடந்துவிட்டோம். அவளும் ஒரு தெளிவில்தான் நிற்கிறாள். பிறந்த நாள் பரிசாக அவளை முழுதாய் பார்க்கவேண்டும் என்று சொன்னேன். முதலில் தயங்கினாலும் என் கெஞ்சுதல்கள் அவளைக் கரைத்தது. ‘என்ன ராஜும்மா இப்படி கேக்கறே உன்னை ஏமாத்தவும் முடியலை ஆனால் ரொம்ப கூச்சமாயிருக்கு. என்னை தரச் சொன்னா கூட தந்திடறேன் இது வேணாமே’ என்றாள். பிடிவாதமாய் நின்று பார்க்க வேண்டும் பார்த்தேயாகவேண்டும் என்ற என் தொடர் தாபத்தை தகிப்பை புரிந்துகொண்டு சேரில் கட்டிப்போட்டுவிட்டு எனக்காக எனக்காக என்னை முன்பு உயிருக்குயிராய் காதலித்த குற்றத்திற்காய் தன்னுடைய நைட்டியை கழட்டி என்மீது எறிந்தாள். அவளின் வளைவுகள், அவளின் அழகான திமிறிய முலைகள், சதைப்பிடிப்பான தொடைகள், என்னை பித்தேறச் செய்கின்ற யோனி, குழைவான இடுப்பு பெண்ணுடல் சொர்க்கம். பெண்ணுடல் அதிசயம். பெண் தேவதைதான் சந்தேகமேயில்லை. அங்குலம் அங்குலமாய் அவளை துய்க்க விரும்பினேன். தொட்டுத் தழுவ ஆசைப்பட்டு கட்டை அவிழ்க்க மன்றாடினேன். புன்னகைத்துவிட்டு என் கைலியையும் சட்டையையும் அணிந்து கொண்டு கட்டை அவிழ்த்தாள், அவளின் நிர்வாணத்தை விட இது அதிகமாய் என்னை பைத்தியமாக்கியது. என் வாசனை அவள் உடலின் மீதிருந்து என் உடைவழியாக கசிந்தது.

ஒரு முறை – ஒரே ஒரு முறை அவளுடான உடல் பகிர்வில் எங்களின் இந்தக் ஆவேசம் அடங்கிப் போகும் என்று தெரிந்தது. அவளுடைய உடல் என் பக்கத்தில் இருந்தபோது பிரமிப்பாய் இருந்தது. கன்னம் குழிவிழ சிரிக்கும் அவள் சிரிப்பையெல்லாம் சிதற விடாமல் கைகளில் ஏந்தி ஆராதித்தது நினைவில் நிழலாடியது. கையருகே காதலி. பழகிய தேவதை. மனக் குரங்கிடம் மண்டியிட்டுச் சொல்லிவிட்டாயிற்று அது கேட்பதாய் இல்லை உடையற்ற அவளுடல் மட்டுமே கனவிலும் நினைவிலும் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. இவள் அதன் பின் சலித்துப் போவாளா? தீர்ந்துவிடக் கூடிய ஆசையா இது. தொட்டபின் கொழுந்துவிட்டு எரிந்து தொடர்கதையாகிவிட்டால்? எதிலிருந்து துவங்குகிறோம் இப்பயணத்தை – எதில் கொண்டுவிடும் இது என்பது தெரிந்திருக்கிறதே. அவள் சந்திரனை விட்டு விட்டாள் ஆனால் நான் ஹெலனை தாங்கிக்கொண்டிருக்கிறேன். இது ஹெலனிற்கு தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் கொன்று விடுவாள். மிகவும் பொசசிவான பெண். திருமணமாகி இத்தனை வருடங்களில் எங்களுக்குள் பெரிதாய் ஈகோ இல்லை. நானே பலசமயங்களில் விட்டுக் கொடுப்பவனாய் இருந்திருக்கிறேன். ஹெலனுக்கு நான் வேண்டும். அவளை மீறி என்னாலும் ஏதும் செய்ய முடியாது அதனாலேயே இவ்வளவு நிதானமாய் என்னால் யோசிக்க முடிகிறது. உடலின் பதட்டங்களை கவனிக்க முடிகிறது. புத்தியால் மனதால் எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்க முடிகிறது. ரஞ்சனியுடனான உறவு முறிந்துவிட்ட ஒன்று. கண்ணாடி குவளை உடைந்தது உடைந்ததுதான். இனி என்ன செய்தாலும் ஒட்ட வைக்க முடியாது. ஹெலனை எனக்கு மிகவும் பிடிக்கும், என் துணை என்பதற்காய் மட்டுமல்ல அவள் அப்பாவி. குழந்தைத்தன்மைகள் நிறைந்தவள். சர்ச்சில் எல்லோர் முன்னிலையில் வாக்குறுதிகள் கொடுத்து மோதிரம் மாற்றிக் கொண்ட உறவு இது. எனக்காக சாப்பிட்டு, எனக்காக தூங்கி, எனக்காக வேலைகள் செய்து என்று குழந்தையைப் போல என்னை பராமரிப்பவள். அவள் என்னுடைய மனுஷி மாமனுஷி. என் இத்தனை கேள்விகளுக்குப் பின்னாலும் அவள் இருக்கிறாள் அதுதான் காரணம். அதற்கு மேல் ரேச்சல் அவள் புன்னகை இல்லாமல் என் பொழுதுகள் விடிவதில்லை. என்ன செய்வது? இவையெல்லாம் என் புத்திக்கு தெரிகிறது கொழுந்து விட்டு எரியும் விரகத்திற்கும் ஆசைக்கும் தெரியவில்லை. பழையவள் புதிதாய் தெரிகிறாள் புத்தும் புது மலராய் என்னை அணைத்துக் கொள் என்கிறாள், உயிர் கசிந்து நிற்கிறாள். என்ன செய்வது?

