செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

அணில்குட்டியும் சக்திவேலும் நானும்

நேற்று வீட்டுக்கு போனதும் என் பையன் ஓடி வந்து 'அம்மா குட்டி அணில், ரொம்ப குட்டிம்மா, அந்த அணில் மேலேர்ந்து தொம்முன்னு வுளுந்துடுச்சு...பாவம் அதோட அம்மா அளுது என்றான். எங்கடா அது, என்றேன், கிச்சன் பின் இருக்கும் சிட் அவுட்டில் ட்ரம் பின்னால் ஒளிந்திருக்கிறது என்றார்கள். என் அத்தை பால் கவர், வேண்டாத பொருள்களை எல்லாம் அங்கே வைத்திருந்தார்கள். ட்யூப் லைட் வெளிச்சத்தில் அணில் குட்டி இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. க்ரீச் கிரீச் என்று பரணிலிருந்து அதன் அம்மா சத்தம் கொடுக்க இது சன்னமாக க்ரீச் என பதில் குரல் குடுத்துக் கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ வந்து எங்கள் கிச்சன் பரணில் தங்க ஆரம்பித்திருந்தது அம்மா அணில். கிச்சன் ஜன்னல் வழியே வரும், போகும். எங்கள் இருப்பை அவ்வளவாக கண்டு கொள்ளாது. விருட்டென்று ஒரு செகண்டில் ஓடிவிடும். எங்கே ஊர் சுற்றினாலும் இரவு வீட்டுக்கு வந்து சமத்தாக பரணில் செட்டில் ஆகிவிடும்.

எங்கள் வீட்டில் ஒரு நபராகவே ஆகிவிட்டிருந்தது. அதன் சத்தமும் அவ்வப்போது வெளிநடப்பு செய்யும் காட்சியுமே அது இங்கேதான் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரிய வரும். அது எப்போ குட்டி போட்டது என்றே தெரியவில்லை. ஒன்று இரண்டானது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. குட்டி அணிலின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும், அவ்வப்போது அதற்கு ஸ்னாக்ஸ் அனுப்பிக் கொண்டிருப்பார்கள் அத்தையும் என் மகனும். இவ்வாறு இருக்கையில் எப்படியோ குட்டி தவறி கீழே விழுந்திருக்கிறது. என் மகனுக்கு ஒரு பக்கம் அதைப் பார்த்து மகிழ்ச்சி. ஏ,அணில், அளகா இருக்குல்ல...என்றிருக்கிறான். ஆனாலும் அவன் பிஞ்சு மனம் அதற்காக இரங்கியது. அம்மாகிட்டதான் குட்டி இருக்கணும் என்று யார் அவனுக்கு சொல்லித்தந்தது. தன்னைப் போல அணில் குட்டியை நினைத்திருக்கிறான்.'அம்மா பீச் (ப்ளீஸ்) அதை பிடிச்சு மேல விடுடா (சக்திவேல் எல்லாரையும் டா என்றுதான் சொல்லுவான், ஒருமுறை மிஸ்ஸிடம் எழுதமாத்தேன் டா என்று சொல்லியிருக்கிறான், மிஸ் டென்ஷனாகி என் கணவரிடம் please teach manners to this boy என்றிருக்கிறார், கணவர் என்னிடம் சோகமாக இதைச் சொன்னபோது, நான் சொன்னேன் please ask that teacher to first enjoy children's unadultered lovable words..மரியாதை பற்றி கட்டாயம் நாம் சொல்லிக் தரலாம், அவன் மழலையை முதலில் நீங்களும் ரசியுங்கள் என்றேன். பிள்ளைகளின் குழந்தைத்தனங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுக்கும் வேலையை நம் பள்ளிகள் வெகு சிறப்பாக செய்கின்றன ). குட்டி அணில் சத்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. அது எங்கே பதுங்கியிருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'தூங்குடா பாப்பா காலைல பாத்துக்கலாம் என்று மகனிடம் ச்மாதானம் சொல்லிவிட்டு சாப்பிட்டு படுத்துவிட்டோம். ஆனால் அந்த அணிலின் சத்தம் இரவு முழுவதும் கனவில் கேட்டுக்கொண்டேயிருந்தது.

