“இனி ஒரு போதும் நாம் சந்திக்க வேண்டாம், இதுவே நான் உனக்கு அனுப்பும் கடைசி குறுஞ்செய்தி..எல்லாவற்றையும் மற...என்னையும்தான். இது உனக்கு நடந்திருக்கக் கூடாதுதான். மன்னித்துவிடு.”
எத்தனை முறை வாசித்துப் பார்த்தும் அந்த மெசேஜ் இப்படித்தானிருந்தது. ஏன் இப்படி அனுப்பினான். கத்தியின் கூர்முனையாய் இக்கேள்வி மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது. மொபைலை ஆஃப் செய்திருந்தான், தங்களுக்குள்ளான உறவையும் கூட. செயலற்றுப் போய் கடந்து போன கணங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. இது அவளுக்குப் புதிதல்ல...ஆனாலும் இந்தத் தொழிலுக்கு வந்த ஐந்தாண்டுகளில் மிகவும் நெருங்கிப் பழ்கியவன் அவன். அவனுக்குத் தேவையாக இருந்தது உடல் மட்டுமன்று, கொஞ்சம் ஸ்நேகமும் நிறைய புன்னகையும்.
கார்த்திக்தான் ரிஷியை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தி இப்போது கையில் கிடைத்தால் நித்யா அவனை கொன்றே போட்டிருப்பாள். ரிஷு மீதான ஈர்ப்பும் காதலும் அவளுக்கேற்படாமல் போயிருக்கும்.
வாசலில் அழைப்பு மணியின் சத்தம் பொறுமையின்றி வீறிட்டுக் கொண்டிருந்தது. கார்த்திதான். அவர்கள் இருவரும் ஒரே கூரையின் கீழ் ஆறு வருடங்களாய் அறையை மட்டும் பகிர்ந்து கொள்பவர்களாய் இருந்தார்கள். கார்த்தியைப் பார்க்க பிம்ப் மாதிரியே இருக்காது. பார்க் அவென்யூ ஷர்டில் ஏதோ விளம்பர கம்பெனி அதிகாரி போலிருப்பான். வாயைத் திறந்தால்தான் அவனுடைய விதயம் வெளியே வரும். பான் பராக், சிகரெட், கஞ்சா என்று எது எப்போது கிடைக்கிறதோ அதை மென்றுகொண்டேயிருப்பான். பங்களூரின் அடர்குளிர் இரவில் நண்பன் கொடுத்த செல்பேசியில் நித்யாவை தொடர்புகொண்டு அதன் பின் வாடிக்கையான கஸ்டமராகி கடைசியில் அவளுக்கே நிரந்தரமான ப்ரோக்கராகிவிட்டான். இருவருக்கும் பங்களூரு அலுத்துவிட்டதால் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
மற்றவர் பார்வைக்கு கணவன் மனைவி போல வாழ்ந்தாலும் அவர்களுக்குள் ப்ரியமான நட்பேதும் இல்லை. முன்பு அடிக்கடி ஏற்படும் சமர் எல்லாம் முடிந்து நீர்த்து வார்த்தைகளுக்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டு வீழ்ந்து கிடக்கிறது. புரிதலினால் வந்த சமாதானம் இல்லை அது, விடை தெரியாத முடிவு காண இயலாத யுத்தத்தின் தற்கால நிறுத்தமது. இதை அவர்கள் இருவரும் அறிந்தேயிருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷமாய் அந்த துவந்தம் துவங்கலாம். ஆனால் வேறு வழியில்லாததால் ஒருவரை மற்றவர் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.
கார்த்தியினுடைய சகிப்புத்தன்மையை நித்யா ரசிப்பாள். அவளுடைய பிடாரித்தனத்தை அவன் ஏற்றுக்கொண்டான். ஏனோ எளிதில் விலக்கிமுடியாத குளுமை அவன் கரங்களுள் இருப்பதாக அவள் உணர்வதால் இவ்உறவு இதுவரை தொடர்கிறது.