ஆறாவது சுற்று

அதீத மனதில் எழுந்த ஆசையை என்ன செய்ய? இவனின் மாய வசீகரங்கள் மீள்வதை செய்ய ஆரம்பித்துவிட்டன. இனி இவனின் அழைப்பின் குரலுக்கு கட்டுப்படாமல் இருக்க ஏலாது. இரு கைகளை விரித்த வாவென்று அழைத்தால் அக்கணத்தை எப்படி எதிர்கொள்வது? மறுக்கவே முடியாமல் அவன் மார்பில் புதைந்துவிடுவேன். சாகசக்காரி இல்லைதான் எனினும் அந்த சாட்டையை எடுக்கப் பிரயத்தனப் படுவேனோ? உன்னைவிட்டு வெகுதூரத்தில் இருந்தப்போது இவ்வளவு பிரச்சனைகள் இல்லை, அருகில் நிற்கும்போதெல்லாம் உயிர் கரைந்துபோகிறேன். வாழ்வின் பாதங்கள் என் மீதேறி நடந்தது நம் பிரிவைச் சொன்ன சொல்லை வெறுக்கிறேன். இதுவரை இவ்வாழ்வில் பெரியதாய் நான் நேசித்தவை எல்லாவற்றையும் உன் காலடியில் கொட்டிவிட ஆசைப்படுகிறேன். நீயில்லாமல் எனக்கு வேறு நேசங்கள் வேண்டியிருக்கவில்லை. என் மனதின் நிரந்தரக் காதல் நீயென்று தெரிந்தும் பேச இயலாமல் மெளனமாய் இருந்து என்ன பயன். என்னை மனதிற்குள் தத்தெடுத்துக் கொள். நான் உனக்கானவள். ஒரு முறை வாழ்விலே ஒரு முறை முறை தப்பலாம் நீ எனக்கானவன் வாழ்வின் கொடுங்கரங்கள் உன்னை என்னிடமிருந்து பிரித்திருக்கலாம். அடைய முடியா பொருளின் மீது ஆசை போகாது – அடைந்துவிடலாம். அப்போதுதான் அடங்குவோம். நீ என் வெளியிலும் நான் உன் மடியிலும் புதைந்து கிடக்கலாம். கூடலின் எல்லா சாத்தியங்களையும் நிகழ்த்துவிட்டு மனதாலும் உடலாலும் பிரிந்துவிடலாம். அப்போதுதான் நம் நேசம் முழுமையடையும் நம்மைப் போலவே, அதன் பின் அது வெறிபிடித்து ஆடாது. கூக்குரல் போடாது. முடிவு செய்துவிட்டேன். உன்னுடன் இவ்வகையாய் இவ்வகையில் மட்டுமே நேசம் முறிப்பதென்று. நாளை உன்னிடம் சொல்லும் வரை என்னுள்ளே பெருகி பெருகி அலையலாய் நிகழ்த்தும் கற்பனைகளை அணைத்தபடி தூங்கிப் போகிறேன். வா கனவில் வந்து கட்டி அணைத்துக் கொள்....

இறுதிச் சுற்று

அவள் வீட்டிற்கு சென்றேன். புன்னகையுடன் வரவேற்றாள். சப்பாத்தி சப்ஜி செய்திருந்தாள். அதிகம் பேசாமல் சாப்பிட்டேன். குழந்தைகள் தூங்கியிருந்தார்கள். அவள் மீதான பார்வையை அகற்ற முடியாமல் தவித்துக் கிடந்தேன். ஈரக்கூந்தலை டவலால் சுற்றியிருந்தாள். டீவியை ஆப் செய்துவிட்டு என்னருகில் வந்தாள். என்னுடைய ரூம் சாவியை கையில் சுழற்றிபடி என்ன கிளம்பறியா இல்ல இருக்கப் போறியா பிரின்ஸ் ஜெபராஜ் முழுப்பெயரிட்டு என்னை அழைத்தாள்.

ஸ்பீக்கரில் சன்னமாக கஸல் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘உயிர் எழுத்து’ ஜூலை மாதம் (current issue) வெளிவந்துள்ளது

Wednesday, June 17, 2009

“கேணி” இலக்கிய சந்திப்பு

எழுத்தாளர் ஞாநியின் புது வீட்டின் பின்னால் அழகான கிணறும் தோட்டமும் உள்ளது என்று நண்பர் பாஸ்கர் சக்தி சொன்னார். ஞாநியும் பாஸ்கரும் பேசிக்கொண்டிருக்கையில் இலக்கிய கூட்டங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றடி இருவருக்கும் நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்று தோன்றியது. அந்த எண்ணத்தை தீவிரப்படுத்தி “கேணி” என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கினார்.

நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் பற்றி உரையாடலாம். வாசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை நண்பர்களுக்கு ஊக்குவிக்கலாம் என்ற அடிப்படையில் ‘கேணி’ ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு துவங்கி 6.30 வரை ஒரு படைப்பாளியோ, வாசகரோ இலக்கியம் தொடர்பான விதயங்களைப் பேச வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது..

இதன் முதல் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “எனக்கு பிடித்த சிறுகதைகள்” என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.


14.06.09 தேதி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஞாநியின் கே.கே.நகர் வீடு இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஞாநியும் பாஸ்கரும் கேணிக்கு ஏதோ இருபது அல்லது அதிகபட்சம் முப்பதி பேர் வருவார்கள் என்று அவதானித்திருந்தார்கள். ஆனால் வந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை தாண்டியது. பேசுபவர் பேசினால் கேட்பவர்களின் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கும்? தீரா உரையாடலின் சொந்தக்காரர் என்று ஞாநியால் புகழப்படும் எஸ்.ரா கம்பீரமான குரலில் பேச்சை ஆரம்பித்தார். வெகு சுவாரஸ்யமான அவரின் பேச்சை நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ரஷ்ய எழுத்தாளர் லெர்மர்தேவினுடைய கதையில் வரும் சம்பவமொன்று, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘வானப்ரஸ்தம்’, புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி’ எனும் கதை, வைக்கம் முகமது பஷீரின் ‘மந்திரப் பூனை’ மற்றும் ப்ரெஞ்ச் கதையொன்று என தன்னை பாதித்த ஐந்து கதைகளைச் சொன்னார். ஏற்ற இறக்கங்களுடனும் அனாயசமான பேச்சுத் திறனாலும் அவர் சொல்லிக் கொண்டிருக்க மந்திரத்தால் கட்டிப்போடப்பட்டது போல அனைவரும் எதையும் தவற விடக்கூடாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.

அவர் பேசியதிலிருந்து என் நினைவில் நின்றவை:

“நாம் யாரும் கதை தெரியாதவர்கள் இல்லை.
எது கதை? அதை கதையென்று ஏன் சொல்கிறோம். ஒரு வசதிக்காகத்தான். வாழ்க்கையை வெவ்வேறு விதமாக எப்படி நாம் பார்க்கிறோம் என்பதை அது கற்றுத் தருகிறது. உலகின் தலைசிறந்த கதையை அளக்க இலக்கணம் எதேனும் இருக்கிறதா? நல்ல கதையை அளப்பது எது? அதற்கான ஸ்கேல் என்னவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் அது வாழ்க்கையைப் பற்றிய உண்மைத் தன்மையை சொல்வதுதான். True to life - நேரடியான உண்மை. அந்த உன்மையை எப்படி சொல்வது. எழுத்தாளரின் சொந்த பார்வை. அந்த உண்மையை எப்படி சொல்கிறான் அதன் பின் அதை சொல்லக் கூடிய டோன்,. கதை சொல்லும் போது வறட்டுத்தனமான குரலில் அல்லாமல் எப்படி சொல்வது என்பது முக்கியம். அதிகாரம் அநாவசியம்.

வாசிப்பவன் சொந்த வாழ்க்கையில் கூட துயருற்று கண்ணீர் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கதையில் வந்த மனிதனின் துயர் தாங்க முடியாமல் சிலர் அழுவார்கள். சில கதாபாத்திரங்களின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு பெயராக கூட வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில கதைகளை வாசித்து நானும் பல நாள் இரவு தூக்கத்தை இழந்திருக்கிறேன்.

கதைக்கு என்ன மாதிரியான முடிவு என்பது முக்கியம். எந்த மொழியானாலும். நேராக சொல்லும் போது குரல் வழியாக சொல்ல முடிகிறது. சொற்களை உச்சரிக்கிறோம்.

சிறுகதையில் உரையாடல் எழுதுவது சுலபம். மெளனத்தை எழுதுவது தான் கஷ்டம்.

நம்மில் பெரும்பான்மையினர் யாரிடமோ எதுவோ சொல்ல நினைத்து சொல்லாமல் விடுக்கிறோம். ஆத்மார்த்த அன்பினைக் கூட பகிர முடியாதவர்களாகிப் போகிறோம்”

எஸ்.ரா பேசிக்கொண்டிருந்த போது லேசான தூறல் போட ஆரம்பித்திருந்தது. அவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டிருந்த அச்சிறு கூட்டம் அதை பொருட்படுத்தாது அப்படியே கேணிக்கருகில் அமர்ந்திருந்தது. செவிக்கு உணவில்லாத போது சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் ஆனால் செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்து அழகான தொன்னையில் கொண்டைக் கடலைச் சுண்டலும் அதன் பின் டீயும் தரப்பட்டது. சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே கூட்டத்தினர் மேலும் மேலும் எஸ்.ராவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சளைக்காமல் எல்லாக் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