விடிந்ததும் நேராக அணிலின் தற்காலிக பதுங்கு குழிக்குச் சென்றேன். அது பால்கவர்களின் அடியில் ஒளிந்திருந்தது. மெல்ல எல்லாவற்றையும் விலக்கி அதை பிடிக்க முனைகையில் அது தப்பி ஓடி கிச்சனில் சிலிண்டர் வைக்கும் இடத்திற்கு தாவிப் பெயர்ந்தது. நான் குனிந்து லாவகத்துடன் அதை மறுபடியும் பிடிக்க முயற்சிக்கையில் அரிசி மூட்டைக்கு பின்னால் ஒளிந்து என்னை பழிப்பு காட்டியது. பார்வையாளர்களான என் மாமியார், சக்திவேல் மற்றும் சரா (கணவர்) நான் ஏதோ வீர சாகசம் செய்யப் போவதைப் போல எட்டியே இருந்தனர். சரா என்னை பயமுறுத்துவிதமாக ஏய் கடிக்கபோகுது பாரு, அது அங்கேயே இருக்கட்டும் பாத்துக்கலாம் என்றார். ஆனால் எனக்கு அது சரியென்று தோணவில்லை. எப்படியோ டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை அந்த அணிலுடன் விளையாடி அந்த சின்னஞ்சிறு அணிலை கையில் பிடித்துவிட்டேன். அது ரொம்ப குட்டியாக இருந்ததால் கையை விட்டு முதலில் நழுவி விட்டது. மறுபடியும் பிடித்தேன், நெளிந்தது கொண்டே என் உள்ளங்கையை பிராண்டி, கடித்து அட்டகாசம் செய்தது. அதன் பயம் அதற்கு, நான் அதைத் தாயிடம் சேர்க்க பாடுபடுகிறேன் என்று தெரியவா போகிறது. அதன் குட்டிப் பல்லின் கடியைத் தாங்கியபடி நான் 'ஸ்டூல் ஸ்டூல் என்று கத்த சரா ஸ்டூலை எடுத்துப் போட்டார். நான் அதிவேகமாக அதில் ஏறி பரணில் அதை விட்டேன். அப்பாடா அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. என் உடலும் நடுங்குவதை உணர்தேன். ஒரு நொடிதான் சிலிர்த்து எழுந்த அது, மாரத்தான் ஓட்டம் ஓடி, பரணில் இருந்த கோணியின் பின்னால் ஒளிந்து கொண்டது. கொடுமை என்னவென்றால் இதைத் தேடி அதன் அம்மா புறப்பட்டு போயிருக்கிறது. தேடிக் களைத்து அது எப்போது வருமோ தெரியாது. ஆனால் வந்தது அது சந்தோஷப்படும்.

சக்திவேலுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி, அணிலை பிடிச்சுட்டா உமா, என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்று ஸ்கூலில் அவன் நண்பர்களிடம் கூட அதைச் சொல்வான் என்று நினைக்கிறேன். கையை நல்லா டெட்டால் போட்டு கழுவு என்ற என் கணவரின் அறிவுரையை ஏற்காமல் சும்மா கையை கழுவிவிட்டு அந்த அணிலின் மென்மையான சிறிய உடலின் ஸ்பரிசத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்னை ஓர் ஆலயத்தில் ரஜினி குட்டி யானையை தாயிடம் சேர்ப்பார். அந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் என் கண்கள் கலங்கும். இன்றும் ஏனோ கண்கள் லேசாக கலங்கியது, சிறிய ஆரஞ்சு சுளை ஒன்றை பரணில் வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்துவிட்டேன். அம்மா அணில் வந்திருக்குமா, அந்தக் குட்டி இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று நினைத்தவாறே இப்பதிவை எழுதி முடிக்கிறேன்.

திங்கள், 9 பிப்ரவரி, 2009

நான் கடவுள்


வெகு நாள் கழித்து என்னை மிகவும் அலைக்கழித்த தமிழ்த் திரைப்படம் 'நான் கடவுள்'. திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனம் மிக பாரமாகி செலுத்தப்பட்டவள் போல் வீடு வந்து விழுந்தேன். கடுமையான தலைவலி சொல்லொண்ணா துயருடன் அன்றைய இரவு ஊர்ந்து எப்படியோ விடிந்தபின் கொஞ்சம் தூங்கி நேரம் தப்பி அலுவலகம் வந்து சேர்ந்தும் மனதைவிட்டகலாமல் விடாப்பிடியாக 'நான் கடவுள்' - ஓம்சிவஹோம் என்று மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறார் இளையராஜா.

கைவிடப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் கண்ணீரும் புன்னகையும், தினந்தோறும் அவர்கள் இருத்தலின் அவஸ்தைகளை இதுவரை இத்தனை ஆழமாக எந்தத் திரைபடமும் தோலுரித்துக் காட்டியதில்லை. பாலா எனும் அற்புதக் கலைஞன் சொல்லத் துணிந்த கதை யாரும் அணுக வெறுக்கும் கதைகளம். Docufilmஆக வரவேண்டியதை கொஞ்சம் commercial சாயம் போட்டு நன்றாக present செய்துள்ளார். கடைநிலை மனிதர்கள் என சமூகம் தள்ளிவைத்திருக்கும் அம்மனிதர்களின் துயரை திரையில் வடித்துள்ளார். மனம் பிசையும் காட்சிகள் படம் நெடுகிலும், ஆர்யா, பூஜா, ராஜா, பாலா நால்வர் கூட்டணி மிகச் சரியான கலவையில் துன்பவியல் திரைக்காவியமாக உருவாகியிருக்கிறது. பாலாவின் படங்களில் morbidity அதிகம் இருக்கும். இதில் அதன் உச்சத்தை பார்க்கலாம்.

