
‘கதிரேசன் வாராணாம் கடுதாசி வந்திருக்கு’ ஆபிஸிலிருந்து வந்த அம்மாவிடம் அந்த இன்லெண்ட் லெட்டரை நீட்டினாள் ஆச்சி. களைப்புடன் வந்த சாரதா வள்ளென்று விழுந்தாள், ‘இப்ப எதுக்கு வரான் இங்க, நேரா ராஜி வீட்டுக்குப் போக வேண்டியதுதான? அவன் வரான்னாலே வெறுப்பாத்தான் இருக்கு..’ முணுமுணுத்தபடி முகம் கழுவினாள். ஆச்சி போட்டுத் தந்த காபியை குடித்துவிட்டு பொறுமையாக அந்த லெட்டரை வாசித்தாள்.
கதிர் மாமாவை திட்டினாலும் ஆச்சிக்கும் அம்மாவிற்கும் அவர் மீது தனிப் பிரியம் எப்போதும் உண்டு என்று எனக்குத் தெரியும்.
‘நாளைக்கு நான் பெர்மிஷன் போட்டுட்டு செண்டரல் போய் அவனை கூட்டிட்டு வரேன். நீ அவனுக்கு பிடிச்சதை சமைச்சு வை, இல்ல அதுக்கு ஒரு பாட்டம் நொய் நொய்ம்பான்’.
ஆச்சியின் தங்கை சரஸ்வதி வரிசையாக பெற்ற பிள்ளைச் செல்வங்கள் எல்லாம் வரிசையாக இறந்து போக எஞ்சியவர்கள் கதிரேசன் மாமாவும் ராஜி சித்தியும்தானாம். ராஜிக்கு ஒரு வயதிருக்கும் போது சரசு காசம் வந்து சரியான மருத்துவம் இல்லாமல் இறந்து போனாள் கண்ணைக் கசக்கிக்கொண்டே ஆச்சி இக்கதையை சில தடவை சொல்லியிருக்கிறாள். ‘கதிரு’ என்று அவள் கூப்பிடுவதே அன்பின் குரலால்தான். சரசுவின் கணவர் ஆறுமுகம் மனைவி போன அடுத்த வருஷமே மறுகல்யாணம் செய்துகொண்டார். பாஸ்கர், ரவி, சீனு, லல்லி என வரிசையாக அவர்கள் வீட்டில் மழலைப் பட்டாளம் அணிவகுத்திருக்குமாம். அம்மா கல்லடைக்குறிச்சிக்கு போகும்போதெல்லாம் நன்றாக உபசரித்து பிரியமாக இருப்பாராம். ரயில்வே ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டுவிட்டு அவளுக்குப் பிடித்த பணியாரங்களையும் பண்டங்களையும் தூக்குச் சட்டியில் அடைத்துக் கொடுப்பார் ஆறுமுகம் தாத்தா.
புதுச் சித்தியின் குணம் மோசமில்லையானாலும் மூத்த தாரத்தின் பிள்ளைகள் இரண்டாம் பிரஜைகள்தான். இவர்களுக்கு மிஞ்சியதுதான் அவர்களுக்கு என்றானது. பத்தாவது பெயிலானதும் அய்யாவின் அடி உதைக்கு பயந்து கதிர் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம். அதன்பின் பதினைந்து வருடங்கள் கழித்துதான் ஊர் திரும்பினார்.
கதிர் மாமாவின் கதை எனக்கு அலுக்கவே அலுக்காத சுவாரஸ்யமான கதை. ஒவ்வொரு ஆண்டும் தில்லியிலிருந்து சென்னைக்கு வரும் போது எங்கள் வீட்டில்தான் அதிக நாள் தங்குவார். ராஜி சித்தியின் வீடு மதுரையில் இருக்கிறது. ஒன்றிரண்டு நாள் மட்டுமே போய் வருவார். மற்றபடி அவர் சுதந்திரமாக இருக்க விரும்பும் வீடு எங்கள் வீடுதான்.