கதை கேட்டல் என்பது எவ்வளவு அற்புதமான விதயம் என்று பல நாள் கழித்து உணர்ந்தேன். சரளமான அவரின் பேச்சு, இயல்பான நகைச்சுவையுணர்வு, தெளிவான உச்சரிப்பு என்று கேட்பவரைக் பிரமிக்க வைத்துவிட்டார். கதை சொல்லல் என்பது ஏன் அருகிப் போய்விட்டது. நம் குழந்தைகளுக்கு யார் கதை சொல்லி அவர்களின் அந்த ஆர்வத்தை வளர்ப்பார்கள். நாம் தான் தொடங்க வேண்டும் என்றார் எஸ்.ரா. சின்னஞ்சிறு கதைகள் இன்றைய வாசிப்பு சூழலில் மிகவும் தேவை என்றார். Fables வகைப்படும் கதைகள் வாசிக்க எளிமையும் கருத்தாழமும் கொண்டதாக இருக்கும் என்றார். அது போல தமிழில் எழுதப்படவேண்டும் என்றார். எஸ்.ராமகிருஷ்ணன் இத்தகைய உயரத்தை அடைய அவரின் உழைப்பும், தேடலும், மொழித்திறனும், மொழியின் மீதுள்ள தீராக் காதலும் என்பதை நேரடியாக கண்டுணர்ந்தேன்.


அவர் அடிக்கடி சுட்டிக்காட்டும் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கோணங்கி, டால்ஸ்டாய். சமகால எழுத்தாளர்கள் சிலர் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த ஜே.பி.சாணக்கியா, சந்திரா போன்றவர்கள் காணாமல் போன சோகத்தை பகிர்ந்து கொண்டார் எஸ்.ரா. என்னுடைய நண்பர்களான இவ்விருவரும் எங்கும் போகவில்லை எழுதுவதை தற்காலிகமாய் நிறுத்தியிருந்தார்கள், வேறு என்ன செய்து கொண்டிருந்தாலும் எழுத்து இவர்களை ஈர்த்துக் கொண்டேயிருந்ததால் மீண்டும் புதிய விசையுடனும் உத்வேகத்துடனும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசி முடித்தப் பின் கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளை எஸ்.ராமகிருஷ்ணன் இளம் வாசகர்களுக்காக பட்டியலிட்டுத் தந்துள்ளார். அந்த பட்டியல் அவரின் ப்ளாக்கிலும் உள்ளது. அவை

நூறு சிறந்த சிறுகதைகள்
1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு ? கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ?97;ிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன் 51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

இது போன்ற கூட்டங்களுக்குச் சென்று விட்டு வீடு திரும்புகையில் மனம் முழுவதும் கேள்விகளாலும், புது புது திட்டங்களாலும் நிறைந்துவிடும். அந்த எழுத்தாளரின் ஆளுமையை மனம் அசை போட்டபடி இருக்கும். அவரை பேசுபவராகவும் நம்மை கேட்டுக் கொண்டிருப்பவராகவும் எது நிறுத்தியுள்ளது என்று தீவிரமாக யோசிக்க வைக்கும். ஞாயிறு கேணிக் கூட்டமும் அதையெல்லாம் நினைவிற்கு கொண்டு வந்தது. வழமை போலவே முடிவு செய்தேன் - நிறைய எழுத வேண்டும் நிறைவாய் எழுதவேண்டும்.











Monday, June 15, 2009

Persona (பெர்சோனா)


படம் தொடங்கியதும் சம்பந்தமில்லாத காட்சிகளின் கலவை பார்வையாளனை குழப்பத்திற்குள் ஆழ்த்தும். யாரோ ஒருவரின் உள்ளங்கையில் ஓங்கி அறையப்படும் ஆணி, ஒரே வெட்டில் துண்டாடப்படும் மருகம், பழங்கால காரில் போலீஸ்காரர்கள், விளக்கின் சுடரலைதல், படுத்திருந்த சிறுவன் அது பிடிக்காமல் எழுந்து புத்தகம் வாசிக்க, அதுவும் பிடிக்காமல் தன்முன் பிரம்மாண்டமாகத் தெரியும் பெண்ணின் மங்கலான உருவப் படத்தை தடவிப் பார்த்தல் போன்றவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருந்தாலும் அவை கூட்டாக உணர்த்தும் செய்தி – இருண்மை, குழப்பம், அர்த்தமற்ற தன்மை. இருத்தலின் கேள்வி.

படம் தொடர்கிறது. எலிசபெத் வார்க்லெர் (லிவ் உல்மன்) பிரபல நடிகை. பேரழகி. கணவனும் சிறு மகனும் கொண்ட அழகிய குடும்பம். பணம் புகழ் என தெள்ளிய நீரோடையாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கத்தானே வேண்டும்? அப்படியாகவில்லை எலிசபெத் சோக காட்சியொன்றில் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று வெடித்துச் சிரிக்கிறாள். அதன்பின் அவள் நீண்ட மெளனத்திற்குள் விழுகிறாள். எழ முடியாத மெளனம். அத்துடன் அவளின் இயக்கங்கள் முடங்கின. ஆஸ்பத்திரியில் அவளுடைய உடல் மற்றும் மன நலம் நன்றாகவே உள்ளது என்கிறாள் டாக்டர். அவள் சொல்லாத சொற்களுக்காய் அனைவரும் வருந்தவே சிகிச்சைக்கு ஆட்படுத்தப்படுகிறாள். வெறுமையான ஹாஸ்பிடல் வளாகத்தில் எலிசபெத் இருந்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது என ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தன்னுடைய கடற்கரை கெஸ்ட் ஹவுஸ்லில் நர்ஸ் அல்மாவின் துணையுடன் அனுப்புகிறாள் டாக்டர்.