அகம் ப்ரம்மாஸ்மி 'நான் கடவுள்' என அடிக்கடி அடிக்குரலில் கர்ஜிக்கிறார் ஆர்யா. எல்லாம் சரிதான். ஆனால் அவரின் நிலை நமக்குப் புரியவில்லை, அல்லது புரியும்படி சொல்லப்படவில்லை.அவன் ருத்ரன், ரெளத்திரன். சரி. கெட்டவர்களை அடையாளம் காண முடிகின்றது அவனால், பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லவன், அதுவும் சரி, அதற்கான நம்பகத்தன்மை நமக்கு சரியாக புலப்படவில்லை. ஆர்யாவின் நடிப்பிலும் உடல்மொழிகளால் ஓரளவு சாத்தியப்பட்டிருக்கிறது. பிதாமகனில் விக்ரம் எப்படி உருமிக்கொண்டிருப்பாரோ அதே போன்று இதில் ஆர்யா ஓங்கி குரலெடுத்து சமிஸ்க்ருததிலோ, தமிழிலோ வசை பாடிக்கொண்டேயிருக்கிறார். ஆர்யாவின் காரெக்டர் இன்னும் fine tune செய்திருக்கலாம். ஆனால் அவரின் திமிர்ந்த நடையும் கலங்கடிக்கும் பார்வையும், மிரட்டும் தோரணையும் மனிதர் அகோரியாக வாழ்ந்திருக்கிறார். Handsome hero என்ற myth ஐ உடைத்து அவர் பெரும் அர்ப்பணிப்புடன் ருத்ரனாக இயங்கியிருக்கிறார். விகரமிற்கு 'சேது', சூர்யாவிற்கு 'நந்தா' வை பாலா அமைத்துத் தந்ததுபோல ஆர்யாவிற்கு 'நான் கடவுள்'. நடிகர்களை செதுக்குவதில் பாலாவிற்கு இணையாக யாரையும் சொல்லத் தோன்றவில்லை.


பூஜாவின் மிகையில்லாத இயல்பான நடிப்பு படத்தின் மிகப் பெரிய பலம். பாவாடை சட்டையில் பார்வையிழந்த பெண்ணாக, அப்பாவியாக, தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை அழுகையுடன் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டிருக்கிறார். அவரின் பாடல்களும் பேச்சுக்களும் மனதை நெகிழ்த்துகிறது. இப்படத்தில் மற்றொரு சிறப்பான அம்சம் casting. குருவியாக வரும் சிறுமிக் குழந்தை, அம்பானியை செல்போன் விற்பவன் என்று டைமிங்காக சொல்லும் உடல்வளர்ச்சி குன்றிய குட்டிப்பையன், அவனின் அழகான சிரிப்பு, தன் விதியை அடிக்கடி நொந்து கொள்ளும் முருகன், இரவில் குடித்துவிட்டு பிச்சை எடுத்தவர்களிடமே அவர்கள் காசை வாரி இறைப்பது, பகலில் பாவ மன்னிப்பு கேட்கும் அந்த நடிகர், தன் ஒவ்வொரு அசைவிலும் கொடூரத்தின் எல்லையை வெளிப்படுத்தி நம்மை அச்சுறுத்தும் வில்லன் என சொல்லிக் கொண்டே போகலாம். போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் சீன்கள் கமெர்ஷியல் ஸ்பெஷல். ஆனால் வேறு வழியும் இல்லை, கதையை நகர்த்த மெல்லிய இயல்பான நகைச்சுவை வலியை மறக்கச் செய்கிறது


படத்தின் தொய்வு எதுவெனில் கதை எதை நோக்கி நகர்கின்றதோ அதை சரியாக அடையமுடியாமல் தவிக்கிறது. நிறைய கேள்விகள், சந்தேகங்கள், இதையெல்லாம் பாலாவிடம் அல்லது ஜெமோவிடம் தான் கேட்டு தெளியவேண்டும்.Making of the filmல் மிகுந்த அக்கறை காட்டிய பாலா, what makes this film என்பதில் குழப்பங்களை விளைவித்துவிட்டார். Its an extension of Jeyamohan's Ezham Ulagam, with an addition of Arya's character. பாலாவின் முந்தைய படங்களின் treatment தான் இப்படித்திலும். 'பிச்சைப்பாத்திரம்' பாடல் ஏனோ 'எங்கே செல்லும் இந்தப் பாதை' யை நினைவு படுத்துகிறது. காட்சிகள் வேறு கதைகள் வேறு ஆனால் அதை செலுத்திப்போகிற பாலா எனும் மனிதன் கொடுத்த textures ஒரேவிதம்.. Stereotype. ஆனால் அக்கலைஞனின் மொழி அற்புதமானது. நிறைய எதிர்ப்பார்ப்புகளை ஒவ்வொரு முறை ஏற்படுத்திவிட்டு தன் திரைமொழியால் நம்மிலிருந்து ஏதோ ஒன்றை பிடுங்கி எடுத்துச் சென்றுவிடும் படைப்பாளி அவர்.


திரைக்கதையில் சில குறைபாடுகள், continuity problems, எதிர்பார்த்த பாடல்கள் படத்தில் இடம்பெறாமல் போனது..இவையெல்லாம் குறைகள் என்று சொல்லத் தோன்றவில்லை. ஏழாம் உலகத்தை உருவாக்கிய ஜெயமோகனின் விழிகள் வழியே பாலா, பாலாவின் பார்வையினூடே ஆர்யா, ஆர்யாவின் ஆர்ப்பாட்டங்களில் அலைக்கழிப்படும் நான் என 'நான் கடவுள்' என்னுள்ளே கலவையான உணர்வுகளை ஏற்படுத்திவிட்டது.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

Volver – To Return (திரும்புதல்)


சில சமயம் வாழ்வின் சம்பவங்கள் விசித்திரமானவை. நாம் எதிர்ப்பார்ப்பது போல் பெரும்பாலும் இருக்காது வாழ்க்கை. குரூரங்கள் நம்ப முடியாத விதய்ங்கள், அவலங்கள் எல்லாம் சேர்ந்து இரு சகோதரிகளின் வாழ்வின் ஊடாக ஸ்பெயினில் வாழும் ஆறு பெண்களின் வாழ்க்கைச் சிக்கலை திரைப்படுத்துகிறார் பெட்ரோ அல்மதோவர் (Pedro Almodóvar).