நேராக டைனிங் டேபிளுக்குப் போய் ஹாட் பேக்கில் வைத்திருந்த சப்பாத்தியையும் குருமாவை எடுத்துச் சாப்பிட்டான். நித்யாவின் கோலத்தைப் பார்த்ததும் ஏதோ மூட் அவுட் எனத் தெரிந்து ஏதும் பேசாமல் இருந்தது அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது. சமூகம் வேசை என பதித்திருக்கும் விதிகள் எல்லாம் தங்கள் இருப்பை நிரூபிக்க பல முறை அவளுக்கெதிராய் திரண்டது. முகத்தில் அறைந்தது, முட்டி மோதி, ரத்தமும் சதையுமாய் கிழித்தெடுத்து தன் கோரப் பற்களால் மென்று துப்பி பிறகு அவளை கொன்றொழித்துவிட்டதாய் இறுமாந்திருந்தது. முன் எப்போதுமில்லாத புது தெம்புடனும் தெளிவுடனும் அவள் உயிர்த்தெழுந்து கொண்டேயிருப்பதைப் பார்த்து அதிர்ந்து செய்வதறியாது திகைந்து தற்போதைக்கு பின்னடைந்து கிடக்கிறது. அது தன் கத்தியை கூர் தீட்டிக் கொண்டிருக்கும் வரையிலாவது தன் இருப்பின் சுவாசதங்கள் அவளுக்குறுதி.
பதின்ம வயதில் அனாதையான பின் வீட்டு வேலைகள் செய்த இடங்களில் எல்லாம் ஆண்களால், வயதாளிகளால் கைவைக்கப்பட்டு எப்படியோ தப்பித்து பின் வேறு வழியில்லாததால் இத்தொழிலிலேயே முழ்கியவள் அவள். மீண்டெழ முயற்சிகூட செய்வதில்லை.
தன்னை விற்றே தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய வாழ்க்கையில் செய்துகொண்டிருப்பதற்கு யாரின் அனுமதிகள் அவளுக்குத் தேவையிருக்கவிலலை. தனக்கிதுதான் தொழில் என முடிவெடுத்தப்பின் அவள் பெரிதாக வருந்துவதுகூட இல்லை.
சோபாவில் நகத்தை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளைக் கடந்து கார்த்தி அவன் அறைக்குச் சென்றான். மெதுவாக கதவை சாத்தினான். அவனாவது நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்தாள்.
அறையில் அவளைத் தவிர அவளின் இந்தத் தனிமையைத் தவிர யாருமில்லை. கார்த்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமை என்பது கொடும் நிழலைப் போல எப்போதும் அவளுனுடனே இருந்துவருகிறது. இந்த ரிஷி நேற்றிரவு கூட நன்றாகத்தானே தன்னிடம் கதைத்துக் கொண்டிருந்தான், அதே காதலுடன், அதீதக் காமத்துடனும். எப்படியெல்லாம் குழைந்தான்..
‘நித்து, என்னமோ தெரியலைடா ...இன்னைக்கு உன்னைய மட்டும் நினைச்சுட்டேயிருக்கேன்...I miss you dear. :(
‘ம்ம்..நானும்தான்’
‘எத்தனை பேரை பாத்திருப்பேன், யாரோட அன்பும் என்னை இந்தளவுக்கு பாதிச்சதில்லைடா...நீ என்னோட உயிரோட வேர் வரைக்கும் போயிட்டேடி. ஹனி..பேசாம என்னைக் கட்டிக்கோ. இந்த கண்றாவியை எல்லாம் விட்டுடு. உன்ன நான் ராணி மாதிரி பாத்துக்கறேன்.
‘என்னாச்சு ரிஷி தண்ணியா? இந்த டயலாக்கை எத்தனை முறை எவ்வளவு வகையா கேட்டிருப்பேன்னு உனக்குத் தெரியுமா’
‘ஆரம்பிச்சிட்டியா, சரி ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதியிருக்கேன் வாசிக்கட்டா?’ அவன் குரல் சன்னமாக ஒலித்தது
‘கவிதை வேற எழுத ஆரம்பிச்சுட்டியா, சொல்லித் தொலை
“எப்போதும் பெய்கின்ற மழையை விட
இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக
நாம் காத்திருப்பதில்லையா?
உன்னை என்னிலிருந்து
பிரித்துபார்க்க முடியவில்லையடி சகியே
இரவும் பகலுமாய் மிருகத்தையொத்த
ஓர் உணர்வு என்னை விரட்டுகிறது
அது என்னை தின்று தீர்ப்பதற்குள்
சொல்லடி நீ யார் எனக்கு?
ஹேய் நிஜமா நீதான் எழுதினியா இல்ல எங்கிருந்தாவது உருவினியா?
....
சரி கோச்சுக்காதேடா தங்கம். ரொம்ப நல்லாயிருக்கு...இதுக்கு உனக்கு உடனே ஒரு பரிசு தரணுமே..
எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும்தானே?
என்னடா
நீதான்....