இங்குதான் தொடங்குகிறது அடையாளம் அழித்தல் அல்லது துறந்தலின் ஆரம்ப நிலை. நர்ஸ் அல்மா (பிபி ஆண்டர்ஸன்). இருவர் மட்டும் வாழும் உலகத்தில் அல்மா மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறாள். பேச்சென்றால் அப்படி ஒரு பேச்சு சரளமாக, விரிவாக, தங்குதடையில்லாமல், ராப்பகலாக, எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி சகலத்தைப் பற்றியும் சகலரைப்பற்றியும். மிகப்பெரிய நடிகை எலிசபெத் கேட்கிறாள் என்றாள் சும்மாவாவென பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் அல்மா. எலிசபெத் பேசவில்லையே தவிர நன்றாக உள்வாங்கிக் கொள்கிறாள். சிலசமயம் அல்மாவின் பேச்சை ரசிக்கும்படியான சமிக்ஞைகளைத் புன்முறுவலாய் தருகிறாள். அல்மா தேனீர் தயாரிக்கும்போது அவளுக்கு உதவுகிறாள் எலிசபெத். இருவருக்கும் மெல்லிய நூலிழையாய் ஒருவர்கொருவருடனான ஈடுபாடு ஆரம்பாகிறது.

கடல் அலையை ரசிக்கிறார்கள், புத்தகம் வாசிக்கிறார்கள், காளான் பிய்த்தெடுக்கிறார்கள், சமைக்கிறார்கள், இசை கேட்கிறார்கள், மழை நாளின் அடர்குளிரை போர்வையாலும் தேனீராலும் இணக்கமான நெருக்கத்தாலும் ரசித்து கடக்கிறார்கள். அன்றைய இரவில் அல்மா தன்னுடைய ரகசியம் ஒன்றினை எலிசபெத்துடன் பகிர்ந்து கொள்கிறாள். காதலுடன் கடற்கரை ரிசார்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள் அவன் நகரம் சென்றிருக்கவே இவள் தனியாக பீச்சுக்கு போய்விடுகிறாள். அங்கு இளம்வயதுப் பெண்ணொருத்தி உடலில் பொட்டுத் துணியில்லாமல் ஸன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் ஆசையாக இருக்கவே உடைகளைக் களைந்துவிட்டு அவளருகே போய் படுத்துக் கொள்கிறாள். அப்பெண்ணின் பெயர் காத்ரினா என அறிகிறாள். இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கையில் தங்களை யாரோ பார்ப்பதை உணர்கிறார்கள். இளவயதுப் பையன்கள் இருவர் அவர்களை மறைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தைரியமான பையன் அருகில் வரவே காத்ரினா அவனுடன் உறவு கொள்கிறாள். ஆவலான அல்மாவும் அவனை தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனும் சேர்ந்து கொள்கிறான். அவசரமாக ரிசார்ட்டுக்குச் சென்ற அல்மா அன்றிரவு காதலுடனும் இணைகிறாள். மறக்க முடியாத அற்புதமான உறவாக அது இருந்தது என்பதை அல்மா எலிசபெத்திடம் சொல்லும்போது குற்றவுணர்வின்றியே சொல்கிறாள். உணர்ச்சி அலைக்கழிப்பில் இக்கதையைக் கேட்டபின் துயில் கொள்கிறார்கள்.

அடைமழைப் போன்ற அல்மாவின் தொடர்பேச்சு நமக்கே அலுக்கத் தொடங்குகையில் மெல்ல அவர்களுக்குள் விரிசல் விழத் தொடங்குகிறது. எலிசபெத் யாருக்கோ எழுதிய கடிதத்தில் அல்மாவின் விஷயத்தை விலாவரியாக எழுதிவிட்டாள். போஸ்ட் செய்யும் முன் படித்துவிட்ட அல்மா உடைந்து போகிறாள். தான் பெரிதும் நேசித்த பெண்ணின் நம்பிக்கை துரோகம் அவளை ஆத்திரமூட்டுகிறது. ஏன் இப்படி செய்தாய் பேசு பேசுடி என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் அல்மா. அதற்கு எலிசபெத்திடமிருந்து பதில் ஏதுமில்லை. எப்போதும் போல தீவிரமான மெளனம். நீ சாகஸக்காரி ஏமாற்றுகாரி என்று வசைபாடுகிறாள் அல்மா எரிச்சலுற்ற எலிசபெத் அவளை அறைந்து தள்ளுகிறாள். ஆவேசமான அல்மா கொதிக்கும் நீரை அவள் மீது ஊற்ற தலைபடுகிறாள். அதிர்ச்சியில் உரைந்துப் போன எலிசபெத்தைப் பார்த்த அடுத்த நொடி கரைந்து போகிறாள் அல்மா. தனியாக சென்று ரத்தம் ஒழுகும் தன் மூக்கை கழுவி சுத்தம் செய்துகொண்டே குலுங்கி அழுகிறாள் அல்மா. அவளிடம் வரும் எலிசபெத் அவள் கூந்தலை கோதுகிறாள். இருவரும் கண்ணாடியில் பார்க்கையில் ஒருவர் மற்றொருவராக மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அல்மா தன் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை, நான் நீயாக முடியாது நீ நானாகவும் ஆகமுடியாது என மறுக்கிறாள். ஆனால் இறுதியில் அவள் அவளுடன் ஐக்கியமாவதை அவளால் தடுக்க இயலவில்லை.