லா மன்ச்சா எனும் கிராமம். கடுமையான பனிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் தங்கள் பெற்றோரின் கல்லறைக்கு பல மைல்கள் பயணம் செய்து வந்து சேர்கிறார்கள் ராய்முண்டா (Pénelope Cruz) அவளின் டீன் ஏஜ் மகள் பெளலா (Yohana Cobo); மற்றும் தங்கை சோலெ (Lola Dueñas), அதன்பின் வயதான தங்கள் பெரியம்மாவை (அவர்களின் தாய் ஐரினின் அக்கா) சந்திக்கிறார்கள். ராய் தன் பதின்ம வயதில் இம்மூதாட்டியிடம் தான் வளர்ந்து வந்தாள். தள்ளாத வயதில் பெரியம்மா தனியாக வசிப்பதைப் பார்த்து மனம் உருகுகிறாள் ராய்முண்டா. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மூதாட்டி இவர்களுடன் வர மறுத்துவிடுகிறாள், மேலும் தான் தனியாக இல்லை, தன்னுடன் ஐரின் இருக்கிறாள் என்கிறாள். இறந்து போன ஐரின் எப்படி இங்கிருக்க முடியும் பெரியம்மாவிற்கு சித்த பிரம்மை என நினைத்த ராய் அடுத்து தங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான அகஸ்டினாவை சந்திக்கிறாள். அகஸ்டி பெரியம்மாவிற்கு தினமும் ரொட்டி வாங்கித் தந்து இயன்ற வரை கவனித்துக் கொள்வதை அறிந்த சகோதரிகள் அவளுக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்து விட்டுத் இனம் தெரியாத துக்கத்துடன் தங்கள் ஊருக்கு திரும்புகிறார்கள். காரை சோலெ ஓட்டுகிறாள்.


ராயின் கணவன் பேகோ பெரும் குடிகாரன், அவனுடைய அடாவடி குணத்தால் வேலையும் போய்விடுகிறது. இதைக் கேட்ட ராய் எரிச்சல் அடைகிறாள். குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வேறு வேலை தேடும்படி அறிவுருத்துகிறாள். அன்றைய இரவில் பயணக் களைப்பாலும் மன உளைச்சலிலும் ராய் சோர்வுற்றிருக்கிறாள். பேகோ அவளை அணுகியபோது மறுத்துவிட்டு தூங்கிப் போகிறாள். வழக்கம் போல் மறுநாள் வேலைக்கு சென்றுவிடுகிறாள் ராய். இரவு வீடு திரும்புகையில் கொட்டும் மழையில் நனைந்து நடுங்கியபடி பெளலா நிற்பதைப் பார்த்து என்ன விதயம் என்று கேட்கிறாள். சிறிது தயக்கத்திற்குப் பின் மகள் குடித்துவிட்டு தன் தந்தையே தன்னிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டதால் கையில் கிடைத்த கத்தியால் அவனைக் குத்திவிட்டேன் என்கிறாள். மேலும் அவன் நான் உன் உண்மை தந்தை இல்லை, இது ஒன்றும் தப்பு இல்லை என சொன்னதாகவும் சொல்கிறாள் பெளலா. நிலைமை புரிந்த ராய்முண்டா அழுகையினூடே தன் மகளை அணைத்து ஆறுதல் சொல்கிறாள். ‘நீ இதைச் செய்யவில்லை, நீ இது நடந்த போது இங்கில்லை, புரிந்ததா என்று வலுக்கட்டாயமாக அவளை வேறு அறைக்கு அனுப்பிவிட்டு பெரும் சிரமத்துடன் அப்பிணத்தை கம்பளியில் சுற்றி கட்டி வைக்கிறாள், ரத்தம் தேங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்கையில் காலிங் பெல் அடிக்கிறது. பதைபதைத்து யார் என கேட்கிறாள். பதில் வந்ததும் அந்த அறையை சாத்திவிட்டு வாசலுக்கு வருகிறாள். பக்கத்து வீட்டு மனிதர் சில நாள்கள் வேறு ஊருக்கும் செல்வதால், தன் ரெஸ்டாரண்ட் சாவியை இவளிடம் தந்து அடிக்கடி போய் பார்த்து வர முடியுமா என உதவி கேட்கிறார். மறுக்கலாம் என நினைத்தவள் முடிவை மாற்றி சரியென்று சாவியை வாங்கிக் கொள்கிறாள்.


மீண்டும் அறைக்கு வந்து விட்ட இடத்திலிருந்து சுத்தம் செய்கையில் மொபைல் அடிக்கிறது. சோலெ லைனில் வந்து தங்கள் பெரியம்மா இறந்த செய்தியை சொல்கிறாள். மிகவும் சங்கடமான மனத்துடன் நீ மட்டும் சாவிற்கு போய் வா, ஏன் எதற்கு என்று காரணம் கேட்காதே, நீ வந்ததும் சொல்கிறேன், அதோடு யார் கேட்டாலும் எனக்கு ஒரு சர்ஜரி நடந்திருக்கிறது என்று சொல்லிவிடு என தங்கையிடம் சொல்கிறாள். சோலெ குழப்பத்துடன் தனியே மறுபடியும் லா முன்சாவிற்கு போகிறாள்.