அவள் பதில் சொல்வதற்குள் ஃபோனை கட் பண்ணிவிட்டான். ஆனால் அதற்குள் காலையில் பிரிவைப் பற்றிய செய்தி. இடையில் என்ன நடந்திருக்கும்?
கார்த்திக்கு அவர்கள் கல்யாணம் செய்துகொண்டுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனாலும் கண்டும் காணாமல் விட்டுவிட்டான். எப்படியாவது அவளுடைய காயங்கள் ஆறி மற்றவர்களைப் போல சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்துவிட்டான். தன் சந்தோஷத்தை தானே தொலைத்தவள் என்று அவளைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறான் ஆனால் அது அப்படியில்லை. அவளுக்கது நிலைப்பதில்லை அவ்வளவே. இன்பம் தேடும் பயணத்தில் சில சமயம் அவள் அலுத்துக் களைப்பதுண்டு. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது பல சமயம் அவளுக்கும் வாய்த்திருக்கிறது. நித்யாவிற்கு யாரின்மீது எதன் பொருட்டும் பொறாமையுணர்வோ அச்சமோ தேவையற்ற விவாதங்களோ அலுப்பூட்டும் எதிர்ப்பார்ப்புக்களோ இல்லை. வெகு சீக்கிரத்தில் அவளுக்கான மனிதர்களை தேடி சோர்வடைந்துவிட்டாள், பாசாங்கு செய்யத் தெரியாதவர்களாக. அன்பென்ற வலையில் சிக்க வைக்காதவர்களாக இருக்க வேண்டும் அப்படி யாரேனும் இருப்பார்களா என்ற இடையறாத தேடல் அவளைப் பித்தேறச் செய்தது. கடந்து போகும் முகங்கள் யாவிலும் அதைக் காணும் கணத்தை எதிர்நோக்கியேயிருந்தாள். வேட்டையில் கிடைக்கத்தான் செய்கிறது சில சமயம் முத்துக்களும் சில சமயம் சிப்பிகளும்.
ரிஷி அப்படியான நல்முத்து. தன் காதலால் மட்டுமல்லாது காமத்தாலும் திளைக்கச் செய்தவன். அவன் அவளுக்கானவன். அவளைப் போல மற்றுமொருவன். இறகு போல இலகுவானவன். எவ்விதமான கோட்பாடுகளுக்குள்ளும் தன்னை ஒளித்து வைக்காதவன். நித்யாவின் மனதில் படிமமாய் படிந்துவிட்ட ஆண் பிம்பத்தின் ஒரு துளியாய் அவனிருந்ததில் முதலில் ஆச்சரியமும் பின் ஆனந்தமும் அடைந்தாள். புது வெள்ளம் பாய்ந்த நதியாக மாறி அவன் இருப்பிடத்தை நிறைத்தாள். அவனுள்ளும் புறமுமாய் அவனின்றி வேறேதுமில்லையெனும் நிலையில் இரவு பகல் பாராது பேசியும் ஊர்சுற்றியும் பிணைந்தும் மயக்கமாயும் மயக்கம் தெளிந்த நிலையிலும், மென்மைமாயும் அதிவேகமாயும் நிலவொளியிலும் சுடும் வெயிலிலும், மென் குளிரிலும் காலத்தை உறையச் செய்யும் மந்திரத்தன்மையிலும் சுவாசம் சீர்பட்ட நிலையிலுமாய் நாள்களை துளைத்து நகர்ந்து கொண்டிருந்த உயித்தன்மையாய் அவர்களிருந்தார்கள். உடலின் விழைவு இரண்டே தான், அது மரணத்திற்கான காத்திருப்பும், அதற்கு முன் இயன்ற வரை திகட்டும் வரை அதற்கு தேவையானவற்றை அளித்து சுகித்திருப்பதும்தான். தீரா பசியுடன் மரணம் அனைவரையும் தழுவதற்கு முன்னர் உடல் செய்யும் கூத்துக்களுக்கு செவி மடுத்து சரண் அடைந்து அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இவ்வாழ்வின் பெரும் சவால். இடையில் நடக்கும் விதயங்கள் யாவும் நாடகங்கள். இல்யூஷன்ஸ். நிற்பதும் நடப்பதும் ஓடுவதும் எதற்கென்றால் படுப்பதற்காகத்தான். படுத்தால்மட்டுமே மீண்டும் நிற்கவும் நடக்கவும் இயலும். உடலின் மாறா தேவை இன்னொரு உடல். அதுதான் அவள் தன் வாழிவில் கண்டடைந்த உண்மை.