ஊரை விட்டு ஓடிய அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என எங்களுக்குக் கதை போல சொல்வார். கல்லடைக்குறிச்சியில்ரிந்து லாரி, பஸ் மற்றும் ரயில் ஏறி அவர் கடைசியில் வந்து சேர்ந்த இடம் இந்தியாவின் தலைநகரம். அலைந்து திரிந்து பசி பட்டினியால் வாடிய அவர் எதேச்சையாக சந்தித்த தமிழ்த் தம்பதியிடம் தன் கதையை சொல்லியிருக்கிறார். அவர்கள் இவரை அழைத்துச் சென்று சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டிலேயே தங்களின் மகனுடன் சேர்த்து இவரையும் சொந்த பிள்ளையாகவே நினைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் ஆசாரமான பிராமண குடும்பத்தவர்கள், இவர் என்ற காரணத்தாலும், இவர் முகத்தின் தேஜஸ்சிலும் ஈர்க்கப்பட்டு அவரை தங்களில் ஒருவராக ஆக்கிக்கொண்டார்கள். கதிர் மாமாவும் பழசையெல்லாம் மறந்து நன்றாக படித்து அதன் பின் தில்லியில் டிபென்ஸ் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.
வளர்ப்பு பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட அண்ணன் ராகவன் திருமணத்திற்கு பிறகு அங்கிருக்க சங்கடமாக இருந்ததால் தனியாக ஒரு அறை எடுத்து தானே சமைத்து வாழத்தொடங்கியிருந்தார். ஊரின் ஞாபகங்கள் விடாமல் அவரை வதைத்தபடி இருந்ததால் ஒரு நாள் கடிதம் எழுதி தான் இருக்கும் இடத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தினார். அவர் உயிரோட இருந்ததை நினைத்து அம்மாவும் ஆச்சியும் மிகவும் மகிழ்ந்தார்கள். உறவுகள் புதுப்பித்தன. லெட்டர் மேல் லெட்டர் போட்டு அவரை வரவழைத்துவிட்டார்கள். அதன் பின் எப்போது லீவ் கிடைத்தாலும் அவர் வந்து போகும் இடம் எங்கள் வீடாகியது.
நானும் தம்பி ரவியும் அக்கதையை எத்தனை முறை கேட்டிருந்தாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்போம். கதை முடிந்ததும் ‘மாமா யூ ஆர் ரியலி க்ரேட்’ என்று சொல்லிவிட்டு அவர் எங்களுக்காக வாங்கி வந்திருந்த கால்குலேட்டர், சாக்லெட்டுகள், பொம்மைகளை அள்ளிக் கொண்டு எங்கள் அறைக்குப் போய்விடுவோம்.
கதிர் மாமா ஒரு தீவிரமான ஒழுக்கவாதி. அவர் வீட்டில் இருந்தால் வீடு படு சுத்தமாக இருக்கவேண்டும். அம்மா ஆபிஸ் போய் வருபவள், ஆச்சி வயதானவர், சமைப்பதைத் தவிர நிறைய வேலைகள் செய்ய முடியாது. வேலைக்காரி செண்பகம் பாத்திரம் தேய்த்து துணி துவைத்துப் போய்விடுவாள். வீட்டைப் பெறுக்கி துடைக்கும் வேலை எனதாக இருந்தது. நான் எவ்வளவு நீட்டாகப் பெருக்கினாலும் மாமா எப்படியாவது ஒரு தூசியை தும்பை கண்டுபிடித்துவிடுவார். ஆச்சி எவ்வளவு பாத்து பாத்து சமைத்தாலும் அதில் எதாவது நொள்ளை நொட்டை சொல்லுவார். என் அம்மாவிடம் அடிக்கடி சண்டை போடுவார், ‘அக்கா,உனக்கு புருஷனும் சரியில்லை, பிள்ளைங்களும் சரியில்லை, பாரு பொண்ணா லட்சணமாவா இருக்கா, எப்ப பாரு டீவி, பிரண்ட்சுன்னு சுத்தறா உன் பொண்ணு, பையனா வீட்டில தங்க மாட்டேங்கறான். இதுங்கல்லாம் வளர்ந்து என்னத்தை சாதிக்க போகுதுங்களோ, கிரகச்சாரம் என் தலையெழுத்து இங்க எனக்கு போக்கிடம் இல்லாம இங்க வந்து தொலைக்க வேண்டிருக்கு என ஆரம்பித்து வசைமாறி பொழிவார். அம்மா பதில் ஏதும் சொல்லாமல் கண்களில் நீர் துளிக்க மிகுந்த மனம் வருத்தம் அடைவாள். ஆச்சி சமாதானமாக ‘விடு சாரதா, தாயில்லாத பிள்ளை, எங்கிட்டோ தட்டுத்தடுமாறி வளர்ந்திருக்கு, நாமதான் அனுசரிச்சுப் போகணும், ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சா வழிக்கு வந்துடுவான்’. என்றாள்.