ராய் பிணத்தை காரில் போட்டு ரெஸ்டாரெண்டுக்கு எடுத்து வந்து அங்கிருக்கும் ஒரு குளிர்பதன மெஷினுக்குள் ஒளித்து வைக்கிறாள். அப்போது ஒருவன் அங்கு வருகிறான். இரவில் இக்கடை திறந்திருக்கிறது விசாரிக்கலாம் என்று வந்தேன் என்கிறான் அவ்விளைஞன். அவன் சினிமா படப்பிடிப்புக் குழுவுடன் வந்திருப்பவன். ஒரு வாரம் அவன் ஆள்கள் அங்கு ஷுட்டிங் நடத்தப் போவதால் தினமும் முப்பது பேருக்கு உணவு கிடைக்குமா என்கிறான். இவளும் ஒரு கணம் யோசித்துவிட்டு ஒப்புக்கொள்கிறாள். நாள்கள் வேகமாக ஓடுகிறது. அந்தப் பக்கம் காரியங்கள் முடிந்தபின் அகஸ்டினாவிடம் நன்றி தெரிவித்துவிட்டு சோலெ தன்னந்தனியே இரவில் கார் ஓட்டி வருகிறாள். அவளுக்கு பேய் பிசாசு பயம் உண்டு. வீட்டிற்கு அருகே கார் வந்ததும் நிம்மதியுடன் இறங்குகிறாள். அப்போது டிக்கியை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. திற மகளே நான் தான் உன் அம்மா’ என்கிறது குரல். பயத்துடன் திறந்துவிடுகிறாள் அவள் அம்மா ஐரினின் ஆவி அதிலிருந்து வெளியே வருகிறது. ‘சோலே மகளே, பயப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன், சில நாள்கள் உன்னோடு தங்கிவிட்டு போய்விடுவேன்’ என்கிறாள் ஐரின்.


முதலில் பயந்தாலும் பேயானாலும் தன்னைப் பெற்ற தாய்தானே என்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் சோலே. மகளுக்கு உதவியாக அந்த ப்யூட்டி பார்லரில் அவளுக்குத் துணையாக இருக்கிறாள் ஐரின். ஐரினிற்கும் ராய்முண்டாவிற்கும் அடர்ந்த பனி போல ஒரு இடைவெளி பல வருடங்களாக இருந்துவந்தது. அதன் காரணம் யாருக்கும் தெரியாது. தன் பிரிய மகளே தன்னிடம் பேசுவதில்லை என மனமுடைந்து இருக்கிறாள் பேய் என நம்பப்படும் ஐரின்.


அக்கா வரும்போதெல்லாம் தாயை ஒளித்துவைக்கிறாள் சோலே... கடைக்கு ராய் வரும்போதெல்லாம் மறைவிடத்திலிருந்து கண்களில் கண்ணீர்த் துளிர்க்க மகளைப் பார்ப்பாள். ராயிற்கும் தன் தாயின் நினைவுகளும் அவள் வாசனையும் அவ்வப்போது புலப்பட்டாலும் தன் அதீத கற்பனை என்று விட்டுவிடுவாள்.


பெரியம்மாவின் பெட்டியை எடுத்து வந்த விதயத்தை தன்னிடம் ஏன் சொல்லவில்லை என ராய் தங்கையிடம் சண்டை பிடிக்கிறாள். அது தன் அம்மா கொண்டு வந்தது, அம்மாவின் ஆவி எடுத்து வந்தது என அவள் சொன்னாலும் அதை நம்ப மறுக்கிறாள் ராய். கொஞ்ச நாள் மனத்தாங்கல்கள். அதன்பின் புரிதல்கள் என சகோதரிகள் வாழ்வு. சினிமாக்காரர்கள் கடைசி தினத்தன்று அந்த ரெஸ்டாரண்டில் பார்ட்டி வைக்கிறார்கள். ராய் தன் அம்மா தனக்கு கற்றுக் கொடுத்த பாடல் ஒன்றினை மிக உருக்கமாக பாடுகிறாள். சோலேயுடன் வந்திருந்த ஐரின் காரின் பின் சீட்டில் ஒளிந்து இதைக் கேட்டு அழுகிறாள்.

எப்படியோ பிணத்தை ஒரு பழைய ப்ரிட்ஜில் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி தோழி ஒருத்தியின் துணையுடன் காட்டுப் பிரதேசத்தில் குழி வெட்டி புதைக்கிறாள். சில நாள் கழித்து தன் அம்மா தன் தங்கையின் வீட்டில் ஒளிந்து வாழ்கிறாள் என கண்டுபிடிக்கிறாள் ராய். உணர்ச்சி பிரவாகங்கள் முடிந்த பின் பார்க் பென்சில் தாயும் மகளும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். கதையின் முக்கியமான சிக்கல் இக்கட்டதில் அவிழ்கிறது. பெளலா ராயின் மகள் மட்டுமல்ல சகோதரியும் கூட. தன் கணவனின் இந்த கேடுகெட்ட செயலை அறிந்த ஐரின் தன் மகளை அக்கொடிய அரக்கனிடமிருந்து காப்பாற்றி தன் அக்கா வீட்டிற்கு அனுப்பிவைக்கிறாள்.