எலிசபெத்தின் உடைபடாத மெளனம் தன் தீவிரத்தன்மையை ஒருபோதும் இழக்கவில்லை. அல்மாவும் அதற்கு மேல் செய்வதற்கு ஏதுமில்லாமல் சொல்வதற்கு ஏதுமில்லை. எல்லா வார்த்தைகளும் தீர்ந்துபோய்விட்டன. தன்னுள் இறங்கிய நடிகையின் பிம்பத்தை சுமந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு அகல்கிறாள். இறுதிக்காட்சியில் ஷூட்டிங் நடக்கிறது. கேமரா இயங்குகிறது, பெர்க்மென் தெரிகிறார் – அபத்தமான இவ்வாழ்வில் எது நிச்சயம் எது நிச்சயமின்மை. யார் நிரந்தரம் எது அழிவு எது முரண் எது நிலையென்ற பலவகையான கேள்விகளை எழுப்பாமல் எழுப்புகிறார்.

இருவருக்குள் நிகழும் விதயங்களை வெகு அருகில் நின்று பார்ப்பதை போன்ற உணர்வினை ‘பெர்சோனா’ அளிக்கிறது. பெர்கமனின் சினிமா பார்வை வெகு நுணுக்கமானது. கமர்ஷியல் படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னுடைய கலைப்படமான பெர்சோவினால் பெரும் புகழையும் விருதுகளையும் அடைந்தார் அசல் திரைக்கலைஞர் இங்மர் பெர்க்மென்.


('தடாகம்' இணைய இதழில் வெளிவந்தது)

Thursday, June 11, 2009

மாலன் சிறுகதைகள்

‘ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படியிருக்கும்?’ என்று கேட்பவருக்கு ‘இதோ இப்படி இருக்கும்!’ என்று காட்டக்கூடிய தொகுப்பு என்று ‘மாலன் சிறுகதைகளை’
ஆனந்த விகடன் பாராட்டியிருக்கிறது. அது முற்றிலும் உண்மை என்பதை இத்தொகுப்பை வாசித்ததும் உணர்ந்தேன்.

மாலன் கதைகளை ஏற்கனவே ‘மாறுதல் வரும்’ மற்றும் ‘கல்லுக்குக் கீழும் பூக்கள்’ தொகுப்பில் வாசித்துள்ளேன். கிழக்கு பதிப்பகம் அழகான லேவுட்டுடன் புதிய பதிப்பினை வெளியிட்டதும் வாங்கிவிட்டேன். ஏற்கனவே வாசித்தவைதானே என அலட்சியமாக புத்தக அலமாரியில் வைத்துவிட்டேன். உடல் நலக் குறைவால் செயலற்றுக் கிடந்தபோது கண்களை உறுத்தியது சரி மறந்து போன கதைகளை மறுபடியும் வாசிக்கலாம் என கையில் எடுத்தேன். நான்கு மணி நேரம் கழித்துதான் என்னால் புத்தகத்தை கீழே வைக்க முடிந்தது. சில புத்தகங்களை மறுபடியும் வாசிக்கையில்தான் முன்பு விடுபட்டவை நம் கண்ணுக்குத் தென்படும். மீள்வாசிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பதை நன்குணர்ந்தேன். முன்பு வாசித்திருந்தபோது பிடித்ததைவிடவும் தற்சமயம் மனதிற்கு வெகு நெருக்கமாக அக்கதைகளை உணர்ந்தேன். சில கதைகள் நினைவில் என்றும் நிற்கும்படியாக ஆழமாக பதிந்துவிட்டது.