அதன்பின் மாமாவிற்கு பெண் தேடும் படலம் ஆரம்பமாகியது. எந்தப் பெண்ணின் புகைப்படத்தை காட்டினாலும் இவள் மூக்கு சரியில்லை, முழி சரியில்லை, இவள் உயரம், அவள் குட்டை, என்று வருடா வருடம் வரும்போது அம்மா காண்பிக்கும் அத்தனை போட்டோக்களையும் ரிஜெக்ட் செய்துவிடுவார். இதற்கிடையில் ராஜி சித்திக்கு கல்யாணம் செய்துவைத்தார். மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன் மிகவும் நல்லவர். அவரும் தன் பங்கிற்கு பல வரன்களை இவருக்காகப் பார்த்து சலித்து கடைசியில் தன் தங்கை விசாலாட்சியை இவரின் குணநலன்கள் தெரிந்தும் கட்டி வைக்க முன் வந்தார். ஏதோ ஒரு நல்ல மூடில் விசாலத்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டார் கதிர் மாமா.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் பனிரெண்டாம் வகுப்பும் ரவி பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தோம். கல்யாணம் நல்லபடியாகவே முடிந்தது. ஆயிரம் குறைகள் சொல்லி அனைவரையும் வசைபாடித் தீர்த்துவிட்டார் கதிர் மாமா. இவரின் ஆவேசங்களை விசாலி அத்தை பயத்தில் உறைந்து போயிருந்தாள். ஒருவழியாய் அவர் சாமியாட்டத்தை நிறுத்தி சென்னை, மதுரை, கல்லடைக்குறிச்சியில் உறவினர்களின் விருந்து உபசாரங்கள் முடிந்து தில்லிக்கு அவரை ஏற்றி அனுப்புவதற்குள் அம்மாவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
ஒரு மாதமிருக்கும். ஊரிலிருந்து போன் வந்தது. கதிர் மாமாதான். மிகவும் ஆத்திரத்துடன் பேசினார். விசாலி அத்தை அவரிடம் கோவித்துக் கொண்டு பிறந்தவீட்டிற்கு போய்விட்டாளாம். நீ ப்ளான் பண்ணி என் வாழ்க்கையை சீரழிச்சிட்டே என்று அம்மாவுக்கு ஒரே வசவு. ரொம்ப தேவைதான் எனக்கு இது என எரிச்சலுடன் போனை வைக்கும் போது ‘உன்னோட குடைச்சலை அவ்வளவு நாள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம், நீ உன்னோட ஈகோ, கோபதாபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சராசரி மனுஷனா இரு, அப்ப உன் பொண்டாட்டி தானே வருவா...இப்படி போன்ல கத்தற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே என்று அம்மாவும் திருப்பி திட்டிவிட்டாள். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மாமா படாரென்று போனை அறைந்து வைத்துவிட்டார். ‘இவனோட எல்லாம் மனுஷி வாழ முடியுமா, காட்டுப்பய, திட்டியபடி அம்மா ஆபிஸ் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
ஆச்சிக்குத்தான் மனம் சங்கடமாகிவிட்டது. இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படி கோபம், இவன் சுபாவத்தால இப்படி சீரழிஞ்சுப் போறானே என்று மாய்ந்து மாய்ந்து புலம்பிக்கொண்டிருந்தாள். தில்லிக்கு போய் அவரிடம் நேரிடியாக பேசி பஞ்சாயம் செய்து வைக்க முற்பட்டபோதும் அவர் சற்றும் இறங்கிவரவில்லை. கடைசியில் ‘அந்த ஓடுகாலி முண்டை என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா சேர்ந்து வாழறதைப்பத்தி யோசிக்கறேன், இல்லைன்னா அவ எக்கேடு கெட்டு அழிஞ்சு போனாலும் எனக்கு கவலையில்லை. ஆச்சி மதுரைக்கு வந்து இதைச் சொல்லியது விசாலி அத்தை தீர்மானமாக மறுத்துவிட்டாள். ‘இங்க பாருங்க அத்தை இவர் சாதரணமா இருந்தா பிரியமாத்தான் இருக்கார், ஆனா கோபம் வந்துட்டா ரொம்ப ஏசறார் என்னால அந்த வார்த்தைகளை தாங்கிக்க முடியலை, மனுஷன் வாயில தேள் தான் இருக்கு, அந்த முண்டை இந்த முண்டைனு காதால கேக்க முடியாத அளவுக்கு வசவு, எப்ப கோபம் வரும்னே தெரியாது, ஒரு நாள் தட்டை என் முகத்துல வீசி எறிஞ்சார், இன்னொரு நாள் முடியைப் பிடிச்சு இழுத்து சுவத்துல தள்ளிட்டார். நானும் மனுஷிதானே எனக்கு கோபம் வராது? என்னால இதையெல்லாம் தாங்கிக்க முடியாது. கூழோ கஞ்சியோ நான் சின்னதா ஒரு பொட்டிக் கடை வச்சி பொழைச்சிப்பேன், போதும் ஆத்தா என்னிய விட்டுடுங்க என்று கதறி அழுதாள்.