அகஸ்டினாவின் அம்மாவிற்கும் ஐரினின் கணவனுக்கு வேறு உறவு இருந்திருக்கிறது. இதை கூட கண்டும் காணாமல் இருந்த ஐரின் வேலியே பயிரை மேய்ந்தது போல் அவனின் செயலால் நிம்மதியிழந்திருந்தாள். அகஸ்டியின் தாயும் தன் கணவனும் ஒன்றாக இருந்த ஒரு நாளில் அவ்வீட்டை தீயிட்டு கொளித்திவிட்டாள். ஊரார் ஐரினும் அவள் கணவனும் தான் இறந்துவிட்டார்கள் என நினைத்துக் கொண்டார்கள். அகஸ்டியின் தாய் அடிக்கடி காணாமல் போய்விடுவதால் அகஸ்டியைத் தவிர யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவள் தன் தாய்க்கு என்ன நடந்தது என ஐரினுக்கு மட்டும்தான் தெரியும் என உறுதியாக நம்பியிருந்தாள். ஆனால் இறந்துபோய்விட்ட ஐரினிடம் எப்படி கேட்கமுடியும் என்று அவ்வப்போது ராயிடம் உன் அம்மா ஆவியாக இங்கு திரிந்து கொண்டிருக்கிறாளாம், எப்போதேனும் உன் கண்ணில் பட்டால் தயவு செய்து என் அம்மாவைப் பற்றிய விதயங்களைக் கேட்டுச் சொல் என கெஞ்சுவாள். ராய்க்கு சில சமயம் எரிச்சல் பற்றிக் கொண்டுவரும், ஆனாலும் கான்சர் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அகஸ்டியை கடிந்து கொள்ள முடியாமல் சரியென்று சொல்வாள்.


ஐரின் இறக்கவில்லை என்பது சகோதரிகள் மட்டும் பெளலாவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகிறது. அவர்கள் பெரியம்மாவின் ஊருக்கு கிளம்புகிறார்கள். வழியில் ஒரு காட்டில் இளைப்பாறுகையில் ஒரு மரத்தின் அருகே ராய் நிற்கிறாள். அதின் அருகில் தான் பேகோவை புதைத்துவிட்டு அடையாளத்திற்கு மரத்தில் இறந்த தேதியை செதுக்கிவைத்திருந்தாள். பெளலா அவளை கேள்வியுடன் பார்க்கவே ஆம் என்று தலையசைக்கிறாள். அனைவரும் பெரியமா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அகஸ்டி அவர்களைக் காண வருகிறாள். ஐரின் வழக்கம்போல ஒளிந்து கொள்கிறாள். அகஸ்டியின் நோயுற்ற நிலையைப் பார்த்து துயருற்ற ஐரின் அன்றிரவு அவள் வீட்டிற்கு சென்று அவளை கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.


இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு இக்கணம் வரை நீங்காமல் மனதிற்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது. உறவுகளின் கயமைத்தனங்களையும், நம்பிக்கை துரோகங்களையும், எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தினையும், அன்பின் ஆழங்களையும் ஆறு பெண்களின் வாழ்க்கையைச் சுற்றிய திரைக்கதையால் மிக நுட்பமான முடிச்சுக்களால் பின்னப்பிட்டு பின் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும்போது நமக்கு அதிர்ச்சியும், ஆற்றாமையும், வாழ்வின் மீதான சலிப்பையும் கோபத்தையும், ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது.