தொகுப்பில் மொத்தம் 53 கதைகள். கிட்டத்தட்ட எல்லாக் கதைகள் நேரடியானவை. எவ்வித பாசாங்குகளின்றி முகத்தில் அறைபவை. மொழி ஆசிரியருக்கு வெகு அழகாக வசப்பட்டாலும் எளிமையான மொழிநடையையே கையாளுகிறார். Pleasure of reading (வாசிப்பின் ருசி) என்பதையெல்லாம் மீறி அவர் வார்த்தையிலே சொல்வதானால் “யோசிக்க யோசிக்க எனக்குக் கேள்விகளே மிஞ்சுகின்றன, பதில்கள் அல்ல” கதைகள் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டியும் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை, சமூகத்திலும் அரசியலிலும் பெரிதாக எவ்வித அதிசயத்தக்க மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லைதானே? எனக்கு மிகவும் பிடித்த கதைகள் ‘இதெல்லாம் யாருடைய தப்பு? உயிரே..உயிரே, முகங்கள், ஈரம், வித்வான், ஆயுதம், இறகுகளும் பாறைகளும், கரப்பான் பூச்சிகள், பெண்மை வாழ்கவென்று, மாறுதல் வரும், கல்யாணம் என்றொரு ரசாயனம், அக்னி நட்சத்திரம், வ்ழியில் சில போதை மரங்கள், பெண், காதலினால் அல்ல, கடவுள், கற்றதனால் ஆன பயன், எங்கள் வாழ்வும், யோசனை.

சில கதைகள் lecture மாதிரி எதோ ஒரு க்ளாஸ் ரூமிற்குள் அமர்ந்திருக்குபடியான பிரம்மையைக் கொடுத்த போதிலும் சொல்லிய விதம் தெளிவாகவும், diplomatic காக இருப்பதாலும் பதட்டப்படாமல் வாசிக்க முடிகிறது. இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பத்திரிகை சுதந்திரம், சுயம் சார்ந்த சிந்தனைகள், பெண்ணியம் என் எண்பதுகளில் இருந்த பிரச்சனைகளை அந்த மக்களின் வாழ்க்கை நிலையை அழுத்தமான பதிவாக்கியிருப்பது இதன் சிறப்பு. கனவில் மிதந்து கொண்டிருக்காமல் கன்னத்தில் அறைந்து நிதர்சனத்தில் நிற்க வைக்கும் இக்கதைகள் யாவும் வாழ்வியல் பொக்கிஷம். மாலனைத் தொடர்ந்து இது போன்ற இலக்கியத் தரத்தில் யதார்த்த கதையெழுத ஆளில்லாமல் போனது சோகம்.


மாலனின் கதைகளின் தனிச்சிறப்பு அதன் நம்பகத்தன்மை மற்றும் மிகவும் வெளிப்படையான மொழி. எவ்வித க்ராமருக்கும் சிக்காமல் சிறுகதை வடிவம் பற்றியெல்லாம் மெனக்கிடாமல் கதைகள் தன்போக்கில் வழுக்கிக் கொண்டு போகிறது. அதன் பயணத்தையும் அளவையும் அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது. அவரின் சொற்சிக்கனம் என்னை வியக்க வைத்தது. மொழித்திறன் இருந்தும் அதை தேவையில்லாமல் எங்குமே திணிக்கவில்லை அவர். மொத்த புத்தகமே அடிக்கோடிடப்பட வேண்டியதான கட்டாயத்தில் இருந்தபோதும் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.

“பிம்பங்களை உடைத்துப் போட்டுவிடாத பாவனைகள். தனக்கு ஏற்றாற்போல் கவர்ச்சியாக, வசீகரமாக நிறுத்தும் முகங்கள். பார்த்துப் பார்த்து சுயக்கிறக்கம் கொள்ளச் செய்யும் முகங்கள்’

“வேண்டியிருக்கிறது எல்லாருக்கும் ஏதோ போதை.”

“வசந்தம் தப்பிப் பூத்த வாசல்மரம் போல காலன் தாழ்ந்து வாழ்க்கை இனித்தது.”

“நிலவு மட்டும் விழித்திருந்த நிசிப் பொழுதில் ஆசை கிளர்தெழ அவளை அணைத்து திமிறிய அவளைத் தழுவி இறுக்கி முத்தமிட்டான்”.

“ஏன் தன்னால் இன்னும், தன் arroganceஐ உதற முடியவில்லை? ஈகோவை வழித்தெறிந்துவிட்டு ஒரு முறுவலுடன் எதனுடனும் கை குலுக்க முடிவதில்லை”?

“பிரச்சனை மரணமல்ல, வலிகள்”

“எந்தச் சுருதியிலும் சேராது காற்றில் நனைந்து வரும் வண்டியோட்டியின் பழைய சினிமாச்சங்கீதம். இவையேதுமில்லாவிட்டால் ஈரக் காற்றில் காய்ந்து கொண்டு தேடுகிற தனக்குப் பிரியமான நட்சத்திரங்கள்”.....

“உனக்கு காதல் வேண்டாம் ஜெகன், உனக்கு மட்டுமில்லை நம்ப தேசத்து ஏழை இளைஞர்களுக்குக் காதல், அரசியல், இலக்கியம், ரசிகர் மன்றம் எல்லாம் அதிகம்”.

“கல்யாணம் – தீரமான ஆண்பிள்ளைகளைக் கோழையாக்குகிறது. மென்மையான பெண்களைக் கல்லாக இறுக்கிறது”.

“நான் கவிதை எழுதற பொம்பளை. அலையிலே அப்படியே மிதந்துகிட்டு இருக்கிற கப்பல். அடி மணல்லே ஊணி நிற்கிற நங்கூரம், பலசாலியா பிராக்டிகலா வாழ்க்கையைச் சந்திக்கிறவனா இருந்தாத்தானே நல்லது”?