உடலுக்கு காமத்தைவிட இனியது ஏதுமில்லை, அதை விட கொடியதும் ஏதுமில்லை..திகட்ட திகட்ட அதை கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது அது மீண்டும் மீண்டும் ரிஷியுனுடைய அன்பினாலும் காதலாலும் அவளை நெருக்கிக் கொண்டிருக்கிறது. வேண்டாம் இதுவே கடைசி, இன்றுடன் போதும் என்று ஒரு போதும் அவர்களால் நிறுத்திக் கொள்வவே முடியவில்லை. பாண்டிச்சேரி, கொடைக்கானல், ஊட்டி, தேக்கடி என்று காதல் காமத்திலேறி நகரம் நகரமாய் மிதந்து போனதன்றி நிற்பதாயில்லை இவ்வேட்கை. ஒவ்வொரு முறையும் அது தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதனுடனான சமர் ஒருபோதும் சலிப்பதில்லை. மாறாய் வேட்கை அதிகரித்து உடலின் உச்சமாய் அதீதமாய் விண்வெளியில் மிதக்கும் கலமாய் மாயம் செய்து உயிரை வெளியேறியும் பின் மீண்டு உள்ளிருக்கவும் செய்கிறது. அதன் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட கடலாய் அவனும் கலனாய் அவளும் மூழ்கித் கொண்டிருந்தார்கள். அவன் அவளுக்காக வாரியிறைத்த பணத்தைவிடவும் அவனுடை சுண்டுவிரலைக் கோர்த்தபடி நடக்கும் தருணங்களை சந்தோஷமாக நினைவு கூர்ந்தாள்.
நிறைய யோசித்துப் பார்ப்பது புத்தி, அதற்கு கணக்குகள் உண்டு, பயங்கள் உண்டு....யோசிக்காத மென்மனதிற்கு தென்படுவது காதல் மட்டுமே. அவனிடம் அவளுக்குத் தேவைப்பட்டது முழுமையான அவன்...உடலினால் சேருவது மட்டுமல்ல அவளுடைய விருப்பஙகள். தலை கோதி, விரல் பிடித்து, மடியில் கிடத்தி தன் அன்பிற்குரியவனை எப்படியெல்லாம் அள்ளி ஆராதிக்க முடியுமோ ஆராதித்திருந்தாள். அவனும் தன் போர்வையில் எப்போதிருக்கும் கதகதப்பை அவளுக்கு தடையில்லாமல் தந்தவண்ணம்தானிருந்தான். எல்லாயிடத்திலும் சுதந்திரத்தையும் காற்றை தடைசெய்யாத அற்புத காதலனாய் அவனிருந்தான். இடையில் திடீரென்று என்ன நடந்திருக்கும். ஏன் விலகிப் போகிறான்? எல்லாம் முடிவிற்கு வரும் விதயங்கள்தானா இவ்வாழ்வில்? என்று குழம்பித் தவித்தாள் நித்யா.
இவை எல்லாமும் அந்த சில நிமிட சுகத்திற்காக மட்டும்தான் என்றால்.,என்றோ எப்போதோ இந்த உறவு முடிந்திருக்கும். அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் சலித்திருப்பார்கள். நித்யா ஓரளவிற்கு படித்தவள், சில் புத்தகங்களையும் நிறைய மனிதர்களையும் வாசித்திருப்பவள். ஞானிகள் உடலைக் கடக்கத்தான் சொல்கிறார்கள் வெவ்வேறு வழிமுறைகளில்...அவளுக்கு இந்த உடல் ரசனையானதாகத் தான் இருக்கிறது. அது கேட்கும் எல்லா தீனிகளிலும் பெருந்தீனி மற்றொரு உடல். அதையே ஜீவனத்திற்காக உபயோகப்படுத்தியிருந்தவளுக்கு கிடைத்த மற்றொரு உவப்பான உடலானவன் ரிஷி. இறுதியில் இந்த உண்மைதான் நிலைத்தது. எத்தனையோ முறை எடுத்தும் கொடுத்துமாகிவிட்டது. இனி ஏதுமில்லை என்ற ஒரு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது இவ்வுறவு.