திங்கள், 2 பிப்ரவரி, 2009

Original Sin


'இது காதல் கதை அல்ல, காதலைப் பற்றிய ஒரு கதை' என்ற சப் டைட்டிலுடன் ஆரம்பிக்கிறது தெள்ளிய நீரோடை போல இயக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம். கதையின் நாயகன் லூயி வெர்காஸ்(Antonio Banderas) பணக்காரன், அழகன். தன் ஊரான க்யூபாவில் காபி எஸ்டேட் வைத்திருப்பவன். தனக்கு வரப் போகும் மனைவி பற்றி அழகான சித்தரத்தை மனதில் தேக்கி வைத்திருப்பவன். அமெரிக்காவில் இருக்கும் ஜூலியா ரசல் (Angelina Jolie) என்பவளை கடிதங்களின் மூலம் தனக்கானவள் என்று கண்டடைகிறான். அவளை நேரில் சந்திக்க பயணப்படுகிறான்.
ஃபோட்டோவில் இருக்கும் ஜூலிக்கும் நேரில் இருப்பவளுக்கும் துளியும் சம்பந்தமில்லையே என அவன் திகைக்கையில் பேரழகியான அவள் அவனிடம் தன் புகைப்படத்தை வேணும் என்றேதான் மாற்றி அனுப்புள்ளேன், நான் அழகி எனத் தெரிந்துவிட்டால் நீங்கள் அதற்காக மட்டும் என்னைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன், உங்களுக்கு சம்மதம் இல்லையென்றால் நாம் பிரிந்துவிடலாம் என்கிறாள். லூயி அவள் அழகில் ஏற்கனவே கிறங்கிப் போயிருக்கவே, அவசரமாக மறுத்து தான் கடிதத்தில் குறிப்பட்டது போல ஏழை இல்லை, பெரும் பணக்காரன் என்கிறான். செல்வந்தன் ஒருவனின் மனைவியாக இருப்பதில் உனக்கு ஏதும் சிரமம் இருக்குமானல் சொல்லிவிடு நாம் பிரிந்துவிடலாம் என்கிறான். ஜூலி புன்னகைத்தவாறே நாம் இருவருமே பொய்யர்கள் என்கிறாள். அன்றே அவர்கள் திருமணம் நடக்கிறது. குதிரையில் ஏற்றி தன் காதல் மனைவியை அரண்மனை போலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான் லூயி.
அவளுக்குத் தேவையான சுதந்திரத்தை தருகிறான். தன்னைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள அவகாசம் அளித்தபின்னரே அவளுடன் உடலால் இணைகிறான் லூயி. யாரோ ஒருவரின் படுக்கை அறைக்குள் நுழைந்துவிட்டது போல சில நிமிடங்கள் மெல்லிய இசையின் பின்ணனியில் அப்பட்டமான கூடல் காட்சிகள். அதைத் தொடர்ந்து அவன் வேலைகளில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறாள் ஜூலி. ஆரம்ப மோகங்கள் மட்டும் இல்லாமல் தன் மனைவியை வெகுவாக நேசிக்கிறான் லூயி, அவளுக்கு தன் வங்கிக் கணக்கில், மற்றும் தொழிலில் சம உரிமை அளிக்கிறான். இரவு பகல் பாராமல் அவனின் காதல் ஆயிரம் சிறகுள்ள அவளின் மோகங்களில் சிக்கிக் கிடக்கிறது. இதற்கிடையில் ஜூலியாவின் சகோதரி எமிலி அவனைச் சந்தித்து தன் தங்கையிடமிருந்து வந்த கடிதத்தில் இருப்பது நிச்சயம் அவள் கையெழுத்து இல்லை என்கிறாள். அவன் குழம்புகிறான். அவ்வப்போது அவள் நடவடிக்கையில் சிறு சந்தேகம் வரும்போது அதைப் பற்றி அவன் கேட்கும் போதெல்லாம் நைச்சியமாக பேச்சை மாற்றி அவனை படுக்கையில் வீழ்த்திவிடுவாள் ஜூலி. எதிர்பாராத அதிர்ச்சியான ஒரு நாளில் அவள் காணாமல் போகிறாள் லூயின் மொத்த சொத்தையும் சுருட்டிக் கொண்டு. பித்து பிடித்த நிலைக்குப் பொன லோயி அவளைக் கண்டுபிடித்துக் கொள்வதற்காக துப்பாக்கியுடன் கிளம்புகிறான் துணையாக முன்பு தான் சந்தித்த டிடெக்டிவ் வால்டருடன் (Thomas Jane).
ஹவானாவில் ஒரு ஹோட்டலின் ஜூலியாவைப் பார்க்கிறான் லூயி ஆனால் அவள் கர்னல் ஒருவரின் காதலியாக இருக்கிறாள். பெரும் அதிர்ச்சிய்டைந்தாலும் இனம் தெரியாத உணர்வுகளால் அலைக்கழிப்படுகிறான் லூயி. அவனுடைய துப்பாக்கியை வால்டர் எடுத்துக் கொண்டு அதில் வெற்று ரவைகளை நிரப்பிவைத்துவிடுகிறான்.அன்றிரவு ஜூலியின் அறைக்கு ஆத்திரத்துடன் செல்கிறான் லூயி. ஜூலியாவின் மீது உள்ள காதலால் அவளைக் கொல்ல நினைத்தாலும் அவனால் அதை செயல்படுத்தமுடியவில்லை. ஏன் ஏன் இபபடிச் செய்தாய் என அவளிடம் கோபத்துடன் கழுத்தைப் பிடித்துக் கேட்கிறான். அவள் அவனிடமிருந்து விடுபட்டு தன் பழைய வாழ்க்கையை, போனி காஸெல் என்ற பெயருடைய அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்த கதையை, அங்கு தன்னுடன் இருந்த ஒரு இளைஞனுடன் தப்பித்து அதன் பின் இருவரும் சேர்ந்து சிறியதும் பெரியதுமாக குற்றங்கள் செய்து, தங்களை புறக்கணித்த சமுதாயத்தை ஏமாற்றி பிழைத்தாக சொல்கிறாள். அதன்பின் குறி வைத்து இவனை ஏமாற்றினார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாள். 'என்னைக் கொன்று விடு' என்ற ஜூலியாவைப் தீராக் காதலுடன் பார்த்து 'நீ இன்னும் என் மனைவிதான், உன் பழைய பெயர் எதுவோ அது பற்றி எனக்கு அக்கறையில்லை, நீ என்றும் எனக்கு ஜூலியாதான், ..என்னுடன் வந்துவிடு, எல்லாவற்றையும் மற', என்கிறான்.