“ஓர் இளம் பெண்ணின் சிரிப்புக்குள் எத்தனையோ எழுதப்படாத கவிதைகள் இருப்பதாகத் தோன்றிற்று.”

“பாரதியாரை தகப்பன் போல் நேசிக்கிற சந்தோஷம்”

“அரசுக்கு எதிராக ராணுவம் கிளர்ச்சி செய்ய வேண்டும். நாடு உருப்பட வேண்டும் என்றால் அரசியல் கலாசார, ஆன்மீக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறீர்கள், எப்போதேனும் சாதாரண மனிதனை நினைத்துப் பார்த்ததுண்டா”

"எல்லோருடைய சுதந்திரத்திற்கும் ஒரு விலை உண்டு. சோறு, துணி, பணம், பதவி, பத்திரிகை விளம்ப்ரம் இப்படி ஏதோ ஒரு விலை. இந்த விலை கொடுக்க முடிந்த அவரவர் சக்திக்கேற்ப அவரவர் சுதந்திரம். அவரவர்க்களுடைய அடி வயிற்றைத் தாக்காதவரை, அடுத்தவர்களுடைய சுதந்திரம் பற்றி இவர்கள் மேடையில் பேசவும், எழுதவும் கூடும்”.

“நான் தோற்றுக் கூட போகலாம். ஆனாலும் அப்போதும் நான் முயற்சித்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்”.

“வெகுஜனப் பத்திரிகைகள் மாதிரியே ஒரே ரொமாண்டிக் குப்பையா இருக்கு”

“பத்திரிகை விக்கணும்னா சினிமாக்காரனைப் பத்தி எழுதித்தான் ஆகணும். காதலைப் பற்றி எழுதணும். செக்ஸ் பற்றி எழுதணும்”.


“சமூகத்தின் அடிப்படைகளைத் தருவதற்காக உழைப்பவன் இந்த அமைப்பில் மிகக் குறைவாகவே அவற்றைப் பெறுகிறான்”.

“மிடில் க்ளாஸின் ஓட்டுக்கள் ஒரு அரசாங்கத்தை உருவாக்காது. ஆனால் வெகுஜனங்களின் விரோதம் சாம்ராஞ்யங்களைச் சாய்த்துவிடும்”.

“உங்களோடு ஓடுவதில் நாங்கள் பலவீனர்களாக இருக்கலாம். அது உடம்பின் அமைப்பு: ஆனால் படிப்பதில் அல்ல. எந்த ஆணையும் எங்களால் அறிவில் ஜெயிக்க முடியும். பத்தாம் வகுப்பு ரிசல்ட்களைப் பார். முதல் இடம் எல்லாம் பெண்கள்!”


நாமெல்லாம் இப்போது ஓரளவிற்கு sophisticated life வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சக மனிதர்களின் நலன் பற்றியோ, சமூக அறவுணர்வுகள் இன்றியும் வாழ பழகிக் கொண்டோம். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் தங்களின் அடுத்த தலைமுறையைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். எழுதியிருகிறார்கள். போராடியிருக்கிறார்கள். இங்கிருந்த முற்களை கூடியவரை எடுத்து தெளிவான பாதையொன்றை அமைத்து தந்திருக்கிறார்கள், நன்றி மறந்த தலைமுறையாய் நாம் ஆகிப்போய்விடக்கூடாது என்று அச்சமாக இருக்கிறது.


எழுதுவது வாசிப்பது என்பதில் எதை தேர்ந்தெடுப்பது என குழம்பும் போதெல்லாம் வாசிப்பதையே பெரிதும் விரும்புவேன். தேவதச்சன் சொல்வது போல “புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில் வலப்பக்கமும் இடப்பக்கமும் எல்லாமும் பார்த்துக் கொண்டு எதிலும் கலக்காமல் நிற்கும் ஒல்லிப் பனைகள் வரிசையில்” நின்று கொண்டிருக்கப் பிடிக்கும். ஒருவருடைய படைப்பாற்றலினால் வாழ்வின் உன்னதங்களை அவரால் கண்டடையமுடியும். நல்ல எழுத்தாளனால் வாசிப்பரையும் மேல்நிலைக்கு அழைத்து செல்லமுடியும். மாலன் கதைகளை வாசித்ததும் இது போல நானும் எழுதவேண்டும் என்ற மன எழுச்சி ஏற்பட்டது. மென்மையான இசை, மிதமான உணவு, மாலன் சிறுகதைகள் இவை தற்காலிக நோய்மையிலிருந்து என்னை விடுவிடுபடச் செய்தது. என் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். உலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அடுத்து செய்வதற்கான வேலைகளை பட்டியலிட்டேன். முதலில் இத்தொகுப்பிற்கான விமர்சனம் எழுத வேண்டும் பின் நானும் ‘எழுத’வேண்டும். நல்ல எழுத்தை நோக்கிய என் பயணத்தை இன்றிலிருந்து தொடங்கிவிட்டேன். வாழ்த்துவீர்கள்தானே?

மாலன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
கிழக்குப் பதிப்பகம்
33/15, Eldams Road
Alwarpet, Chennai – 600 018
Ph – 4200 9601