அவரிடம் இந்த செய்தி போனபோது ஏகத்துக்கு கலாட்டா செய்துவிட்டார். ‘பொட்டைச் சிறுக்கிக்கு இத்தனை ஆங்காரம் கூடாது பெரியம்மை, அவ எனக்கு சரிப்பட்டு வரமாட்டா, ரெண்டு இழுப்புத்தான் இழுத்தேன், என்னவோ கொன்னு போட்ட மாதிரியில்ல ஊரைக் கூட்டிட்டா, நான் மானம் மரியாதையோட இந்த ஊர்ல பொழைக்கறவன், வக்கத்தவன் இல்ல சுளையா எட்டாயிரம் சம்பாதிக்கறேன், கேடுகெட்டவளுக்கு இருக்கு பிடிக்கலைன்னா செத்து ஒழியட்டும், தலை முழுகிக்கறேன், இனி யாரும் அவ கதையை எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்தீங்கன்னா உங்களுக்கு தலை முழுகல்தான். என்று ஆவேசமாக கத்தித் தீர்த்தவரைப் பார்த்து ஆச்சியே அந்த விஷயத்திற்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டாள்..
யார் சொல்லியும் கேட்காமல் அவர் தன் போக்கில் பணத்திமிருடன் பேசியதால் அவரிடம் எங்கள் குடும்பம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது. ஆறு வருடம் கழித்து என் திருமணத்திற்கு வந்து ஐந்தாயிரம் ரூபாய் அம்மாவிடம் குடுத்து அவளுக்கு பிடித்த நகை வாங்கிக் கொடு என்றிருக்கிறார். அம்மா கல்யாண செலவிற்கு அதை உபயோகப்படுத்திக்கொண்டாள். தம்பி ரவியின் கல்யாணத்திற்கு அவரால் வர முடியவில்லை, கூரியரில் செக் அனுப்பியிருந்தார், ஆயிரம் ரூபாய்.
மாமாவிடம் குறைசொல்லவே முடியாத சில நல்ல குணங்களும் இருக்கின்றன. முறைகள் கட்டுக்களை எல்லாம் சரியாக செய்துவிடுவார். அன்பிலும் குறைவில்லை. ஆனால் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷத்தை விடக் கொடியவை. வயிற்றில் குத்தி முதுகின் வழியாக வெளிவருபவை. அத்தனை வலி, ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி தான் பேசியது எல்லாம் சரியே எனும்படி செயல்படுவதுதான் எல்லோருக்கும் வெறுப்பாக இருக்கும். சமீபத்தில் ராஜி சித்தியை அசிங்கமாகத் திட்டி தமிழ்ச் சித்தப்பா கதிர் மாமாவை செமத்தியாக அடித்த கதை எங்களுக்கு பிற்பாடு ஆச்சி சொல்லித்தான் தெரியும். அவரவர் வாழ்க்கையின் பிரச்சனைகளில் அமிழ்ந்து கதிர் மாமாவை கிட்டத்தட்ட மறந்திருந்தோம்.