அவனுடைய குறுஞ்செய்தி இந்த நிமிடம் வரை அவளுக்கு மன சஞ்சலத்தை அளிக்கிறது. இத்தகைய உறவுகள் முறிந்து போதல் என்பது அவள் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்தேயுள்ளது. அவன் போனது பெரும் துயரில்லைதான் ஆனால் கோழை போல நடந்துகொண்டதுதான் அவளின் மனவருத்தத்திற்கு காரணமாய் இருக்கிறது, முகத்திலடித்தாற் போல் சொல்லியிருந்தால் அவளொன்றும் உடைந்து சிதறிப்போயிருக்கமாட்டாள். மாறாக ஒளிந்து விளையாடி கண்ணாமூச்சி காட்டுகிறான். ப்ளடி மேல் ஷாவனிஸ்ட் என்று நினைத்தாள்.
சரி இது இவ்விதம் தான் என்றால் இதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்? அவனை அவளால் முழுவதும் வெறுக்க முடியவில்லை. தன் மனக் கண்ணில் அவனை முழுவதும் பதிவு செய்திருந்தாள். காதல் ததும்பும் அந்தக் கண்கள் அவளுக்காக பாடிய அந்த உதடுகள், எல்லாம் எல்லாம் அவளின் நினைவிலிருக்கும். இருந்து கொள்ளட்டும் இருந்தபடி சில நாள்கள்ந் தன்னை கொல்லட்டும் என்று நகத்தைக் கடித்துத் துப்பியபடி நினைத்தாள்.
அவன் ஏன் விலகியிருப்பான் என்பதை அறிய முடியாதவளா அவள். எல்லா பொக்கிஷங்களும் எனக்கே வேண்டும் என்ற பேராசை ஒரு போதும் அவளுக்கில்லை. குடும்பம் அதன் உறவுகள், உன்னதங்கள் இவைதான் அவன் போன்றோரின் முதல் தேவை...அதை விடுத்து எங்கு பயணம் செய்தாலும் தொலைந்து போவார்கள். காதல் போன்ற ஒன்றை இழந்த துயரைத் தவிர வேறு எந்த இழப்பும் இல்லை அவளுக்கு...சிறிதே காலமாயினும் அவனுடன் கதைத்த நேரங்கள் கட்டியணைத்த கணங்களும் நிரந்தரமாய் நினைவில் நிற்கும் என்று பொங்கி வழிந்தபடியிருந்த கண்ணீரைத் துடைக்காமல் விட்டாள்.
இனி ஒரு போதும் அவனை அழைப்பதில்லையென முடிவு செய்து ரிஷியின் அலைபேசி எண்னை தன் போனிலிருந்து அழித்துக் கொண்டிருக்கிறாள் நித்யா.
உயிரோடை சிறுகதை போட்டிக்காக...


எழுத்தாளர் ஞாநியின் புது வீட்டின் பின்னால் அழகான கிணறும் தோட்டமும் உள்ளது என்று நண்பர் பாஸ்கர் சக்தி சொன்னார். ஞாநியும் பாஸ்கரும் பேசிக்கொண்டிருக்கையில் இலக்கிய கூட்டங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றடி இருவருக்கும் நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்று தோன்றியது. அந்த எண்ணத்தை தீவிரப்படுத்தி “கேணி” என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கினார்.
14.06.09 தேதி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஞாநியின் கே.கே.நகர் வீடு இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஞாநியும் பாஸ்கரும் கேணிக்கு ஏதோ இருபது அல்லது அதிகபட்சம் முப்பதி பேர் வருவார்கள் என்று அவதானித்திருந்தார்கள். ஆனால் வந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை தாண்டியது. பேசுபவர் பேசினால் கேட்பவர்களின் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கும்? தீரா உரையாடலின் சொந்தக்காரர் என்று ஞாநியால் புகழப்படும் எஸ்.ரா கம்பீரமான குரலில் பேச்சை ஆரம்பித்தார். வெகு சுவாரஸ்யமான அவரின் பேச்சை நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ரஷ்ய எழுத்தாளர் லெர்மர்தேவினுடைய கதையில் வரும் சம்பவமொன்று, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘வானப்ரஸ்தம்’, புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி’ எனும் கதை, வைக்கம் முகமது பஷீரின் ‘மந்திரப் பூனை’ மற்றும் ப்ரெஞ்ச் கதையொன்று என தன்னை பாதித்த ஐந்து கதைகளைச் சொன்னார். ஏற்ற இறக்கங்களுடனும் அனாயசமான பேச்சுத் திறனாலும் அவர் சொல்லிக் கொண்டிருக்க மந்திரத்தால் கட்டிப்போடப்பட்டது போல அனைவரும் எதையும் தவற விடக்கூடாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.