டிடெக்டிவ் வால்டர்தான் ஜூலியாவின் பழைய காதலன் என்று லூயிக்கு தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து ஜூலியாவை மீட்க வோல்டரை சுட்டுவிடுகிறான் லூயி(அதில் உண்மையான குண்டுகள் கிடையாது). செத்தவன் போல நடித்த வால்டரை ஜூலியா சாமர்த்தியமாக அப்புறப்படுத்துகிறாள். அவள் இப்போது இருதலை கொள்ளி எறும்பைப்போல தவிக்கிறாள். வோல்டர் அவளை துன்புறுத்தி விருப்பமற்ற அவளுடன் வன்கலவி செய்கிறான். லூயின் அப்பழுக்கற்ற காதல் அவளை கொல்லாமல் கொல்கிறது. பழைய காதலன் வோல்டரோ அவளை இறுகப்பற்றிக் கொண்டு விட மறுக்கிறான். லூயி உனக்கானவன் அல்ல, நான் தான் உன் முதல் ஆண் கடைசியும் நான் தான், அவனை மற இன்று இரவு அவனை நீ கொன்றேயாக வேண்டும் என கட்டளையிட்டு அனுப்புகிறான். பின் தொடர்ந்து வந்த லூயி இதைப் பார்த்து மீண்டும் அதிர்ச்சி அடைகிறான். மெளனமாக வீடு திரும்புகிறான். ஜூலி எலி மருந்து கலக்கிய காபியை அவனுக்குக் குடிக்கத் தருகிறாள். லூயி பேச்சுனூடே தான் அவளைப் பின் தொடர்ந்து வந்த விதயத்தை சொல்கிறான், நீ யாராக இருந்தாலும், நல்லவளோ கெட்டவளோ இன்னும் இந்த நிமிடம் வரையிலும் உன்னை நான் காதலிக்கிறேன்...நீ என்னைக் கொல்லப் போவது தெரிந்தும், என்று சொல்லியபடி அதைக் குடிக்கிறான். அழுதபடி இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜூலி தடுப்பதற்கு முன் அவன் துடிக்க ஆரம்பிக்கிறான். அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுகையில் பின் தொடர்ந்த வால்டர் அவளைப் படித்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறான். என் மனைவியை விடு என்று கத்தியபடி லூயி துப்பாக்கியை எடுத்து அவனை மிரட்டுகிறான். அத்துப்பாக்கியில் போலி குண்டை மாற்றி வைத்த தைரியத்தில் வால்டர் சுடு என்ற பாவனையில் முன் நின்ற வால்டரை சுட்டுவிடுகிறான். துப்பாக்கி வெடித்து ரத்தம் பாய்ந்து சரிகிறான் வால்டர், அவன் அதிர்ச்சியுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கும் முன் லூயிடமிருந்து துப்பாக்கயை வாங்கி ஜூலி மறுமுறை சுடுகிறாள். i love you Julia என மறுபடி மறுபடி அரற்றுகிறான் சாவின் விளிம்பின் நின்று கொண்டிருந்த லூயி. துடிக்கும் மனதுடன் ஜூலி நானும் உன்னைக் காதலிக்கிறேன் லூயி என்னை விட்டுப் போய்விடாதே...கொஞ்சம் பொறு என்று அழுகிறாள். ஆனால் லூயி அவள் மடியிலேயே இறந்து போகிறான்.
கொலைக்குற்றவாளியான ஜூலி பாதிரியார் ஒருவரிடம் தன் கதையை சொல்கிறாள். கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலுமாக பயணப்படும் கதையின் காட்சியமைப்புக்கள் சீரான ஒழுங்கிலிருக்கிறது. காதல், காமம், துரோகம், தண்டனை என மிக ஆழமான விதயங்களை நுட்பமாகவும் அழகுணர்வோடும் இத்திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற வாக்கியமான 'Fraility thy name is woman' எனும் வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது இப்படம்.
இத்திரைப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது இருவரின் கெமிஸ்டரி. Made for each other போன்ற தோற்றமாகட்டும், அவர்களின் கொந்தளிக்கும் இளமையாகட்டும், ஒருவர்க்கான மற்றொருவரின் தேவையை உணர்த்தும் body language ஆகட்டும் இருவரின் மிகையில்லாத நடிப்பாகட்டும் இருவருமே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். நெகட்டிவ் காரெக்டரை அற்புதமாக உள்வாங்கியிருக்கும் ஏஞ்சலினா சிறு புன்னகையாலும் பார்வையாலும் கண்ணீராலும் வீழித்துவது லூயியை மட்டுமல்ல, திரைக்கு வெளியிலிருது பார்த்துக் கொண்டிருக்கும் யாவரையுமே கவர்கிறாள். இத்திரைப்படத்தை அப்படியே தமிழில் ரீ மேக் செய்தால் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்ற திடீர் எண்ணம் உருவான அடுத்த நொடி நம் கலாச்சார காவலர்கள், சென்ஸார் கிடிக்கிப் பிடிகள் எல்லாம் நினைவுக்கு வரவே எனக்குள் சிரித்துக் கொண்டேன். அப்படியே ரீமேக் செய்தால் வோல்டர் ரோலில் சிம்பு (சிலம்பரசன் ரசிகர்கள் மன்னிக்க) அதிகம் பொருந்துவார் என நினைக்கிறேன். அந்த இருவரின் இடமும் யாராலும் நிரப்ப முடியாத நிலையில் இன்னும் என் கண்களை விட்டகல முடியாமல் உறைந்து போன காட்சியாய் இருக்கிறது.