அதன் பத்து வருடங்கள் கழித்து ஆச்சி இறந்த வீட்டிற்கு வந்திருந்தார். மிகவும் அமைதியாக காணப்பட்ட அவரைப் பார்த்த எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. காரியங்கள் எல்லாம் முடிந்தபின் அம்மா அவரிடம் ‘என்னடா கதிரு ஏன் இப்படி ஆயிட்டே’ என்று கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
‘எனக்கு நல்லா வேணும்க்கா, இதுக்கு மேல எதாவத் தண்டனை இருந்தா அதுவும் தகும்தான். எனக்கு கான்சர் வந்திருக்குக்கா, அதுவும் எலும்புல, ப்ளட் ப்ளேட்லட் ரொம்ப குறைச்சலா இருக்காம், ரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய முடியாம இருக்காம். ரொம்ப ஷீனமாயிட்டேன்கா.. எல்லா வைத்திமும் பண்ணிட்டேன், தினமும் உடம்புல ரத்தம் ஏத்திக்கிட்டாத்தான் உயிர் வாழ முடியும். ஆனா அது பிராக்டிக்கலா சாத்தியம் இல்லை. டாக்டர்ஸ் மாற்று வைத்தியத்தைப் பத்தி யோசிச்சிட்டிருக்காங்க..ஆனா நான் செத்துக்கிட்டிருக்கேன்...ஒவ்வொரு நொடியும் சாவை எதிர்ப்பார்த்துட்டிருக்கேன். கடைசியா உங்களை எல்லாம் ஒரு தடவை பாக்கத்தான் வந்தேன். இந்தா இதுல நம்ம செல்விக்கு கொஞ்சம் பணம் வச்சிருக்கேன், இது உனக்கு. ராஜியை நாளைக்கு பாக்கப்போறேன் அவளுக்கு ஒரு வீடு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன். அப்பறம் விசாலிக்கு என்னோட மத்த பணத்தையும், நான் செத்ததும் வர பணமும், ஆயுள் முழுக்க பென்ஷனும் அவளுக்குப் போகணும்னு எழுதி வைச்சிருக்கேன். பாவம் என்னால அவ வாழ்க்கையே அழிஞ்சிடுச்சு. பணத்தைத் தவிர வேற எதையும் என்னால் தர முடியலைக்கா. என் ரத்தம் சூடா இருந்தவரை எல்லாரையும் சுடுசொற்காளாலயும் என் செய்கைகளாலும் டார்ச்சர் பண்னேன், குத்தம் குறை கண்டுபிடிச்சு வஞ்சேன் அதுக்குத்தான் இவ்வளவு பெரிய தண்டனை கிடைச்சிருச்சு. எல்லாம் நன்மைக்கே, நான் நிறைய பட்டுட்டேன்க்கா, இப்ப நான் வடக்கே ஒரு ஆசிரமத்துக்கு போகப் போரேன், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செஞ்சு என்ன பிரயோசனம், அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா என் மனைவிக்கு நல்ல கணவனா இருக்கணும்னு வேண்டிக்கறேன் அக்கா, நீ என்னை வெறுத்துடாதே....”என்று குழந்தை போல தேம்பிக் கொண்டிருந்தார்.
அம்மா கண்களில் நீர் வழிய அவருக்கு ஆறுதல் சொன்னாள். அன்று நீண்ட நேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அம்மா எவ்வளவு சொல்லி தடுத்தும் கேளாமல் ரிஷிகேஷ் சென்றுவிட்டார். எங்களுக்கும் கலக்கமாகவும் சங்க்டமாகவும் இருந்தது. அவர் தந்த பணத்தை கேன்சர் நிதியுதவிக்குத் தந்துவிட்டோம். கதிர் மாமாவிற்காக நாங்கள் தினமும் விளக்கு ஏற்றி கும்பிடுகிறோம், அதிக வலியில்லாம் அவரின் உயிர் பிரிவதற்காக.
- முற்றும் -
7 கருத்துரைகள்:
நாளை படிக்கிறேங்க.... இப்போ சில வேலைகள் இருக்கு!
கதிரேசன் மாமாவைப்போல பலரை நான் திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன்.அநேக ஆண்கள் இப்படித்தாந்காலம் போன பிறகு கையெடுத்துக்கும்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.அந்தக்காலத்து பி.எஸ்.ராமையா எழுதிய கதை ஒன்றைப்படித்த உனர்வை இக்கதை தருகிறது.வாழ்த்துக்கள்.
இந்த அக்கம் பக்கத்து வீட்டுல நல்லா வாழ்ந்து கெட்டவங்களப் பத்தி கதை சொல்லுவாங்க இல்ல, நாமளும் (சுவாரஸ்யமாயிருந்தா) “உம்” கொட்டி கேட்போமில்ல...
அது போன்ற உணர்வுகள் இந்தக் கதை படிக்கும் போது எனக்கு எழுந்தது.
நல்ல சரளமான நடை
இது ஒரு நல்ல கதையே..!
ஏதோவொரு உணர்வை இதயத்தினுள் அமிழ்த்தி, அது என்ன உணர்வு என்று தூண்டித் துருவி வினாவும் நிலையை ஏற்படுத்துவதால்...!
நன்றி.
சரி ஆதவா
//பி.எஸ்.ராமையா எழுதிய கதை ஒன்றைப்படித்த உனர்வை இக்கதை தருகிறது.// நிசமாவா தமிழ்.சந்தோஷமா இருக்கு.நன்றி தமிழ்..
நன்றி அமித்தும்மா...sooryaவிற்கும் ;))
கருத்துரையிடுக